கடல் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய அங்கம் திமிங்கலங்கள். கடற்சூழலின் ஆரோக்கியத்திற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நாளும் குறைந்து வரும் இவற்றின் எண்ணிக்கை கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கிறது. கடல் சூழலைத் தகர்க்கிறது. பாலூட்டிகளான இவை வெப்ப இரத்த பிராணிகள்.

வேட்டையின் வரலாறு

புராதன காலம் முதல் திமிங்கல வேட்டை நடந்து வருகிறது என்றாலும் கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் இறைச்சி, உடலில் உள்ள கொழுப்பு, எலும்புகளைப் பயன்படுத்தி அணிகலங்கள் போன்றவற்றிற்காக பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடப்பட்டதால் பெருமளவில் இவற்றின் எண்ணிக்கை குறைந்தது. இதன் விளைவாக 1946ல் திமிங்கல வேட்டைக்கு உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து தடை ஏற்படுத்தின.

1904-1987 காலகட்டத்தில் 14 இலட்சம் திமிங்கலங்கள் கொல்லப்பட்டன. அண்டார்டிகாவில் 1964ல் நீலத் திமிங்கலங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. அப்போது 20,000 நீலத் திமிங்கலங்கள் இருந்தன. இப்போதும் இதே எண்ணிக்கையிலேயே அவை உள்ளன. இருநூறு ஆண்டுகள் வாழும் இவற்றின் இனப்பெருக்கம் மிக மெதுவாகவே நடைபெறுகிறது. ஒரு முறை நஷ்டமானால் கடல்சார் சூழல் மண்டலத்தை அதே நிலைக்கு மறுபடியும் கொண்டு வருவது சுலபமானதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.whale 466ஆராய்ச்சி என்ற பெயரில்

ஆராய்ச்சி என்ற பெயரில் ஜப்பானில் இப்போதும் இவற்றை வேட்டையாடுவது தொடர்கிறது. தடை நடைமுறையில் இருந்தபோதும் 1986 முதல் 25,000 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவை கண்டிப்புடன் பின்பற்றப்படுவதில்லை.

பணத்தைப் பயன்படுத்தியே ஜப்பானும் நார்வேயும் தங்களுக்கு சாதகமாக மற்ற நாடுகளின் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மனிதனின் பொழுதுபோக்கு ஓர் உயிரினத்தின் அழிவு

பல நேரங்களில் ஒரு த்ரில்லுக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. பிடிக்கும் திமிங்கலங்களின் இறைச்சி கால்நடைகளுக்குக்கூட தீவனமாக போடப்படுகிறது. இழக்கப்பட்டால் மீட்டெடுக்க முடியாத இந்த அற்புத உயிரினங்களின் இறைச்சி அங்கு இந்த அளவிற்கு மதிப்பில்லாத பொருளாக்கப்படுகிறது. இதற்கு இடையில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடரப் போவதாக ஜப்பான் சமீபத்தில் அறிவித்துள்ளது.

திமிங்கல வேட்டை என்னும் கொடூரம்

இரண்டு மூன்று குதிரைகளை ஒரு ஈட்டியில் கோர்த்து ஒரு டிரக்கில் கட்டி இரத்தம் கொட்டக் கொட்ட இழுத்துக்கொண்டு போவதைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படிதான் திமிங்கல வேட்டையும் நடக்கிறது. பல சமயங்களில் ஓட ஓட விரட்டிவிட்டு களைப்படைந்த நிலையை அவை அடைந்த பிறகே வேட்டையாடப்படும் திமிங்கலத்தின் மீது கூர்மையான அம்பு எய்யப்படுகிறது.

பெரும்பாலான திமிங்கலங்களும் ஒற்றை அம்பு பட்டு சாவதில்லை. பிடிக்கப்பட்ட திமிங்கலத்தை வேட்டைக் கப்பல்களுக்கு இழுத்துக் கொண்டு வந்து அவை ஏற்றப்படுகின்றன. வால் பகுதியில் அம்பு எய்யப்பட்டிருந்தால் தலைப்பகுதி நீருக்குள் மூழ்கியிருக்குமாறு அவை கப்பலின் மேற்பகுதிக்கு இழுக்கப்படுகின்றன. அப்போது அவை மூச்சுவிட முடியாமல் திணறுகின்றன. அந்த நிலையிலேயே அவை கொல்லப்படுகின்றன.

