இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 1706 ஆக, உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களிலும், தேசிய வன விலங்கு சரணாலயங்களிலும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி புலிகளின் எண்ணிக்கை பதினைந்து சதம் உயர்ந்துள்ளது.


இதே அறிக்கை தெரிவிக்கும் மற்றொரு தகவல், தற்போதைய கணக்கெடுப்பில் 612 புலிகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவை. எனவே இந்த புலிகள் 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இருந்திருக்காது. எனவே புதிதாக பிறந்த இந்த 612 புலிகளை 1411 உடன் கூட்டினால் 2023 புலிகள் இருக்க வேண்டும். ஒருவேளை சில புலிகள் இயற்கையாகவே இறந்திருக்கலாம். புலியின் வயது 12 முதல் 15 க்குள் இருக்கும். எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்து போன எல்லா புலிகளும் 317 (2023  - 1706 ) புலிகளும் வயது முதிர்ந்து இறந்திருக்குமா என்பது சந்தகேமே. மத்திய அமைச்சர் புலிகள் வேட்டையாடப்பட்டதை ஒப்புக்கொள்கிறார். எனவே புலிகளை பாதுகாப்புக்காக மேலும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.


இந்த முறை புலிகள் கணக்கெடுப்புக்காக முற்றிலும் அறிவியல் முறைகள் பின்பற்றப்படவில்லை. Camera Trapping என்ற முறை கொண்டு புலிகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக அடையாளம் காண முடியும். எனவே துல்லியமான கணக்கெடுப்புக்கு இந்த முறை பின்பற்றப் பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இன்னமும் காலடி தடத்தை வைத்தே எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், புலிகளின் கழிவுகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி, புலிகளை தனித் தனியாக அடையாளம் காண முடியும்.

புலிகள் தங்களுக்கென்று ஒரு தனி எல்லையை நிர்ணயிப்ப்பதால் அவற்றின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு இல்லாத வண்ணம் காடுகளை  இணைக்க வேண்டும். இரவு நேர போக்குவரத்தை வனப் பகுதிகளில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.


மத்திய அரசின் சமீப கால முயற்சிகள் பாராட்டுக்குரியதே. ஆனால், இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொண்டாக வேண்டும்.

புலிகள் வேட்டையாடப்படும் தகவல் தெரிந்தாலோ, அல்லது புலியின் தோலையோ, உறுப்புகளையோ யாராவது வியாபாரம் செய்தாலோ, கீழ்காணும் இணையதள முகவரியில் புகார் செய்யலாம்.

Report a crime:                  http://projecttiger.nic.in/reportacrime.asp

தேசமெங்கும் திரியட்டும் செம்மஞ்சள் வரிப்புலிகள்.

Pin It