எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னதக் கோட்பாட்டைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு, சமூக நீதிக் களத்தில் சரித்திரம் படைத்து வரும் திராவிட மாடல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி, தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு பொற்காலம்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு, பேரறிஞர் அண்ணாவின் எளியவர் ஏற்றம், முத்தமிழறிஞர் கலைஞரின் நவீனக் கட்டுமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மு. க. தலைமையிலான 'திராவிட மாடல்', இன்று இந்திய நிலப்பரப்பிற்கே திசைகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.
1. பசிப்பிணி போக்கி அறிவு வளர்க்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம்:
"பசியோடு இருக்கும் பிள்ளைக்குப் பாடத்தில் கவனம் செலுத்துவது கடினம்” என்பதை உணர்ந்த முதலமைச்சர், நீதிக்கட்சி விதைத்த மதிய உணவுத் திட்டம், கலைஞரின் முட்டையுடன் கூடிய சத்தான உணவு இவற்றின் அடுத்த பாய்ச்சலாக ‘முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை’ உருவாக்கினார்.
2025 ஆகஸ்ட் நிலவரப்படி, இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது 20.59 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் ₹600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வின்படி, இத்திட்டத்தால் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதுடன், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் மருத்துவமனை அனுமதி விகிதம் 63.2% சரிந்துள்ளது. இது வெறும் உணவு அல்ல; ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் சமூக முதலீடு!
2.உயர்கல்வியின் இரட்டைச் சிறகுகள்:
பெண்ணடிமைத் தனத்தை ஒழித்து பெண்கல்வியைப் போற்றிய பெரியாரின் கனவை ‘புதுமைப் பெண்’ திட்டம் நனவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டதே ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம். 2024-25 நிதியாண்டில் 4.13 லட்சம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழும், 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம் ₹1,000 உதவித்தொகை பெற்றுள்ளனர். இத்திட்டங்கள் அறிமுகமான பிறகு, அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் (GER) கணிசமாக உயர்ந்துள்ளது. இத்திட்டங்கள் விளிம்புநிலை மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்கும் ‘அரண்’. களாகும்.
3. பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டம்:
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பைத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2025-26 நிதிநிலை அறிக்கையில் பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு மட்டும் ₹55,261 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகளுக்காக ₹1,000 கோடி தனியாக ஒதுக்கப்பட்டு, 8,370-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் மூலம் அரசுப் பள்ளிகள் இன்று தரமான கல்வியின் மையங்களாக மாறியுள்ளன.
4. திறன் மேம்பாட்டில் ‘நான் முதல்வன்’:
உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் தமிழக இளைஞர்களை முன்னிறுத்தத் தொடங்கப்பட்டதே ‘நான் முதல்வன்’ திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. வெறும் பட்டப்படிப்புடன் நிற்காமல், தொழில்துறைக்குத் தேவையான (Industry-ready) திறன்களை மாணவர்கள் பெறுவதால், தமிழகத்தின் வேலைவாய்ப்பு விகிதம் பன்மடங்கு பெருகியுள்ளது.
5. சமூக நீதியின் மணிமகுடம்:
7.5% இடஒதுக்கீடு, பொருளாதார வசதியின்றி மருத்துவம் மற்றும் பொறியியல் கனவுகளைத் துறந்த மாணவர்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய வரம் இது. இவ் இடஒதுக்கீட்டின் கீழ் பயிலும் 41,038 மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்திற்காக 2025-26 பட்ஜெட்டில் ₹550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிவர்களின் பிள்ளைகள் எவ்விதச் செலவுமின்றி மருத்துவக் கல்லூரிகளுக்குள் தலைநிமிர்ந்து நுழைகின்றனர்.
6. விடியலின் திசையில் தமிழ்நாடு:
அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வித் திட்டம் மூலம் ஆக்ஸ்போர்டு வரை செல்லும் எளிய மாணவர்கள், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தில் மடிக்கணினி பெறும் இளைஞர்கள் எனத் தமிழ்நாட்டின் அறிவுச் சுடர் உலகெங்கும் பரவி வருகிறது.
சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய தத்துவங்களின் வழி நின்று, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கி வரும் திராவிட மாடல் அரசுக்கு ஒவ்வொரு குடிமகனும் துணையாக நின்று, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உறுதி ஏற்போம்!
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
- நெல்லை பாபு