"எனக்குப் பிறகு......பேரழிவு" என்று பிரெஞ்சுப் புரட்சியில் தலையை இழந்த மன்னன் 14-ஆம் லூயி கூறியதாக சொல்வதுண்டு. எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின் கட்சியும், ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது பெருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவமாக இருந்தது. தனக்கு அடுத்தபடி இன்னார் என்று சொல்வது கூட, இன்னொரு நபரை "தனக்கு நிகரானவர் " என்று தானே ஒப்புக் கொண்டதாகிவிடும் என்று அஞ்சியவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தன்னுடன் சேர்த்து தனது மனைவிமார்களையும் அடிமைகளையும் வாரிசுகளையும் பிரமிடுக்குள் புதைக்கச் சொன்ன எகிப்திய மன்னர்களைப் போன்றவர்கள்.

ops sasikalaகுருசேத்திரப் போர் நடப்பதற்கு முன்பு அரவாணி பலியிடப்பட்டு போர் தொடங்கியது என்பார்கள். அதேபோல், சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு புஷ்பா புருஷனை தாக்கி மண்டையில் தக்காளி சட்டினியை வெளியேற்றியிருக்கிறார்கள். புஷ்பா புருஷன் யாரு என்ற சரித்திரக் கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

அன்றைக்கு எம்.ஜி.ஆர்-ன் குரல் வேண்டாம், விரல் போதும்; அ.தி.மு.க. ஆட்சி செய்ய என்றார்கள். இன்றைக்கு ஜெயலலிதாவின் குரலும் இல்லை, விரலும் தேவை இல்லை, சசிகலாவின் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி செய்ய என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் கூட அதிகாரமிக்கவர்களாக வலம் வருகிறார்கள். அதிகார வர்க்கத்தில் புரையோடிப் போகியிருக்கும் லஞ்சம்-லாவண்யம் தான் எல்லாவற்றிக்கும் வழிவகை செய்கிறது. அரசாண்டவன் காசு வைத்திருந்தான் அது மன்னராட்சி. இன்று காசு வைத்திருக்கிறவன் அரசாள்கிறான் அதுதான் மக்களாட்சி என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.

குலத்தளவே ஆகுமாம் குணம் என்பார்கள். எந்த கூட்டத்தோடு நீ சேர்கிறாயோ அந்தக் கூட்டத்தினுடைய புத்திதான் உனக்கும் இருக்கும். என்னுடைய ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைத் தந்திருக்கிறது. நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன். மக்களால் நான், மக்களுக்காக நான், உங்களால் நான், உங்களுக்காக நான் என்றார் ஜெயலலிதா.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதைச் சொன்னாலும் சரி என தலையாட்ட ஓர் ஆள் வேண்டும். அவர்கள் சொன்ன விஷயத்தை நாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முகஸ்துதிதான் அதிகாரிகளின் பலவீனம். இது அந்த நாற்காலியின் இயல்பு. அதில் யார் வந்து அமர்ந்தாலும் உடனே அவர்களுக்கு கொம்பு முளைத்துவிடும். அதிகாரி தன்னை ராஜாவாகவே கற்பனை செய்து கொண்டு விடுவான். அகம்பாவமாக நடந்து கொள்வான். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதே. வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களை விடவும் புகழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்களே அதிகம்.

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்றார் பெரியார். மேலும் "அரசியலில் பட்டம் பதவியைப் பெறுவதற்கு ஒருவன் எந்த கீழான செயல்களையும் செய்வான், எவன் காலையும் நக்கத் தயாராக இருப்பான், பொண்டாட்டியை கூட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பான். தேர்தல் அரசியலில் யோக்கியன் ஒருவன் எப்படி இருக்க முடியும்? அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகின்றன. அவன் புரட்டும் பித்தலாட்டமும் செய்ய வேண்டிய அவசியத்துக்கு ஆளாக்கப்படுகின்றான். அது நானாக இருந்தாலும் அம்பேத்கராக இருந்தாலும் அப்படிதான் ஆகிவிடுவோம். அப்படித்தான் ஆக்கிவிடும்" என்றார் பெரியார்.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஓளரங்கசீப் என்ற மன்னரின் வாரிசுகளே காரணம். அதேபோல அதிமுகவின் வீழ்ச்சிக்கு சசிகலா மன்னார்குடி வகையறாக்களே காரணமாக இருப்பார்கள். பொதுச் செயலாளராக இவரை அறிவிப்பது குற்றவாளியே நீதிபதியாகும் அயோக்கியத்தனம் இல்லையா?

நரகலில் இருந்துதான் நல்லரிசியைப் பொறுக்க வேண்டுமா? முரட்டுத் தோல் கொண்ட உயிரினங்களுக்கு ஊசி வைத்து குத்தினாலும் வலிக்காதே!. வெள்ளையர்களை விரட்டிவிட்டோம். கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டோம். கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், காரணம் அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் என்றார்கள்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதையில் இப்படி ஒரு வரி இருக்கிறது. சாதி சங்கங்களும் சாதிக் கட்சிகளும் பெருகிவருவது ஆபத்தானது. அதிகார பீடத்திற்கு ஆசைப்படும் சுயநலவாதிகளே அறிவுணர்வை ஊட்டி கேடு செய்கின்றனர். பாம்பாட்டி பிழைப்பவன் பாம்பாலே சாவான்.

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It