வேளாண் துறை அமைச்சர் வினோத் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை திருப்பதி ஏழுமலையான் முன் சமர்ப்பித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட இப்படி ஒரு கேவலம் நடந்ததாக தகவல் இல்லை!
சட்டமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு பேரவைத் தலைவர் தான் அனுமதிக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கிறார். ஏழுமலையான் பட்ஜெட் முழுவதையும் படித்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசுவார் என்று அமைச்சர் எதிர்பார்க்கிறாரா?
பட்ஜெட் என்ற அரசு ஆவணத்திற்கு மதம் கிடையாது; அது மக்களுக்கான ஆவணம்.அனைத்து மதப் பிரிவு மக்களுக்கும் மத நம்பிக்கை அற்றவர்களுக்கும் தயாரிக்கப்படுகின்ற ஒரு அரசு ஆவணத்தை இந்து மத கடவுளுக்கு முன் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தையும் அனுமதியையும் கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட அயோத்தி ராமன் கோயில் முன் பட்ஜெட்டை சமர்ப்பிக்கவில்லை. துறையின் அமைச்சர் ஒரு இஸ்லாமியராக இருந்து அவர் பட்ஜெட்டை மசூதி முன்வைத்து அனுமதி கேட்டால் அனுமதிப்பார்களா? வாஸ்துப்படி முதல்வரின் அலுவலகம் பெரும் செலவில் மாற்றி அமைக்கப்படுவதும் முதலமைச்சரின் ஆஸ்தான சோதிடருக்கு அரசு பதவி கொடுக்க துடிப்பதும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நடந்ததே இல்லை! கடவுள் பெயரால் உறுதி ஏற்க மறுத்த ஆதவன் அர்ஜூனாக்கள் இதை ஆதரிக்கிறார்களா?
துறை சார்ந்த அமைச்சர்கள் மானிய கோரிக்கைகளில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளையும் இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் குலதெய்வத்துக்கும் சென்று அனுமதி பெற்றுத் தான் சட்டசபையில் சமர்ப்பிக்கப் போகிறார்களா?
பேரவையில் சமர்ப்பிக்க தன்னிடம் அனுமதி பெற வேண்டிய ஒரு அமைச்சர் ஏழுமலையானிடம் சென்று முன்கூட்டி அனுமதி பெறுவதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொள்கிறாரா?
பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கும் ஆட்சி இலட்சணம் இதுதானா?
கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சர்களும் இதை ஏற்கிறார்களா? இது மாற்றம் அல்ல ; மிகவும் கண்டிக்கத்தக்க ஏமாற்றம்!
- விடுதலை இராசேந்திரன்