இது தவிர பெரிய மீன் பிடி வலைகளில் சிக்கி, கடலில் கொட்டிக் கிடக்கும் மாசுகள் உடலிற்குள் செல்வதால் இவை இறந்து போகின்றன. பாலூட்டும் திமிங்கலங்களின் உடலுக்குள் செல்லும் நஞ்சு அவற்றின் குட்டிகளுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. நெரிசல் மிகுந்த கப்பல் போக்குவரத்து உள்ள வழிகளில் ஏற்படும் ஒலி மாசு, கடல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் மீ ஒலிக்கருவிகள் (sonar), வேதிப்பொருட்கள், கடல்களில் நிறுவப்படும் காற்றாடிகள், காலநிலை மாற்றம் போன்றவை இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கின்றன.

மிதவை உயிரினங்களும் திமிங்கலங்களும்

பூமியில் வாழும் ஏதேனும் ஓர் உயிரின வகையின் ஒட்டுமொத்த எடையைக் கணக்கிட்டால் மிதவை உயிரினங்களே (Krill) முதலிடம் பெறுகின்றன. இதன் அளவு சுமார் 40 கோடி டன். கடலில் வாழும் சிறிய உயிரினங்களான இவற்றின் ஒட்டுமொத்த எடை இது. இந்த உயிரினங்களில் பாதியளவை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் திமிங்கலங்களே முதன்மையானவை.

நீலத் திமிங்கலம் உண்ணும் உணவு

ஒரு நீலத் திமிங்கலம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4 கோடி மிதவை உயிரினங்களை உண்கிறது. இந்த திமிங்கலங்கள் இல்லாமல் விட்டால் மிதவை உயிரினங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகும். இதனால் ஏற்படக்கூடிய சூழல் பிரச்சனைகள் கற்பனைக்கு எட்டாத பயங்கரமானவை.
இது போல திமிங்கலங்களின் இறந்த உடல்களும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள அவற்றின் உயிரற்ற உடல் ஆழ்கடல் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கும். ஒரு திமிங்கலம் உயிரிழந்தால் 407 வகையான உயிரினங்கள் அதன் இறந்த உடலை உண்பதற்காக ஒன்று சேர்கின்றன.

கார்பன் உறிஞ்சும் திறன்

இவற்றின் மலத்தில் உள்ள சத்துகள் வளி மண்டலத்தில் இருக்கும் கார்பன்ஐ உறிஞ்சியெடுக்கும் பைட்டோ ப்ளாங்டன்களின் (phytoplanktons) வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. இதற்கு நான்கு இலட்சம் டன் கார்பனை வளி மண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் உள்ளது.

பெட்ரோலியம் கண்டுபிடிப்பும் திமிங்கலங்களும்

பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த உயிரினங்கள் என்றோ பூமியில் இருந்தே முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும். மார்கரின் (Margarine) என்ற கொழுப்பின் கதை இதனுடன் தொடர்புடையது. ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தில் கீழ் தட்டில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளைக் கண்டுபிடிக்குமாறு நெப்போலியன் பிரெஞ்சு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டுபிடிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட ஓர் உணவுப்பொருளே இது. கால்நடைக் கொழுப்பு, கொஞ்சம் சோடா, பால் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை சேர்த்து திடவடிவத்தில் உண்பதற்குத் தகுதியான ஒரு கொழுப்பை பிரெஞ்சு வேதியியலாளர் ஹிப்போலிட் மீஜ் மீரீஸ் (Hippolyte Meege-Mouriees) உருவாக்கினார். இதற்காக 1869ல் மூன்றாம் நெப்போலியனிடம் இருந்து பரிசு பெற்றார்.

பிரெஞ்சுகாரர்களுக்கு இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை யென்றாலும் ஐரோப்பியர்களிடம் இது பிரபலமடைந்தது. இன்று இதில் இருந்து விலங்கு கொழுப்புகள், தாவர எண்ணைகள் உண்டாக்கப்படுகின்றன. பாதுகாத்து வைக்கவும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் குறைந்த கால அளவில் விரைவாக ஆற்றலைப் பெறவும் மற்ற பல தேவைகளுக்காகவும் இது இப்போது பயன்படுகிறது.

லாபம் தரும் தொழில்

19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தெருக்களிலும் வீடுகளிலும் வெளிச்சத்திற்காக திமிங்கலங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பே முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. திமிங்கல வேட்டையைப் போலவே திமிங்கலக் கொழுப்பும் லாபம் தரும் தொழிலாக மாறியது. பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படத் தொடங்கியதுடன் இந்த நிலை மாறியது. திமிங்கலக் கொழுப்பின் இடத்தை மண்னெண்ணெய் பிடித்தது.

