கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கோவை சதாசிவம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தூரிகை நுனியில் வண்ணங்கள் சொட்ட, படைப்பு குறித்த மோனதவத்தில், வீற்றிருக்கும் பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு விரல்களில், அவிழும் ஓவியங்களைக் காணக் கிடைக்கும் வாய்ப்பை, நான் தட்டிக் கழித்ததில்லை, எந்தத் தருணத்திலும். மொட்டு அல்லது மலர் வகுப்புகளில் பயிலும் மூன்று நான்கு வயதுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளின் ஓவியங்களில் தவறாது இடம் பிடித்து விடுகிறது இயற்கையும், கூடவே பறவைகளும். பறவைகளில் மயில்களை அதிகக் குழந்தைகள் வரைந்திருப்பார்கள். மயில்களை இக்குழந்தைகள் நேரில் பார்த்திருப்பார்களா என்கிற சந்தேகம் தோன்றிமறையும் இடைவெளிக்குள் நிறங்களின் திரட்சியோடு ஓர் மயிலை வரைந்து நம் பார்வைக்கு பரிமாறிவிடுகின்றனர் குழந்தைகள்.
மயில் மனித குலத்தின் மரபணுவோடு கலந்த பறவை. தொன்மையான வரலாற்றுச் செய்திகளில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்ட பறவை. வேட்டைச் சமூக அமைப்பில் குகைகளில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பாறைகளில் மயிலை ஓவியமாக வரைந்துள்ளார்கள். சீகூர், சிறுமலை, மல்லசமுத்திரம், கோத்தகிரி அருகே உள்ள கொணக்கரையிலும் மயில்கள் பாறை ஓவியமாக நிலைத்திருக்கும் காட்சி இன்றளவும் நம் வரலாற்று பாரம்பரிய சாட்சியாய் உள்ளன.
இந்தியாவில் இயற்கைச் சூழலில் வாழும் பெரிய பறவை மயில்கள் தான். இவைகள் கோழிக்குடும்பத்தை சார்ந்தவை. சங்க இலக்கியங்களில் “மஞ்சை” என்னும் சொல் மயிலைக் குறிக்கிறது. காட்டு மஞ்சை கழனி மஞ்சை எனும் சொல்லாடல்களிலிருந்து வேளாண்நிலங்களிலும் மயில்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. ஆனாலும் காடும், காடு சார்ந்த முல்லை நிலமும், வெப்பமண்டலப் பகுதிகளும் தான் மயில்களின் வாழ்விடம்.
புழுபூச்சிகள், பூரான், சிறுபாம்புகள், விதைகள் மற்றும் தானியங்களை விரும்பி உண்ணும் மயில்கள் காலை, மாலை நேரங்களில் தீவிரமாக இரைதேடும் தன்மை கொண்டவை. நீலப்பச்சை நிறக் கழுத்தையும், அழகிய கொண்டையும், நீண்ட தோகையும் கொண்டது ஆண்மயில். பழப்புநிற மேலுடலும், கழுத்திற்கு கீழே வெள்ளை நிறவயிற்றுப்பகுதியும் கொண்டது பெண் மயில். எழுப்பும் குரலை அகவல் என்கிறோம். காடுகளில் மயில்களின் குரல் மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை ஒலியாக உள்ளது.
ஆண் மயிலை விட பெண்மயில்கள் உருவில் சிறியவை. நன்குவளர்ந்த ஆண் மயிலின் உடல் இரண்டிலிருந்து மூன்றடி நீளம் கொண்டவை. வளர்ந்த ஆண்மயிலின் தோகை மட்டும் நான்கிலிருந்து ஐந்தடி நீளமிருக்கும். ஆண்மயில்கள் எடை நான்கு கிலோவிலிருந்து ஆறுகிலோ வரையும் பெண் மயிலின் உடல் எடை மூன்று கிலோ முதல் நாலரை கிலோ வரையும் இருக்கும்.
இரண்டிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் மயில்கள் பருவடைகின்றன. மயில்களின் இனப்பெருக்கக் காலம் சித்திரை தொடங்கி புரட்டாசி வரை. இனப்பெருக்க காலத்தில் தான் ஆண் மயில்களுக்கு நீண்ட தோகை வளரும், வருடம் ஒருமுறை வால்பகுதியின் மேலடுக்குகளில் வளரும் தோகை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உதிர்ந்துவிடும். இனப்பெருக்க காலங்களில் ஆண் மயில்கள் நிறப்பொலிவோடு காணப்படும். வானவில்லின் நிறம் ஏழு என்றால் ஒன்பது நிறம் மயிலுக்கு. பெண் மயில்களை கவரவே ஆண்மயில்களுக்கு தோகை வளர்கிறது. வெப்பம் குறைந்து கார்மேகம் சூழ்ந்த குளிர்ந்தவேலையில்தான் இனச்சேர்க்கைக்கு தயாராகின்றன மயில்கள். நான்கைந்து பெண் மயில்கள் மேயும் இடத்திற்கு அருகில் ஆண்மயில்கள் தோகை விரித்தபடி அசைந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் ஆண்மயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள நேரும், வலதுகாலில் ஆண்மயிலின் பலம் உள்ளது. பலமாக உதைபட்ட ஆண்மயில் ஒதுங்கிக் கொள்ள, வெற்றிக்களிப்பில் பெரும் குரலில் கத்தியவாறு தமது தொண்டைப்பகுதியை தானே கொத்தவும் செய்யும். தன்னைத்தானே வருத்திக் கொள்வதைப் போல தோன்றினாலும், பெண்மயில்களின் கவனத்தை ஈர்க்கும் உத்திதான் இது. பறவை இனங்களில் மயில்களுக்கு மட்டும் வாய்த்த தனிச்சிறப்பாக ஆய்வாளர்கள் இதனை கருதுகிறார்கள்.
