அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக உயிரினங்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கு வளமான இருப்பாய்த் திகழ்வது, மலைகள், காடுகள், செழிப்பான நிலங்கள், ஆறுகள், வளி, காற்று ஆகியவற்றைக் கொண்ட இந்த இயற்கைச்சூழல்தான். ஒன்றைச் சார்ந்து மற்றொன்று, மற்றொன்றைச் சார்ந்து பிறிதொன்று என உயிர்களின் வாழ்க்கைச் சங்கிலி பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. பெருவெடிப்பிலிருந்து தோன்றிய இந்தப் பிரபஞ்சம், கோடானுகோடி ஆண்டுகள் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதெனில் இயற்கையின் அசைக்க முடியாத சக்தியை வியக்காமல் எங்ஙனம் இருக்க முடியும்? கற்பனைக்கே எட்டாத இப்பேரண்டத்தின் மிகச் சிறிய துளிதான் நாமிருக்கும் பூமி.

தற்போது 600 கோடிக்கும் மேல் மனித எண்ணிக்கையைக் கொண்டுள்ள நமது புவியில், கோடிக்கணக்கான உயிரினங்களும் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மனிதனோடு எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நெடும் போராட்டத்தினிடையே நுகர்வு வெறி பிடித்து அலையும் மனித இனம், ஒட்டு மொத்த இயற்கையையும் சூறையாடி, தனக்கு மட்டுமே என்ற இறுமாப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. இறுதியில் வெற்றி பெறப்போவது இயற்கைதான் என்பதை அறியாதவனாய், தனது பொறுப்பற்ற தன்மைக்கு, தனக்குத்தானே நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறான் மனிதன். தனது தேவைக்கும் மேலாக இயற்கையை உறிஞ்சத் துடிக்கும் மனித இனத்தின் பேராசைக்கு, இந்த பூமி இலக்காகி கொஞ்சம், கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே இன்றைய இயல்பு.
மலைகள், காடுகள், விலங்கு-பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கென்றே நம் முன்னோர்கள், கடவுள், தெய்வம் என காப்பாளர்களை உருவாக்கி, அங்கெல்லாம் கோவில்களைக் கட்டியெழுப்பினர். அக்கோவில்களில் உறையும் கடவுளர்களை நினைத்தவண்ணமே, அங்குள்ள இயற்கைச் செல்வங்களையும் பாதுகாக்க முனைந்தனர். இதனால்தான் மலைகளிலும், அடர்ந்த வனங்களிலும் தெய்வங்கள் வாழும் கோவில்கள் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எந்த இயற்கையைப் பாதுகாப்பதற்காக இறை உருவங்கள் உருவாக்கப்பட்டனவோ, அவ்விறைக் கோவில்களின் பெயரால் இன்றைக்கு இயற்கையைச் சீரழிக்கும் முரண் நிலை தோன்றத் தலைப்பட்டிருக்கிறது. சபரிமலையிலிருந்து, திருப்பதி வரை எவ்வளவோ முன்னுதாரணங்களை இதற்கு சுட்டிக் காட்டலாம். அதைப் போன்ற இயற்கையின் வியக்கத்தக்க உட்கூறுகளையும், தாவர, செடி, கொடி வகைகளையும், நீராதாரங்களையும் கொண்டுள்ள இடமே சதுரகிரி என்றழைக்கப்படும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்களை உள்ளடக்கிய மலைத்தொடர்கள்.
அடர்ந்த மலைக்காடுகளைக் கொண்டுள்ள சதுரகிரி, நமது மின்னணு ஊடகங்களின் பொறுப்பற்ற பரப்புரையால், இன்றைக்கு மிகப் பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கொரு முறை ஆடி மாத கார்உவா (அமாவாசை) நாளன்று, இம்மலையில் உருக்கொண்டிருக்கும் கடவுளர்களை வணங்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆடி மாத கார்உவா நாளன்று இம்மலையில் கூடிய மக்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய பத்து இலட்சம் பேர் என்றால், இம்மலைக்காட்டின் சூழல் கேடு எந்தளவிற்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். இயற்கையின் அத்தனை அழகும் கொட்டிக்கிடக்கும் இம்மலையின் அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவில் வரை நடந்து பயணம் செய்வதன் மூலம், மகிழ்ச்சியான உணர்வையும், ஒருமித்த சிந்தனையையும், உடல் நலத்தையும் பெற முடியும். எழுத்தில் வடிக்க இயலாத அவ்வுணர்வைக் குறித்து, அங்கே தொடர்ந்து பயணம் செய்து, கோவில்களுக்குச் சென்று திரும்பும் இறைப் பற்றாளர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் கேட்டால் தெரியும்.
மூத்த இதழாளர்களோடு சதுரகிரி மலைக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அண்மையில் கிடைக்கப் பெற்றோம். ஆடி அமாவாசைக்குப் பின்னர் அம்மலையின் சூழல் கேட்டை அளவிடுவதற்கும், தொடர்ந்து அங்கே நிகழும் இயற்கை அத்துமீறல்களைக் கண்டறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்மலை நோக்கிய எங்களின் பயணம் தொடங்கியது. தாணிப்பாறை அடிவாரத்திலுள்ள ஸ்ரீலஸ்ரீகாளிமுத்து சுவாமிகள் மடத்திலிருந்து அதன் பல்லாண்டுப் பணியாளர் திரு.இராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் எங்களது மூட்டை முடிச்சுகளோடு மலையேறத் தொடங்கினோம். மலைக்குக் கீழே இருக்கும் கருப்பசாமி, வனப்பேச்சியம்மன் கோவிலில் வணங்கி வழிபாடு நடத்திய பின்பு பயணம் தொடர்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியல், வளங்குன்றா வளர்ச்சி, பொருளியல், சித்தர் வாழ்வியல் போன்ற பல்வேறு கலந்துரையாடல்கள் நடைப்பயணத்தில் எங்களுக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டன.
