வளர்ச்சி முகமூடி தரித்து
வலம் வரும் இப்பேய்
சொற்பமாய் விண்ணுயர்த்தி
லட்சமாய் காவு கொள்கிறது
பூர்வ குடிகளின் நில ரத்தம் உறிந்து
வளம் சுரண்டி
மண்ணுயிர் வற்றச் செய்கிறது
நிலம் புசித்து
உழவனின் உயிர்குடித்து
நரதாகம் தணிகிறது
அரசுத் துறைகளை நசித்து
இடஒதுக்கீட்டிற்குக் குழிபறித்து
விஷம் வைத்து
விளிம்பு நிலை மக்களை
வீதிக்குத் துரத்துகிறது
ஆங்கிலமே ஆளுமைமொழி
அறிவுமொழியெனப் பசப்பி
தாய்மொழி பேசுபவரைத்
தாழ்வு கொள்ள வைக்கிறது.
மதர்த்த பணத்தை மண்ணில் கொட்டி
வீடற்றவர்களாக்குகிறது
மேல்நாட்டு டாலருடன் மண்ணில் பண்பாட்டை
வன்புணர்ச்சி செய்கிறது
இத்தனைக்குப் பிறகும்
சிவப்புக் கம்பளம் விரித்து
வரவேற்றபடியிருக்கின்றனர்
மக்களின் காவலர்கள்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.