அதிக அளவில் உண்டாக்கப்பட்ட இந்த கொழுப்பிற்கான புதிய தேவைகளையும் சந்தைகளையும் இவற்றை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கத் தொடங்கின. இப்படி மீண்டும் திமிங்கலக் கொழுப்பின் பயன்பாடு அதிகரித்தது. உணவு எண்ணெய்களில் இதன் விலை குறைய ஆரம்பித்தது. பெரிய ஒரு படகை திமிங்கலம் பிடிக்கும் படகாக மாற்றுவது சுலபமானதாக இருந்தது. விலை குறைந்ததால் எல்லோரும் திமிங்கலத்தைப் பிடிக்கும் படகுகளை வாங்க ஆரம்பித்தனர்.

யூனிலிவரின் கதை

உற்பத்தி அதிகரித்ததால் இதன் விலை மேலும் குறைந்தது. இதை விற்பவர்கள் கொழுப்பை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். பிரிட்டிஷ் லிவர் மற்றும் டச்சு நிறுவனம் யூனி திமிங்கலக் கொழுப்பைக் கெட்டியாக்கி அதில் இருந்து மார்கரினை உருவாக்கும் வேதிமுறையைக் கண்டுபிடித்தன. தங்களுக்குள் போட்டி போட்டு அதனால் வியாபாரத்தை நஷ்டமாக்க விரும்பாத இந்த இரண்டு நிறுவனங்களும் யூனிலிவர் என்ற பெயரில் ஒரே நிறுவனமாக இணைந்தன.

இந்த நிறுவனமே இன்று 1.5 இலட்சம் ஊழியர்கள் மற்றும் ஐயாயிரம் கோடி டாலர்களுக்கும் கூடுதல் சொத்தும் உள்ள யூனிலிவர். 1935ல் உலகில் உருவாக்கப்படும் திமிங்கலக் கொழுப்பின் 84 சதவிகிதமும் மார்கரின் உருவாக்கப் பயன்பட்டது. நார்வே உற்பத்தி செய்த திமிங்கலக் கொழுப்பு முழுவதையும் யூனிலிவர் வாங்கிக் கொண்டது. அதை ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பினர்.

பிரிட்டனில் திமிங்கலக் கொழுப்பு

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதற்குள் இந்த கொழுப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது. பிரிட்டனில் இதை கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருட்களின் பட்டியலில் சேர்த்தனர். ஜெர்மனி திமிங்கல வேட்டைக்காக புதிய இடங்களைத் தேடி, தேடுதல் குழுக்களை அண்டார்டிகாவிற்கு அனுப்பியது. போர் முடிவுக்கு வந்ததுடன் இதன் முக்கியத்துவம் மெல்ல மறையத் தொடங்கியது.stop whalingபோரில் தோற்ற ஜப்பானும் திமிங்கல வேட்டையும்

திமிங்கல வேட்டை தார்மீகமாக சரியானது இல்லை என்று கருதப்படலாயிற்று. ஆனால் 1945ல் நேசநாடுகளால் தோற்கடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான ஜப்பானிய மக்கள் பட்டினியில் இருந்து தப்ப திமிங்கல வேட்டையைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதிக இறைச்சியை உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம் இறைச்சியின் விலையைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

இதற்கு மக்கள் வேட்டைப் படகுகளை அதிக அளவில் வாங்கி திமிங்கல வேட்டையைத் தொடர வேண்டும் என்று அப்போது ஜப்பான் நாட்டை நிர்வகித்த ஜெனரல் டக்லஸ் மாகார்தர் (General Douglas MacArthur) அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கு திமிங்கல வேட்டை மீண்டும் தொடர்ந்தது. இந்த சமயத்தில் மார்கரின் கொழுப்பை தாவர எண்ணெயில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் முறையை பல நிறுவனங்கள் கண்டுபிடித்தன. இதனால் கொழுப்பின் பயன்பாடு குறையத் தொடங்கியது.

இன்றைய நிலை

இன்று சர்வதேச அளவில் திமிங்கல வேட்டை மிக மோசமான செயலாகக் கருதப்படுகிறது. சர்வதேச திமிங்கல கமிஷன் (International Whaling Commision IWC) இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை இவை வேட்டையாடப்படும் காலத்திற்கு முன்பு இருந்த நிலைக்குக் கொண்டுவர பாடுபடுகிறது.
என்றாலும் ஜப்பான் மற்றும் நார்வே ஆய்வுப் பணிகளுக்காக என்ற பெயரில் வேட்டையைத் தொடர்கின்றன. இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது.

