நிலவில் காற்று இல்லை, தண்ணீர் இல்லை. 250 டிகிரி வரையிலான உயர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. ஆனால் நிலவில் வருங்கால ஆய்வுகளுக்காக முகாம்களை அமைக்கத் திட்டமிடும் நாசா போன்ற விண்வெளி நிறுவனங்களுக்கு அங்கு நீண்ட காலம் புதிராகத் தொடரும் தூசுக்களே பெரும் சவாலாக உள்ளது. இந்த தூசுக்கள் விண்வெளி ஆடைகளை அரிக்கின்றன; இயந்திரங்களில் அடைப்புகளை ஏற்படுத்துகின்றன; அறிவியல் உபகரணங்களில் குறுக்கீடுகளை உண்டாக்குகின்றன; ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதைக் கடினமாக்குகின்றன.

இதற்கு விஞ்ஞானிகள் இப்போது ஒரு புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். நிலவில் உள்ள தூசுக்களை ஒரு ராட்சச லென்சைப் பயன்படுத்தி உருக்கி உறுதியான சாலைகள், கலன்கள் இறங்க தளங்களைக் கட்டலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவில் வீதிகளா! இதைக் கேட்கும்போது நமக்கு நம்ப முடியாத வியப்பே ஏற்படும்!

யாருக்காக இதைக் கட்டவேண்டும் என்றும் தோன்றலாம்? ஆனால் இது பல காலங்களாக விஞ்ஞானிகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. நிலவின் தூசுக்கள் மிக நெகிழ்வானவை. நிலவிற்கு வளி மண்டலம் இல்லை. அதன் ஈர்ப்பு விசை பலவீனமானது. இதனால் தூசுக்கள் எல்லா இடங்களிலும் பரவுகின்றன. இவை எல்லாப் பொருட்களிலும் நுழைகின்றன; கலந்து விடுகின்றன; பாதிக்கின்றன.

moon 301தூசுக்கள் கருக்கிய லூனார் சர்வேயர்

2030ல் விண்வெளி வீரர்கள் நிலவிற்குச் சென்று தங்கி ஆய்வுகளை நடத்த ஏதுவாக ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் கீழ் ஆளில்லாத ஏவுவாகனங்களை நாசா நிலவிற்கு அனுப்பி பரிசோதித்து வருகிறது. அப்போலோ12 பயணத்தின்போது ஆய்வுக்கலனுடன் சென்று, நிலவில் தரை இறங்கிய லூனார் சர்வேயர் iii கலனுக்குள் தூசுக்கள் புகுந்து அதை கருக்கி சாம்பலாக்கியது. நிரந்தரமாக நிலவில் தங்குமிடத்தை அமைக்கத் திட்டமிடும் நாசாவிற்கு இது ஒரு சவாலான பிரச்சனையாக இருந்து வருகிறது.

பூமியில் இருந்து கட்டுமானப் பொருட்களை நிலவிற்கு எடுத்துச் செல்வது அதிக செலவு பிடிக்கும் ஒன்று. அதனால் இப்பிரச்சனையைத் தீர்க்க இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். “நிலவில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதே இதற்கு சிறந்த தீர்வு. அங்கு ஏராளமாக இருப்பது நெகிழ்வான தளர்ந்த நிலையில் இருக்கும் தூசுக்களே” என்று ஜெர்மனி பெர்லின் பெடரல் பொருட்கள் ஆய்வு மற்றும் பரிசோதனைக்கான பி ஏ எம் (BAM) மையத்தின் (Federal Institute of Materials Research and Testing) பேராசிரியர் ஜென்ஸ் கூன்ஸ்ட்டர் (Prof Jens Goonster) கூறுகிறார்.

பூமியின் மண்ணுக்கு மாற்றாக நிலவில் புதிய பொருள்

ஐரோப்பிய விண்வெளி முகமையில் நிலவில் இருக்கும் மண்ணிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இ ஏ சி-1A (EAC-1A) என்ற நுண்பொருளை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். இப்பொருளை 50 மில்லிமீட்டர் குறுக்களவுடைய லேசர் கற்றையைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தினர். சுமார் 1,600 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலைக்கு அதை சூடுபடுத்தி உருக்கினர். அவை ஒவ்வொன்றும் மெதுவாக அதிக வளைவுகளுடன் கூடிய முக்கோண வடிவில் 25 செண்டி மீட்டர் குறுக்களவுடைய பொருட்களாக மாறின.

