மக்கள் சனநாயக குடியரசு கட்சி முதல் பொதுப் பேரவை தீர்மானங்கள்

அரசியல் தீர்மானங்கள்

1. மனேசர் (ஹரியானா) மாருதி தொழிலாளர் போராட்டம் வெல்க!

அரியானாவில் மனேசர் பகுதியில் அமைந்துள்ள மாருதி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காவும் இதர சனநாயக உரிமைக்காகவும், வாழ்வாதார கோரிக்கைகளுக்காகவும் கடந்த ஒரு ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

சூலை 2012 சாதிப் பெயரைச் சொல்லி தொழிலாளியை இழிவாக திட்டிய மேற்பார்வையாளரை எதிர்த்து தொழிலாளர்கள் களம் இறங்கினர். தொழிலாளர்கள், இப்போராட்டத்தை நசுக்க 100 குண்டர்களையும் 4000 போலீசையும் முதலாளிகள் ஈடுபடுத்தி தொழிலாளர்களை ரத்த வெள்ளத்தில் முழ்கடித்தனர். தொழிலாளர்களும் பதிலுக்கு பதிலடி கொடுத்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலையை சின்னாபின்னமாக்கினர்.

இப்போராட்டத்தை ஒட்டி கைது செய்யப்பட்ட 147 தொழிலாளர்கள் ஒரு ஆண்டு காலமாக சிறைச்சாலையில் இருக்கின்றனர். 546 நிரந்தர தொழிலாளர்களையும் 1800 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது நிர்வாகம்.

தொழிலாளர்கள் சிறைச்சாலையில் உள்ளோரை விடுதலை செய்யவும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தும்படியும் தொடர்ந்து போராடிவருகின்றனர். அதன் அங்கமாக மார்ச் 24 முதல் தர்னாவில் ஈடுபட்டனர், கடந்த மே 18, 19ல் மிருகத்தனமாக போலீஸ் தடியடியால் தாக்கப்பட்டனர். தொழிலாளர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் இச்சம்பவத்தில் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் 11 பேர் மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டு உள்ளது. மேலும் சூன் 1,2013 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தனர் போலீசார். அதையும் மீறி தொழிலாளர்கள் பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். மாருதி தொழிலாளர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஆகிய நகரங்களிலும் ஆதரவு இயக்கம் நடைபெறுகிறது. மாருதி தொழிலாளர்களின் இப்போராட்டத்தை ம.ச.கு.க பொதுப்பேரவை வாழ்த்தி வரவேற்கிறது.

2. இந்தியப் பெரு முதலாளிகளின் நில அபகரிப்பை எதிர்த்த ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

20 ஆண்டுகள் முன்பு வரை இந்தியப் பெரு முதலாளிகளின் மூலதன விரிவாக்கம் தெற்காசியாவரை என்று இருந்த நிலைபோய் தற்போது உலகெங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது.

 இந்தியாவானது ஆப்பிரிக்காவில் நான்காவது பெரிய வணிக கூட்டாளியாக இருக்கிறது. இந்தியாவின் 4 பெரிய வணிக கூட்டாளிகளாக நைசீரியா, அங்கோலா, அல்சீரியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை இருக்கின்றன. இந்தியாவின் கச்சாஎண்ணெய் இறக்குமதியில் 20 விழுக்காடு ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறது. சென்ற ஆண்டில் மட்டும் இந்தியப் பெரு முதலாளிகள் மேற்கொண்ட முதலீடு 170 கோடி ஆகும். இந்த நிலையில் இந்தியப் பெரு முதலாளிகள் தங்களின் மூலதன விரிவாக்கத்தின் அங்கமாக சுரங்கங்களையும் கம்பெனிகளையும் விவசாய நிலங்களையும் வாங்குகிறார்கள்.

எத்தியோப்பியா என்ற ஆப்பிரிக்க நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தை பெங்களூரைச் சேர்ந்த கருதாரி என்ற கம்பெனி குத்தகைக்கு வாங்கியிருக்கிறது. லட்சகணக்கான மக்கள் தங்கள் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இந்த கம்பெனிக்கு அந்த நிலம் கையளிக்கப்படுகிறது. மேலும் கழுதாரி கம்பெனியின் பண்ணை அமைக்கப்பட்ட விதத்தினால் 2011ல் வெள்ளம் வந்தபோது சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்காக அணைகரையை கட்டி நீரின் இயற்கை ஓட்டத்தை தடைசெய்ததால் வேறு இடத்தில் வெள்ளம் வருகிறது.