மயில்களின் இனச்சேர்க்கை குறித்து நம்மில் பலருக்கும் தவறான கருத்துள்ளது. ஆண்மயில் வாய்வழியே விந்தை உமிழ்வதாகவும். உமிழ்ந்த விந்தை பெண்மயில்கள் கொத்தி விழுங்கி அதன் பொருட்டு கருவுறுவதாகவும் காலம் காலமாய் நம்புகிறார்கள். (பறவைகள் குறித்த அறிவியல் தேடல் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்). சேவலைப்போல தான் இணை சேர்கிறது மயில்களும். கருவுறும் பெண்மயில் 28நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் இரண்டு மணிநேரத்தில் நடக்கவும், 9 நாட்களில் பறக்கவும் கற்றுக்கொள்கின்றன. தாய் மயில் தனது குஞ்சுகளுக்கு உணவையும், எதிரிகளின் நடமாட்டத்தையும் பலவிதமான குரல்களை எழுப்பி உணர்த்தும். மயில்களின் ஆயுட்காலம் இருபதாண்டுகள் என்று பறவை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அழகிய தோகைதான் மயில்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாகவும் இருக்கிறது.
மேலை நாடுகளில் துகி என்னும் கிரேக்க சொல்லாடல் தோகை என்னும் தமிழ் சொல்லிலிருந்து வந்ததுதான். கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சாலமன் அரசனால் தாமிரபரணி நதிக்கரையிலிருந்து உவரித் துறை முகம் வழியாக கப்பலில் கட்டுக்கட்டாக மயில் தோகைகளை தூக்கிச்சென்று, ரோமானிய மக்களுக்கு அறிமுகம் செய்தனர். பிறகு கடலோடி வணிகர்கள் ஆன பினீசியர்கள் கப்பல் கப்பலாய் ஏற்றி ரோமானிய வீதிகளில் தமிழ்நாட்டு மயில்களின் தோகைகளை கடை பரப்பினார்கள். ரோம் நாகரீகத்தில் மயில்களின் தோகை பலவிதமான உணவுப்பொருள்களோடு கலந்து உண்ணும் பழக்கமிருந்தது. நாகரிக காலத்திலும் ரோமானிய செல்வந்தர்கள் தமது விருந்து மேசைகளின் மீது பல்வேறு விதங்களில் மயில் தோகைகளை அழகுபடுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டுத் தளங்களில் மயில்களின் அடையாளம் ஆழமாய் பதிந்துள்ளது. பழனி மலைக்கருகில் உள்ள திருஆவினக்குடியில், தொல்பொருள் அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற செம்புக்காசுகளில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆற்காடு நவாப் சந்தா சாயுபு போன்ற முகமதிய மன்னர்களும், விஜயரகுநாத நாயக்கர் ஆட்சியிலும் மயிலின் உருவம் பொரிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. போர்க்களத்தில் தாய் மண்காக்க எதிரிகளோடு போராடி, வீரமரணம் அடையும் தமிழர்களுக்கு நடுகல் நட்டு மயில் பீலிகளால் அழகு செய்து, ஆண்டுக்கொருமுறை உணவுப் பண்டங்களையும், மதுபானங்களையும் படைத்து வழிபடும் பழக்கம் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. மயிலாட்டம் என்கிற கலையும், மயிலாசனம் என்கிற உடற்கலையும் மயில்களின் பெயராலே இன்றும் விளங்குகிறது. சதிராட்டம் என்கிற ஆடல் கலைக்குள் நிகழ்த்தப்பட்ட மயிலாட்டம் பிறகு பரதக்கலைக்குள்ளும் பரவியது.
பருவமடைந்த ஆண்மயில் பெண் மயிலைக் கவர தோகை விரித்து அசைவதை நடனத்தின் நளினமாகவே தமிழர்கள் பாவித்துக் கொண்டார்கள். மயிலின் அசைவின் போது ஒருக்களித்தல், குதித்தல், சுற்றுதல் என்கிற மூன்று அடவுகளை நிகழ்த்தும். இந்த அடவுகளிலிருந்தே தமிழர்களுக்கு காவடியாட்டம் என்கிற கலை கிடைத்தது. மயிலூர், மயிலாடும்துறை, மயிலம்பாடி, மயிலாப்பூர், மயிலம்பட்டி, மயிலாடும்பாறை, மயிலேறி பாளையம், மயிலம் போன்ற சில ஊர்களைக் குறிப்பிடலாம்.
தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்த வைத்துக் கொள்ளும் பெயர்களில்கூட மயிலம்மாள், மயிலாள், அன்னமயில், பொன்மயில், மயில்சாமி, மயிலாம்பதி, மயிலேறு, மயில்வாகனம், மயிலானந்தம் போன்ற பெயர்களில் இன்றளவும் அழைக்கப்படுகிறார்கள். இறந்த மயிலின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பே மயிலெண்ணெய் ஆகும். இது மூட்டுவலி, வாதநோய்களை குணமாக்கும் என்பதும், மயில் பீலியை தீயில் கருக்கி சாம்பலாக்கி தேனோடு குழைத்து குழந்தைகளுக்கு ஊட்ட தீராத சளியும், இருமலும் குணமாகும் என்பதும் கடைந்தெடுத்த மூடத்தனம். ஏனெனில் மயில்களுக்கு மருத்துவகுணம் என்பது இம்மியளவு கூட இல்லை.