பயணத்தினூடே மலைகளைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த இதழாளர் ஒருவர் மலையின் பண்டைய சூழல் குறித்து விளக்கிக் கொண்டே வந்தார். சிறிது தூரம் வரை சமதளமாகச் செல்லும் மலைப்பாதை ஓரிடத்திலிருந்து சற்றே உயரத் தொடங்குகிறது. 'வழுக்குப் பாறை என்றழைக்கப்படும் இச் சிறிய பாறையைக் கடப்பது ஒரு காலத்தில் மிகவும் சிரமமாக இருக்கும். காரணம், எப்போதும் இப்பாறையில் தண்ணீர் நிறைந்து வழிந்தோடிக் கொண்டிருக்கும். ஆனால், இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் அது போன்ற காட்சியைக் காண இயலும்' என்றார் இராமமூர்த்தி. தொடர்ந்து அவர், 'மலையின் போக்கில் பல்வேறு காட்டாறுகள் கோடைக்காலத்திலும் கூட, குறுக்கிட்டு ஓடிக் கொண்டேயிருக்கும். இப்போதெல்லாம் அந்தக் காட்சியைப் பார்ப்பது அரிதிலும் அரிதான ஒன்றாகிவிட்டது' என்றார் மிகுந்த வேதனையுடன்.
அத்திகிரி சித்தர் வாழ்ந்த பகுதியைக் கடக்க முற்பட்டோம். அது காட்டாற்றுப் பாதை என்பதால், அதனைக் கடந்து செல்வதற்காக இரு பாறைகளுக்கிடையே சங்கிலி ஒன்றைக் கட்டியிருப்பதைக் கண்டு அதற்கு விளக்கம் கேட்டோம். வெள்ளக் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, அதனைக் கடந்து செல்வதற்காக இந்த இரும்புச் சங்கிலியைக் கட்டி வைத்துள்ளனர் என்று விளக்கம் கிடைத்தது. அப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் பளிங்காகக் காட்சியளித்தாலும், அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிப் பைகளின் எண்ணிக்கை, நம்மை கிறுகிறுக்க வைத்துவிட்டது. ஆசை தீர அள்ளிக் குடிக்க வேண்டும் என்று நம் மனம் நினைத்தாலும், ஒருவேளை உடம்பிற்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்..? சற்றே பின்வாங்கி, அந்த உயரமான பாறையை அடி மேல் அடியெடுத்து நடந்து கடந்தோம்.
முன்னும் பின்னுமாய் ஆட்கள். ஆன்மீக நோக்கிலும், மலையேறும் ஆவலிலும் நிறைய பேர் சென்ற வண்ணம் இருந்தனர். சதுரகிரியில் வாழ்ந்த சித்தர்கள் குறித்து குழுவொன்று கலந்துரையாடிக் கொண்டே சென்றது. 'சித்தர்கள் எப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரிவார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?' என்று ஆவல் மிகுதியால் சில இளைஞர்கள் நச்சரித்துக் கொண்டே சென்றதையும் கண்டோம். 'மக்களுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நல்லது செய்கின்ற அனைவருமே சித்தர்கள்தான். நீங்களும், நானும் ஒரு வகையில் சித்தர் பரம்பரைதான். ஆகையால், வெற்றுப் பரபரப்பிற்காக செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்துவிட்டு இது போன்ற கேள்விகளையெல்லாம் தயவுசெய்து கேட்காதீர்கள். ஒருமித்த சிந்தனையில் மெய்யுணர்வோடு பயணம் செய்து பாருங்கள். அப்போதுதான் சித்தர்கள் என்ற நம் முன்னோர்களை உணர்ந்தறிய முடியும்' என்று மிகப் பெரிய ஆன்மீக விளக்கமளித்தார் வழக்குரைஞர் மகாராஜன். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சதுரகிரிமலைக்குத் தொடர்ந்து வந்து செல்லும் இறைப் பற்றாளர். இந்து சமய அறநிலையத்துறைக்காக பல்வேறு சிக்கல்களில் நேர்நின்று வாதாடியவர்.
அவர் மேலும், 'இயற்கை எண்ணற்ற அருட்கொடையை இந்த மலையில் புதைத்து வைத்திருக்கிறது. அதுமட்டுமன்றி, தனக்கு ஏற்படும் சீரழிவுகளைத் தானே சரி செய்து கொள்ளும் வல்லமை இந்த மலைக்கு உண்டு. ஞெகிழிப்பைகள் உள்ளிட்ட குப்பை கூளங்களை அடித்துப் பெய்யும் ஒரு மழையின் மூலமாக தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. இருந்தபோதும், இயற்கையே அதனைச் செய்யும் என எண்ணாமல் இந்த மலைகளை தூய்மையோடு பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்' என்று இயற்கை நேயராக நமது கேள்விகளுக்கும் விளக்கமளித்துக் கொண்டே வந்தார்.
