அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.வெற்றிச்செல்வன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இங்கே நாம் முதன்மையாக கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர தயாரிப்பு நிலை (Emergency Preparedness) தான். அணுக்கதிர்கள் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார் 25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம் அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும் அவசியமானது.
இந்திய அணுசக்தி துறை
1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) துவங்கப்பட்டது. பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை (Department of Atomic Energy) செயல்படத் துவங்கியது. அணுசக்தி ஆணையம் இதன் கீழாக செயல்பட்டு வந்தது. அணுசக்தித் துறையே அணுஉலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் (Atomic Energy Regulatory Board) செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.
அணுஉலைகளின் கட்டுமானங்கள்
பலவிதமான அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின் செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.
இடத்தேர்வு : இயற்கை சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக் கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.
மேலும் இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம் கேட்கப்பட வேண்டும்.
கட்டுமான வடிவமைப்பு : அணு உலை கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting Of Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது. அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறையை Radiation Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000-ம் ஆண்டுக்கு பின்பாக இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை பெருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான் அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.
அணு உலை செயல்பாடு : யுரேனிய அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500- 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் (Neutron Absorbers) தக்க சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes) உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.
செயல்நிறுத்தம் : ஒரு அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40-50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில் புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு De-Commissioning என்று சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
அணு உலை விபத்துகள்
1979இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டியன.
இந்திய அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள் நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.
அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயிர் நீதிமன்றத்தில் பார்வைக்கு மட்டும் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18 –யை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].
கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
வெளிப்படையற்றதன்மை தான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் அணுசக்தி:
சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station). இந்த உலையின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின் உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.
சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது. உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
அவசர தயாரிப்பு நிலை
1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.
அணுசக்தி சட்டம் மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்புநிலைக்கான (Emergency Preparedness) செயல்பாடுகளைப் பற்றி திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அணுவிபத்து நேருகின்ற போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் (Site Emergency Preparedness Plans) மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் (Off-site Emergency Preparedness Plans) ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authourity) அணு உலை விபத்து குறித்த அவசர தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை (Management of Nuclear and Radiological Emergencies) 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக் காண்போம்.
(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.
(ii) அடுத்து கல்பாக்க சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.
(iii) அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.
(iv) கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.
(v) விபத்து பின்பாக மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை. அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது 25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.
முடிவாக...
அணு உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த நிலை. அணு உலையில் இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம். இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில் மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம். இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.
- விவரங்கள்
- அழகிய இளவேனில் (என்கிற) நாசா
- பிரிவு: சுற்றுச்சூழல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெய்டபூரில் 9,900 MW அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அமைக்கப்படும் Evolutionary Pressurized Reactors (EPR) இதுவரை உலகில் வேறு எங்கும் பயன்படுத்தியது இல்லை (not commissioned yet) . அதனால் இது செயல்படும்போது ஏற்படும் பிரச்னைகளை இதை வடிவமைத்து தரும் AREVA விற்கே முழுமையாக தெரியாதபோதும், இந்த Reactorகளின் நம்பகத் தன்மையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கும்போது அரசு எப்படி ஒப்புக் கொண்டது என்பது ஆச்சர்யமாக உள்ளது .
ஒரு லட்சம் கோடி செலவு திட்டத்தை எந்த மாதிரி இடத்தில் தொடங்கப் போகிறார்கள் தெரியுமா? SEISMIC ZONE 3 நிலையில் உள்ள 1985 முதல் 2005 வரை சுமார் 92 சிறிய நில நடுக்கங்களைக் கண்ட இடத்தில். அதிகபட்சமாக 1993ல் ரிக்டர் 6 .2 பதிவாகி உள்ளது. நில நடுக்கங்களை சமாளிக்கும் திறன் கொண்ட அதிக பாதுகாப்பு வசதி கொண்ட அணு மின் நிலையங்கள் அமைத்த ஜப்பானே புகுஷிமாவில் தடுமாறும்போது நாம் எந்த நம்பிக்கையில் இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவோம் அதுவும் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் ?
மேலும் இந்தியா சொந்தமாகவே 18 PHWR களை (pressurised heavy water reactor) தயாரித்து அதை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் PHWR முறையில் தயாரிக்காமல் புதிய முறையான EPR முறையில் தயாரிக்க வேண்டும் ? மேலும் 1 MWe க்கு EPR முறையில் இருபது ௦ கோடி செலவாகும். ஆனால் PHWR முறையிலோ 1 MWeக்கு எட்டு கோடிதான் செலவாகும். எதற்கு அரசாங்கம் அதிக செலவில் ரிஸ்க் எடுக்கிறது ?
எனினும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளான கொங்கன் பசாவ் சமிதி மற்றும் ஜனஹிட் சேவா சமிதி முதலியன இத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றன. வழக்கம் போல மகாராஷ்டிரா முதல்வரும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சரும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
மொத்தமுள்ள 2400 குடும்பங்களில் வெறும் 154 குடும்பங்கள் மட்டுமே இதுவரை நிலத்தை ஒப்படைத்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு BNP பரிபாஸ் மற்றும் HSBC வங்கிகள் பெருமளவு நிதி தர சம்மதித்துள்ளன. அந்த வங்கிகள் இந்த திட்டத்திற்கு பணம் கொடுக்க கூடாது என்று GREEN PEACE என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளனர். நீங்களும் அதில் பங்கு பெறுங்கள்.
http://greenpeace.in/take-action/stop-dangerous-nuclear-power-in-jaitapur/mail-the-banks.php?tyf=2
இதற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும் BIOMASS போன்ற ஆபத்தற்ற மின் உற்பத்தி திட்டங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் தரலாமே.
மிகுந்த ஆபத்தினை உடைய அணு மின் திட்டங்களை செயல்படுவதில் இந்த அரசு காட்டும் ஆர்வம் மக்கள் நலம் பற்றிய எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை என்பது வெளிப்படுத்துகிறது.
- விவரங்கள்
- கோ.ராஜாராம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
‘நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவன் வாக்கினை மெய்பிப்பது குற்றாலம் எனலாம். ஆம் குற்றாலம் என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சி, கும்மாளமிட்டு ஆர்ப்பரிக்கும் அருவிகளே. இந்த அருவிகளில் குளிக்கும்போது உற்சாகம் பிறப்பதுடன் மன நிறைவும் ஏற்படுவதை அனைவரும் உணர்வர்.
குற்றாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ஏற்ற இடமன்று, இயற்கை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், விவசாயிகள், ஆன்மீகவாதிகள், நாட்டுமருத்துவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்ற தலமாக விளங்குகிறது. பெல்ஜியத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலம் ‘ஸ்பா’. ‘தென்னகத்தின் ஸ்பா” என அழைக்கப்படும் சிறப்புடையது நமது குற்றாலம்.
இயற்கைவளம் பொருந்திய மேற்குதொடர்ச்சி மலையில் மூன்று சிகரங்களை கொண்ட திரிகூடமலையின் ஒரு பகுதியில் உருவாகும் ஆற்றின் பெயர் சிற்றாறு. இந்த சிற்றாறு குற்றாலம் பகுதியில் இயற்கைபுடைசூழ பல அருவிகளாக வீழ்ந்து வளம் சேர்க்கின்றன.
ஆர்ப்பரிக்கும் முரசு போல ஒலி எழுப்பி 200அடி உயரத்திலிருந்து விழும் பேரருவி, சிறார்களுக்கு உகந்த சிற்றருவி, புலிவாய் போன்ற பாறைப்பகுதியிலிருந்து விழும் புலியருவி, ஐந்து பாகங்களாகப் பிரிந்து விழும் ஐந்தருவி, செண்பகமரங்கள் சூழ்ந்த அடர் வனப்பகுதியில் விழும் செண்பகா அருவி, வானளாவ உயர்ந்த மரங்களில் தேனடைகள் நிறைந்த மலைகளின் உட்பகுதியில் விழும் தேனருவி, வனத்துறைக்கு உரிய பழத்தோட்டப்பகுதியில் விழும் பழத்தோட்ட அருவி, மலைஅடுக்குப் பாறைகளில் தவழ்ந்து வரும் பழைய குற்றால அருவி என குற்றாலப் பகுதிகளில் பல்வேறு அருவிகள் அழகு சேர்க்கின்றன. அதே சமயம் வளமும் சேர்க்கின்றன.
இம்மலையின் அழகினை திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி எனும் நூலில் மலை வளத்தினை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியரு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவான்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கனக சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பாரிக்காலும் வழுகும்
கூனலினம் பிறை முடித்த வேணி அலங்கார்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே”
சிங்கனும் சிங்கியும் சுற்றித்திரிந்த இம் மலையில் இல்லாத மூலிகைகளே இல்லை எனலாம். தீராத நோய்களை எல்லாம் தீர்த்துவைக்கும் மூலிகைகளின் தாயகமாக குற்றால மலையருவிகள், உடலுக்கும், மனத்திற்கும் நலம் சேர்கின்றன.
இத்தகைய சிறப்புடைய அருவிகளின் நீரானது நிலத்தில் சிற்றாறாக உருவெடுத்து தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களை வளப்படுத்தி சீவலப்பேரியில் (முக்கூடல்) தாமிரபரணி ஆற்றுடன் இணைந்து கடலில் சங்கமமாகிறது.
இந்த சிற்றாற்றின் இடையே, தலையணை, அடிவெட்டான் பாறை, வாழ்விலாங்குடி, புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம், மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பள்ளிக்கோட்டை, உக்கிரன் கோட்டை, அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், பிராஞ்சோர், கங்கைகொண்டான் பகுதிகளில் சிறுசிறு அணைக்கட்டுகள் உள்ளன. இதனால் சுமார் 120 குளங்கள் பயன்பெறுகின்றன.
சிற்றாற்றின் மூலமாக நேரடியாக 2074 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 120 குளங்கள் மூலம் மறைமுகமாக 7570 ஹெக்டேர் நிலங்களும் பாசனவசதியைப் பெறுகின்றன. குற்றால அருவிகளின் நீரே இப்பகுதியின் ஜீவநீராக உயிர்நாடியாக விளங்குகின்றது.
இத்தகைய சிறப்பும், அழகும், இலக்கிய வளமும், விவசாய நலனும், மருத்துவக் குணமும் கொண்ட அருவிகள் இயற்கைச் சீரழிவை எதிர்நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற் கொள்கின்றன.
குற்றாலத்திற்கு பருவ காலத்தில் (சீஸன்) பல லட்சம் மக்கள் வருகின்றனர். இவர்களால் பயன்படுத்தப்படும், தூக்கி எறியப்படும் பல்வேறு கழிவுப் பொருட்கள் இயற்கை சீரழிவை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக நெகிழிகள் (பிளாஸ்டிக்) காரக்கட்டிகள் (சோப் வகைகள்) மென்காரக்கூழ் (ஷாம்பூ) கழிவுப் பொருட்கள் போன்றன மூலிகை வளம் பொருந்திய இயற்கையைச் சீரழிக்கின்றன.
மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருட்களின் கலவையில் (சோப், ஷாம்பூ) கார்சினோஜென்ஸ் எனப்படும் சோடியம் லாரல்சல்பேட், சோடியம் எத்தில் லாரல் சல்பேட் உள்ளிட்ட இரசாயன வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இதில் கார்சினோஜென்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் ஊக்கியாகும். இந்த வகையான இராசயணப் பொருள் அதிக நுரைவருவதற்காக சேர்க்கப்படுகிறது. இது அனுமதிக்கப்பட்ட சதவீதம் 6 % மட்டுமே. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இதனை 15% வரை சேர்க்கின்றன. இத்தகைய வேதிப்பொருட்கள் சதவீதம் 1% அதிகமானால் கூட அது பெருந்தீங்கினை விளைவிக்கும், பல மேலை நாடுகளின் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனியார் மற்றும் உலக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை கடைவிரித்து விற்பனை செய்யும் சந்தைகளாகவும், கழிவுகளை கொட்டும் குப்பைப் பகுதிகளாகவும் கருதுவதால் தடைவிதித்தல் என்பதும், சட்டங்கள் என்பதும் காகித அளவிலேயே நின்று விடுகின்றன. இதற்கு நமது மத்திய, மாநில அரசுகளும் துணை நிற்பது துர் பாக்கியமே.
அருவிகளில் பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் கார்சினோஜென்கள் (சோப், ஷாம்பூ) நீரில் கலக்கும் போது அந்நீர் அதிகமான காரத் தன்மை உடையதாக மாறுகின்றது. இதனால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள், சிறு உயிரினங்கள் மற்றும் அதனுடைய முட்டைகள் அழிக்கப்படுகிறன்றன. எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதால் இந்நீர் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.
சிற்றாற்றால் பயனடையும் சுமார் 9,000 ஹெக்டேர் நிலங்களும் உப்பு மற்றும் காரத் தன்மை உடையதாக மாறுகின்றது. அதுமட்டுமின்றி இந்நீரைப் பருகினாலோ, அல்லது இந்நீரின் மூலம் விளைவிக்கப்படுகின்ற பொருட்களை உண்பதாலோ புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் இப்பகுதி மக்களைத் தாக்குகின்றன.
இப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களை ஏற்கனவே தனியார் நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குப்பைக் கழிவுகள் ஆற்றின் கரைகளில் குவிக்கப்படுகின்றன. நீர் வழிந்தோடும் கால்வாய்களும் தூர் வாரப்படாமல் பராமரிப்பு இன்றி அமலைச் செடிகளால் நீக்கமற நிறைந்துள்ளன.
இச்சூழலில் அருவிநீர் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், அனைத்துப் பாதிப்புகளும் இப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுகின்றன.
அரசாங்கம் குற்றால அருவிகளில் இரசாயன வேதிப் பொருட்களைப் பயன்படுத்த உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறிஞ்சி மண்ணையும் மக்களையும் இயற்கையோடு ஒத்துவாழ வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.
(பூவுலகு மே 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ப.நற்றமிழன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியா போன்ற நாடுகளில் அதி நவீனத் தொடர்பு, மின்னணு கருவிகளை பெரும்பான்மையானோர் மிக ஆர்வமாக வரவேற்கின்றனர். குறிப்பாக அதிநவீன அலைபேசிகள், அதிநவீனக் கணிணிகள், அதிநவீன குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற பொருட்களை வரவேற்று பயன்படுத்தும் அதே நேரத்தில், பழைய பொருட்களான மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் புதிதாக ஒரு அலைபேசியையோ (அ) கணிணியையோ வாங்கினால், தன்னிடம் உள்ள பழைய பொருளை வெறுமனே எங்காவது வைத்து விடுகிறார்கள். அது நமது பார்வைக்கு தட்டுபடாமல் போனாலும்கூட, இதுவும் சூழியலை பாதிக்கும் காரணியாகும்.
பிப்ரவரி 24லிருந்து 26 வரை இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நடைபெற்ற ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழு கூட்டம் இந்த ஆண்டுக்கான மின்னணுக் கழிவுகள் தொடர்பான அறிக்கையை "மின்னணுகழிவுகளின் மறு சுழற்சியும், வாழ்வா தாரமும்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. மின்னணு தொழிலகங்களில் இருந்தோ, வீடுகளில் இருந்தோ வெளியேற்றப்படும் பயன்படாத மின்னணு பொருட்கள், 'மின்னணு கழிவுகள்' எனப்படுகின்றன. தொழில் புரட்சி நடைபெற்றதற்கு பின், இதுபோன்ற பொருட்கள் இல்லாமல் நவீன கால வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. மருத்துவம், கல்வி, உணவு பொருட்களை பாதுகாத்தல் மற்றும் வழங்குதல், தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு, சூழியல் பாதுகாப்பு மற்றும் பண்பாடு என பல இடங்களில் மின்னணு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டி, குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம், அலைபேசி, கணிணி, மின்னணு அச்சு இயந்திரங்கள், பொம்மை, தொலைகாட்சிப் பெட்டி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
பதினொன்று வளரும் நாடுகளில் கிடைத்த தரவுகளை வைத்து நிகழ்கால மற்றும் எதிர்கால மின்னணு கழிவை இந்த அறிக்கை கணித்துள்ளது. பயன்படுத்தப் படாத பழைய கணிணிகள், மடிக் கணிணிகள், அலைபேசி, கணிணி, மின்னணு அச்சு இயந்திரங்கள், பொம்மை, தொலைக்காட்சி, அதிநவீன ஒளிவாங்கி, இசைக் கருவிகள் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த பொருட்களின் விற்பனை பெரிதும் அதிரித்து வருவதால், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த மின்னணு கழிவுகளின் அளவும் பல மடங்கு அதிகரிக்கும்.
வளரும் நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதற்குக் காரணம், வளர்ந்த நாடுகளில் மின்னணு கழிவுகள் வெளியேற்றுதல், மறுசுழற்சி செய்தல் தொடர்பாக பல விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. வளரும் மற்றும் சந்தை அளவு விரிவடைந்து வரும் நாடுகளில் இந்த பொருட்களுக்கான சந்தை பெருகி வருவதும் மற்றொரு காரணமாகும். ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழு வளரும் நாடுகளில் மின்னணு கழிவுகள் வெளியேற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்தலுக்கான விதிமுறைகள் உண்டா என்றும், அந்த நாட்டு அரசுகள் சிறப்பு துறைகள் அமைத்து மறுசுழற்சியில் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்கின்றனவா என்பதையும் இந்த ஆய்வில் கண்டறிய முயற்சித்தது. 2006ல் இந்தியா 500 கோடி கணிணிகளை கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 25 விழுக்காடு அதிகரிக்கிறது. 2020ல் பழைய கணிணிகள் மூலம் தோன்றும் மின்னணு கழிவுகள் 2007ல் இருந்ததைவிட 500 விழுக்காடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2020ல் அலைபேசிகள் மூலம் தோன்றும் மின்னணு கழிவுகள் 2007ல் இருந்ததைவிட 18 மடங்கு அதிகரிக்கும், தொலைக்காட்சி கழிவு 1.5லிருந்து 2 மடங்கு வரையும், குளிர்சாதன பெட்டி கழிவுகள் இரண்டு (அ) மூன்று மடங்கும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழுவின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலக நிர்வாகக் குழுவில் ஒருவருமான அச்சீம் ச்டீனர் இந்த அறிக்கை வெளியீட்டின்போது கூறியது "சீனா மட்டுமல்ல, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, இன்னும் பல நாடுகள் இந்த மின்னணு கழிவு சவாலை சந்திக்கின்றன. மின்னணு கழிவுகள் மூலம் ஏற்படும் சூழியல் விளைவுகள், உடல்நல பிரச்சனைகள், மின்னணு கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்தும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை குறைப் பதற்கு ஒரு வழியாக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலமாக மறுசுழற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மின்னணு கழிவுகளின் மறுசுழற்சி விகிதாச்சாரத்தை அதிகரித்து நல்ல வேலைவாய்ப்பையும், பசுமையில்ல வாயு உமிழ் அளவை குறைக்கவும், அரிய தனிமங்களான தங்கம், வெள்ளி, பல்லேடியம், தாமிரம், இந்தியம் போன்ற பொருட்களை திரும்பப் பெறவும் முடியும். அதற்காக இந்த நாடுகள் மின்னணு கழிவு சவாலை மின்னணு சந்தர்ப்பமாக மாற்ற நல்ல திட்டமிடுதலும், உடனே அதை செயல்படுத்தலும் மிக அவசியம்" என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் மின்னணு கழிவின் அளவு 400 லட்சம் கல்லெடைகள் (கல்லெடை = 1000 கிலோ) அதிகரிக்கின்றது. அலைபேசி, கணிணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உலகளவில் சுரங்கங்களிருந்து எடுக்கப்படும் தங்கம், வெள்ளியில் மூன்று விழுக்காடை உபயோகப் படுத்துகின்றன. இதில் 13 விழுக்காடு பல்லேடியம், 15 விழுக்காடு கோபால்ட்டும் அடங்கும். நவீன மின்னணு பொருட்கள் கிட்டதட்ட 60 வகை தனிமங்களை கொண்டுள்ளன. இதில் பல அரிதானவை. சில ஆபத்தானவை மற்றும் சில இரண்டு குணநலன்களையும் கொண்டவை.
மின் மற்றும் மின்னணு பொருட்களில் பயன்படுத்தப்படும் தாமிரம், பல அரிய தனிமங்களை எடுப்பதற்காக நடைபெறும் சுரங்க வேலைகளில் மட்டும் 230 இலட்சம் கல்லெடை கார்பன் உமிழப்படுகிறது. இது உலக மொத்த கார்பன் உமிழ்வில் 0.1 விழுக்காடு அளவாகும். (இதில் இரும்பு, அலுமினியம் (அ) நிக்கல் போன்ற பொருட்களின் உற்பத்தி மூலம் வெளியிடப்படும் கார்பன் உமிழ்வின் அளவு சேர்க்கப்படவில்லை)
அமெரிக்க நாடே இந்த மின்னணு கழிவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அங்கு 2008ல் மட்டும் 15 கோடி அலைபேசிகள் விற்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டில் ஒருவர் புதிய அலைபேசி வாங்கியுள்ளதாக இதை எண்ணலாம். இது 2003ல் 9 கோடி என்ற அளவில் இருந்தது. உலகளவில் 2007ல் 100 கோடி அலைபேசிகள் விற்றுள்ளன. ஆறில் ஒருவர் புதிய அலைபேசி வாங்கியுள்ளதாக இதை எண்ணலாம். இந்த அளவு 2006ல் 90 கோடி என்ற அளவிலிருந்தது.
புதிய தொழில்நுட்பங்கள்:
ஐ.நா.வின் தலைமைச் செயலக நிர்வாகக் குழுவில் ஒருவரும் ஐ.நா. பல்கலைக்கழக நிர்வாகியுமான கொன்ராட் ஓசுட்டர் வால்டரின் கூற்றுப்படி "ஒரு மனிதன் குப்பை என கருதும் ஒரு பொருள் இன்னொரு மனிதனுக்கு மூலப்பொருளாகலாம்". மின்னணு கழிவு சவாலை சரியாக எதிர்கொள்வதன் மூலம் ஒரு பசுமை பொருளாதாரத்தை உருவாக்க முடியும். புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இந்த மின்னணு கழிவை சொத்தாக மாற்றவும், புதிய சூழியல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். இந்த கழிவுகளிலிருந்து தனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம், இந்த தனிமங்களை மீண்டும் சுரங்கங்களிருந்து எடுத்து, உற்பத்தி செய்ய தேவையான கார்பன் உமிழ்வை குறைக்க முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பம் பல படி நிலைகளை கொண்டது.
1) மின்னணு கழிவுகளை சேகரித்தல், அதன் மூலம் மூலப்பொருட்கள் பற்றாக்குறையை போக்கி, நல்ல பாதுகாப்பான, பொருளாதார நிலையில் மறுசுழற்சி நிறுவனங்கள் செயல்பட உதவும்.
2) பிரித்தல் மற்றும் முதல் நிலை வேலைகளை செய்தல். இந்த நிலையில் தீங்கு விளைவிக்க கூடிய தனிமங்களைப் பிரித்து பாதுகாப்பான இடங்களில் வைப்பது, தனிமங்கள் பிரித்தெடுத்தலும் நிகழ்கின்றது. உதாரணமாக மின்கலன்கள் பிரிக்கப்பட்டு அதிலுள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம் போன்ற தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
3) இதன் மூலமாக பிரித்தெடுக்கப்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய வுடன் அவை இரும்பு ஆலைகளுக்கும், அலு மினிய கதவுகள் தயாரிக்கும் ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன
இந்தியாவின் மின்னணு கழிவு மறுசுழற்சியில் அதிகாரபூர்வமற்ற துறையே ஆதிக்கம் செலுத்துகின்றது என இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் தனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம் வாழ்க்கையை நகர்த்துவதாகக் கூறுகிறது. இந்த முறைப்படுத்தப்படாத துறையை நெறிப்படுத்து வதற்கான பல முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்குத் தடையாக உள்ள காரணிகளை அரசு சட்டம் வகுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மின்னணு கழிவுகளுக்கென தனிச் சட்டம் எதுவுமில்லை. மின்னணு கழிவு சட்டங்கள் வகுக்கும்போது கீழ்காணும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்: சூழியல், நீர், காற்று, நகர கழிவுகள், ஆபத்தான கழிவுகளே அவை. மின்னணு கழிவுகளைக் கையாளும் முறை தற்பொழுது மிக ஆபத்தான கழிவுகள் கையாளுதல் என்ற பிரிவின் கீழ் உள்ளது. மின்னணு கழிவில் சில சிறப்பு பகுதிகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறையும் தெளிவில்லாமல் உள்ளது. இது இன்றும் ஆபத்தான கழிவுகள் பிரிவின் கீழே உள்ளது.
இந்தச் சட்டத்தை வளைப்பதற்கு அதிக அளவிலான கையூட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் அதன் பங்குதாரர்களுக்கு ஒரு தெளிவான பணி, இடத்தை வழங்கவில்லை.
முன்பே கூறியது போல மின்னணு கழிவுகள் மறுசுழற்சியில் அங்கீகரிக்கப்படாத துறையே ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கு பல சாதாரண, மோசமான தொழில் நுட்பங்களே பயன் படுத்தப்படுகின்றன. இது திறமை குறைந்த பணியாளர்களையும் கொண்டுள்ளது. இவை திறந்த வெளியில் நடப்பதால் தீ விபத்துக்கும், உடல், சூழியல் தீங்குகள் ஏற்படவும் வாய்ப் பளிக்கிறது. மேலும் மின்னணு கழிவில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை நீக்குவதற்கு சரியான வழிமுறையும் அவர்களிடம் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடைபெற்ற "வாத்தாவரன்" சூழியல் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படம், தலைநகரான தில்லியில் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தது. பெரும்பான்மையானதொழிலாளர்கள் அங்கிருந்த தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என்ன என்றுகூட அறிந்திருக்க வில்லை.
அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி துறைக்கு முக்கியமான சவாலாக திகழ்வது மின்னணு கழிவுகளை சேகரித்தல், அதை நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுதவதேயாகும். அங்கீகரிக்கப் படாத துறையின் நேரடி போட்டியே இதற்கு முக்கிய காரணம். கழிவுகளை சேகரித்தல், நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுதல், தீங்கான பொருட்கள், அரிய தனிமங்களை நீக்குதல் என எல்லா செலவும் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தையே சார்ந்துள்ளது. இதனால் தெளிவான பொருளாதார நிலையை மறுசுழற்சி நிறுவனங்கள் கொண்டிருப்பதில்லை.
பெங்களூரின் வெற்றி கதைகள்:
பெங்களூரில் உள்ள மின்னணு கழிவு மறுசுழற்சி நிறுவனங்களை மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இந்த அறிக்கை எடுத்துகாட்டுகின்றது. இந்த அவை மின், மின்னணு கருவிகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதில் ஏற்படும் மின்னணு கழிவை நீக்குவதற்காக இந்த மின்னணு நகரக் கூட்டமைப்பு "சுத்தமான மின்னணு கழிவு முறை" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இங்கு உள்ள எல்லா நிறுவனங்களும் தங்களது மின்னணு கழிவுகளை நல்ல, சூழியலுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் வெளியேற்றுகின்றன.
இங்குள்ள இ.பெரிசாரா என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மின்னணு கழிவு மறு சுழற்சி நிறுவனமாகும். இது பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முதல் அறிவியல்பூர்வமான மின்னணு கழிவு மறுசுழற்சி நிறுவனமாகும். சூழியலை பாதுகாத்தல், நிலத்தில் புதைக்கப்படும் மின்னணு கழிவின் அளவை குறைத்தல், பல அரிதான தனிமங்கள், ஞெகிழி (பிளாஸ்டிக்), கண்ணாடி, பல பொருட்களை பாதுகாப்பான முறையில் திரும்பப் பெறுதல் போன்றவைதான் இந்நிறுவனத்தின் நோக்கம். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆய்வு செய்து மின்னணு கழிவை வாங்கி, அதிலுள்ள பொருட்களை பிரித்து அரிய தனிமங்கள், பொருட்களை பிரித்தவுடன் அழித்து, தேவை யெனில் சான்றிதழும் அளிக்கிறது.
பெங்களூரை மையமாக கொண்ட ஒரு மின்னணு கழிவு மறுசுழற்சி கூட்டமைப்பும் உள்ளது. இது அங்கீகாரமற்ற துறையில் உள்ள நிறுவனங்களுடன் நல்ல உறவை கொண்டுள் ளது. "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்" ஆகியவற்றுக்காக இந்த அமைப்பு அறியப்பட்டது. இந்த அமைப்பு கர்நாடக மாநில மாசு கட்டுபாட்டு வாரியத் க்ஷ்திடம் 2007ல் தனது வேலைகளை தொடங்குவதற்கு முறைப்படி அனுமதி கேட்டது. அந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு கோரிக்கை இந்தியாவில் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்' அமைப்பு அதிகாரபூர்வமற்ற நிறுவனங்களுடன் இன்னமும் நல்ல உறவை கொண்டுள்ளது. இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் முக்கிய பிரச்சினையான மூலப்பொருள் பற்றாக்குறையை இதற்கு இல்லாமல் போனது.
அறிவியல் மற்றும் சூழியல் மைய அமைப்பின் கூற்றுப்படி "மின், மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல் மற்றும் வெளியேற்றுதல்" அமைப்பு 2008ல், அதன் முதல் பெரிய நிறுவன வாடிக்கையாளரான டைட்டனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் கழிவின் விலை, பழைய கடிகாரங்களுக்கு புதிய கடிகாரங்கள் கொடுக்கும் முறையில் பழைய கடிகாரங்கள் பெறப்படுகின்றன. பிறகு பழைய கடிகாரங்கள் இந்த அமைப்புக்கு கொடுக்கப்படுகின்றன. கடந்த வருடம் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை பழைய கடிகாரங்களை நிலத்தில் குப்பையாக புதைப்பதை தடுத்து, மறுசுழற்சிக்காக இந்த அமைப்பிடம் டைட்டன் கொடுத்துள்ளது. தான் தயாரிக்கும் நவீன தொழில்நுட்ப கடிகாரங்களும் மின்கழிவின் கீழ் வரும் என்பதை டைட்டன் நிறுவனம் நன்கு அறியும். இந்த அமைப்பு தாங்கள் வாங்குகிற மின்னணு கழிவை பெங்களூரை சேர்ந்த சாகாஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கையாளுகிறது. சாகாஸ் ஒரு மறுசுழற்சி நிறுவனமாகும். சாகாஸ் அமைப்பு, அதிலுள்ள பல அரிய தனிமங்களை பிரித்துவிட்டு தீங்குவிளைவிக்கும் பொருட்களை நிலத்தில் பாதுகாப்பாக புதைத்து விடுகின்றன.
எம்பா என்ற ஸ்விஸ் நாட்டு ஆய்வகம் ஒன்று வேதியல் பொருட்கள் மூலம் தனிமங்களை பிரித்தெடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் அந்த முறை ஆபத்தானது என்று தவிர்க்கப்பட்டு, நல்ல கருவிகளைப் பயன்படுத்தி தனிமங்களை பிரித்தெடுக்கும் முறையைத் தொடங்க இது ஒரு முன்னுதாரனமாக இருந்தது. அங்கீகரிக்கப்படாத மறுசுழற்சி துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது வேலை செய்யும் முறையை மாற்றிக் கொள்ளவேன்டும், வெறும் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக மட்டும் இல்லாமல் எல்லா தனிமங்களை பிரித்து ஆலைகளின் மூலப்பொருளாக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. இதில் "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்' அமைப்பு ஒரு முக்கிய கண்டுபிடிப்பு மையமாகவும் விளங்குகிறது.
மின்னணு கழிவை பாதுகாப்பாக, மிகச் சரியான முறையில் பிரித்தவுடன் இது உமிகோர் போன்ற நிறுவனத்துக்கு அனுப்பப்படுகின்றது. இங்கு தனிமங்களை பிரித்து தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. நடைமுறையில் பொருட்களை அனுப்பியதிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பின்தான் இவர்களுக்கு மறு சுழற்சி செய்ததற்கான பணம் கிடைக்கிறது. இதனால் மறுசுழற்சி நிறுவனங்கள் நிதி பிரச்சனைக்கு ஆளாகின்றன. இதனால் இந்த மறுசுழற்சி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஒரு நிதி நிறுவனத்தை நிறுவி அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மின்னணு கழிவு : உயிருக்கு ஆபத்து
இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 4,00,000 டன் மின்னணு கழிவு உருவாகிறது.
இதில் பெருமளவு கணினிகள், கை பேசிகள், இதர மின்னணு கருவிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒரு கணினியைச் செய்யப் பயன்படும் பொருள்கள்: ஞெகிழி (பிளாஸ்டிக்), ஈயம், அலுமினியம், இரும்பு, செம்பு, தகரம், நிக்கல், துத்தநாகம்,தங்கம், மாங்கனீஸ், வெள்ளி, நியோபியம், பாதரசம், பிளாட்டினம், குரோமியம் உள்ளிட்டவை.
இவை நமக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள்:
ஈயம்: மைய நரம்பு மண்டலம், புற எல்லை நரம்புகள், ரத்த நகர்வு, சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றை பாதிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் குறைபாட்டை உருவாகும். இறப்பும் நேரலாம்.
காட்மியம்: புற்றுநோய் ஏற்படுத்தும். சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும், எலும்புகளை மென்மையாக்கும். சுவாசம், உணவு மூலம் உடலில் சேர்கிறது.
பாதரசம்: மூளை, சிறுநீரகத்தைத் தாக்கும். கரு வளர்ச்சி பாதிப்பு, குழந்தைகளுக்கு பாதிப்பு.
கைபேசி முதல் கணினி வரை பயன் படுத்தப்படுகிறது. உள்ளுறுப்புகள்,உணவுப் பாதை மூலம் மூளையைச் சென்றடை கிறது.
குரோமியம்: கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் புற்றுநோய், சுவாசக் குழாய்
(டேரில் டி‘மாண்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மும்பை ஆசிரியர். இவர் இந்திய சூழியல் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும், சர்வதேச சூழியல் பத்திரிகையாளர் அமைப்பை தோற்றுவித்தவருமாவார்.)
தமிழில்: ப.நற்றமிழன்
(பூவுலகு மே 2010 இதழில் வெளியானது)
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.