இதனால் அங்குள்ள (எத்தியோப்பியா) மக்கள் இந்திய கம்பெனிகளின் செயலை நவகாலனிய நில அபகரிப்பு எனக்கூறி எதிர்த்து போராடுகின்றனர் மனித உரிமை அமைப்புகளும் அவ்வாறே கண்டிக்கின்றன. எத்தியோப்பியா மட்டுமல்லாது மாலி என்ற ஆப்பிரிக்க நாட்டிலும் இரும்புத்தாது சுரங்கத்தை அமைத்து அங்குள்ள மக்களை நிலமற்றோராக மாற்றுகின்றது. sahara mining என்ற கம்பெனி, 210,000 ஹெக்டேர் நிலத்தில் அச்சுரங்கத்தை அமைத்து அந்த நாட்டின் மிகப்பெரிய இரும்புத்தாது ஏற்றுமதியாளராக ஆவதற்கு எத்தணிக்கிறது அந்த தொழில் நிறுவனம் இதற்கு மட்டும் 500 கோடியை முதலீடு செய்துள்ளது இந்த கம்பெனியை எதிர்த்தும் மக்கள் போராடி வருகிறார்கள்.

இங்ஙனம், இந்தியப் பெரு முதலாளிகளின் மூலதன விரிவாக்கத்திற்கு ஆப்பிரிக்க மக்கள் இரையாகி வருகிறார்கள். அம்மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நடத்தும் போராட்டத்தை ம.ச.கு.க பொதுப்பேரவை ஆதரிக்கிறது.
    
3. தமிழகத்தில் தீவிரமடைந்துவரும் உழவர் சிக்கல்.

புதியதாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2001-2011 காலக்கட்டத்தில் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த 10 ஆண்டு காலத்தில் 27 லட்சம் உழவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதே நேரத்தில் சுமார் 9,7 லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர் பட்டியலில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

மாநில திட்டக்குழுவின் 12ஆம் ஆண்டு திட்ட ஆவணத்தின்படி, சராசரி நில உடமையானது 2005-06ல் 0.83 ஹெக்டேர் என்பதிலிருந்து 0.80 ஹெக்டேராக வீழ்ந்துள்ளது.

இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களின் விலை உயர்வு அதற்கேற்ப இல்லாமை, நீரின்மை, மின்வெட்டு, பெரு முதலாளிய கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு கம்பெனிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்துதல், ரியல் எஸ்டேட் தொழிலின் நிர்ப்பந்தம், சராசரி நில உடமையின் அளவு தொடர்ந்து குறைந்து வருவது ஆகிய காரணிகளால் தமிழக நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். விவசாய நிலங்களை விற்கிறார்கள். விவசாயத்தை விட்டுவிடுகிறார்கள்.

பெரு மூலதனத்தை அனுமதிக்காமல் இருப்பது, நீரின்மையை சமாளிக்க விவசாய முறைகளை மாற்றியமைப்பது, பாசன வசதிகளை மாற்றியமைப்பது மேம்படுத்துவது, சீரமைப்பது, கூட்டுறவு அடிப்படையில் விவசாயம் செய்வது ஆகிய வழிமுறைகளை செயல்படுத்தி தமிழக உழவர் சிக்கலை தீர்க்குமாறு ம.ச.கு.க கோருகிறது.     
 
4. போதிய வறட்சி நிவாரணத்தை வழங்கு!

தமிழ் நாட்டில் சென்ற ஆண்டு தொடங்கிய வறட்சி இந்த ஆண்டும் தொடரலாம் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் மலை மறைவுப்பிரதேசமாக இருப்பதாலும் சுற்றுச்சூழல் பாதிப்பாலும் நீர் நிலைகளை ஒழுங்காக பராமரிக்காததோடு அவற்றை ரியல் எஸ்டேட் தொழில் விழுங்குவதாலும் வறட்சி என்பது இனிமேல் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவே நீடிக்கப் போகிறது.

இந்த நிலையில் ஆட்சியாளர்கள் வறட்சி நிவாரணத்தை வழங்குவதில் பல வரையறைகளை தான்தோன்றித்தனமாக விதிப்பதால் உழவர்கள் வறட்சி நிவாரணத்தை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே ஆட்சியாளர்கள் முறையாக மதிப்பிட்டு பல தேவையற்ற வரையறைகளை கைவிட்டு நடைமுறைகளை தளர்த்தி உழவர்கள் அனைவருக்கும் போதிய நிவாரணம் பெற வழிகளை செய்யுமாறு ம.ச.கு.க பொதுப்பேரவை கோருகிறது.

5. காவிரி வடிநில விவசாயத்தை காப்பாற்றுவதற்கு அணிதிரள்வோம்!

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 1971, 72ல் 6,56,054 ஹெக்டேர் சாகுபடி நடந்தது. 1991.9ல் 4,88,030 எக்டேராக குறைந்தது. தஞ்சாவூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போது சாகுபடியில் பரப்பு 2,17,191 ஹெக்டேராக குறைந்தது.

