மழை நீர் தூய்மையானது. ஆனால் அது சேரும் இடத்திற்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. கிணற்றில் விழும் மழை நீர் குடிநீராகப் பயன்படுகிறது. கடலில் விழும் மழை நீர் உப்பு நீராகிறது, கூவத்தில் விழும் மழைநீர் கழிவு நீராகிறது.

அதுபோல் ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கரு மெல்ல மெல்ல வளர்ந்து 9 மாதங்கள் கழித்து வெளிவரும்போது கடவுள், மதம், சாதி, மொழி, மூடநம்பிக்கை ஆகிய எதுவும் இல்லாத பரிசுத்தமான குழந்தையாகத்தான் பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்தபின் வளர்ப்பவரின் தன்மையை பிரதிபலிக்கிறது.

ஒரு கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை ஒரு கிறித்துவனாக உருவாகிறது. யேசுநாதரை வணங்குகிறது. ஒரு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை ஒரு இஸ்லாமியனாக வளர்கிறது. முகமது நபியை இறைவனாக ஏற்றுக் கொள்கிறது. ஒரு இந்து மதத்தில் பிறக்கும் குழந்தை ஒரு இந்துவாக மட்டும் வளராமல் ஒரு சாதி சார்ந்தவனாகவும் வளர்கிறது. பல கடவுள்களைத் தெய்வங்களாக வணங்குகிறது. ஒரு பகுத்தறிவாளர் வீட்டில் பிறக்கும் குழந்தை கடவுள் சாதி, மத பேத உணர்வுகள் இல்லாத, மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காத ஒரு பகுத்தறிவாளனாக வளர்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் தமிழ்மொழி பேசும், இந்த மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை, அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் கிறித்தவ மதத்தை ஏற்றுக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தால், அந்தக் குழந்தை ஆங்கிலம்தான் பேசும்; யோசுநாதரைத்தான் வணங்கும்.

அதே குழந்தை சீன நாட்டில் சீனமொழி பேசும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் வளர்ந்தார் அந்தக் குழந்தை சீனமொழிதான் பேசும் புத்தரைத்தான் கடவுளாக வணங்கும்.

அதே குழந்தை ஈராக் நாட்டில், உருது மொழி பேசும். இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார், அந்தக் குழந்தை உருதுமொழிதான் பேசும்; நபிகள் நாயகத்தைத் தான் இறைவனாக வணங்கும்.

இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டில் பல தாய்மார்கள் தான் பெற்ற குழந்தையை வறுமையின் காரணமாக வளர்க்கமுடியாமல் எங்காவது வளரட்டும் என்று கைக்குழந்தையாக இருக்கும்போதே மற்றவர்களிடம் ஒப்படைக்கின்றனர். அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள் உலகில் ஏதாவதொரு நாட்டில் வளரும் நிலை ஏற்படுகிறது.

அந்தக் குழந்தை தாய் யார், தந்தை யார் என்று தெரியாமல், வளர்ப்பவர்களையே தன் தாயாக, தன் தந்தையாகக் கருதி அவர்கள் பேசும் மொழியையே பேசி அவர்கள் வணங்கும் கடவுளையே வணங்கி அவர்கள் பின்பற்றும் சமூகப் பழக்க வழக்கங்களையே, தன்னுடையதாக்கி வளர்வதை நாம் காணலாம்.

1994 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை நிகழ்வு. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஆலம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது ஆண் குழந்தை அங்கு நின்று கொண்டிருந்த விரைவு இரயிலில் ஏறியதும், அந்த இரயில் புறப்பட்டுச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இரயிலில் குழந்தை தனியாக அழுதுகொண்டே இறங்கியது. தன் பெற்றோரைத் தேடியது.

அதனைப் பார்த்த சிலர் அந்தக் குழந்தையை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அங்கேயே தங்கி பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்து இளைஞானாக வெளியேறினான் சென்னையில் கிடைத்த வேலைகளை செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொண்டான். கடைசியாக சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். தற்போது அவனின் மாதச் சம்பளம் ரூ.3500/– வயது 21 தன் தோழர்களுடன் தங்கி இருக்கிறான்.

தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த சுரேஷ் என்பவரிடம் தனது பெற்றோரைத் தேடி கண்டுபிடிக்க விரும்பியதை தெரிவித்துள்ளான். சுரேஷ் தனது நண்பர்களின் உதவியால் அரிமா சங்கத்தை நாடினார்.

