தொடர்புடைய படைப்புகள்

upsc exam scamஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், பொருளாதார நலிந்த பார்ப்பனர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டு வருமானம் 8 இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே 10% இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகள் வழங்கப்பட சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையில் தேர்ச்சி பெற்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவைச் சேர்ந்த 104 மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி வந்துள்ளன. தேர்ச்சி பெற்ற 104 பேரில் 67 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2.65 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நாட்டின் மிக புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

46 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதும், 14 மாணவர்கள் அய்.அய்.டி (IIT), என்.அய்.டி (NIT) போன்ற நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் 28 மாணவர்களின் பெற்றோர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும், நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும், சொந்தமாகப் பெரிய கடைகள் மற்றும் குடும்பத் தொழில் நடத்துபவர்களாகவும் உள்ளனர்.

10 மாணவர்கள் ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் பணி புரிந்தவர்கள் ஆவர்.

இலட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணம் செலுத்தியவர்களும், கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் வாரிசுகளும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் எப்படி ‘பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்’ என்ற வரம்புக்குள் வர முடியும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உண்மையான ஏழை எளிய மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த EWS மோசடி குறித்து ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, ஒரு உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

- விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.