84, 92 சதவிதத்திற்கும் அதிகமான விழுக்காடு தஞ்சாவூர் விவசாயத்திற்கு ஏற்றது. புவியியல் அமைப்பில் இத்தகைய சமவெளிப் பகுதி ஆசியா கண்டத்திலேயே எங்கும் இல்லை. இத்தகைய காவிரி வடிநில விவசாயத்தை அழிப்பதற்கு பெரு முதலாளிகளின் மூலதன நலனுக்காக கிரேட் ஈஸ்டர்ஸ் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடேட் (ஜிண்டால் குழுமத்தினுடையது) சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக பணிகள் நடைபெறுகின்றன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் 1,77,431 வீடுகளும் 7,87,548 பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

மீத்தேன் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பதில்லை. நிலக்கரி பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றுவதன் மூலமே மீத்தேன் வாயு வெளியேறும். இதற்கு ராட்சத ஆழ்துளை குழாய்களை பயன்படுத்துவர். இந்தப் பகுதியில் உள்ள தண்ணீரை அகற்றி வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயு, பழுப்பு நிலக்கரி வெளிக் கொணரப்படும். குறிப்பிட்ட இடத்தில் தண்ணீரும் காலியானால் வெற்றிடத்தின் காரணமாக நிலப்பகுதி கீழே இறங்கும். அப்போது அது தாறுமாறாக இறங்கும். பூமிக்கு அடியில் அழுத்தம் இடத்திற்கு இடம் மாறுபடும். இதுவே பூகம்பமும் ஆகலாம், மேலும் இவ்வாறு வெளியேற்றப்படும் நீர் கடல் நீரை விட 5 பங்கு அதிகம் உப்புத்தன்மை பெறும் இது மண்ணின் ரசாயன தன்மையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். உறிஞ்சப்படும் நீர் மற்றும் வாயுவில் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப அக்கம்பக்கம் உள்ள அதாவது பக்கத்து மாவட்டத்தில் உள்ள நீரும் உறிஞ்சப்படும். அருகிலேயே வங்கக் கடல் இருப்பதால் அதில் உள்ள கடல் நீரும் வந்து உள்ளே புகுந்துவிடலாம். தண்ணீர் உப்பு நீராகும். இந்த நீரில் மீத்தேன் வாயுக்களின் தாக்கம் சோடியம்-பை-கார்பனேட், சல்பர் உள்ளிட்ட பல்வேறு தனிமங்களும் கலந்து இருப்பதால் இந்த நீர் குடிநீருக்கோ நெல் உற்பத்திக்கோ உதவாது.

அடுத்தாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய எண்ணெய் கழகம் (ஐ,ஒ,சி) பெட்ரோலிய பொருட்களை நெல் விளையும் நன்செய் வயல்களின் கீழே குழாய் பதித்து கொண்டு செல்ல 5 மாவட்டங்களில் நடவடிக்கை எடுத்துள்ளது. நாகை மாவட்டம் நரிமணம் காவிரிப்படுகை சுத்திகரிப்பு ஆலையில் தொடங்கி திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை வரை 116 கி.மீ நீளம் நிலத்திற்கு கீழே குழாய்களை கொண்டு செல்கிறார்கள். நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 11 வட்டங்கள் 75 கிராமங்களில் விளைநிலங்களில் கீழே குழாய் பதிக்க ஐ.ஒ.சி பம்பரமாகச் செல்கிறது.

இந்திய அரசாங்கத்தின் மத்திய பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் ஒ.என்.ஜி.சி என்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு வயலில் நெற்பயிர்கள் தீப்பிடித்து எரிந்தன. இத்தகு சம்பவ சான்றுகள் ஏராளம் உண்டு. தவிர, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 7 அனல்மின் நிலையங்கள் அமைப்பதாக உத்தேசித்திருந்த திட்டமானது அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையமும் விவசாயத்தை பாதிக்கக்கூடியதே.

இங்ஙனம், காவிரி வடிநில விவசாயத்தை இந்தியப் பெரு முதலாளிகள் மற்றும் அதிகார வர்க்க முதலாளிகளின் நலன்களுக்கு அடகு வைக்கிறார்கள். ஏற்கனவே கர்நாடக அரசாங்கம் காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் ஒழுங்காக திறந்துவிடுவதில்லை. இதனால் விளைநிலங்களை விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் உழவர்கள். விளைவாய், அரிசி உற்பத்தி கடுமையாகப் பாதித்து பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாய் மாறிவருகிறது.

இங்ஙனம் தமிழக மக்களின் பாரம்பரிய உணவு களஞ்சியமான காவிரி வடிநிலத்தின் விவசாயத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாக வேண்டிய அவசியத்தில் உள்ள நாம் அதற்காக அணிதிரளவேண்டும் என ம.ச.கு.க பொதுப்பேரவை அறைகூவி அழைக்கின்றது.

6. தண்ணீர் முதலாளிகளின் லாபத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட குடிநீர் பற்றாக்குறையை எதிர்த்து அணிதிரள்வோம்!