மிகக் கடுமையான வளைவினைக் கொண்ட கோணத்தலைவாசல் ஏறிய பிறகு சிறிது இளைப்பாறினோம். பின்னர், மறுபடியும் நமது பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியெங்கும் மதுப்புட்டிகள் உடைந்தும், உடையாமலும் ஆங்காங்கே பரந்து கிடந்தன. 100 மிலி குடிநீர்ப்பைகள், ஒன்றரை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் என பாதை நெடுகிலும் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே முளைத்திருந்த சிறிய கடைகளைக் கூட, அழகிய கூடாரமாய் அமைத்து, அங்குள்ள மரங்களில் கயிற்றைக் கட்டி, சூழல் நேயத்தோடு உருவாக்கியிருந்தனர். 'ஆமாங்க இதுக்காக, இங்குள்ள மரங்கள வெட்டி அந்தக் கட்டையப் பயன்படுத்தணுமா என்ன? நமக்கு எப்படி இந்த இயற்கை உதவுதோ, அதே மாதிரி எல்லாத்துக்கும் உதவணும். அதுக்கு நாம வழி செய்யணும்' என்றார் அங்கே கடை வைத்திருந்த உள்ளூர்க்காரர் ஒருவர். இந்த சிந்தனை இங்கே வருகின்ற எல்லோருக்கும் இருந்துவிட்டால் எப்படியிருக்கும்? என்று எண்ணிக்கொண்டே சென்றபோது, எதிர்த்தாற்போல் நான்கைந்து ஆண்களும், பெண்களும் தலையில் ஆளுக்கொரு மூட்டைச் சுமையோடு இறங்கிக் கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபோது, மலையில் ஆங்காங்கே கிடக்கும் செருப்பு, உடைகள், பைகள் மற்றும் சில பொருட்களைச் சேகரித்து, மலைக்குக் கீழே கொண்டு செல்வதாகக் கூறினர். நாளுக்கு இருமுறை இது போன்று செய்வதாகவும், குறிப்பாக மக்கள் அதிகமாக வருகின்ற வெள்உவா (பௌர்ணமி), கார்உவா (அமாவாசை) நாளுக்கு மறுநாள் இதுபோன்ற சேகரிப்புப் பணியில் ஈடுபடுவதாகவும் கூறினர்.
'ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்து, சூரிய ஒளியே படாதவாறு மலையில் எப்போதும் குளுமை நிறைந்திருக்கும். பச்சைப் பட்டாடை போர்த்தியது போல், பார்க்கும் திசையெங்கும் பசுமையாய்க் காட்சியளிக்கும். ஆனால் இப்போது நிலைமை மிகவும் மாறிவிட்டது. வனத்துறைக்குத் தெரியாமல் உள்ளே புகுந்து மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல், இந்த மலையை சுத்தமாய் மொட்டையடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போது வனத்துறை மிகக் கடுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பயணிகளாக வரும் சிலர் அத்துமீறி, காப்புக் காடுகளுக்குள் புகுந்து மூலிகைச்செடிகளை நாசம் செய்து விடுகின்றனர். இதனை ஒன்றும் செய்ய இயலவில்லை. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செடி, கொடிகள் கூட, இந்த மலையின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உண்டு. தவசிப்பாறைக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு, வனத்திற்குள் சிலர் புகுந்துவிடுகின்றனர். கரடி உள்ளிட்ட விலங்குகளால் தாக்கப்பட்டு, உயிர் பிழைக்க ஒடி வந்தவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த மலையின் அருமை தெரிவதில்லை. அதன் புனிதமும் புரிவதில்லை' என்கிறார் மகாலிங்கம் கோவிலின் பூசகப் பொறுப்பிலுள்ள ஒருவர்.

காராம்பசுத்தடம், கோரக்கர் குகை என வழி நெடுக சில முக்கியமான இடங்கள் உண்டு. இவற்றிலெல்லாம் தங்கி இளைப்பாறிச் செல்லலாம். அதிலும் கோரக்கர் குகை அருகே சிற்றோடை ஒன்று செல்கிறது. அது முற்றிலுமாய் தூய்மைக்கேடடைந்து காணப்படுகிறது. அவ்வோடைக்கு சற்றே மேலேறிச் சென்றால்தான் நல்ல தண்ணீரைப் பருக முடியும். 'இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில்தான் மான் ஒன்று செத்துக் கிடந்தது. வனத்துறையினர் எதனால் இறந்தது என்பதைக் கண்டறிவதற்காக, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது உட்கொண்ட ஞெகிழிப் பொருட்கள்தான் காரணமென்று. வயிறு மிகப் பெரிதாய் ஊதி, செத்துக் கிடந்த இந்த மானைப் போன்று இன்னும் எத்தனை விலங்குகள், பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை' என்று அப்பகுதியில் கடை வைத்திருந்த ஒரு பெண்மணி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
ஓரிடத்தில் மரங்கள் அனைத்தும் கருகி, காடே அழிக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் காணப்பட்டது. 'இந்த இடத்துலதான், போன ஆடி அமாவாசைக்கு வந்த ஒரு சிலர் தீ வைச்சிட்டாங்க. மலையில தீப்பிடிச்சு எரியுதுன்னு கேள்விப்பட்டு, மலைக்கு வந்த நிறைய பேரு, அடிவாரத்தோட திரும்பிப் போயிட்டாங்க. அவங்களா தீ வெச்சாங்களா, இல்ல அவங்க கொண்டு வந்த பொருட்களால தீப்பிடிச்சதான்னு முழுமையா தெரியல. இருந்தாலும், நம்ம மேல தப்பு இருக்குங்க. மலைப் பகுதிகளுக்கு வரும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள யாரும் பயன்படுத்தக்கூடாதுன்னு, எச்சரிக்கைப் பலகை வச்சிருந்தும் கூட நம்ம மக்கள் கேட்கமாட்டேங்குறாங்க' என்றார் நம்மோடு வந்த உள்ளூர்ப் பத்திரிகையாளர்.
