கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காட்டுயிர்கள் – மனிதர்கள் மோதல்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஊர்களில் யானை-மனிதர்கள் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. மனிதர்கள்-காட்டுயிர்கள் இடையிலான மோதல் எல்லா காலத்திலும் நடந்து வந்திருக்கிறது. காட்டுயிர்கள் நாட்டுக்குள் நுழைகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் காடுகள்-காட்டுயிர் உறைவிடங்கள்-வலசை பாதைகள் ஆக்கிரமிக்கப்படும், அடைத்துக் கொள்ளப்படும் நிலையில்தான் இது நடக்கிறது.
உண்மையில் பாரம்பரியமாக அவை உலவி வந்த பகுதியிலேயே காட்டுயிர்கள் இன்றும் உலவி வருகின்றன. ஆனால், நாமோ அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டு அவற்றின் மீதே குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம். காட்டுயிர்கள்-மனிதர்கள் இடையிலான மோதல் தொடர்பாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது.
மேற்கு வங்கம், ஒரிசா, நீலகிரி பகுதிகளில் யானைகள்-மனிதர்கள், மகாராஷ்டிராவில் வெளிமான், சிறுத்தை-மனிதர்கள், ஆமைகள்-மீனவர்கள் இடையிலான மோதல்கள் குறித்து இத்திட்டத்தில் ஆராயப்பட உள்ளது.
நிலப் பயன்பாட்டு முறை, தாவரங்களின் வகை, காட்டுயிர்களின் வகைகள், மோதலுக்கான அடிப்படைக் காரணம் போன்றவற்றைக் கொண்டு மோதல் நடக்கும் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கப்படும். யானைகளின் உறைவிடங்கள், உறைவிடங்களின் இன்றைய நிலை, உறைவிடங்கள் துண்டாவதை மீட்டெடுப்பதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றி இந்தத் திட்டத்தில் ஆராயப்படும். சமூகவியல் சார்ந்த இந்த ஆராய்ச்சியில் மக்கள் பார்வை என்ன, மோதலை மட்டுப்படுத்துவதற்கான வழி என்ன என்பதை பரிந்துரை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. யானை ஆராய்ச்சியாளரும் ஐ.ஐ.எஸ்சி சூழலியல் அறிவியல் மையத்தின் தலைவருமான ராமன் சுகுமார் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
வன உரிமைச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் இந்தத் திட்டத்தில் ஆராயப்பட உள்ளது. நார்வே அரசு இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கிறது. இது போன்ற ஆராய்ச்சிகள் பிற காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களுக்கும், காட்டுயிர் நிர்வாகிகளுக்கும் பெரிதும் உதவும். மக்களின் புரிதலை மேம்படுத்த முடியும்.
பாதுகாக்கப்படவேண்டிய கடியால் முதலைகள்
- இந்தியாவுக்கே உரித்தான கடியால் எனப்படும் நன்னீர் முதலைகள், நன்னீர் ஓங்கில்களின் (டால்பின்) கடைசி உறைவிடங்களில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள சம்பல் நதியின் மீது நான்கு அணைகள் கட்டும் திட்டத்துக்கு தேசிய காட்டுயிர் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
சதுப்புநில முதலைகளைப் போலன்றி கடியால் முதலைகள் மற்றும் நன்னீர் டால்பின்கள் வாழ்வதற்கு சலசலத்து ஓடும் தண்ணீர் அவசியம். இந்த அணைகள் அமைக்கப்பட்டால் இரண்டு அரிய உயிரினங்களும் அழிய நேரிடும் என்று இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட இரு நபர் குழு கொடுத்த அறிக்கையால் அணைகள் தடுக்கப்பட்டுள்ளன. கடியால், ஓங்கில்களை பாதுகாப்பதைக் காட்டிலும் அணைகள் அளிக்கும் பலன்கள் உயர்ந்ததல்ல என்று அக்குழு தெரிவித்திருக்கிறது. கடியால் முதலை அழியும் ஆபத்தில் உள்ளது. கடலுக்கு மாறாக, நதிகளில் வாழும் டால்பின்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. எனவே, இயற்கையாகவே அவை வாழும் பகுதிகளில் அவற்றை பாதுகாப்பது அவசியம்.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட மூன்று அணைகளால் அங்கு வாழ்ந்து வந்த இரண்டு உயிரினங்கள் அப்பகுதியில் இருந்து அழிந்து விட்டிருக்கின்றன.