இந்தியாவின் தேசியப்பறவையாகவும் மயில் உள்ளது. ஆனால் மயிலை தேசியப்பறவையாக இந்திய அரசு எந்த ஆண்டு அறிவித்தது, என்ற வினாவை எழுப்பினால், பலரும் பதில்சொல்ல முடியாமல் மௌனமாகிவிடுவார்கள். இந்தியாவில் வறண்ட, நீரற்ற, புதர்க்காடுகளில் வாழ்ந்த அடையாளம் அருகிப்போன கானமயிலைத்தான் முதலில் தேசியப்பறவையாக இந்திய அரசு தெரிவு செய்தது. அதன் ஆங்கிலப் பெயரால் அச்சுப்பிழை நேர்ந்துவிட்டால் வேறுபிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிற விவாதம் தலை தூக்க தற்போது அழிவின் விளிம்பில் அல்லாடும் மயிலுக்கு அந்த வாய்ப்பு வந்து சேர்ந்த ஆண்டு 1963.
1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த வனச்சட்டத்தின்படி மயில்கள் வேட்டையாடுதல் அல்லது வேறுவகையில் துன்புறுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. மயில் மியான்மாரிலும் (பர்மா) தேசியப்பறவையாக உள்ளது. உயிரியல் பூங்காவில் ஓரிரண்டு வெள்ளை மயில்களை நீங்கள் காண நேர்த்திருக்கலாம். இதை தனித்த இனமென்றும், அரியவகைப் பறவையென்றும், இது வண்டலூர், கோவை உயிரியல் பூங்காவில் வசிக்கிறது உண்மையில் வெள்ளை மயில்கள் தனித்த இனமன்று. வெள்ளை மயில்கள் வெள்ளுடல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவை என்ற கருத்தாய்வுகள் கூட இன்னும் முழுமையாக்கப்படவில்லை. வெள்ளை மயில்கள் நிறம் மங்கும் பண்புகளை கொண்ட நிறப்பிறழ்வு நோய் கொண்டவைகள். வெள்ளை மயில்களின் கண்கள் நீலநிறத்தில் உள்ளன. ஆண் வெள்ளை மயில்களின் தோகையில் உள்ள புள்ளிகள் மங்கலாக வெளிர்ந்து காணப்படுகின்றன.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வேளாண்மை குடிமக்களின் வேண்டாத பறவையாய் மயில்களின் தோற்றம் மாறிப்போனது. தொடர்ந்து அழிக்கப்பட்டுவரும் காடுகளால் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு காட்டுயிர்களின் வாழ்வு புலம் பெயர்ந்து வாழும் நொம்பலத்திற்குள்ளானது. இன்று வேளாண் நிலங்கள் தான் மயில்களின் புகலிடம். விளைநிலங்களில் இரைதேடி வரும் மயில்கள் முளைப்பயிர் மக்கா சோளம், தக்காளி, சூரியகாந்தி போன்றவற்றைக் கொத்திக் குதறிவிடுவதாக முறையிடும் வேளாண்மக்கள் மயில்களின் மீது மாளாத கோபத்தில் உள்ளார்கள்.
காடுகளில் மயில்களின் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த நரி, காட்டுப்பூனை, கீரி போன்ற பாலூட்டிகளின் வாழ்வை சீரழித்து சிதிலமாக்கிவிட்டோம். எந்த அறிவியல் முயற்சியாலும் இணைக்க முடியாத இயற்கையின் உணவுக் கண்ணிகள் உடைந்துவிட்டன. விளைநிலங்களிலும், அதனை சுற்றியுள்ள தோப்புகளிலும் மிகுதியாக மயில்கள் பெருக இதுவும் ஒரு காரணம்.
விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்கிறது மயில்கள் என குற்றம் சாட்டும் வேளாண்மக்கள் விளை நிலங்களில் சிறுபாம்பு, பூரான், பூச்சிகள், சிதறிய தானியங்கள் என்று மயில்கள் இரைதேடுவதை கவனிப்பதில்லை. பூச்சிகளை கட்டுப்படுத்தும் மயில்களும் உள்ளன என்பதை வேளாண்மக்கள் உணர வேண்டும். எல்லா பூச்சிகளும் பயிர்களை நாசம் செய்யும் என்பதும் தவறான கருத்து. பூச்சிகளையும், பறவைகளையும் தவிர்த்து விட்டு வேளாண் நிலங்கள் செழிக்க முடியாது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களில் விளைநிலங்களுக்கு வரும் மயில்களை விரட்டுதல் நஞ்சு வைத்து கொல்லுதல் போன்ற அடாத செயல்கள் செய்தித்தாள்களில் தினமும் அச்சேறுகின்றன.
கொங்குநாட்டு விளைநிலங்களில் ஆங்காங்கே மயில்கள் செத்துக்கிடப்பதை நாளும் பார்க்கலாம். பருத்திக்காடுகளில் தெளிக்கப்படும் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட “எண்டோ சல்பான், மோனோ குரோட்டோபோஸ்” போன்ற உயிர்க்கொல்லி மருந்துகளால் செத்துவிழும் புழுக்களை கொத்தி தின்னும் மயில்கள் ஆறேழுநாட்களில் செரிமான உறுப்புகளில் நஞ்சுபடிந்து குடல் புண்ணாகி இறந்து விடுகின்றன என்பதை பிரேத பரிசோதனையில் அறியமுடிகிறது.
பண்ணைகளில் பொதிப்பொதியாய் வளர்க்கப்படும் கோழிகளின் மூலம் பரவும் தொற்றுநோய்க்கிருமிகளால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் நோய் மயில்களையும் விட்டு வைப்பதில்லை.
