வழக்கம் போலவே
அலைபேசி அடித்தவுடனே
எடுத்தான்.

வழக்கம் போலவே
விவரங்கள், விவரணைகளை
துளி சந்தேகமின்றி
கேட்டுக் கொண்டான்.

அக்குரலிலோ
துக்கமில்லை
துயரில்லை
பயமில்லை
பதட்டமுமில்லை.

அக்குரலிலோ
குற்றமுமில்லை
குழப்பமில்லை
குறைகளுமில்லை
குழைவுமில்லை.

அக்குரலிலோ
புலம்பலில்லை
புகாரேதுவுமில்லை
காட்டமுமில்லை
காழ்ப்புணர்ச்சியுமில்லை.

அளவாய்ப் பேசினான்.
அளவாய் சிரித்தான்.
அளவாய் உரையாடலையும்
முடித்துக் கொண்டான்.

ஆனாலும்...
எத்துன்பம்
வருத்தியதோ..
எத்துயர்
துரத்தியதோ..
எச்சொல்
சுட்டதோ...

யாருமறியுமுன்
எளிதாய் தற்கொலையும்
செய்து கொண்டான்.

அவனது
அலைபேசியின் எண்
அழிக்கப்படாத
அலைபேசி
இன்னுமின்னும்
கனத்துக் கிடக்கிறது
கிடத்தப் பட்ட
அவனது கனத்த உடல் போல.

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.