பன்னாட்டு அழுத்தங்களுக்கு நடுவிலும் வணிக நோக்கங்களுக்காக வேட்டையை மீண்டும் தொடங்கப் போவதாக ஜப்பான் அண்மையில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அற்புத உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவது அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் கையில் உள்ளது என்று திமிங்கல நிபுணர்கள் கருதுகின்றனர். மனிதனின் குறுக்கீடுகளால் ஏற்கனவே மில்லியன்கணக்கான உயிரினங்கள் பூமியில் இருந்தே முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில் இந்த உயிரினங்கள் கொல்லப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு இவை சுதந்திரமாக ஆர்பரிக்கும் கடலில் நீந்தும் காலம் வரும் என்று நம்புவோம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-whales-and-their-importance-eco-story-1.8526232

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

யானைகளுக்கும் திமிங்கலங்களுக்கும் ஏன் புற்றுநோய் வருவதில்லை? மருத்துவத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றிற்கு விடை காண விஞ்ஞானிகள் முயல்கின்றனர். இது பற்றிய புரிதல் மனித புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவும். சில உயிரினங்கள் புற்றுநோய் வராமல் வாழும் போது வேறு சிலவற்றிற்கு புற்றுநோய்க் கட்டிகள் வந்து குறைவான ஆயுளுடன் வாழ்கின்றன.

100 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் இயல்புடைய அம்பு தலை திமிங்கலங்கள் (Bowhead whales) உட்பட திமிங்கலங்கள் மிகக் குறைந்த அளவிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் நாய், பூனைகளில் இதுவே அவற்றின் அகால மரணத்திற்கு முதன்மைக் காரணமாக உள்ளது. நரிகள், சிறுத்தைகள் புற்றுநோயின்றி வாழும்போது ஆடுகளும், மான்களும் இதனால் உயிரிழக்கின்றன. எலி, சுண்டெலிகளுக்கு இந்நோய் வருகிறது.

மனித உயிர் பறிக்கும் புற்றுநோய்

ஆண்டிற்கு 10 மில்லியன் பேரின் உயிர் பறிக்கும் புற்றுநோய் மனித உடல்நலத்திற்கு இன்று பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பெரிய உடலமைப்புடன் வாழும் திமிங்கலம், யானை போன்றவை எண்ணற்ற உடற்செல்களைப் பெற்றுள்ளன. இந்த செல்கள் ஒவ்வொன்றும் தூண்டப்பட்டு புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். அவ்வாறு நிகழ்ந்தால் இவை உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிற்கு புற்றுநோய் வருவதில்லை.elephant herdஇது பற்றிய கருத்தை முதல்முதலாக இங்கிலாந்து நாட்டின் புள்ளியியல் நிபுணர் ரிச்சர்டு பீட்டோ (Richard Peto) வெளியிட்டார். இதனால் இக்கோட்பாடு பீட்டோவின் முரண்பாடு (Peto’s paradox) என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேம்ப்ரிட்ஜ் வெல்கம் சாங்கர் (Wellcome Sanger) ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் லண்டன் விலங்கியல் சங்கம் (Zoological Society London ZSL) உள்ளிட்ட பல ஆய்வுக்கழக நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ந்தனர்.

புற்றுநோய் செல் ஆய்வு

உடல் செல்லில் உள்ள டி.என்.ஏ தொடர்ச்சியாக திடீர் மாற்றங்களுக்கு உட்பட்டு கட்டுக்கடங்காத முறையில் பிளவுபட்டு பெருக்கமடைவதே புற்றுநோய் எனப்படுகிறது. உடலின் எதிர்ப்பாற்றல் இதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் அலெக்ஸ் காகன் (Alex Cagan) கூறுகிறார். அதிக செல்களைக் கொண்டுள்ள விலங்குகள் புற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

நிறமிகளைப் பயன்படுத்தி நுண்ணோக்கியின் மூலம் ஆராய்ந்தபோது புற்றுநோய் செல்கள் இரண்டு பரிமான அளவில் (2d) நீல நிற உட்கருவுடனும், சைட்டோப்ளாசம் சிவப்பு நிறத்திலும், டி என் ஏ லென்ஸ்மீட்டரைப் (foci) பயன்படுத்தி ஆராய்ந்தபோது பச்சை நிறத்திலும் இருப்பது தெரிய வந்தது.

ஜாக்பாட்

செல்களை லாட்டரி சீட்டு போலக் கருதினால் எந்த அளவிற்கு நம்மிடம் அதிக சீட்டுகள் இருக்கின்றனவோ அந்த அளவு நமக்கு ஜாக்பாட் அடிப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இங்கு ஜாக்பாட் என்பது புற்றுநோய் என்ற பரிசே என்று விலங்கியல் சங்க தொற்றுநோயியலாளர் சைமன் ச்பிரோ (Simon Spiro) கூறுகிறார். இதன்படி பார்த்தால் சில வகை திமிங்கலங்கள் ஒரு வயதிற்கு முன்பே இறந்துவிட வேண்டும்.

ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. மனிதர்கள் டிரில்லியன் செல்களை மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆனால் திமிங்கலங்களில் இது போல நான்கு மடங்கு செல்கள் உள்ளன. இதன்படி பார்த்தால் இந்த விலங்குகளுக்கு மனிதர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகம்.