நாவல்ஊற்று என்ற இடத்தினருகே வந்தோம். விரிந்து நிழல் பரப்பியுள்ள நாவல்மரத்தின் வேர்ப்பகுதியில் அமைந்துள்ள அச்சிறிய ஊற்றுநீர், பயணிகளின் தாகம் தணிப்பதற்காகவே இயற்கை அளித்துள்ள அருங்கொடை. அந்த ஊற்றுக்குள்ளும் ஞெகிழிப்பைகள் காணப்பட்டன. பிஸகெட் டப்பாக்களும் அதற்குள் ஊறிக் கிடந்தன. நீளமான குச்சி ஒன்றை எடுத்து, அதிலுள்ள கூளங்களை எடுத்துப் போட்டு, இயன்றவரை தூய்மை செய்தோம். கலங்கிய தண்ணீர் நன்றாய்த் தெளிந்தபின்னர், கையோடு கொண்டு போயிருந்த பாட்டிலில் நீரை நிரப்பி தாகம் தீரும் வரை அள்ளிக் குடித்தோம். சுவையாக இருந்தது. அந்நீரின் மருத்துவ குணம் குறித்த அறிவிப்புப் பலகையொன்று அம்மரத்தினடியிலேயே தொங்கவிடப்பட்டிருந்தது. பச்சரிசிப்பாறை என்ற இடத்தைக் கடந்த பின்னர், காட்டாறு ஒன்று குறுக்கிடும் இடத்தில் வனதுர்க்கைக்கு கோவில் ஒன்று உள்ளது. அடர்ந்த மரங்களைக் கொண்ட அப்பகுதியில் சில் வண்டுகள் எழுப்பும் ஒலி மனதுக்கு மிக இதமாக உள்ளது. சின்னப்பசுக்கிடை, பெரிய பசுக்கிடை என்ற பகுதிகளைக் கடந்து செல்லும்போது, 'அந்தக் காலத்துல உள்ளூர்க்காரவுங்க தங்களோட மாடுகள இந்த மலையிலதான் மேய்ச்சலுக்கு விடுவாங்க. ஒரு வாரம், ரெண்டு வாரம்னு தங்கி மாடுகள மேய்ச்சலுக்கு விடுறவங்க, இந்த ரெண்டு இடங்கள்லதான் கிடை போடுவாங்க. இன்னைக்கி மேய்ச்சலுக்கு ஒரு ஆடு, மாடுகளக்கூட பாக்க முடியல' என்றார் இராமமூர்த்தி.
அதனைக் கடந்து சென்றதும் நம் கண்களில் தெரிவது பிலாவடிக்கருப்பர் ஆலயம். ஆறு ஓடி வரும் பாதையில், பலா மரத்தின் அடியில் அமைந்துள்ளது கருப்பசாமி கோவில். இங்கே வருகின்ற பக்தர்கள் அனைவரும் கருப்பசாமிக்கு தேங்காய் உடைக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், அவ்விடம் முழுவதும் தேங்காய்ச் சிரட்டைகளால் நிறைந்து காணப்படுகின்றது. அவையெல்லாம் அழுகிய நிலையில், பெரும் துர்நாற்றத்தோடு கிடக்கின்றன. இவ்விடத்தைக் கடந்து செல்லும் தண்ணீரும் கூட, எண்ணெய்ப்பிசுக்கோடு ஏதோ ஒரு நிறத்தில் காணப்படுகிறது. அக்கோயிலைச் சுற்றி குரங்குகள் நிறைய வாழ்கின்றன. அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்கள். அக்கோவிலை ஒட்டி ஓடும் சிற்றோடை, மனிதக் கழிவுகளால் மிகப் பெரும் தூய்மைக்கேடு அடைந்துள்ளது. சில ஆயிரம் பேர் வந்து செல்லும்போதே, இப்படியொரு நிலையெனும்போது, பத்து இலட்சம் பேர் வந்து சென்ற ஆடி கார்உவா நாளில் எப்படியிருந்திருக்கும் என்பதை வாசிப்போரின் கற்பனைக்கே விட்டுவிடலாம். அப்போது அவர்கள் பயன்படுத்திய இயற்கைக்சூழலுக்கு ஒவ்வாத பொருட்கள், கழிவுகள் என்று கணக்கிட்டுப் பார்த்தால், சதுரகிரியின் தூய்மை எந்த அளவிற்கு பாழாகியிருக்கும்..? இந்த அழகில் புதிதாய் வருகின்ற சிலர் மலையேறும்போதே மேலே தங்கும் விடுதிகள் உள்ளனவா..? சுற்றுலா வழிகாட்டிகள் உண்டா..? 'சிறப்பு பானங்கள்' கிடைக்குமா..? என்றெல்லாம் கேட்டு தங்களது பயணத்தைத் தொடங்குபவர்களை என்னவென்று சொல்ல..?
இறைத்தேடலோடு வருவோர், வசதிகளை நினைத்துக் கொண்டு வரக்கூடாது. இயற்கை என்ன வழங்கியிருக்கிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்களுக்காக வனத்துறையால் வழங்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தற்போது பார்த்தீனியச் செடிகளும் பரவியிருக்கின்றன. இச்செடிகளின் பரவல், சதுரகிரியின் வனவளத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் மனிதர்களின் அத்துமீறல், மற்றொரு புறம் பார்த்தீனியச் செடிகளின் பெருக்கம். இவற்றையெல்லாம் தாண்டி சதுரகிரியின் வனவளத்தையும், சூழலையும் பாதுகாக்க வேண்டிய கடமை, வனத்துறைக்கும், அறநிலையத்துறைக்கும் மட்டுமன்றி, அங்கே பயணம் செய்யும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த நவம்பர் மாத பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் கட்டுரையாளர் திரு.தங்கப்பாண்டியன் கூறியதுபோல், சதுரகிரியும், மற்றுமொரு சபரிமலையாய் உருவெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே உறுதியான உண்மை.
- இரா.சிவக்குமார் (
- விவரங்கள்
- வேணு சீனிவாசன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காடுகள் அழிப்பு
தொழிற்சாலைகளிலும், உற்பத்தி நிலையங்களிலும், வீடுகளிலும் பலவகையான எரிபொருட்கள் நாள்தோறும் எரிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் நாள்தோறும் டன் கணக்கில் நிலக்கரி எரிக்கப்பட்டு வெப்பமும், புகையும் காற்றில் கலக்கிறது. காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளும் சுவாசித்து தீர்த்து விடுகின்றன. மரங்கள் மட்டும் தான் காற்றில் கலந்த கார்பன்டை ஆக்சைடு வாயுவை கிரகித்துக்கொண்டு, சுவாசிப்பதன் மூலமாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. இவைகள் காற்று மண்டலத்தில் இருந்து உறிஞ்சிக் கொள்ளும் கரியமிலவாயு உணவு தயாரிப்பில் உபயோகப்படுகிறது இதனால் சுற்றுப்புறக் காற்றின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
ஆனால் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமாக கண்ணில் பட்ட மரங்களை எல்;லாம் வெட்டி சாய்த்து வருகின்றோமே . இவ்வாறு அதிகப்பரப்பில் இருந்த காடுகள் சென்ற நூற்றாண்டின் இறுதிக்குள் பாதிக்கு மேல் அழிந்து விட்டன.
மரம் என்றால் உயிர், இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கும் விலங்கு பறவைகளுக்கும் வாழ்வாதாரம். சிலபேர் நினைக்கிறார்கள் , காடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம்? மரங்களை வெட்டி விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். காடுகளை அழித்து குடியிருப்புக்களைக் கட்டினால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த எண்ணம் தவறானது , இது போன்ற தவறான எண்ணத்தினால் தான் இதுவரையில் உலகத்தில் உள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து விட்டது. காடுகள் சோலைவனங்கள் இந்த சோலைவனங்கள் அழியுமானால் நாம் பாலைவனத்தில் தான் வசிக்க வேண்டும்.
ஒரு காடு அழியும் போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை, அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது.
சிலர் காடுகளை அழித்து மரம் செடிகொடிகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், இன்னும் சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் கொம்பு, தந்தங்கள், தோல் ஆகியவற்றை விற்று பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மிருகங்களும், பறவைகளும் அழிவதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. காடு அழிவதால் சுற்றுச்சூழல் அழிகிறது, பருவநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மண் அரிப்பு - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். வருடந்தோறும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்அரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகிறது.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்;த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு - மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
குறைந்து வரும் மரத்தின் அளவு - தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, மேசை, கட்டில், பீரோ போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி - மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில் வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல் - மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுககைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது. அதுமட்டும் இல்லாமல் மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது - காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண்அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண்அரிமானம் ஏற்படுகிறது இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன இதன் காரணம் என்ன ? மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் - காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதல் பெரும்;பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.
- வேணு சீனிவாசன் (
- விவரங்கள்
- உதயகுமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
- விவரங்கள்
- இளம்பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மின்பற்றாக்குறை, 2–ஜி ஸ்பெக்ட்ரம், ஈழத்தில் தமிழின அழிப்பு இவையே தி.மு.க. அரசு எதிர்க்கட்சி தகுதியைக் கூட சட்டப்பேரவையில் இழந்து நிற்பதற்கான முக்கிய மூன்று காரணிகள் எனக் கூறப்படுகிறது. இவற்றில் தமிழ்நாடு மக்களின் தன்னலன் சார்ந்த முதன்மைப் பிரச்சனையாக, ஊடகங்களிலும் அரசியல் கட்சி மேடைகளிலும் அதிகம் பேசப்பட்டது மின் பற்றாக் குறையே. தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான பற்றாக்குறை, 3000 மெகாவாட் என இன்றளவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசும், இப்பற்றாக்குறையை உடனடியாகப் போக்கும் வகையில் நடுவண் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது நான்கு புதிய மின் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து சென்னை அருகேயுள்ள வல்லூரில், மூன்று யூனிட்கள் கொண்ட 1500 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைக்கிறது. இந்நிலையத்திலிருந்து அக்டோபர் முதல் 375 மெகாவாட் மின்சாரம் முதற்கட்டமாகப் பெறப்படவிருக்கிறது. மேட்டூரில் தமிழக மின்வாரியத்தின் சார்பில் 600 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையத்தின் உற்பத்தி டிசம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எண்ணுரில் 600 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையமும், நடுவண் அரசுடன் தமிழக மின்வாரியமும் இணைந்து 9,083 கோடி ரூபாய் மதிப்பில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியிலும் அமைக்கப்படவிருக்கின்றன. இத்திட்டங்கள் செயல்படத் தொடங்கினாலே, தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி 5100 மெகாவாட் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும்.