சென்ற ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் பாதிப்பதோடு குடிநீருக்கும் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த குடிநீர் பறறாக்குறை சென்னையில் தான் என்றில்லாமல் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக இருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருவதால் இந்த நிலைமை, வீடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வழங்கும் என்று குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்தாலும் சென்னை நகரில் உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய வடசென்னைப் பகுதியிலும் இதர பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது.

குடிநீருக்காக சென்னை நகர மக்கள் பரிதவிப்பதும் இரவு நேரங்களில் பெண்கள் குடங்களுடன் அலைவதும் மணிக்கணக்காக குழாய் அருகே காத்து நிற்பதும் எங்கும் காண முடிகிறது. ஏற்கனவே சென்னை மாநகர மக்களுடைய வீடுகளுக்கு புதிதாக இணைப்புகளை கொடுக்காமலும் பழைய இணைப்புகளுக்கு சுகாதாரமற்ற வகையிலும் விட்டுவிட்டு வழங்கப்படுவதாலும் மேல் நடுத்தர மக்களும் நடுத்தர மக்களும் கேன் வாட்டருக்கு மாறிவிட்டனர். ஏழைகளோ 2ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் வாங்கி அருந்துகின்றனர்.

சாதாரண வெத்தலை பாக்கு கடை முதல் நட்சத்திர ஓட்டல்களுக்கும் சினிமா மற்றும் டிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கும் கார் கம்பெனிகளுக்கும் குடிநீர் கிடைக்கின்றது. ஆனால் மக்களின் வீடுகளுக்கும் தெருமுனை குழாய்களுக்கும் தான் குடிநீர் வருவதில்லை.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட உரிமம் பெறாத சுகாதாரமற்ற வகையில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்கு வெட்டப்பட்ட கிணறுகள் இந்த குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கான வேட்டைக்காடாக மாறிவிட்டன.

தலைநகரமான சென்னையிலேயே நிலைமை இப்படியென்றால் வேறு மாவட்டங்களை கேட்கவே வேண்டாம். 10 நாட்களுக்கும் மேல் குடிநீர் வழங்கல் மேற்கொள்ளப்படாமல் பல பகுதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கக் கோரி மக்கள் கவுன்சிலர்களின் வீடுகளை முற்றுகையிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவையை வணிகமயமாக்கி வருவதை எதிர்த்து அணிதிரள்வோம் என ம.ச.கு.க.பொதுப் பேரவை மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

7. பெண்களின் மீது அதிகரித்து வரும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்து அணிதிரள்வோம்!

டெல்லியில் பெண் மாணவர் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி மாணவர்கள் போர்க்கோலம் பூண்டு டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தனர். டெல்லியில் உள்ள நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்க பிரிவினரும் இப்போராட்டத்தில் பின்னர் ஈடுபட்டனர். அரசாங்கமோ வேறு வழியின்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.எஸ் வர்மாவின் தலைமையில் குழு ஒன்றை அமைத்த பின் அது ஒரு அறிக்கையை அரசாங்கத்திற்கு வழங்கியது.

பாலியல் தாக்குதல்களின் அடிப்படைக்கு காரணமானவற்றை அது விவரிக்காவிட்டாலும் சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதைக்கூட ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை. பா.ஜ.க போன்ற இதர ஆணாதிக்க கட்சிகளும் அதற்கு காரணம் ஆகும்.

திருமண உறவில் உள்ள பாலியல் பலாத்காரம் தொடர்பாக சட்டத்திருத்தம் ஒன்றை பரிந்துரைத்தது அக்குழு. அதைக்கூட ஆட்சியாளர்கள் ஏற்காமல் காலாவதியான திருமண உறவின் புனிதத்தை கட்டிக்காக்கும் முகமாக வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார்கள்.

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக நடந்த அப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என்பது காலக்கெடுவுடன் கூடிய வழக்கு முடிவு ஆகும். இன்று பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு கூட நீதி கிடைக்க சராசரியாக 10 ஆண்டுகள் (அ) அதற்கு மேலும் ஆகின்றன. இந்த குழு இதை ஒப்புக்கொண்டாலும் விரைவு நீதி மன்றத்தை அமைப்பது குறித்தோ காலக்கெடுவுக்கு உட்பட்டு வழக்கை முடிப்பது குறித்தோ எதுவும் சொல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்தோ கீழ்மட்ட அளவில் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரித்தோ விரைவில் வழக்கை முடிக்கலாம் என்றே கூறுகிறது.

எனவே, திருமண உறவில் உள்ள பாலியல் பலாத்காரம் குறித்து இக்குழுவின் பரிந்துரையை ஆட்சியாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலக்கெடுவுடன் நீதி கிடைக்க வேண்டும் என்றும் பெண்களும் ஏனையோரும் அணிதிரள வேண்டும் என ம.ச.கு.க பொதுப்பேரவை அறைகூவி அழைக்கிறது.

8. தமிழக முஸ்லிம் இளைஞர்களின் மீதான தமிழக அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்போம்!