விளைநிலங்களில் விரட்டப்பட்ட மயில்கள் கோவை மாநகரப்பகுதிக்கு குடிவந்துவிட்டன. சிங்காநல்லூர், வெள்ளலூர், பட்டணம் பகுதிகளில் மனிதமலம், எச்சில் கழிவுகள், அழுகிய கோழி இறைச்சி, கெட்டுப்போன காய்கறிகள் என்று தேடித்தின்று இரசாயன நஞ்சு நுரைத்த நொய்யலில் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறது.
பல்லுயிர்களை பாதுகாக்க உலக நாடுகள் முனைப்போடு செயலாற்றும் தருணத்தில் உயிர்களின் வாழ்வை உருக்குலைக்கும் செயல் இயற்கைக்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் எதிரானது.
பூமியின் வேர்பிடித்த எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலியது வாழும் என்கிற நியதிகளுக்குள் மனித குலம் எந்திரத்தனமாய் தள்ளப்பட்டுள்ளது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கொங்குமண்ணில் பாடப்பட்ட ஓர் நாட்டுப்புறப்பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
மருத பூத்தவனம்
மயிலாடும் சோலைவனம்
மருத மரத்தே சாச்சுபுட்டோம்
மயில் போயி எங்கடையும் – பொன்னு
மயில் போயி எங்கடையும்?
என்ற எமது முன்னோர்கள் இசைத்த நாட்டுப்புற பாடலில் ஊடாடும் குற்ற உணர்வு காலம் கடந்தும் நம்மை உறுத்துகிறது
****
கட்டுரையாளர் - “மயிலு” ஆவணப்பட இயக்குனர்/பறவை ஆர்வலர்
(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
யானைகளை அழிவில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. உலகில் யானைகள் அதிகம் வாழும் எட்டு நாடுகளை சேர்ந்த வனத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள், சுமார் ஐம்பது தேசங்களில் வாழ்கின்றன.
போட்ஸ்வானா, காங்கோ, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, கென்யா, தான்சானியா, மற்றும் தாய்லாந்து நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், யானைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவற்றை அழிவில் இருந்து காக்கவும் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
-
வேட்டைகளை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக யானையின் உடல் பாகங்களை கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும் தகவல் பரிமாற்றங்களை இந்த நாடுகள் மேற்கொள்ளும். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஆன சிக்கல்களை களைவதற்காக உள்ளூர் அமைப்புகள் உருவாக்கப்படும்.
-
யானைகளின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய அறிவியல் முறைகள் பின்பற்றப்படும்.
-
தொலைநோக்கு அடிப்படையில், விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஐம்பது சதவீதம் ஆசிய யானைகள் இந்தியாவில் மட்டுமே வாழும் சூழ்நிலையின் அவை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது. வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த யானைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்களின் காரணமாக நிறைய சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் அவற்றின் வசிப்பிடங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன.
1992 -ல் தொடங்கப்பட்ட யானைகள் செயல்திட்டம் (Project Elephant), யானைகள் வாழும் மாநிலங்களுக்கு, யானைகளின் வாழும் வனப்பகுதியை பாதுகாக்கவும், யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது, புலிகளுக்கு செயல்படும் தேசிய ஆணையத்தை (National Tiger Conservation Authority) போல, யானைகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (National Elephant Conservation Authority).
உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் வனங்களை விட்டு வெளியேறுவதும் அவற்றை மக்கள் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. யானைகள் தேசிய ஆணையம் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண வேண்டிய அவசியத்தில் உள்ளது. இல்லையேல் "யானைகள் அட்டகாசம்" என்ற செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகும். உண்மையில் யார் அட்டகாசம் செய்வது? யானைகளா? இல்லை மனிதர்களா?
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உங்களுக்குத் தெரியுமா ஒரு ஆச்சர்யமான செய்தி, ஆனால் உண்மை. புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளின்மேல் எந்த விதமான உடல் வாசனையும் இருக்காதாம்.
பெண்மான் ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்றிருந்தாலும், பெரும்பாலும் குட்டிகள் தாயை விட்டு தனியாகவே இருக்க நேர்கிறது. தாய் அருகிலிருந்தால் தாய்மானின் வாசனை மற்ற விலங்குகளுக்கு மானின் இருப்பிடத்தையும், குட்டிகளையும் காட்டிக் கொடுத்து விடும்.
மான்குட்டிகள் பிறந்து சில நிமிடங்களில் எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாயுடன் சென்று இரை தேட, பிறந்து ஓரிரு வாரங்கள் ஆகிவிடுகிறது. எனவே தாய்மான் இரை தேட வேண்டிய கட்டாயமான தருணங்களில் துணிந்து குட்டிகளை தனித்து விட்டுச் செல்கின்றன. அத்தருணங்களில் குட்டிகள் ஒன்றுக்கு மேல் இரண்டு அல்லது மூன்று இருந்தால், இரை தேடச் செல்லும்போது அவைகளை வெவ்வேறு இடங்களில், பிற மிருகங்களிடம் சிக்கிவிடாமல், பாதுகாப்பு கருதி தனித்தனியாக விட்டுச் செல்கிறது. குட்டிகளின் தனிமை அவைகளை பத்திரமாக இருக்கவே உதவுகிறது.
மான்குட்டிகள் பிறந்த முதல் பல நாட்களுக்கு அவைகளின் மேல் எந்தவித குறிப்பிட்ட வாசனையும் இருக்காது எனத் தெரிய வருகிறது. எனவே ஓநாய், காட்டுப் பூனை போன்ற எதிரி விலங்குகளின் கண்களுக்கு மான்குட்டிகள் இருப்பது தெரிவதில்லை.