இவற்றைப் பயன்படுத்தி நிலவின் மண் பரப்பில் பெருமளவில் திட வடிவில் தரை அமைக்கலாம். வருங்காலத்தில் இது நிலவில் வீதிகளாகவும், கலன்கள் இறங்கும் தளங்களாகவும் மாறும். ஆனால் இந்த செயல்முறை துரிதமாக நடைபெறுவதில்லை. ஒவ்வொரு ஜியோமிதி மெட்ரிக் அலகு (geo metric unit) அளவுள்ள பொருளும் உருவாக ஒரு மணி நேரம் ஆகிறது. 10x10 மீட்டர் பரப்புள்ள தரையிறங்கு தளத்தை அமைக்க நூறு நாட்கள் ஆகும்.

நிலவுக்குச் செல்லும் லென்ஸ்

இந்த செயல்முறை நிறைவு பெறாமல் தொடர்ந்து கொண்டே இருப்பது போலத் தோன்றும். ஆனால் பூமியில் கட்டுமானங்களை நினைத்துப் பார்த்தால் சில சமயங்களில் புதிய ஒரு சந்திப்பை அமைக்க பூமியிலும் இதுபோல பல காலம் ஆகிறது என்பதை உணரலாம். இதே செயல்முறையை நிலவில் கடைபிடிக்க 2.37 சதுர மீட்டர் அளவுடைய லென்ஸ் பூமியில் இருந்து நிலவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

இது சூரியனுக்கு நிகரான லேசருக்கு மாற்றான ஒன்றாக நிலவின் தூசுக்களை வெப்பப்படுத்தப் பயன்படும். இந்த லென்சை பூமியில் இருந்து எடுத்துச் செல்ல சுலபமாக இருக்கும் வகையில் பாலிமர் படலத்தால் (Polymer foil) செய்யப்பட்டு சுருட்டி எடுத்துச் செல்லும் விதத்தில் உருவாக்கப்படும். ஆனால் அப்போதும் தூசுக்கள் லென்சை பாதிக்கும். அவை லென்ஸின் மீது அதிக அளவில் படியும்போது உடனடியாக அல்லது காலப்போக்கில் லென்ஸ் இயங்காமல் போய்விடும்.

இதைச் சமாளிக்க அதிரும் லென்சை (vibrating lens) தயாரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த ஆய்வுக்கட்டுரை சயண்ட்டிஃபிக் ரிபோர்ட்ஸ் (Scientific Reports) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் முயற்சிகள் வெற்றி பெறும்போது நிலவில் வீதிகள் உருவாகும்! அவற்றில் விளக்குகள் பளிச்சிடும்! பூமியில் இருந்து அங்கு செல்லும் மனிதர்கள் வாகனங்களை ஓட்டிச்செல்வர்! அந்த நாள் விரைவில் வரட்டும்!

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/oct/12/streets-on-the-moon-lunar-dust-could-be-melted-to-make-solid-roads?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

அமெரிக்கா ப்ளோரிடா கேப் கெனபரல் (Cape Canaveral) கென்னடி ஏவுதளத்தில் இருந்து அக்டோபர் 13, 2023 அன்று ஸ்பேஸ் எக்ஸ் கனரக ஏவுவாகனத்தின் உதவியுடன் நாசாவின் சைக்கி என்ற விண்கலன் தன் நீண்ட தூரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. அரிய வகை உலோகங்கள் ஏராளமாக உள்ளன என்று கருதப்படும் சைக்கி என்ற விண்கல்லை நோக்கியே இந்தப் பயணம். அபூர்வ உலோகங்களுடன் உள்ள சைக்கி விண்கல், முந்தைய கோளின் மிச்சம் மீதியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மனிதனால் நேரடியாக செல்ல முடியாத சைக்கியை நோக்கிய இந்தப் பயணம், அது உருவாகக் காரணமாக இருந்த பாறைகள் நிறைந்த முந்தைய கோளைப் பற்றிய புதிய தகவல்களைத் தரும் என்று கருதப்படுகிறது. அரிய உலோகங்கள் செறிந்து காணப்படும் இந்த விண்கல்லை அடைய, சைக்கி விண்கலனிற்கு ஆறாண்டுகள் எடுக்கும். பெரும்பாலான விண்கற்கள் பாறைகள் நிறைந்ததாக அல்லது பனிக்கட்டிகள் நிறைந்ததாக உள்ளன. உலோகங்கள் அடர்ந்துள்ள ஒரு விண்கல்லிற்கு ஓர் ஆய்வுக்கலன் செல்வது இதுவே முதல்முறை.psyche missionஉருளைக்கிழங்கு வடிவ விண்கல்

இந்த விண்கல் முந்தைய ஒரு கோளின் அடிபட்ட மேற்பகுதியாக இருக்கலாம். 2023 அக்டோபர் 13 அன்று ஏவப்பட்ட சைக்கி என்ற இந்தக் கலனுக்கு அது தேடிச்செல்லும் விண்கல்லின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. சைக்கி விண்கலன் இந்தப் பெரிய உருளைக்கிழங்கு வடிவ சைக்கி விண்கல்லை 2029ல் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதூரப் பாறைகள், பனிக்கட்டி மற்றும் வாயுக்கள் நிரம்பிய விண்ணுலகங்களுக்குப் பயணம் சென்ற பிறகு, நாசா இப்போது உலோகங்களால் ஆன ஒரு விண்கல்லை ஆராய முற்பட்டுள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள உலோகங்கள் அதிகமுள்ள ஒன்பது விண்கற்களில் சைக்கி விண்கல்லே பெரியது. பல மில்லியன் கணக்கான விண் பாறைகளுடன் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் பூமியில் இருந்து 3.2 முதல் 4.2 விண்வெளி அலகுகள் அல்லது 478.7 முதல் 628.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முதன்மை விண்கல் பட்டையில் சூரியனிடம் இருந்து 235 மில்லியன் முதல் 309 மில்லியன் மைல் வரையுள்ள தொலைவில் இந்த விண்கல் சுற்றி வருகிறது.

விண்கற்கலை அறிந்தால் பூமியை அறியலாம்

விண்கற்கள் சூரியக் குடும்பத்தின் மிச்சம் மீதிகள். கோள்கள் உருவானபோது சூரியக் குடும்பத்தில் ஏற்பட்ட அதிதீவிர மாற்றங்களால் இவை உருவானதாகக் கருதப்படுகிறது. மாசிசூசெட்ஸ் போல அளவுள்ள நகரங்கள், சிறு நகரங்கள் முதல் சிறிய நாடுகள் வரை பல்வேறு அளவுகளில் வடிவங்களில் இவை காணப்படுகின்றன. 20% விண்கற்கள் உலோகங்களால் ஆனது என்று நம்பப்படுகிறது. இவை பூமியின் உள்ளமைப்புடன் ஒத்துள்ளன.

புராதன அண்டவெளி காலத்தில் இருந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் உண்டான மிச்சம் மீதிகளே இவை என்று கருதப்படுகிறது.

இந்த கல் துண்டுகளை ஆராய்வதன் மூலம் பூமியின் உள்ளமைப்பை அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நீண்டகாலக் கனவு

சைக்கி, மார்ச் 17 1852ல் இத்தாலிய விண்வெளியியலாளர் அனிபெய்ல்டா காஸ்பாரிஸ் (Annibale de Gasparis) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்மாவிற்கான கிரேக்க கடவுளின் பெயரான சைக்கி (Psyche) என்ற பெயரே இந்த விண்கல்லிற்கு வைக்கப்பட்டது. பதினாறாவதாக கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் இது சைக்கி16 என்றும் அழைக்கப்படுகிறது. உலோகங்களால் ஆன சைக்கிக்குச் செல்வது மனிதனின் நீண்டகாலக் கனவு என்று அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி லிண்டி எல்கின்ஸ்-டாண்ட்டன் (Lindy Elkins-Tanton) கூறுகிறார்.

சூரியக்குடும்பத்தில் உலோக மேலோடுடன்(core) உள்ள ஒரு கோளைப் பற்றி அறிய ஒரு வழி இந்த விண்கல்லுக்கான பயணம். ரேடார் மற்றும் பிற கருவிகளின் மூலம் சைக்கி ஒரு பெரிய விண்கல் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் குறுக்களவு 232 கிலோமீட்டர். நீளம் 280 கிலோமீட்டர். இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் மற்றும் சிலிகேட் போன்ற பொருட்களால் இந்த விண்கல் நிரம்பி வழிகிறது என்று நம்பப்படுகிறது. முதன்மையாக சாம்பல் நிறத்துடன் மங்கலாக இருக்கும் இதன் தரை மேற்பரப்பு அண்டவெளி நிகழ்வுகளால் உருவான உலோகத்துகள்களால் மூடப்பட்டுள்ளது.

சைக்கியில் உலோகப் பள்ளங்கள், பிரம்மாண்ட உலோக முனைகள் மற்றும் உலோகங்கள் பதிக்கப்பட்டு அரிக்கப்பட்ட லார்வா, சல்பர் மூலம் ஏற்பட்ட பசுமை கலந்த மஞ்சள் நிறம் உடைய சாயம் பூசப்பட்ட பகுதிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கற்பனை செய்துள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருந்தால் சைக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஓர் அற்புதமாக இருக்கும். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படும் சூரியக் குடும்பத்தின் ஓர் அடிப்படைக் கட்டமைப்பாக இந்த விண்கல் கருதப்படுகிறது.psyche mission illustrationவிடை காண உதவும் விண்கல்

"பூமியில் உயிர் தோன்றிய விதம், பூமி எவ்வாறு உயிர்கள் வாழத் தகுதியான இடமாக மாறியது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண சைக்கி ஆய்வுக்கலன் அனுப்பும் தகவல்கள் உதவும்” என்று லிண்டி கூறுகிறார். பூமியின் இரும்பு மேலோடு பூமியில் காந்த மண்டலத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கவசம் போல செயல்பட்டு பூமியை வளிமண்டலத்தில் இருந்து பாதுகாக்கிறது. உயிர்கள் வாழ வழிவகுக்கிறது.

நாசாவின் சார்பில் அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் 1.82 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின்படி சைக்கி விண்கலன் விண்கல்லை நேரடியாக சென்றடையாமல் சுற்றிக் கொண்டு செல்லும். ஒரு வேன் அளவு உள்ள விண்கலன் ஒரு டென்னிஸ் மைதானத்தை உள்ளடக்கக்கூடிய அளவுள்ள இடத்தில் பெரிய சூரிய மின் பலகைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026ல் செவ்வாயைக் கடந்து செல்லும்போது கிடைக்கும் உந்துவிசை ஆற்றல் மூலம் சைக்கி தன் பயணத்தைத் தொடரும். மூன்றாண்டுகளுக்குப் பிறகு சைக்கி விண்கலன் விண்கல்லை அடையும். பிறகு 2031 வரை அதிகபட்ச தொலைவாக 440 மைல், குறைந்தபட்ச தொலைவாக 47 மைல் தூரத்தில் சுற்றிவரும்.

மதிப்புமிக்க உலோகங்களின் கருவூலமான சைக்கியை நோக்கிய இந்தப் பயணம் வெற்றிபெறும்போது மனிதனின் விண்வெளி வரலாற்றில் அது ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

**  **  **

மேற்கோள்கள்https://www.theguardian.com/science/2023/oct/13/nasa-psyche-launch-metal-asteroid?

&

https://www.mathrubhumi.com/science/news/nasa-launched-psyche-mission-1.8983477

&

https://www.nasa.gov/news-release/nasas-psyche-spacecraft-optical-comms-demo-en-route-to-asteroid/

&

https://www.livemint.com/science/nasa-launches-spacecraft-to-explore-metal-rich-asteroid-psyche-report-11697223643019.html

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

உலகக் காடுகளைக் காப்பதில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் பெரிதும் உதவிய ஜெடி மீண்டும் உயிர் பெறுகிறது என்று நாசா கூறியுள்ளது. காடுகளை அழிவில் இருந்து காப்பதில் பெரும் பங்கு ஆற்றிய ஜெடி திட்டத்தை நாசா முடித்துக் கொள்ள இருந்தது. ஜெடி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது அதை எரித்து சாம்பலாக்குவதாக இருந்த தன் முடிவை நாசா கடைசி நிமிடத்தில் மாற்றிக் கொண்டுள்ளது.

பூமியில் காலநிலை மாற்றத்தின் போக்கு மற்றும் தற்போதைய காடுகளின் நிலை பற்றி விண்ணில் இருந்து முக்கிய தரவுகளை நாசாவின் உலக சூழல் மண்டலங்கள் பற்றிய ஆய்விற்கான உணரி என்ற இந்த ஜெடி (Global Ecosystem Dynamics Investigation GEDI) அளித்து வந்தது. இது லேசர்களைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தது. இந்த தகவல்கள் புவி வெப்ப உயர்வினால் நிகழும் உயிர்ப் பன்மயத்தன்மை அழிவு மற்றும் காலநிலை மாற்றத்தினால் தோன்றும் பாதிப்புகளைப் பற்றி அறிய உதவியது.

புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் ஜெடை (Jedi) கதாபாத்திரம் உச்சரிக்கப்படுவது போல நாசாவின் இந்த உணரி உலகம் முழுவதும் உள்ள வன ஆய்வாளர்கள் இடையில் பிரபலமாக இருந்தது.gediஉலகக் காடுகளின் முதல் முப்பரிமாணப் படங்கள்

2018 டிசம்பரில் ப்ளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) இது ஏவப்பட்டது. இது உலகக் காடுகளின் முப்பரிமாணப் படங்களை முதல்முதலாக பூமிக்கு அனுப்பியது.

100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த உணரி லேசர் தொழில்நுட்ப உதவியுடன் காடுகளின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய தரவுகளை அனுப்பி வந்தது. இந்த தரவுகள் காலநிலை மாற்றத்தால் காடுகளுக்கு ஏற்படும் அழிவு பற்றி அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியது.

ஜெடி திட்டத்தை நீட்டிக்கவேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து வன நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நாசா தன் மனதை மாற்றிக்கொண்டு ஜெடியின் ஆயுளை நீட்டிக்க முடிவு செய்தது. 2023 மார்ச் இறுதியில் ஒரு குளிர்சாதனப்பெட்டியின் அளவுள்ள இந்த உணரியின் இயக்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இது போன்ற மற்றொரு நாசா திட்டம் வரும் 18 மாதங்களில் நிறைவு பெறவுள்ளது.

இயக்கம் நிறுத்தப்பட்டாலும் ஜெடியின் முக்கிய பாகங்கள் குளிரினால் பழுதடையாமல் இருக்க இன்றியமையாத சூடுபடுத்திகள் (survival heaters) இதனுடன் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 2031ல் சர்வதேச விண்வெளி நிலையம் கைவிடப்படும்வரை ஜெடி மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மரங்கள் எந்த அளவு கார்பனை சேகரிக்கின்றன என்பது பற்றியும், காட்டுத்தீயால் வளிமண்டலத்தில் ஏற்படும் சூழல் தாக்கங்கள் பற்றியும் விஞ்ஞானிகளால் தொடர்ந்தும் தரவுகளைப் பெற முடியும்.

நாசாவின் இந்த முடிவினால் இந்நூற்றாண்டில் செலுத்தப்படும் மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஜெடி பூமியின் சூழலைக் காக்க பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இத்திட்டத்தை கண்காணித்து வரும் மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஜெடியின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து வந்த விஞ்ஞானிகளின் வலுவான கோரிக்கை தங்களைப் பிரமிப்பூட்டியது என்று ஜெடி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் ரால்ஃப் டூபய (Prof Ralph Dubayah) கூறியுள்ளார். இதுவரை ஜெடி உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலக் காடுகளில் 20 பில்லியன் உற்றுநோக்கல்களை செய்துள்ளது.

ஜெடியின் சாதனைகள்

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் கார்பன் சுழற்சியில் காடுகளின் பங்கு, வன அழிவு மற்றும் அவற்றின் தரம் குறைவதால் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு அடர்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியது. 2025ம் ஆண்டிற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வது பாரிஸ் உடன்படிக்கையின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

ருவாண்டாவில் (Rwanda) உள்ள நியுன்வி (Nyungwe) பகுதியில் குடை போல் படர்ந்து நிழல் பரப்பும் மரங்கள் காடுகளின் எல்லைப்பகுதியில் உயரமாக வளர்கின்றன போன்ற பல பயனுள்ள தகவல்களை ஜெடி கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் சூழல் மண்டலங்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளவும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உகந்த திட்டங்களை வகுக்கவும் ஜெடி தரும் தரவுகள் முக்கியமானவை.

ஜெடியின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தால் உலக உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் பற்றிய பல அரிய தகவல்கள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்காமல் போயிருக்கும் என்று சுவிட்சர்லாந்து சூரிச் இ டி ஹெச் (ETH) கழகத்தின் சூழலியல் பேராசிரியர் தாமஸ் க்ரோதர் (Prof Thomas Crowther) கூறியுள்ளார்.