 அண்மையில் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பை சாக்காக வைத்து கோயம்புத்தூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 முஸ்லீம் இளைஞர்களை கைது செய்தது தமிழக போலீஸ். சம்பவம் நடந்தது பெங்களூரு என்றாலும் தமிழ்நாட்டில் நடந்தாற்போல் தமிழக உளவு போலீஸ் இந்த முஸ்லீம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று சித்ரவதை செய்து சிறையில் அடைக்கிறது.

ஏற்கனவே கண்காணிப்பு பட்டியலில் சில முஸ்லிம் இளைஞர்களை இந்த வழக்கில் சேர்த்துவிட்டு மீதியுள்ள முஸ்லிம் இளைஞர்களை தேடிப்பிடிக்கவே இந்த கைது நாடகம். பெங்களூர் குண்டுவெடிப்பு என்ற சம்பவத்தை சாக்காக வைத்து கர்நாடக போலீஸ் மீது பழியை சுமத்திவிட்டு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து வருகிறது தமிழக உளவு போலீஸ். முஸ்லீம் மக்களின் மீதான இந்துத்துவா அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம் என ம.ச.கு.க பொதுப்பேரவை அறைகூவல் விடுக்கிறது.
     
9. போலீஸ் மயமான தமிழக அரசின் மேலும் போலீசுக்கு அதிகாரமளிக்கும் அறிவிப்பை எதிர்ப்போம்!

கடந்த 20 ஆண்டுகளாக ராஜீவ் கொலையை சாக்காக வைத்து கூட்டம் நடத்தும் உரிமையை பறித்ததோடு மட்டுமல்லாமல் படிப்படியாக உள்அரங்கக் கூட்டத்திற்கும் அனுமதியை பெற வேண்டும் என இந்தியாவிலேயே இல்லாததை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக போலீஸ்.

சிவில் நிர்வாகம் செய்ய வேண்டிய அறிவிப்புகளை போலீஸ் நிர்வாகம் மேற்கொள்கிறது. வீடு வாடகைக்கு விடுவது, தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் ஆகியவற்றையும் தமிழக போலீஸ் தனது உரிமையாக எடுத்துக் கொள்கிறது. இது போதாதென்று மேலும் (அ) நீதி வழங்குவதற்கு சென்னை மாநகர துணை போலீஸ் ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ஜெயலலிதா அரசு, இதை படிப்படியாக எல்லா மாவட்டத்திற்கும் விரிவாக்கி நீதி மன்றத்தின் இருப்பையே அவசியமற்றதாக்கக் கூடிய அபாயம் காத்திருக்கிறது.

தமிழக போலீசிற்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கும் Madras police act முழுமையாக திரும்பப் பெறுவதே இதற்கு தீர்வு. இதை எதிர்த்தும் பேச்சுரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவற்றிற்காகவும் தமிழக மக்கள் ஒன்றுசேருமாறு ம.ச.கு.க பொதுப்பேரவை அறைகூவல் விடுக்கிறது.

10. இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை

சாதி நிலவுடைமை சமுகத்தில் கிராமங்களில் பிறப்பு அடிப்படையில் தனக்கான உழைப்பு பிரிவினைகளில் கட்டுண்டு கிடந்த சாதி சமூகங்கள்; காலனிய நவீன கட்டத்தில் கல்வி, வேலை, அதிகாரம் என்ற நவீன சனநாயக கோரிக்கைகளுடன் சாதிசங்கங்கள் என்ற முதலாளிய அமைப்பு வடிவங்களை மேற்கொண்டன. இதன் மூலம் கிராமங்களை தாண்டாத இந்த சாதிகள் கிராமங்களை கடந்து அமைப்பாக அணிதிரண்டனர். இதனால், காலனிய கட்டத்திலேயே முதலில் மைசூர் சமஸ்தானத்திலும், அதைத்தொடர்ந்து மெட்ராஸ் மாகாணத்திலும் இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டது.

1947 க்கு பிறகு தந்தை பெரியாரின் போராட்டங்கள் முலம் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. பிற்பட்டவர்கள் என்பது சாதி ஒடுக்குமுறை இல்லாமல் ஆதிக்க சாதிகளில் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. சாராம்சத்தில் பொருளதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான பின் தங்கிய சமூகம் (பி.சி) என்ற அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தை பொருத்தவரை பிராமணர்கள் மற்றும் ஒரு சில ஆதிக்க சாதிகள் முன்னேறிய சாதியாகவும், இதர பெரும்பான்மையான ஆதிக்க சாதிகள் பிற்பட்டவர்கள் பட்டியலிலும் பிரிக்கப்பட்டனர். பின்னர் வன்னியர் போராட்டங்களுக்கு பிறகு சில ஆதிக்க சாதிகளை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

ஆனால், இடஒதுக்கீடு நடைமுறையில் பல பத்தாண்டுகளாக இருந்தும் ஆதிக்க சாதிகளில் உழைக்கும் மக்கள் பெரும்பலனை அடைந்ததாக தெரியவில்லை. இதில் உள்ள ஆதிக்க சக்திகளும் மேல் நடுத்தரவர்க்கங்ளுமே இடஒதுக்கீட்டை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இச்சாதிகளைச் சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு இதன் பலன்கள் அதிகமாக இன்னும் போய்ச் சேரவில்லை. எனவே, இடஒதுக்கீட்டு முறை பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது.  