சிகப்பு கலந்த தவிட்டு நிறத்துடன் கூடிய வெண்புள்ளிகளுடைய மான்குட்டிகளின் உடல் தோல் அவைகளுக்கு பாதுகாப்பைத் தருகிறது. இத்தோற்றம் காட்டின் மரக் கிளைகளுக்கு ஊடாக தரையில் விழும் சூரிய ஒளியின் புள்ளி புள்ளியான தோற்றத்தை ஒத்திருப்பதால் விலங்குகள் அக்குட்டிகளின் மேல் தடுக்கினால் ஒழியத் தெரிவதில்லையாம்
எனவே, வனசரணாலயங்களுக்கு நாம் செல்ல நேரிடும்பொழுது, புதிதாகப் பிறந்த புள்ளிமான் குட்டிகளைக் காண முடிந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள். புள்ளிமான் குட்டிகளுக்கு இயற்கை கொடுத்த வரத்திற்கு நன்றி சொல்வோம்.
- வ.க.கன்னியப்பன் (
- விவரங்கள்
- வரீதையா கான்ஸ்தந்தைன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள். பொது மொழியில் சொன்னால் 1370 கோடி கோடி கனமீட்டர்கள். நிலத்தைப் பொறுத்தவரை அதன்பரப்பில்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல்.
கடலை நினைத்தவுடன் சட்டென்று உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம். ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடல் என்பது நீர் என்னும் திரவம். இயல்பில் வெப்பசக்தி மாற்றங்களைப் பொறுத்து திட நிலைக்கும் ஆவி நிலைக்கும் மாறிக் கொள்கிற திரவம். தன்னளவில் நிறமற்ற இந்தத் திரவம்தான் உயிரின் ஆதாரமும். வேறந்தப் பொருளையும் போன்று நீருக்கும் இயற்பியல், வேதிப் பண்புகள் உண்டு. நீரானது உயிரின் அக ஊடகமாகவும் புற ஊடகமாகவும் இயங்குவதற்கு இந்தப் பண்புகள் தாம் காரணமாய் இருக்கின்றன. அடிப்படையில் கடலின் பண்பு என்பது அது கொண்டிருக்கும் நீர்த்திரளின் பண்பு தான்.
கடல் உயிரின் தொட்டில். ஆதியில் உயிர் கடலில் தோன்றியதாய்ப் பரிணாமவியல் சொல்கிறது. நீரின்றி அமையாது உலகு. நீர் அமைந்துபடுவதனால் மட்டுமே உலகில் உயிர்கள் தோன்றி வாழ்கின்றன. நீர் உயிரின் அமுதம் உயிரின் இயக்க ஊகமும் நீர்தான். மனித உடலில் ஏறத்தாழ 75 விழுக்காடு நீர். உலகின் இயக்கமும் அதன் விளைவான நீரின் இயக்கமுமே உயிர் இயக்கத்தின் ஆதார சுருதி. உயிர்களின் அன்றாட செயல்பாடுகள் என்பவை வளர்சிதை மாற்றம் சார்ந்தவை. உயிர்களின் இயக்கம் கரிம மூலக் கூறுகளின் கூட்டல் கழித்தல் கணக்கீடுகள் தாம். பிரம்மாண்டம், ஆச்சரியம் என்பவற்றின் குறி யீடாய்க் கடலைச் சொல்கிறோம். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கடலைப் பரவை என்கிறது. பரவை என்றால் பரந்து பட்ட என்று பொருள்.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் ஒரு ஆக்ஸிஜன் அணுக்கூறு சேர்ந்தால் கிடைப்பது ஒரு நீர் மூலக்கூறு. ஹைட்ரஜன் நேர்மின் விசை அயனி ஆக்ஸிஜன் (பிராணவாயு) எதிர்மின்விசை அயனி. பிற மூலக்கூறுகளின் எதிர்மின்விசையுடன் ஹைட்ரஜன் அயனி எளிதில் இணைந்து விடுகிறது. நீர் இயற்கையின் மிகச்சிறந்த கரைப்பானாய் இருப்பதற்கு இது முக்கியமான காரணம். வெப்ப சக்தியுடனான நீரின் பரிவர்த்தனையும் அடர்த்தி வேறுபாடுகளும் கடலின் இயற்பியல் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. ஹைட்ரஜன் அயனிகளின் பிணைப்பால் நீர்த்திரவத்தின் மேற்பரப்பு மெல்லிய தோல் போல் இயங்குகிறது. பூச்சிகள் போன்ற சிறு பொருட்கள் அதனுள் அமிழ்ந்து விடாமல் மேலே மிதப்பதற்கு இந்த பரப்பு ஈர்ப்புதான் (Surface tension) காரணம்.
நீர் மூலக்கூறுகளின் நெருக்கமான பிணைப்பை ஆக்சிஜனுடனோ வேறு கரை பொருட்களுடனோ உருவாக்கி விடுகிறது. பலவீனமான, ஆனால் எண் ணற்ற ஹைட்ரஜன் பிணைப்புகளின் காரணமாக நீர்த்திரவம் அடர்த்தி மிகுந்தும் ஒட்டும் தன்மை மிகுந்தும் காணப்படுகிறது. வெப்பத்தை உள் வாங்கியும் வெளியேற்றியும் விரிவடையவும் சுருங் கவும் செய்யும். ஹைட்ரஜன் பிணைப்புகளின் விலகலும் சேரலும் பனி உருகி நீராதல், நீர் விரி வடைந்து ஆவியாதல், மறுதிசையில் இயல்பு மாறுதல் எல்லாமே அடர்த்தி நிலைகளின் மாற்றம்தான். வலுவான பிணைப்பிலிருந்து மூலக் கூறுகளைப் பெயர்த்தெடுக்க (நீர் ஆவியாக) நிறைய சக்தி தேவைப்படுகிறது. நிரின் கொதிநிலை மிக அதிகமாயிருப்பதற்கு (100 டிகிரி செல்ஷியல்) இதுதான் காரணம். கடலின் வெப்பநிலை மாற்றம் ஒரே மட்டத்திலுள்ள நீரில் அடர்த்தி நிலை மாற் றத்தை ஏற்படுத்துகிறது. இப்படி விரிவடையும் நிர்த்திரள் பகுதி நகர்ந்து பரவுவதனால் பெருங்கடல் நீரோட்டங்கள் உருவாகின்றன.
கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை. வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம். இடையிலிருக்கும் நீர்த்தரளில் வெப்ப நிலை சடுதியாய்த் தாழ்ந்து விடுகிறது. அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையில் உறைபனியாய்க் கிடக்கையில் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையும் அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம். வெப்ப மட்டங்கள் இதனால்தான் உருவாகின்றன. இந்த மாறுபட்ட பண்பு மட்டும் கடலுக்கு இல்லா திருந்தால் உலகின் மிகப் பெரிய வாழிடத்தில் உயிர்கள் நீடிக்க முடியாமல் போயிருக்கும்.
நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம். நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம்.
கடலின் உயிரின் இருப்பைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகள் இன்னும் சில உண்டு. பிராண வாயு காற்று மண்டலத்திலிருந்து கரைந்து கலந்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியும். பச்சையம் தாங்கிய மிதவை உயிரினங்களும் கடற்பாசிகளும் கடலின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எல்லா உயிர்களும் இந்தப் பச்சை உயிர்களை நம்பியிருக்கின்றன. உணவு உற்பத்தியின்போதும் பிராணவாயு வெளியாகிறது. சூரிய ஒளிச் சக்தி இருந்தால்தான் உணவு உற்பத்தி சாத்தியம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை. மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.
சார்புநிலைதான் உயிர்வாழ்தலின் பிழிவு உயிரினங்கள் ஒன்றையன்று சாராமல் வாழ்க்கை சாத்தியமில்லை. சூழலியலில் இந்தச் சார்புறவை உணவுச் சங்கிலி என்கிறார்கள். ஒரு குளத்தின் உணவுச் சங்கிலி எளிமையானது. சிறு சிறு பாசியினங்களைப் புழுக்கள் தின்கின்றன; புழுக்களைப் பூச்சிகள் தின்னும்; பூச்சிகளை மீன்கள் தின்னும், மீன்களை தவளைகள் உண்ணும், தவளை யைப் பாம்பு தின்னும், பாம்பைப் பறவைகள் வேட்டையாடும். இந்த எல்லா உயிர்களும் கழிவுகளை வெளியேற்றும். இறுதியில் இறந்தும் போகும். கழிவையும் சடலங்களையும் சிதைப்பதற்கென்று பலகோடி நுண்ணுயிர்கள் உள்ளன. சிதைவுற்ற கூறுகளைப் பாசிகளும் பிற தாவரங்களும் மீண்டும் உணவாய்த் தயாரிக்கும் நிகழ்வுகள் சுழற்சியாய்த் தொடர்ந்து கொண்டிருக்கும். கடல் இன்னொரு சூழலியலைக் கொண்டிருக்கிறது. அடிப்படைக் கூறுகள் ஒரே மாதிரியானவை நீரானது. அதன் உள் வாங்கும் பண்பு, நீரியல் சுழற்சி, பருவக் காற்றுகள், நீரோட்டங்கள், ஓதங்கள், அலைகள் புவியீர்ப்பு, கோளீர்ப்பு, வெளிச்சம், உயிர்கள், உணவுச் சங்கிலி எல்லாவற்றையும் மனதில் திரட்டிப் பாருங்கள் - ஒரு பிரம்மாண்டம் உருக்கொள்ளும் -அதன் பெயர்தான் கடல்.
கடலில் வாழிடங்கள் வகைவகையாய் உள்ளன. அலைகள் கரையுடன் மோதும் பகுதிகள் கூட எல்லா இடத்திலும் ஒன்று போலிருப்பதில்லை. பாறைக்கரை, மணல் திட்டுகள், மணல்வெளி, மணற்குன்று, களிமண் குன்றுகள், உள்ளே போனால் பரப்புக் கடல் (Pelagic Water), நடுக்கடல், கண்டத்தட்டுக் கடல், நிலப்பகுதிக்கு வந்தால் உவர் பரப்புகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், அலையாத்திக் காடுகள் எனப் பல. ஒவ்வொரு வகையும் பிரத்தியேகமானதொரு சூழலியலை முன்னிறுத்துகிறது. பவளப் புற்றுச் சூழலியல் இதற்கு அருமையான உதாரணம். அலைவாய்க் கரையிலிருந்து 200 மீட்டர் உயரம் வரையுள்ள நிலப்பகுதி கடற்கரை மண்டலத்தைச் சேர்ந்தது. பன்னாட்டுக் கடற்சட்டங்களில் குறித்துள்ளபடி கடலோர நாடுகளின் பிரதேச எல்லை 12 கடல் மைல் (ஏறத்தாழ 216 கிலோ மீட்டர்); அதற்கு அப்பால் 12 கடல் மைல்கள் கண்காணிப்பு எல்லை அலைவாய்க் கரையிலிருந்து 200 மைல்கள் வரை அந்தந்த நாடுகளின் முற்றுரிமைப் பொருளாதார மண்டலம். இப்பொருளாதார எல்லையிலிருந்து மேலும் 150 கடல் மைல்கள் வரை விரியும் கண்டத்தட்டுகளின் மீதும் அந்தந்த நாட்டுக்கு உரிமை உள்ளது. இந்தியாவின் கடற்கரை ஆசிய நாடுகளில் மிக நீளமானது. தீவுப் பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 8000 கிலோ மீட்டர் கடற்கரை. இந்திய முற்றுரிமைப் பொருளாதார மண்டலம் 20.2 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள். இந்தக் கடற்பகுதி இந்தியாவுக்கு நான்கு பெரும் சேவைகளை வழங்குகிறது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து. மௌரியர் காலத்திலிருந்தே சரக்குப் போக்குவரத்திலும் மக்களின் பயணத்துக்கும் கடல் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர் காலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள்தாம் இதில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன. பிரிட்டிஷ் இந்திய நீராவிக் கப்பல் நிறுவனம் 1862இல் தொடங்கிய பிறகே கடற்செலவு சார்ந்த பொருளாதாரம் வளர்ந்தது, பிறகு இந்திய கடற்போக்குவரத்து நிறுவனம் போன்ற பல கம் பெனிகள் இந்தத் துறையில் இறங்கின. 1961இல் நிறுவப்பட்ட இந்தியக் கப்பல் நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் கப்பல் சரக்குப் போக்குவரத்தில் 51 விழுக்காட்டைக் கைப்பற்றி ஆண்டுக்கு 7000 புதிய வேலைவாய்ப்புகளை அத்துறை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது.
ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம். இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன. ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன. இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது. கழிமுகங்களிலும் கடலை ஒட்டிக் கிடக்கும் உவர்நீர்க் கழிவுகளிலும் ஏராளம் மீனக்ள் அறுவடையாவதுடன் பல நூறு மீன்களின் இனப்பெருக்க வளர்ப்பிடமாகவும் இந்த இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை தவிர கரைக்கடல் பகுதிகளிலும் உவர்நீர்ப் பரப்புகளிலும் மீன்வளர்ப்பு நடைபெறுகிறது. மதிப்புக் கூட்டிய மீன்பண்ட உற்பத்திச் சாலைகளும் மீன்பதனிடும் ஆலைகளும் பல இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன. சுறாத் துடுப்புகள் (shark fins) வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. டப்பாக்களில் அடைத்தல் (canning),), உறைய வைத்தல், குளிரூட்டல், சரக்குப் போக்குவரத்து முதலிய துறைகளில் விரிவாக்கத்துக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. 1950களில் இந்தியா கடற்பாசிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அல்ஜினேட், அகர் அகர் போன்ற வேதிப்பொருட்களைப் பிரித் தெடுக்கத் தொடங்கிய பிறகு கடற்பாசி ஏற்றுமதி நின்று போனது. கராகீனன் என்னும் விலையுயர்ந்த வேதிப்பொருளும் இப்போது கடற்பாசிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
கடல் காட்சிப்படுத்தும் அருமையான சூழலியல் கட்டமைவுகளில் பவளப் புற்றுகள் மிக முக்கிய மானவை. கரைக்கடல் மற்றும் தீவுப் பகுதிகளில் மாசுறாச் சூழல்களில் சற்றொப்ப 21 டிகிரி மித வெப்பம் நிலவும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டமே பவளப் பாறைகள் அமைகின்றன. நைடேரியா வகையைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பவளப்புற்று இனங்கள் தாம் வாழும் காலத்தில் தம்மைச் சுற்றிச் சுரந்து அமைக்கும் சுண்ணாம்புப் புற்றுகள் இவ்வுயிர்களின் மறைவுக்குப் பிறகும் நிலைத்திருக்க, அவற்றின் மீது புதிய உயிர்கள் புற்றுகளை அமைத்துக் கொள்கின்றன. படிப்படியாக புற்றுகள் வளர்ந்து குன்றுபோல் உயர்கின்றன. கடல் மட்டத்துக்கு அடியில் பரவியும் வளர்கின்றன. இந்தப் பவளப் புற்றுகளில் வாழும் சுசாந்தலே என்னும் உயிர்கள் பவளப்பாறைக்குக் கவர்ச்சியான நிறத்தைத் தருகின்றன. மெல்லுடலிகள், குழியுடலி, துளையுடலி, கணுக்காலி, மீன்கள், ஆமைகள் கடல் அட்டை, கடல் வெள்ளரி போனற் முட் தோலிகள், மீன்கள், திமிங்கலம், கடற்பசு முதலிய எண்ணற்ற வகை விலங்கினங்களும் கடற்பாசிகள், கடற்கோரைகள் போன்ற பல நூறு தாவர இனங் களும் பவளப் பாறைகளைச் சார்ந்து வாழ்கின்றன. 10500 சதுரகிலோமீட்டர் மன்னார் வளைகுடா கடலுயிர்க் கோளப் பகுதியில் 21 சிறு தீவுகளைச் சூழ்ந்து 3600 உயிர்வகைகள் வாழகின்றன. உலகின் உயிர்ப்பன்மயச் செறிவு மிகுந்த கடலுயிர் உய்விடங் களுள் ஒன்றாக இப்பகுதி கருதப்படுகிறது. இது தவிர இந்தியாவில் பாக் நீரிணையிலும் கட்ச் வளைகுடாவிலும் அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத் தீவுகளிலும் பவளப் பாறைகள் உள்ளன.