அரிமா சங்க கவர்னர் சிவகுமார், துணைத் தலைவர் பழமலை மாவட்டத்தலைர் மணிலால் ஆகியோரின் உதவியால் அந்த இளைஞன் சொன்ன விவரங்களை வைத்து அவனின் பெற்றோரைக் கண்டுபிடித்தனர். பிறகு அவனின் தந்தை தாயார் ஆகியோரைச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மகனைப் பார்த்த பெற்றோரும், பெற்றோரைப் பார்த்த மகனும் உணர்ச்சிப் பெருக்கத்தில் கட்டிப் பிடித்து அழுதனர். ஆனால் பெற்றோர் பேசிய மொழி மகனுக்குப் புரியவில்லை. மகன் பேசிய மொழி பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் சபீர் சொன்னான் “என் பெற்றோரைக் கண்டு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர். அவர்களையும் என் தங்கையையும் காப்பாற்றுவேன். சென்னையிலேயே தங்கி வேலை செய்வேன். மாதம் மாதம் பணம் அனுப்புவேன். அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து இருக்கிறேன். போய்வந்தபிறகு என் பெற்றோரைக் காண என் ஊருக்குச் செல்வேன்” என்றான்.

அவனின் பெற்றோர் முராண்பாய் – பேகம் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். பேசும் மொழி உருது, வணங்குவது நபிகள் நாயகத்தை.

மகன் சபீர் பேசும் மொழி தமிழ், பின்பற்றுவது இந்து மதம். வணங்குவது இந்து மதக் கடவுளர்கள், இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒருவன் பிறக்கும் போது அவனுக்குக் கடவுள் இல்லை. மதம் இல்லை, மொழி இல்லை. அவன் வளரும் போதுதான் அவனுக்கு மொழியும், மதமும் கடவுளும் கற்பிக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் உறுதியாகிறது.

உயிர் தோன்றி 100 கோடி ஆண்டுகள் இருக்கும் உடற்கூறு அடிப்படையிலான மனிதன் ஏறத்தாழ 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினான். தற்கால மனிதன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினான் என்பது பலரின் கருத்து.

மனிதன் பல ஆயிரம் ஆண்டுகள் பேசத் தெரியாதவனாகவே வாழ்ந்தான். அந்தக் காலத்தில் கடவுள் என்ற சொல் இல்லை. மிருகங்களைப் போலவே இயற்கை நிகழ்வுகளைக் கண்டு மனிதன் பயந்து வந்தான். இடியின் ஓசையைக் கேட்டுப் பயந்தான். புயலைக் கண்டு பயந்தான். பெரும் மழையைக் கண்டு பயந்தான், காடுகள் எரிவதைக் கண்டு பயந்தான்.

பேசத் தேவைப்பட்டதும் இந்த பயங்கரமான நிகழ்வுகளை சைகையாலும், சொற்களாலும் ஒருவனுக்கு ஒருவன் தெரிவித்துக் கொண்டான். அந்த கற்பனைக் கர்த்தாக்களுக்கு கடவுள் என்றும் தெய்வம் என்றும் பெயர் சூட்டினான். சொல்வதைச் சொல்லும் கிளிப் பிள்ளையைப் போல இன்றும் இந்தச் சொல் கற்றவர்களாலும் கல்லாதவர்களாலும் பழக்கத்தின் காரணமாக அதிலிருந்து வெளிவர முடியாமல் அதனையே சொல்லிக் கொண்டும் பின்பற்றிக் கொண்டும் வருகின்றனர்.

மக்கள் ஏன் கடவுளைத் தேடுகிறார்கள். தானும் தன் குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பொன் வேண்டும், பொருள் வேண்டும், கல்வி வேண்டும் தனக்குத் தேவையான அனைத்தும் சுலபமாகக் கிடைத்திடவேண்டும். நோயற்றவனாய் வாழ வேண்டும். மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுளை நாடுகின்றனர். வேண்டுகின்றனர். அதற்காகப் பொருளைச் செலவு செய்வதோடு உடலையும் வறுத்திக் கொள்கின்றனர்.

இல்லாத கடவுளிடம் அதுவும் கற்சிலைகள் முன் நின்று கொண்டு வேண்டுவதால் என்ன பயன் கிடைக்கும், மிருகங்களும், பறவைகளும் நம்மைப் போலவே உயிர் வாழ்கின்றன. நம்மைப் போலவே குடும்பம் நடத்துகின்றன. அவை கோயில் கட்டுவதும் இல்லை, பிற கடவுளை வணங்குவதும் இல்லை. அறிவு படைத்த மனிதனே தன் சுய நலத்திற்காக அறிவை இழக்கிறான். தன் குடும்பத்தையும் மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கிறான்.

கடவுள் என்று ஒன்று இருந்தால், நோய், வறுமை, பஞ்சம், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகளும், மனிதர்களால் செய்யப்படும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற கொடிய நிகழ்வுகளும் நடக்க முடியுமா?

1859 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் என்ற அறிஞர் மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணமித்தான் என்று ஆராய்ச்சி மூலம், நிரூப்பித்துவிட்டார். இதற்குப் பின்னர் கடவுள்தான் மனிதனை படைத்தார் என்று கதைவிடுவது கயமைத்தனம் அல்லவா. மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பதே உண்மை. கோயில்களில் கடவுள் சிலைகளுக்கு முன் நின்று கொண்டு, கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் கதைப்பதாக பித்தலாட்டம் செய்யும் கயவர்களையும், போலிச் சாமியார்களையும் நம்புவது மடமை என்று இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வார்களா?

Pin It