இந்நிலையில் நடுவண் அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவண் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் பயன்பாட்டு அடிப்படையில் ஆய்வு நடத்தி, சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. கொதிகலன் செயல்பாடு, குளிர்விப்பில் வெளியேறும் தண்ணீரின் வெப்பநிலை மற்றும் வெளியேறும் புகை ஆகியவற்றில், நடுவண் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை வகுத்த அளவை விடக் குறைவான அளவை நடுவண் சுற்றுச் சூழல் துறை நிர்ணயித்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, நடுவண் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அனுமதிகளை நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய மின் நிலையங்களின் கொதிகலன்கள் (பாய்லர்கள்) 100 சதவிகிதம் இந்திய நிலக்கரி அல்லது 30 சதவிகிதம் வெளிநாட்டு நிலக்கரியுடன் சேர்த்து பயன்படுத்தும் திறனிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வடசென்னை அனல்மின் நிலையத்திற்கான 1200 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகளுக்கும், மேட்டூரின் 600 மெகாவாட் யூனிட்டுக்கும் நடுவண் அரசு நிலக்கரி அனுமதிக்கான உறுதியளிப்புக் கடிதம் தந்திருந்தாலும், ஒரிசா மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவன கூட்டத்தில், உறுதியளிக்கப்பட்ட அளவில் 50 சதவிகிதம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, கொதிகலன்களின் திறன் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் சூழல் விதிமுறைகளைப் பாதிப்பதாக இருக்கும். நடுவண் அரசின் நிலக்கரி அனுமதியையும் சுற்றுச் சூழல் அனுமதியையும் சமன் செய்து பெற வேண்டிய நிலையில், 11 மற்றும் 12 ஆம் அய்ந்தாண்டு மின் உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், இதற்கான அனுமதிகளை வழங்கி விடுவார். இன்னும் ஆறுமாத காலத்தில் மேற்கண்ட திட்டங்கள் நடைமுறைக்கு வருவதும், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நீங்கி உபரித் திறன் இருக்கும் என்பதும் கண்கூடு. நடைமுறையிலிருக்கும் அனல்மின் திட்டங்களால் சுற்றுக்சூழலும், மக்களின் ஆரோக்கியமும் சீர்கெட்டுப் போயிருக்கின்றன. மின் உற்பத்திக்கான மாற்று முறைகளைப் பற்றிய நடவடிக்கைகளில் மேற்கத்திய நாடுகள் இறங்கிவிட்டன. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளோ, சூரியஒளி, காற்றாலை போன்ற இயற்கை வழி உற்பத்திக்கான வாய்ப்புகள் அதிகமிருந்தும், அணு மற்றும் அனல் மின் திட்டங்களையே சார்ந்து நிற்கின்றன. புவிப்பரப்பிற்கும் வாழிட மக்களுக்கும் பேராபத்துகளைத் தருவிக்கும் தொழிற் நுட்பங்களையும் திட்டங்களையும் நம்பியே பாழ்படுகின்றன.
தமிழகத்தில் இயங்கி வரும் மின் உற்பத்தித் திட்டங்கள் தற்போதைய தேவைகளை நிறைவு செய்யும் நிலையில், எதிர்காலத் தேவைக்கான மின் ஆற்றலை – காற்றாலை, சூரிய ஒளி மற்றும் குப்பைக் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளையும் நவீன தொழிற்நுட்பத் திட்டங்களையும் மட்டுமே நாட வேண்டும். நுகர்வோரான மக்களும் அரசுகளிடம் இதை வலியுறுத்த வேண்டும். மக்கள் நலனில் அக்கறையற்ற ஊழல் அரசுகள் ஒருபுறம், பொது நோக்கு சிந்தனையற்ற அசட்டையான மக்கள் மறுபுறம் என, தவறான கொள்கைத் திட்டங்களில் நாடு வீழ்ந்து கிடக்கிறது.
இந்த அவலமான சூழலில் தான் தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் 9 மற்றும் தூத்துக்குடியில் ஒன்று என புதிய அனல்மின் நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முதற்கட்ட அனுமதியை வழங்கியிருக்கின்றன. இத்திட்டங்களைக் கைவிடக் கோரியும், புதிய அனல் மின் நிலையங்களுக்கான அடுத்தகட்ட அனுமதிகளை வழங்கக் கூடாதென வலியுறுத்தியும் நாகை மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். மாநில அரசு தொடர்ந்து அனல் மின் நிலைய முதலாளிகளுக்கு ஆதர வாகவே செயல்பட்டு வருகிறது.
மீனவர்கள், தலித்துகள் மற்றும் நாகை – காரைக்கால் வாழ் முஸ்லிம்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ‘அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மக்கள் அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு அணியமாகி வருகின்றனர். 19.07.2011 அன்று, மயிலாடுதுறையில் ஏறத்தாழ ஆயிரம் பேர் பங்கேற்ற ‘வாழ்வுரிமை மாநாடு' இக்கூட்டியக்கத்தினரால் நடத்தப்பட்டது. இதையொட்டி பகுதிவாழ் மக்கள் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகத்தின் கருத்தறிய உண்மையறியும் குழு ஒன்று, தான் ஆய்வில் கண்டவற்றிலிருந்து அளித்த அறிக்கையின் சாராம்சமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. இக்கட்டுரை அச்சில் இருக்கும் காலத்தில், நாகை மாவட்டத்தில் மூன்று அனல் மின் நிலையங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியிருப்பதை அறிகிறோம். அவற்றில் ஒன்று மிகவும் பிரச்சனைக்குரிய, தரங்கம்பாடி பகுதி மீனவ மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கப் போகும் ‘செட்டிநாடு அனல்மின் கழகம்' நிறுவியிருக்கும் நிலையமாகும்.
‘செட்டிநாடு' முதலாளியான ஏ.சி. முத்தையா அண்மையில் அ.தி.மு.க. அரசினால், தமிழ்நாடு மாநில திட்டக் குழு (தொழிற்துறை) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பு வட்டத்திலும், அதிகார மய்யத்திலும் நீண்டகாலமாகக் கோலோச்சுபவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவரைப் போன்றவர்கள் முறைகேடாக நிலங்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையே கூட விலைக்கு வாங்கலாம். துணிச்சலான மக்கள் போராட்டங்களை விலை பேச முடியுமா? தேவைக்கு அதிகமான உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து, பிற மாநிலங்களுக்கு விற்று, கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கும் தனியார் முதலாளிகளுக்காக, விவசாய நிலங்கள் திட்டமிட்டே தரிசாக்கப்பட்டும் அடிமாட்டு விலைக்கு ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன.
வரும் காலத்தில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (2011 – 12) கூறுகிறது. விவசாய நிலங்கள் மனைகளுக்கும் தொழிற் பூங்காக்களுக்கும் கையகப்படுத்தப்பட்டால், உணவு உற்பத்தி செய்யப்படுவது எப்படி? வேளாண் குடிகளான தலித் மக்களும், கடலோர வாழ் மீனவக் குடிகளும் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுமா?
– இளம்பரிதி
****
கடலோர மக்களின் வாழ்வை சூறையாடும் அனல் மின் நிலையங்கள்
உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்
சமய ஒற்றுமை, மீன்வளம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றிற்குப் பெயர்போன மாவட்டம் நாகப்பட்டினம். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள சுமார் 220 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை ஒட்டி 61 கிராமங்கள் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ளன. 16 நதிகள் கடலில் கலக்கும் கடைமடை விவசாய நிலங்களை நம்பி – ஏராளமான விவசாயிகளும், தலித் மக்களும் வாழ்கின்றனர். வேளாங்கன்னி, நாகூர், திருக்கடையூர் முதலான புகழ்மிக்க சமயத் தலங்களில் சுற்றுலாத் தொழில்களை நம்பிப் பல சிறு வணிகர்கள் வாழ்கின்றனர்.
வரலாற்று முக்கியத்துவமிக்க இம்மாவட்டத்தில் வாழ்கிற மக்கள் மத்தியில், இன்று தம் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாக திருக்கடையூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிள்ளை பெருமாள்நல்லூர் பவர் லிமிடெட்'இன் அனல்மின் நிலையம் தவிர, மேலும் ஒன்பது அனல்மின் நிலையங்கள் இங்கு வரப்போகின்றன. ஏற்கனவே காரைக்காலில் செயல்பட்டு வரும் ‘மார்க்' தனியார் துறைமுகம் தவிர, மேலும் மூன்று துறைமுகங்களும் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரியை ஏற்றிவரும் கப்பல்களிலிருந்து கரியை இறக்கும் பல ‘ஜெட்டி'களும் கட்டப்பட உள்ளன.
தமிழகத்தில் இன்று நிலவுகிற மின்சாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி – அரசும், கார்ப்பரேட்டுகளும் தமது செயல்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலும், விவசாயமும் அழிந்தாலுங்கூட, புதிய மின் நிலையங்களில் வேலை வாய்ப்பளிக்கப்படும் என மக்கள் நடுவில் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
திருக்கடையூரில் செயல்பட்டு வரும் பி.பி.என். மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் :
1998 முதல் பிள்ளைப்பெருமாள் நல்லூரிலிருந்து செயல்பட்டு வருகிற இம்மின் நிலையத்தில், 330 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாப்தலின் மற்றும் திரவ எரிவாயுவால் இது இயக்கப்படுகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து கடல் ஊடாகச் சுமார் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ள குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரப்படுகிறது. மின் நிலைய இயக்கத்திற்கென கடலில் இருந்து குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுச் சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிற இம்மின் நிலையத்தால் தங்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள தாக வெள்ளக்கோயில் குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை முதலான ஊர்களைச் சேர்ந்த மீனவ மக்கள் எங்களிடம் கூறினர். இந்த ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் கூடியிருந்த மீனவ மக்களின் பிரதிநிதிகள் கோ. சரவணன், த. குமார், ஆ. பாஸ்கர், நா. தவமணி, ந. தங்கப் பொண்ணு, சு. தங்கவேலு, க. சித்திரவேலு, ர. பரசுராமன், சே. சிவகுமார், கு. விஜயேந்திரன், கி. குணசேகரன் ஆகியோர் கூறியவற்றிலிருந்து :
1. கடல் உள்ளே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சிக்கி வலைகள் கிழிந்து விடுகின்றன. டிராய்லர் படகுகள் குழாய்களைச் சுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது. நாப்தா கொண்டு வரும் கப்பல்களில் மாட்டியும் வலைகள் கிழிகின்றன. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை கிழிந்தால் ரூ. 10,000 என்ற அளவிலேயே அதுவும்கூட ஒரு சிலருக்கு மட்டும் இத்தகைய இழப்பீடுகள் தரப்பட்டுள்ளன. ‘ஸ்நேகா' என்கிற தொண்டு நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி, 13 ஆண்டுகளில் தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு 5.14 கோடி ரூபாய் இழப்பு இவ்வகையில் ஏற்பட்டுள்ளது.
2. சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலில் கலக்கப்பட்டு வருவதால் பெரிய அளவில் மீன்வளம் குறைந்துள்ளது. தண்ணீர் கலக்கின்ற இடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மீன்களே கிடையாது. மீன்களின் கருவளத்தையும் இது பாதிக்கிறது. இறால் மற்றும் காணாங்கெழுத்தி, கட்லா முதலான மீன்கள் மிகவும் குறைந்துவிட்டன.