மீட்பிற்கு உதவும் ஜெடி

புவி வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காடுகளை சீரமைத்து மீட்டெடுக்கும் மனித முயற்சிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று ஜெடி திட்டத்தின் ஆய்வு விஞ்ஞானி லோரா டங்கன்சன் (Laura Duncanson) கூறியுள்ளார். இதன் மூலம் இருக்கும் காடுகள் அழியாமல் பாதுகாக்கப்படுவதுடன் அவை அழிக்கப்படும் வேகமும் குறையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஜெடியின் ஆயுள் நீட்டிப்பு உலகின் காடுகளைக் காக்கக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/mar/28/return-of-gedi-space-mission-maps-earths-forests-saved-from-destruction-aoe?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

வியாழனின் துணைக்கோள்களில் ஒன்றான ஈரோப்பாவில் (Europa) கார்பனின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஈரோப்பாவில் உள்ள கடல், சூரியக் குடும்பத்தில் நாளை மனிதன் அந்நியக் கோளில் வாழ மிகப் பொருத்தமான இடம் என்று வலியுறுத்துகிறது.

சூரியக்குடும்பத்தில் மிகப்பெரிய கோள் என்று கருதப்படும் வியாழனின் பல நிலவுகளில் ஒன்றான ஈரோப்பாவில் தரைப்பரப்பிற்கு கீழ் பரந்துவிரிந்து அமைந்துள்ள இந்த கடல் கார்பனைக் கொண்டுள்ளது. கார்பன் என்ற தனிமம் உயிர் வாழ மிக அவசியமானவற்றில் ஒன்று. இது ஜேம்ஸ் வெஃப் (James Webb) விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது.

குளிர்ச்சியான இருண்ட இந்த கடலில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதற்கு இக்கண்டுபிடிப்பு பதில் கூறவில்லை என்றாலும், கடலின் 10 மைல் பரப்பில் அமைந்த அடர்ந்த பனி மூடிய தரைப்பரப்பிற்குக் கீழ் அமைந்துள்ள உப்புக்கடலில் இருந்தே இந்த நிலவின் தரைப்பரப்பில் கார்பன்டை ஆக்சைடு பனிக்கட்டிகள் உருவாகியுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.europa 670உயிரினங்கள் வாழும் வாய்ப்பு

பல காலங்களாக விஞ்ஞானிகள் இந்த நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து வரும் நிலையில் இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்று அமெரிக்கா டெக்சாஸ் தென்மேற்கு ஆய்வுக் கழகத்தின் புவி வேதியியலாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் டாக்டர் கிறிஸ்ட்டஃபர் க்ளைன் (Dr Christopher Glein ) கூறுகிறார்.

இந்த கடலில் உயிரினங்கள் இப்போது வாழ்கின்றனவா என்பது பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வது பற்றி விஞ்ஞானிகள் விண்வெளி உயிரியல் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஈரோப்பாவில் கடலில் கார்பனின் கண்டுபிடிப்பு ஆய்வாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளது. இரண்டாயிரம் மைல் அகலம் உள்ள ஈரோப்பா புவியின் துணை நிலவான சந்திரனை விட சற்று சிறியது.

சவால்கள்

கோட்பாடுரீதியாக இங்கு உயிர்கள் வாழ்வதாகக் கருதினாலும் அவை பல தகவமைப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தரை வெப்பநிலை மிக அரிதாகவே -140 டிகிரி செல்சியஸை எட்டும். வியாழனின் இருந்து வரும் கதிர்வீச்சு மற்றொரு பிரச்சனை. ஆனால் ஈரோப்பாவின் கடல் 40-100 மைல் அல்லது 64-160 கிலோமீட்டர் ஆழமானது. இதன் 10-16 மைல் ஆழத்தில் அமைந்திருக்கும் பனிப்பரப்பே உயிர்கள் பற்றிய ஆய்வாளர்களின் தேடலுக்கு முக்கிய காரணம்.

கடலில் கார்பன் எப்படி வந்தது?