அது கீழ்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட வேண்டி உள்ளது.

(1) பொதுப்பிரிவு 10% மிகாமல் ஒதுக்கப்பட வேண்டும்.

(2) சிறப்பு பிரிவினர்களான தலித், பழங்குடிகள், மீனவர்கள் மதச்சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளுக்கு மக்கள் தொகை விகிதாச்சார படி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

(3) சாதி கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு 10% செய்யப்பட வேண்டும். இதில் தலித்களை மணம்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

(4) மீதமுள்ள சுமார் 50% முன்று (அ) நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டும்.
* இவை சாதிகளின் ஒத்த தன்மைகளுக்கேற்ப பிரிக்கப்பட வேண்டும்.
* தொகுப்புகளுக்கு பொருளாதாரவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இவ்வரம்புகள் தளர்வாக நிர்ணயித்து பயனற்று பழைய நிலையையே தோற்றுவிக்கக் கூடாது. அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கம் பலன்பெறும் வகையில் பொருளாதார வரம்பு (கிரிமிலேயர்) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

(5) அனைத்து தொகுப்புகளிலும் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

(6) மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்திற்கு நேரிடையாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

(7) அனைத்து ஒதுக்கீட்டிலும் முதல் தலைமுறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

(ஆ) கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
(இ) பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலை கணக்கில் கொள்ள வேண்டும்.

மேற்கண்டவைகள் அனைத்து தொகுப்பிலும் கூட பார்க்க வேண்டும்.

தொடர்ந்து கையாண்ட இருக்கும் இடஒதுக்கீட்டில் மேற்கண்ட மாற்றங்கள் தேவை என ம.ச.கு.க யின் இப்பொதுப் பேரவை கருதுகின்றது.      

11. தமிழ் ஈழத்தை அங்கீகரிப்போம்! பொது வாக்கெடுப்பு கோருவோம்!

கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த விடுதலைப்புகளின் ஈழவிடுதலை யுத்தம் லட்ச கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பிறகு முடிவுக்கு வந்தது. அதே சமயத்தில், அனைத்துலக அளவில் இப்போராட்டம் அரசியல் கோரிக்கையாக பரிணமித்துள்ளது. அக்கோரிக்கை நம்மால் முன்வைக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பு என்ற அரசியல் கோரிக்கையாகும். இதுமட்டுமல்லாமல், இராசபக்சே இனப்படுகொலையாளன் என்பதையும் உலக அளவில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில், ஈழத்தில் உள்ள மக்களின் மறுவாழ்வு பணிகள் மிக முக்கியமானது. தொடர்ந்து பல ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதிலிருந்து பகுதி அளவிலாவது விடுபட வேண்டும். மேலும், ஈழத்தமிழினத்தையே அழிக்கும் நோக்கோடு இன அழிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட தேவைகளும் கோரிக்கைகளுமே தமிழ் ஈழ, ஆதரவு போராட்டத்தில் மேற்கொள்ள வேண்டியவைகளாகும். இக்கோரிக்கைகளுக்கான மாணவர்களின் போராட்டங்கள் முதல் சுற்று மிகச் சிறப்பாக வெற்றி பெற்றது. அடுத்தச்சுற்று போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை பெரும் எழுச்சியாக மாற்ற ம.ச.கு.க வின் முதல் பொதுப்பேரவை அறைகூவி அழைக்கிறது.
     
12. உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விளைவே விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு மக்களின் முக்கிய சிக்கலாக மாறிவருகிறது. தக்காளி விலை தொடர்ந்து 60 ருபாய்க்கு மேல் விற்கிறது. முன்பு வெங்காய விலை உயர்வுக்கு எதிராக பொங்கி எழுந்த அரசியல் கட்சிகள் இன்று முனுமுனுக்ககூட முன்வரவில்லை. விலைவாசி உயர்வை தனது தேர்தல் பிரச்சாரத்தின் மைய சிக்கலாக வைத்து பேசிய ஜெயலலிதா ஆட்சியில் தான் அரசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, மீன், இறைச்சியின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஏழைகள் அதிகம் பயன்படுத்திய கத்திரிக்காய் விலை கிலோ 40 ருபாய்க்கு மேல் உயர்ந்து ஏழைகளுக்கு எட்டா காயாகிவிட்டது.

உலகமயமாக்கல் கொள்கை பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக ஆக்குகிறது. ஏழைகளை ஏதுமற்றவர்களாக வீதியில் தூக்கியெறிந்துள்ளது. உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விலைவே விலைவாசி உயர்வாகும். ம.ச.கு.க பொதுபேரவை ஏழை மக்களுக்கு எதிரான உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறது.
     
13. தொடக்க பள்ளிகளில் ஆங்கில கல்வி

சுமார் 3000 த்துக்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அமல்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ம.ச.கு.க வைப் பொருத்தவரை “ஆரம்பகல்விமுதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழிக் கல்வி, இலவசக்கல்வி” என்ற முற்போக்கு மாணவர் சங்கத்தின் கொள்கையையே தனது அடிப்படைக் கல்விக் கொள்கையாக கொண்டிருக்கிறது. இருப்பினும், தமிழக அரசின் அறிவிப்பு என்பது, தனியார் பள்ளிகள் பெருகி கொண்டு வருவதால் அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுக்கவே கொண்டு வருவதாக கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல் அரசுபள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்பவர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. மேலும், உலகமயமாகி உள்ள “உழைப்பு சந்தைக்கு” மலிவுவிலையில் உழைப்பு சக்திகளை உற்பத்தி செய்து அனுப்பவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அடிப்படை வர்க்கங்களும், கணிசமான நடுத்தர வர்க்கங்களும் கூட பயன்பெறுவார். ஓரளவாவது கல்வி, வேலைவாய்ப்புகளில் பயன்பெறுவர்.

அதே சமயத்தில், தாய்மொழிக் கல்விக்காக போராடுவது அவசியமாகும். இதனோடு சேர்ந்து இலவசக் கல்விக்காகவும் போராட வேண்டும். எனவே,

(1) ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழிக் கல்வியை ஏற்படுத்த வேண்டும்.
(2) அரசே அனைவருக்கும் இலவசக் கல்வி தரவேண்டும்.
(3) தமிழில் படித்தவர்களுக்காக வேலை வாய்ப்பை தமிழ் நாட்டில் ஏற்படுத்த வேண்டும். என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கான வலுவான மக்கள் திரள் போராட்டங்களை கட்டி எழுப்ப தமிழக மக்களை ம.ச.கு. கட்சியின் முதல் பொதுப்பேரவை கேட்டுக் கொள்கிறது.

14. தமிழக மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்திய இறையாண்மை......?

நமது தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருவதோடு, மீனவர்களை அடித்து துன்புறுத்தியும், அவர்களின் வாழ்வாதாரமான வலைகளை கிழித்தும், படகுகளை உடைத்தும் வருகிறது. தமிழக அரசும், வல்லரசாக மாறப்போகிறோம் என்று மார்த்தட்டும் ஒன்றிய அரசும் இதை வேடிக்கை பார்க்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் 800.க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்டுள்ளனர். தனது நாட்டின் குடிமக்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை ‘நட்பு நாடு’ என உரிமைபாராட்டுகிறது வெட்கம்கெட்ட இந்திய ஒன்றிய அரசு.

மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் பொதுப்பேரவை மீனவர்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. இதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காத, இலங்கையை நட்பு நாடு என்று அறிவித்த இந்திய ஒன்றிய அரசையும் வன்மையாக கண்டிக்கிறது. அதே வேலை தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு எந்தவித உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழக அரசிற்கு தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.

மீனவர்களின் வாழ்வுரிமைக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும், போராட முன்வரவேண்டுமென ம.ச.கு.க பொதுப்பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய இறையாண்மை பற்றி வாய்க்கிழிய பேசும் ஆட்சியாளர்கள், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சுட்டு கொள்ளப்படுவது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்பதை ஏற்க மறுத்தால் தமிழக மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்திய இறையாண்மை.......?      

(15) தருமபுரி முதல் மரக்காணம் வரை

தருமபுரியில் ஆதிக்க சாதி வெறியர்களால மூன்று தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன. இது திட்டமிட்டு பா.ம.க கட்சியில் நடத்தப்பட்டது. அரசியல் செல்வாக்கை இழந்திருந்த இராமதாஸ் மீண்டும் வன்னிய சாதி மக்களின் செல்வாக்கை பெற இக்குறுக்குவழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிகழ்வை ஒட்டி ஆதிக்க சாதி-நிலக்கிழார்களை தமிழகம் முழுவதும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதன் போக்கிலேயே மாமல்லபுரம் கூட்டத்தை ஒட்டி மரக்காணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இராமதாஸ் கும்பலின் சாதி-நிலவுடைமை மீட்டுருவாக்கத்தை ம.ச.கு.க பொதுப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த பிற்போக்குத் தனங்களுக்கு பலியாகாமல் புதிய பன்பாட்டை உருவாக்கவும் தமிழக மக்களுக்கு மா.ச.கு.க பொதுப்பேரவை வேண்டுகோள வைக்கிறது.