யானைகள் முதல் எலிகள் வரை

யானைகள் சராசரியாக 70 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆனால் ஏராளமான திடீர் மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வாய்ப்புள்ள அவை புற்றுநோயால் பாதிக்கப்படுவதில்லை.

இப்புதிருக்கு விடை காண விஞ்ஞானிகள் லண்டன் விலங்குக் காட்சி சாலையில் இயற்கையாக உயிரிழந்த சிங்கங்கள், புலிகள், ஒட்டகச்சிவிங்கிகள், வரி வால் லிமர் வகைக் குரங்குகள் (ring tailed lemurs), மரநாய்கள் (ferrets) மற்றும் வேறு ஒரு மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியை உண்ணும் அளவு வலுவுள்ள பல் அமைப்பை உடைய 30 ஆண்டுகள் வரை வாழும் மோல் எலிகள் (naked mole rats) போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். ஆனால் இவை நோயால் பாதிக்கப்படுவதில்லை.

திடீர் மாற்றங்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு விலங்கின் உடலில் இருந்தும் விஞ்ஞானிகள் குடல் க்ரிப்ட் (intestinal crypt) செல்களைப் பிரித்து அவற்றின் மரபணு வரிசையை ஆராய்ந்தனர். இவை குருத்தணு செல்களால் நிரந்தரமாக மாற்றமடைபவை. இவை மரபணு வரிசையை ஒப்பிட உதவுகின்றன. இதைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் நிகழும் திடீர்மாற்றங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

இந்த எண்ணிக்கை விலங்கினத்திற்கு ஏற்ப மாறியது. நீண்டநாள் வாழும் விலங்குகளில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. குறைந்த நாள் வாழும் உயிரினங்களில் திடீர் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. மனிதர்களில் ஆண்டிற்கு 47 திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. எலிகளில் இது 800. மனிதனின் சராசரி ஆயுட்காலம் 83.6 ஆண்டுகள். எலியின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.

திடீர் மாற்றங்களின் வேகம்

ஆனால் இவ்விலங்குகளின் ஆயுட்காலம் முடிந்தபின் 3200 திடீர் மாற்றங்கள் நடைபெற்றன. இது எல்லா விலங்குகளிலும் ஒரே அளவாக இருந்தது விஞ்ஞானிகளை வியப்படையச் செய்தது. இதற்கு முதுமையடைதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டி.என்.ஏ. மரபணுவில் நடைபெறும் திடீர் மாற்றங்களை நீண்ட நாள் வாழும் விலங்குகள் எவ்வாறு மெதுவாக நடத்துகின்றன என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்று காகன் கூறுகிறார்.

வேலைக்கார எறும்புகளும் ராணி எறும்புகளும்

ஆயுட்காலத்திற்கும் திடீர் மாற்றங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி குறைந்த மற்றும் நடுத்தர வாழ்நாள் உள்ள விலங்குகளில் குறிப்பாக பாலூட்டிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இவை தாவரங்கள், பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றில் நடத்தப்படவுள்ளது. சமூக வாழ்க்கை நடத்தும் எறும்புகளில் வேலைக்கார எறும்புகள் மற்றும் ராணி எறும்புகள் ஒரே மாதிரியான மரபணு வரிசையைப் பெற்றுள்ளன.

ஆனால் ராணி எறும்புகள் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகள் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகளை விட ராணி எறும்புகள் டி.என்.ஏ. பழுதுகளை திறம்பட செயல்படுத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

புதிய மாற்றங்கள் ஏற்படுமா?

புற்றுநோய் ஆய்வுகளில் குறைந்த ஆண்டுகள் மட்டுமே வாழும் எலிகள் மற்றும் அவற்றின் மாதிரிகளே பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் அதன் முடிவுகள் சிறந்தவையாக இருக்காது. இனி வருங்காலத்தில் நீண்ட ஆயுட்காலம் உடைய விலங்குகளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மாற்றங்கள் நடைபெறும் வேகம், முதுமை மற்றும் கட்டிகள் இவற்றிற்கு இடையில் உள்ள தொடர்பு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. முதுமையால் உருவாகும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/apr/08/medicine-greatest-mysteries-why-dont-whales-get-cancer?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

உலகம் முழுவதும் காணப்படும் நீர்நாய்கள் இன்று இன அழிவின் விளிம்பில் உள்ளன. உலகில் மொத்தம் உள்ள 13 இனங்களில் இந்தியாவில் யுரேசியன் நீர்நாய் (Eurasian otter-lutra lutra), மென்தோல் நீர்நாய் (smooth coated otter-lutra perspicillata) மற்றும் சிறிய நகமுள்ள நீர்நாய் (small clawed otter-aonyx cinereus) என்ற மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மென்தோல் மற்றும் சிறிய நகமுள்ள இனங்கள் எதிர்காலத்தில் அழியும் ஆபத்தில் உள்ளன.

பல நூற்றாண்டுகளாக உரோமத்திற்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவில் கில்ஹாரா, பதியா போன்ற சில நாடோடி இன மக்கள் இவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர். கள்ளச்சந்தைகளில் நீர்நாய்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக தெற்காசியாவில் இவை பெருமளவில் திருட்டுத்தனமாக கடத்தப்படுகின்றன. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நிலத்திலும் நீரிலும் வாழும் நீர்நாய்கள்

உலகில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் போன்ற இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. பாதி நேரம் கரையிலும், பாதி நேரம் நீரிலும் வாழ்வதால் இவை பாதிநீர்வாழ் பாலூட்டிகள் (semi aquatic mammals) என்று அழைக்கப்படுகின்றன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இவற்றின் இனப்பெருக்க காலம். கரைப்பகுதியில் இணைசேர்கின்றன. உலகில் உள்ள 13 இனங்களில் இரண்டு இனங்கள் மட்டும் கடலில் வாழ்கின்றன.otters 720சுற்றுப்புறச் சூழலுடன் இவை ஒத்து வாழ்கின்றன. சிறிய கால்கள், வலிமையான கழுத்து போன்றவை இவற்றின் சிறப்புப் பண்புகள். நீரில் திசையை மாற்றிப் பயணிக்க வால்கள் உதவுகின்றன.

இவற்றின் பொதுவான சராசரி உடல் எடை 3 கிலோகிராம். மிகப் பெரிய நீர்நாய்களின் சராசரி எடை 26 கிலோகிராம். ஆனால், கடல் நீர்நாய்களின் சராசரி எடை 45 கிலோகிராம்.

நன்னீரில் வாழும் இனங்கள் வட மற்றும் தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் காணப்படுகின்றன. நண்டு, தவளை, மீன் போன்றவை இவற்றின் முக்கிய உணவு. இத்தகைய உணவுகள் சுலபமாகக் கிடைக்கும் இடங்களில் நீர்நாய்கள் தங்கள் வாழிடத்தை அமைத்துக் கொள்கின்றன. சுலபமாகக் கிடைப்பதை நன்னீர் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன. இரை பிடித்தபிறகு நீர் அல்லது நிலத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. நீர்நிலைகளில் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் இவை சுலபமாக இரை தேடுகின்றன.

பொதுவாக கூச்ச சுபாவமுடைய இவை மிகக் குறைந்த தூரமுடைய, மிக விரைவாக சென்று சேரக்கூடிய அருகில் இருக்கும் பகுதிகளையே பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றன. பாறை இடுக்குகள், நிலத்தில் காணப்படும் குழிகள், தாவரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கின்றன. குட்டிகள் மற்ற விலங்குகளுக்கு சுலபமாக இரையாகின்றன. வளர்ந்த நீர்நாய்கள் ஊண் உண்ணிகளுக்கு இரையாகின்றன. வெப்பம் அதிகமுள்ள பிரதேசங்களில் முதலை போன்றவை இவற்றின் முக்கிய எதிரிகள்.

மனிதக் குறுக்கீடுகள்

என்றாலும் வாகனங்கள் இடிப்பது, மீன் வலைகளில் சிக்கிக் கொள்வது, உரோமத்திற்காகக் கொல்லப்படுவது போன்ற மனிதச் செயல்பாடுகளாலேயே இவை அதிகமாக உயிரிழக்கின்றன. கடற்சூழலுடன் பொருந்தி வாழும் இயல்புடைய கடல் நீர்நாய் (Sea otter) மற்றும் மெரைன் நீர்நாய் (marine otter) ஆகிய இனங்கள் கடலில் வாழ்கின்றன. வட அமெரிக்காவின் பசுபிக் கடற்பகுதியை ஒட்டி காணப்படும் கடல் நீர்நாய்கள் அளவில் பெரியவை. இவற்றை விட அளவில் சிறிய மெரைன் நீர்நாய்கள் பெரு, சிலி பகுதிகளில் காணப்படுகின்றன.

இரை தேட இந்த இரு இனங்களும் முழுமையாக கடலையே சார்ந்துள்ளன. கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் இடங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கடல் நீர்நாய்கள் கடற்சூழலுடன் முழுமையாக இணைந்து வாழுபவை. இதற்கேற்றவாறு இவற்றின் உடல் அமைந்துள்ளது. கனடா, அமெரிக்காவில் வாழும் வட அமெரிக்க நதி நீர்நாய்கள் (North American river otter) எட்டு நிமிடங்களுக்கு மேல் நீருக்கடியில் மூச்சு விடாமல் இருக்க முடியும். உப்பு நீரை அருந்தி இவை கடலில் அதிக நேரம் செலவழிக்கின்றன.