ஆழம் நிறைந்த இந்த கடலில் உள்ள கார்பன் உள்ளிட்ட உயிர் வாழ இன்றியமையாத தனிமங்களின் செறிவு போன்ற வேதியல் கூறுகளைப் பொறுத்தே இங்கு உயிரினங்கள் வாழ முடியும். இந்த நிலவின் மேற்பரப்பில் திட நிலையில் கார்பன் இருப்பது முந்தைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றாலும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கார்பன் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடலில் இருந்து உமிழப்பட்டதா அல்லது இந்நிலவின் மீது மோதிய எரிகற்களால் ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஈரோப்பாவின் தரைப்பரப்பில் கார்பன் டை ஆக்சைடின் விநியோகத்தை ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி அகச்சிவப்பு கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது டாரா ரெஜியோ (Tara Regio) என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. சுமார் 695 சதுர மைல் அல்லது 1,800 சதுர கிலோமீட்டர் பரப்புடைய இப்பகுதி அதிக விண்வெளிச் செயல்பாடுகள் நடக்கும் பகுதி என்பதைக் குறிக்கும் வகையில் கலவரப்பகுதி “chaos terrain” என்று அழைக்கப்படுகிறது.

பனி படர்ந்த தரைப்பரப்பு

இப்பகுதி பனிப்பாறைப் பிளவுகள் மற்றும் பனிப்பாறை முனைகள் நிறைந்த பகுதி. பனிப்பாளங்களாக உருவான இவை அழுத்தப்பட்டு நிலவியல் செயல்முறைகள் (Geological processes) மூலம் தரையின் மேற்பகுதிக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “பனிப்பாறைகள் அடர்ந்த ஈரோப்பாவின் உப்புக்கடலில் இருந்தே இந்த கார்பன் டை ஆக்சைடு உருவாகியுள்ளது. எரிகற்கள் மோதலால் அல்லது அயணிகள் வெடித்துச் சிதறியதால் இது உருவாகவில்லை. உயிரினங்கள் கார்பன் டை ஆக்சைடை சார்ந்தே வாழ்கின்றன என்பதால் இந்த கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்று நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடத்தின் விண்வெளி உயிரியலாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு இணை ஆசிரியர் கெவின் ஹேண்ட் (Kevin Hand) கூறுகிறார். உயிர் வாழ இன்றியமையாத பல வேதி மாற்றங்களில் கார்பன் டை ஆக்சைடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆறு முக்கிய தனிமங்கள்

ஆறு பெரிய தனிமங்கள் (big six elements) என்று விண்வெளி உயிரியலாளர்களால் அழைக்கப்படும் கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகியவை பூமியில் உயிர்கள் தோன்றக் காரணமாக இருந்தன. இதில் சல்பர் கடலில் இருந்து வந்ததா அல்லது இயோ (Io) என்ற வியாழனின் மற்றொரு நிலவில் இருந்து வந்ததா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன் மற்றும் சல்பர் ஆகிய உயிர் வாழ அவசியமான நான்கு முக்கிய தனிமங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் வெஃப் மற்றும் அடுத்த ஆண்டு ஏவத் திட்டமிடப்பட்டுள்ள ஈரோப்பா க்ளிப்பர் ஆய்வுக்கலன் (Europa Clipper mission) நடத்தும் ஆய்வுகளில் இருந்து நைட்ரஜன் போன்ற வேறு உயிர் வாழத் தேவையான மற்ற பொருட்கள் இங்கு உள்ளனவா என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையுடன் இது பற்றி வெளிவந்த இன்னொரு கூடுதல் ஆய்வு ஈரோப்பாவில் காணப்படும் கார்பனில் கார்பன்12 மற்றும் கார்பன்13 என்ற இரண்டு ஐசோடோப்புகள் கூடுதலாக உள்ளன என்று கூறுகிறது. இந்த பொருட்கள் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளம். ஆனால் இந்தப் பகுப்பாய்வு முழுமை அடையவில்லை.

நாளைய மனிதனின் புது வீடு

இக்கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. சுவாரசியமானவை. உயிர் வாழ திரவநிலை நீர், சரியான வேதிக்கூறுகள், ஆற்றலைப் பெற உகந்த மூலம், உயிர் பரிணாம வளர்ச்சியடைய போதுமான காலம் போன்றவை அவசியம். வருங்கால ஆய்வுகள் இவை அனைத்தும் ஈரோப்பாவில் இருப்பதை உறுதி செய்யும். அப்போது நாம் அனைவரும் அங்கு வாழ்வோம் என்று லண்டன் பல்கலைக்கழக மலார்டு கோளியல் ஆய்வுக்கூடத்தின் (Mullard Space Science Laboratory) தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ கோட்ஸ் (Prof Andrew Coates) கூறுகிறார்.

வியாழனின் ஈரோப்பா நாளைய மனிதனின் புது வீடாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/21/scientists-excited-to-find-ocean-of-one-of-jupiters-moons-contains-carbon?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It