(16) இந்திய ஒன்றிய அரசு + மாநில அரசு உறவுகள்

நேருவின் பொய் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டு இந்திய ஒன்றியம் என்பது மொழி வழித்தேசிய இனங்கள் மற்றும் பழங்குடி இனங்களின் சிறைக் கூடமாக கட்டமைக்கப்பட்டது. பெயரளவில் வழங்கிய அதிகாரங்கள் கூட மாநிலங்களிடம் இருந்து படிப்படியாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டு வருகிறது. இப்பொழுதும் தேசிய புலனாய்வுகள் இரயில்வே போலீஸ், நீர் மேலாண்மை என்று தனது முழுவதுமாக நிலை நாட்டுவது என்று முடிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.    
     
(17) பழங்குடிகளுக்கு எதிரான தாக்குதல்களை கண்டிப்போம்!

பழங்குடி மக்களை தமிழக காவல்துறை காலனிய ஆட்சியைப் போல் இப்பொழுதும் கேவலமாக நடத்திக் கொண்டிருக்கிறது தொடர்ந்து திருட்டு வழக்குகளை போட்டு துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போக்கை ம.ச.கு.கவின் இம் முதல் பொதுப்பேரவை கண்டிக்கிறது. மேலும், பழங்குடிகளை பழங்குடிகள் பட்டியலிலே சேர்க்காமல், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது போன்ற குழப்பங்கள் நிறுத்தப்பட வேண்டும். அனைவரும் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். மாவட்டங்களில் உள்ள வேறுபாடுகள் களையப்பட்டு தமிழகம் எங்கும் ஒரே நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.     

(18) நதி நீர் பங்கீடு

தமிழகத்தில் உள்ள நதிகளாக காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆறுகளில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதில் மாநில, ஒன்றிய அரசுகளால் போடப்படும் அரசியல் நாடகங்களை இப்பொதுப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச நதிநீர் பங்கீட்டு சட்டங்கள் அடிப்படையில் நதிநீர் பங்கீட்டுக் கொள்ள தமிழக அரசு போராட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

(19) அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்போம்

உலக மயமாக்கலை பாதுகாக்கும் நோக்கோடு பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அரச பயங்கரவாதம் உலகம் முழுவதும் அரசாங்கங்களால் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடுமையான கருப்பு சட்டங்களால் ஒடுக்குமுறை மட்டுமல்லாமல், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கூடங்குளத்தில் போராடிய மக்கள் மீது எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன. கருப்பு சட்டங்கள் மக்கள் மீது பயன்படுத்துவதை வன்மையாக இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

உலக அரச பயங்கரவாதத்தின் விளைவாக ஒவ்வொரு தேசங்களும், நாடுகளும் இராணுவமயம், போலீஸ்மயமாகி வருகிறது. தமிழகமும் போலீஸ் மயமாகி வருகிறது. அனைத்து குடிமைச்செயல்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போக்கை ம.ச.கு.கவின் இம்முதல் பொதுக்குழு கண்டிக்கிறது. தமிழக போலீஸ் மயமாகி வருவதற்கு எதிராக மக்கள் திரளும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.    

(20) மின்வெட்டும்-மின்னாற்றலும்

பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதும், தேவைக்கேற்ப மின்னாற்றலை வளர்த்தெடுப்பதற்கான எந்த மின் கொள்கையும் இல்லாததாலும் சென்னை தவிர தமிழகம் இருட்டில் மூழ்கி உள்ளது. ஒன்றிய, தமிழக அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமாக உள்ளது. பன்னாட்டு முதலாளிகளுக்காக கைவிடப்பட்ட தொழில் நுட்பமான அணுமின் நிலையங்களையும், சுற்றுபுறத்தை நாசம் செய்கிற அனல்மின் நிலையங்களையும். நாள்தோறும் உருவாக்கி கொண்டிருக்கின்றன. இதற்கு மாற்றாக, இயற்கையின் மறுசுழற்சிக்கு உட்படும் சூரியஒளி, காற்றாலை, நீர் போன்ற ஆதாரங்களை அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று ம.ச.கு.கவின் இப்பொதுப்பேரவை கேட்டுக்கொள்கிறது.

அமைப்பு தீர்மானங்கள்

(1) 9/6/2013 இன்று கூடியுள்ள இந்த முதல் பெறும் பேரவை “மக்கள் சனநாயக குடியரசு கட்சி” என்ற பெயரில் “தேர்தல் கமிசனில்” பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

(2) மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் அரசியல்-அமைப்பு கொள்கை புதிய வரைவு அறிக்கை உடனடி வேலை திட்டத்தை தயாரித்து அதிகபட்சம் ஒரு ஆண்டுக்குள் பேராயம் நடத்தி இறுதி செய்ய வேண்டும் என இப்பொது பேரவை தீர்மானிக்கிறது.

Pin It