3. கடல் அரிப்பும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 வீடுகளாவது இடம்பெயர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
4. மழை அளவும்கூட இப்பகுதியில் குறைந்துள்ளது. 8 அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், தற்போது 20 அடி ஆழத்திற்கு இறங்கி உள்ளது. நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகக் காரைக்காலில் செயல்பட்டு வருகிற மார்க் துறைமுகம் கட்டப்படும்போது, நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை. இன்று இந்தோனேசியாவிலிருந்து பெரிய அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பெல்ட் முதலான கருவிகள் பயன்படுத்தப்படாமல், மனித உழைப்பின் மூலமாகவே கரைக்குக் கொண்டு வந்து வெட்ட வெளியில் கொட்டப்படுகிறது. காற்று வீசும் திசையில் நிலக்கரி தூசு பறந்து இயற்கை வளங்களையும், உப்பனாற்று மீன் வளத்தையும் பாதித்து உள்ளது. வாஞ்சூர், நாகூர், பட்டணம், நிரவி, பட்டினஞ்சேரி ஆகிய ஊர்மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு குறை வளர்ச்சியுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், மரம், செடி, கொடிகள் அழிவதாகவும், இப்பகுதியில் விளையும் வாழை இலையில் உணவு உண்ண இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் – நாங்கள் சந்தித்த ஜா. சாதிக், அ. கப்பாபா ஆகியோர் கூறினர். எதிர்ப்புகளைக் காட்டும்போது உடனடியாக அழைத்துப் பேசி சில சலுகைகளைச் செய்வதை நிர்வாகம் தந்திரமாக மேற்கொள்கிறது. வரலாற்று முக்கியத்தும் மிக்க நாகூர் தர்கா நிலக்கரித்தூளால் பாழ்படுவதைப் பற்றி தர்கா நிர்வாகம் கவலை தெரிவித்தபோது, அக்கட்டடத்திற்கு வெள்ளை அடித் துத் தந்து நிர்வாகம் சமாதானம் செய்தது ஓர் எடுத்துக்காட்டு.
மேற்குறித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பி.பி.என். மின் நிலையம் 330 மெகாவாட் திறனுடையது. நாப்தா மற்றும் திரவ எரிவாயுவால் இயங்குவது. ஆனால், தற்போது அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியால் இயங்கக்கூடியவை. ஒவ்வொன்றும் சுமார் 1000 மெகாவாட் வரை திறனுடையவை.
நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மிக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவதன் சுருக்கம் :
1. ஓசோன் படலம் துளையாதல், பூமி வெப்பமாதல் ஆகியவற்றிற்குக் காரணமான வாயுக்கள் பெரிய அளவில் உருவாகும். ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு 105 டன்கள் சல்பர்–டை–ஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்யும். இது, சுவாச மற்றும் இருதய நோயை மக்களுக்கு ஏற்படுத்தும். மேகங்களில் கலந்து அமில மழையை உருவாக்கி மரம், செடி, கொடிகளையும் விவசாயத்தையும் அழிக்கும்.
2. ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன் தூசுகளை உருவாக்கும். உலோகத் தன்மையுடைய இத்தூசுகள் நுரையீரலைப் பாதிக்கும். இருதயத் துடிப்பையும் மாற்றி அமைக்கும். மண்ணின் சத்துக்களை அழிக்கும். மரம், செடி, கொடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
3. இதுதவிர, உடலில் மிகப்பெரிய தீங்குகளை விளைவிக்கக்கூடிய பாதரசம் வெளிப்படும். ஓராண்டில் நீரில் ஒரு கிராம் அளவு பாதரசம் கலந்தால் பத்து ஹெக்டேர் பரப்பில் உள்ள மீன்கள் விஷத்தன்மை அடையும். ஒவ்வொரு 100 மெகாவாட் அனல்மின் நிலையமும் ஆண்டொன்றுக்கு 11 கிராம் பாதரசத்தை வெளித்தள்ளும் என்றால், பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
பரிந்துரைகள் :
1. அறிவிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பறிப்பு, அவற்றால் ஏற்பட்டுள்ள மக்கள் பாதிப்பு, திட்டங்களால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மீன் வளப் பாதிப்பு ஆகியவை குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும். நிலப்பறிப்பில் விதிகளை மீறி கார்ப்பரேட்டுகளுக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும். சிதம்பரம்பாக்கம் என்கிற கிராமமே இல்லை எனச் சொன்ன ‘நீரி' நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. சாதி வெறியுடன் தலித் மக்களைத் தாக்கிய காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடர வேண்டும். எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த 14 பேர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வூர் மக்களுக்கும் ஊர்த் தலைவர் செல்வத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தொலைநோக்கில் :
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதும், தொடர்ந்து மின் தேவை அதிகரித்து வருவதும் எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு நிலையே. இதற்கு உடனடிப் பரிகாரம் அவசியம் என்பதும் உண்மையே. நம்முடைய தற்போதைய மின் தேவை சுமார் 11 ஆயிரம் மெகாவாட் எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 15,800 மெகாவாட். இந்த மின் நிலையங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பணிகளை ஒழுங்காகச் செய்தால், மின் சிக்கனம், விநியோகம் முதலியவற்றின் திறன் சார்ந்த முறைகளைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலம் உடனடி மின் பற்றாக்குறையைக் களைய முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் நமது தற்போதைய மின் பற்றாக்குறையைக் கணக்கில் கொள்ளாமல், ஏராளமாக மின்சாரத்தை அளிக்க ஒப்புதல் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்.
உண்மை அறியும் குழுவினர்
பேராசிரியர் அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
பேராசிரியர் அரசமுருகுபாண்டி யன், டி.பி.எம்.எல். கல்லூரி, பொறையார்
வழக்குரைஞர் தய். கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
சமூக ஆய்வாளர், எழுத்தாளர் கா.இளம்பரிதி, மதுரை
பொறியாளர் மு. ஹரிஸ்முகம்மது
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு
சமூக ஆர்வலர் செ. முகம்மது மரைக்காயர், நாகை
(தலித் முரசு ஜூலை 2011 இதழில் வெளியானது)
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.