இலட்சத்தீவின் 35 தீவுத் தொகுப்பில் பதினொரு தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றன. நூறுக்கு மேற்பட்ட பவளப்புற்று இனங்கள் வாழும் இப்பகுதி களில் ஸ்கிப்ஜாக் சூரைகள் தூண்டில்களின் மூலம் பிடிக்கப்படுகின்றன பருவமழைக் காலங்களில் மக்கள் பவளப் பாறைகளின உபவளங்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தமான நிக்கோபாரின் 350 தீவுகளில் 38இல் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. கரைநோக்கித் தேயும் பவளப் பாறைகளும் அலையாத்திக் காடுகளும் கடற்கோரை மற்றும் கடற்பாசிப் படுகைகளும் இங்கு மிகுதியாக அமைந்துள்ளன. இந்தியாவில் இவ்விரு தீவுப் பகுதிகளின் பவளப்பாறை மட்டுமே ஆரோக்கியமான சூழலியலில் நீடிக்கின்றன. பிறபகுதிகளில் கடல்தரையைத் தோண்டியும் பவளப் பாறைகளை உடைத்தும் விஷம் மற்றும் வெடி பொருள் பயன்படுத்தியும் மீன்பிடித்தும் பவளப் பாறைகள் சிதைவுற்று வருகின்றன. சேறு சகதி படிவதாலும் நகரக் கழிவுகள் சேர்வதாலும் எண்ணைக் கசிவுகளாலும் கடற்சூழலியல் சிதை வுறும் சூழலில் மென்மையாக பவளப்புற்று இனங்கள் நம் கடல்களிலிருந்து மறைந்து வருகின்றன. அறுவடையாகும் கடல் மீனில் 90 விழுக்காடு கரைக்கடலிலிருந்துதான் கிடைப்பவை. கரைக்கடலின் சூழலியலைப் பவளப் பாறைகளும் கடற்கோரை, கடற்பாசிப் படுகைகளும் செழுமைப் படுத்துகின்றன. கரைக்கடல் சூழலியலின் சிதைவு மீன்வளப் பொருளாதாரத்துக்கு நேரடியான தாக்கு தலாகும்.
இந்தியக் கடல்கள் வழங்கும் முக்கியமான மூன்றாவது வளம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள். மும்பை உட்கடல் எண்ணை வயல் மற்றும் கோதாவரி எண்ணை வயல்கள் இரண்டும் இந்தியாவின் முக்கியமான பெட்ரோலிய வளங்களாகும். 1993இல் இந்தியாவின் எரிபொருள் தேவையில் (5.87 கோடி டன்கள்) பாதிக்குக் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டில் இந்தியாவின் தேவை 14 கோடி டன்கள். இதில் 65 விழுக்காடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. இறக்குமதி இந்தியப் பொருளாதாரத்தின் போக்கை வெகுவாய்ப் பாதிக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் எரி சக்தியாக மட்டுமின்றி பிளாஸ்டிக், செயற்கை இரப்பர், சலவைப் பொடி முதலிய பல்வேறு வேதிமங்களின் உற்பத்திக்கு மூலப்பொருளாகவும் தேவைப்படுகிறது.
உலகெங்கும் கடலும் கடற்கரைப் பிரதேசமும் கேளிக்கை இடங்களாகவும் பொழுது போக்கு வளமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவின் 7600 கிலோ மீட்டர் தீபகற்பக் கடற்கரையும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் சுற்றுலா வளர்ச்சி வாய்ப்புகளை அள்ளித் தருகின்றன. கடற்கரை தூய்மையான பிராணவாயுப் பிரதேசம் ஓய்வுக்கும் சிரம பரிகாரத்துக்கும் கேளிக்கைக்கும் கடற்கரை மிகப் பொருத்தமான இடம். நீர்க்கேளிக்கை, பாய்மரப்படகு விளையாட்டு, படகுப் பயணம், கடலுக்குள் புகைப் படம் எடுத்தல் என வகைவகையான பொழுது போக்கு, கேளிக்கை வாய்ப்புகள் கடற்கரையில் உள்ளன. மாலத்தீவின் மக்கள் தொகை இரண்டு இலட்சம் தான். ஆனால் அங்குள்ள 58 சுறறுலாத் தலங்களில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மாலத்தீவுப் பொருளாதாரம் மீன்வளத்தையும் சுற்றுலாவையும் மையமாய்க் கொண்டு சுழல்வதாகும். இந்தியாவின் கடற்கரைகளில் மும்பை, கோவா, கொச்சி, சென்னை போன்ற பகுதிகளிலும் அந்தமான் நிக்கோபார் இலட்சத்தீவுகளிலும் சுற்றுலா பெரும் பொருளியல் வளர்ச்சியை உருவாக்கக்கூடும். இந்தியச் சூழலில் சுற்றுலா இயற்கை நேய நடவடிக்கையாக ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய ஒன்று.
கடலுக்கும் உங்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது. அடுத்தமுறை நீங்கள் கடலைப் பார்க்க நேர்ந்தால் கண்ணுக்குப் புலப்படும் தொலைவுக்கு அப்பாலும் உங்களால் பார்க்க முடியலாம்.
(பன்னாட்டு கடல் நாளன்று (1.6.2010) நாகர் கோவில் கார்மல் மேனிலைப் பள்ளியில் ஆற்றிய உரையின் சுருக்கம். பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்
- தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்
- இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?
- வேங்கை வர்ணங்கள்
- நம்முடன் வாழும் யானைகள்
- இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
- பறவைகளுக்கும் பொருந்துமா காதலர் தினம்?
- புலிகள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
- மனங்கவரும் பறவைகள்
- நான் ஒரு குட்டி யானை
- பாண்டா கரடிகள்: சீனாவின் சூப்பர் ஸ்டார்
- சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு