முசோலினியைச் சந்தித்தபின்னர் மூஞ்சேயால் வடிவமைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச மக்கள் விரோத சக்தியாக வளர்ந்து நிற்கிறது.

ஜவகர்லால் நேரு, "குறித்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் அபாயம் கம்யூனிசம் அல்ல. இந்துமதவாதம் தான்" என்று ஒற்றைவரியில் ஆர்எஸ்எஸ்- ஐ அடையாளம் காட்டி இருக்கிறார். பொதுவுடைமை சமத்துவத்தின் அடையாளம். மதவாதம் பாசிசத்தின் உள்ளடக்கம்.

மதம் வேறு, அரசியல் வேறு. இரண்டையும் ஒன்றுபடுத்தக் கூடாது என்று சில அரைவேக்காடுகள் பேசுவார்கள். சரியாகச் சொன்னால் 'மதம்' என்பதே அரசியல்தான். அதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் உள்ளன.

அயோத்திக்கு அத்வானி சென்ற ரதயாத்திரையில் மதம் மட்டும்தான் இருந்ததா? அரசியல் இல்லையா? மக்களை அரசியல்மயப் படுத்துவது என்பது வேறு. மத அரசியல் படுத்துவது என்பது வேறு.

மத அரசியல் கலவரங்களை உருவாக்கும். முற்போக்குச் சிந்தனையாளர்களைக் கொலை செய்யும். சனாதனத்தை வேரூன்றச் செய்யும். இந்து என்ற பொதுப்

பெயரில் மக்களைத் திரட்ட மதத்தைப் பேசும். ஆனால் அங்கு பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாகக் கருதப்படுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் பெயர் தேசியம், இந்து தேசியம், இந்துராஷ்டிரம்.

திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூணில்' தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் மதம் அரசியலுடன் இருக்கிறது. இதுதான் கலவரத்தை உருவாக்கும் நெருப்பு.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் மதம் (ஆர்எஸ்எஸ்) மக்களைப் பிரித்து வைத்து ஒற்றுமையை, அமைதியை சிதைத்துப் போட்டதுபோலத் தமிழ்நாட்டையும் ஆக்கப் பார்க்கிறது ஆர்எஸ்எஸ்/பாஜக.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-ஐக் கால் ஊன்ற விடாமல் தடுத்துக்கொண்டு இருப்பது ஐயா பெரியாரின் சித்தாந்தம்.

இனியும், எப்போதும் அதைத் தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுத்து விரட்ட வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. பகுத்தறிவு வலுப்பெற்றால் பாசிசம் நாசமாகும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.