இவை தனியாகவும் கூட்டமாகவும் காணப்படுகின்றன. அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் 2000 நீர்நாய்கள் அடங்கிய கூட்டங்கள் வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு நண்டுகள் மற்றும் ஜெல் மீன்கள். பிடித்த இரையை கடலில் வைத்தே உண்கின்றன. கடலில் மல்லாந்து இரையை உண்ணும் இயல்புடையவை. ஜெல் மீன்களின் எண்ணிக்கை குறைய இவையும் ஒரு காரணம். பெண் கடல் நீர்நாய்கள் ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணுகின்றன. குட்டிகள் 6 முதல் 8 மாத வயதை அடையும்வரை தாயைச் சார்ந்தே வாழ்கின்றன.

மெரைன் நீர்நாய்கள்

சுறாக்கள், கொலையாளித் திமிங்கலங்கள் இவற்றை வேட்டையாடுகின்றன. மெரைன் நீர்நாய்கள் நந்நீர்ச் சூழலுடன் வாழும் திறன் பெற்றவை என்றாலும் கடற்சூழலுடன் பொருந்தி வாழ்கின்றன. இவற்றின் சராசரி எடை 3 முதல் 6 கிலோ மட்டுமே. பெரு முதல் சிலி வரையுள்ள கடற்கரைப் பகுதிகள் மற்றும் அர்ஜெண்டினாவின் டியரா டெல் குவேகுவோ போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. கடலில் 100 முதல் 150 மீட்டர் வரையுள்ள ஆழமுள்ள பகுதிகளில் இவற்றைக் காணலாம்.

அழியும் உயிரினங்களின் பட்டியலில் நீர்நாய்கள்

நீர்நாய்களின் பொதுவான ஆயுட்காலம் 4 முதல் 10 ஆண்டுகள். பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) புள்ளிவிவரங்கள்படி பாதிக்கும் மேற்பட்ட இனங்கள் இன அழிவைச் சந்திக்கின்றன. மிகப்பெரிய நீர்நாய், மெரைன் நீர்நாய், தெற்கு நதி நீர்நாய் (Southern river otter), சிறிய நகமுள்ள நீர்நாய் போன்ற இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.

அழிந்து வரும் இந்த அரிய உயிரினங்களை இயற்கையுடன் இணைந்து வாழ விரும்பும் மனிதனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/importance-of-world-otter-day-and-why-is-it-celebrated-1.8602824

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

தீவிற்குள் பாம்புகள் நுழைந்ததால் அழிந்துபோன ஓர் அபூர்வப் பறவையை மீட்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா கேன்சஸில் (Kansas) 3,000 விலங்குகளைக் கொண்ட புகழ் பெற்ற செட்விக் கவுண்டி விலங்குகாட்சி சாலையில் (Sedgwick County Zoo) கப்பல் சரக்குப் பெட்டகத்தில் பார்வைக்கு வித்தியாசமான வாகனத்தைப் போல தோற்றமளிக்கும் பேழைகள் காட்சி தருகின்றன. இப்பேழைகளே விஞ்ஞானிகளுக்கு இந்தப் பறவையினத்தைக் காக்கும் முயற்சியில் உதவும் முக்கிய பொருட்கள்.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் (Guam) தீவில் தற்செயலாக இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நுழைந்த பழுப்பு நிற மரப் பாம்புகள் (Brown tree snakes) காலப்போக்கில் அங்கு வாழ்ந்து வந்த எண்ணற்ற பறவையினங்கள், பாலூட்டிகள் மற்றும் பல்லியினங்களை முற்றிலுமாக அழித்தன. அழிந்த பறவையினங்களில் குவாம் மீன்கொத்தி (Guam King fisher), குவாம் ரயில் (Guam rail) மற்றும் குவாம் ஈ பிடிப்பான் (Guam fly catcher) ஆகியவை அடங்கும்.

நான்கிலிருந்து ஒன்பது

பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குவாம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து சிஹெக் (Sihek) என்றும் அழைக்கப்படும் வண்ணமயமான குவாம் மீன்கொத்தியினத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குஞ்சுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்க பேழைகள் பயன்படுகின்றன. அமெரிக்காவின் மற்ற விலங்குகாட்சி சாலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகள் பொரிந்து உருவான நான்கு பறவைகள் இங்கு இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன.guam kingfisherஇவற்றின் எண்ணிக்கை விரைவில் ஒன்பதாக உயரும் என்று இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்க்விக் கவுண்டி விலங்குகாட்சிசாலை மற்றும் ஸ்மித்சோனியன் உயிரியல் கழக ஆய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விப்ஸ்னேட் (Whidsnade) விலங்குகாட்சி சாலையின் ஆய்வாளர் க்ளேர் மக்ஸ்வீனி (Claire McSweeney) கூறுகிறார்.

வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு இத்தகைய செயல்பாடுகள் தொடரும். பறவைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமானவுடன் அவை காட்டில் அவற்றின் இயற்கையான வாழிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 1970, 1980கள் வரை பழுப்பு நிறப் பாம்புகள் தீவின் உயிரினங்களை அழிக்கும் வேகம் மெதுவாகவே இருந்தது. பிறகே இந்த ஆக்ரமிப்பு உயிரினங்கள் இங்கு மட்டுமே வாழ்ந்த பல உயிரினங்களைக் கொல்ல ஆரம்பித்தது.

அப்போதே இதன் தீவிரம் உணரப்பட்டது. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவிற்கு குறைவது சூழலியலாளர்களை விழிப்படையச் செய்தது. இந்தப் பாம்புகள் மரமேறுவதில் நிபுணர்கள். நாளின் பெரும்பாலான நேரமும் இவை மரக்கிளைகளின் உச்சியிலேயே குடியிருக்கும். இவை பறவைகள், அவற்றின் முட்டைகள், சிறிய பாலூட்டிகளை உண்டே அழித்தன. இது தீவின் உயிர்ப் பன்மயத்தன்மையை மோசமாகப் பாதித்தது.

மிஞ்சியிருந்தவை

குவாம் தீவின் மீன்கொத்தியினமே கிட்டத்தட்ட அழிந்து போய்விட்ட நிலையில் மிஞ்சியிருந்த 29 பறவைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இதன் பலனாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இவற்றின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கிடைத்த முட்டைகள் செட்விக் காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டு பொரிக்கப்பட்டு இளம் குஞ்சுகள் வரும் ஆண்டில் காட்டில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இதில் பணிபுரியும் லண்டன் விலங்கியல் சங்க காட்சிசாலையின் (ZSL) சூழலியலாளர் மற்றும் மீன்கொத்தி மீட்புக் குழு உறுப்பினர் ஜான் யூவன் (John Ewen)கூறுகிறார்.

மக்ஸ்வினி மற்றும் அவரது குழுவினரே முட்டைகள் பொரித்து குஞ்சுகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் பணிக்குப் பொறுப்பானவர்கள். இந்த இன மீன்கொத்தியின் முட்டை பெரிதாக இருப்பதில்லை என்பது இதில் ஒரு சிக்கல். குஞ்சுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரோக்கிய நிலை கவனிக்கப்படுகிறது. நோய்களற்ற நிலையில் உள்ளது உறுதி செய்யப்படுகிறது. வனத்திற்கு செல்வதற்குரிய தயார் நிலையை அடையும்வரை இவை பராமரிக்கப்படுகின்றன. வளர்ச்சி அடைந்தவுடன் இவை குவாமிற்கு அனுப்பப்படாது.

பமைரா

குவாமில் இன்னமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் வாழ்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் இப்பறவைகளை ஒரு புது வீட்டுக்கு குவாமில் இருந்து 6,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பமைரா (Palmiera) தீவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இப்பசுபிக் தீவு இப்பறவைகளுக்கு பாதுகாப்பான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடம் மீன்கொத்திகளுக்கு எதிரிகள் இல்லாத பகுதி. இங்குள்ள மழைக்காடுகள் பறவைகள் கூடு கட்டத் தேவையான பொருட்களை அளிக்கும். உணவும் உள்ளது.

மீன் உண்ணாத மீன்கொத்திப் பறவை

குவாமில் வாழும் இந்த இனப்பறவைகள் இவற்றின் பிரிட்டிஷ் சொந்தக்காரரைப் போல மீன்களை உண்பதில்லை. பூச்சிகள், பல்லிகளையே உண்கின்றன. அதனால் இப்பறவைகள் பமைரா தீவில் பாதுகாப்புடன் வாழும். இனப்பெருக்கம் செய்ய அவசியமான இணைகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பாம்புகளின் ஆக்ரமிப்புப் பிரச்சனை தீர்க்கப்பட்ட பின் இவற்றின் எண்ணிக்கை போதுமான அளவு உயரும்போது இவற்றின் தாயகமான குவாமிற்கு இவற்றைத் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

வண்ணமயமான இந்தப் பறவைகள் குவாம் தீவின் நீல நிற வானில் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் முன்பு போல மீண்டும் பறக்கும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jul/23/scientists-battle-to-save-guam-kingfisher-after-snakes-introduced?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It