சயனைட் அருந்தும் யானைகள்?
- கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோளே, பந்திபூர் தேசிய பூங்காக்களுக்கு அருகேயுள்ள நஞ்சன்கூடு பகுதியில் நான்கு யானைகள் சயனைட் விஷத்தால் இறந்தன. இப்பகுதி மைசூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
மாநிலத்தில் யானைகள் இயற்கைக்கு மாறான வகையில் அதிக எண்ணிக்கையில் இறப்பது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதன் அடிப்படையில், இது தொடர்பாக ஆராய குழுவை அமைக்குமாறு வனத்துறையை கேட்டுக் கொண்டிருந்தது. இது தொடர்பாக கர்நாடக வனத்துறை உத்தரவிட்டிருந்த வேதிப் பகுப்பாய்வு, அவை சயனைட் விஷத்தால் இறந்ததை உறுதி செய்கிறது.
சயனைட் விஷம் தாவரங்களில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார் குழுவில் இடம்பெற்றுள்ள கால்நடை மருத்துவர் டி. கோபால். சயனைட் உடலில் சேர்ந்ததற்கான காரணத்தை இப்பொழுது உறுதிப்படுத்த முடியாது என்று யானை ஆராய்ச்சியாளர் ராமன் சுகுமார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தயாரித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.
நஞ்சன்கூட்டை ஒட்டிய காடுகளில் ஆயிரம் யானைகள் இருக்கின்றன. உணவு தேடி அருகேயுள்ள வயல்களில் அவை உலா வருகின்றன. பலாப்பழம், வாழைப்பழம் கனியும் நேரத்தில், நெற்கதிர் அறுவடை காலத்தில் மோப்பம் பிடித்து உணவு தேடி அதிகம் வருகின்றன. இவற்றைத் தடுப்பது கடினமாக இருக்கிறது என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். இதனால் யானைகளின் வரவைத் தடுக்க யாராவது சயனைட் விஷம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான், இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பது தொடர்பாக ஆராய உத்தரவிடப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் செய்தது போன்று யானைகளின் நகர்வைக் கண்டறிய வானொலி அலைகளைப் பயன்படுத்துவது பலனளிக்கும் என்கிறார்கள் ஆலோசகர்கள். இதன்மூலம் யானைகள் வருவதை விவசாயிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.
இயற்கைவளம்-பழங்குடிகள்
ஒரிசா மாநிலம் நியம்கிரி மலை காட்டுப் பகுதியில் உள்ள சீமல்பட்டா பழங்குடி மக்கள் "வெண்டாட்டா அலுமினா" நிறுவனத்துக்காக பாக்சைட் வெட்டியெடுக்க சுரங்கத்துக்குச் சென்று கொண்டிருந்த எர்த்மூவர்களை ஜனவரி 7ந் தேதி தடுத்து நிறுத்தினர். அலுமினியம் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவைப்படும் பாக்சைட்டை வெட்டியெடுக்க அந்நிறுவனம் மலைப்பகுதியின் உச்சிக்குச் சென்றதே இதற்குக் காரணம்.
அந்த மாதத்தில் மட்டும் அந்நிறுவனம் இரண்டாவது முறையாக மலை உச்சிக்குச் செல்ல முயற்சித்துள்ளது. அருகிலுள்ள லாஞ்சிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த எர்த்மூவர்கள் வந்துள்ன. அதிகாலை 3.30 மணிக்கு 800 பழங்குடி மக்கள் மனிதச்சுவராக மாறி அவற்றைத் தடுத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் சுரங்கம் காரணமாக வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படாத நெருக்கடி நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தங்கள் நிலத்தையும் வேலையையும் இழந்த பழங்குடிகள் ஆத்திரமடைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். முன்னதாக அந்நிறுவனத்துக்குச் செல்லும் தண்ணீர் இணைப்பையும் பழங்குடிகள் துண்டித்தனர்.
என்றும் அழியாத காடு?
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள பைகா பழங்குடி மக்கள் காட்டை அழிக்கும் வனத்துறைக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பைகாசாக் பகுதியில் உள்ள பல ஊர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றன.
"என்றும் அழியாத அம்சம் கொண்டது காடு" என்ற நம்பிக்கையும் அது சார்ந்த பழமொழியும் எங்கள் மக்களிடையே உண்டு. ஆனால் இன்று ஒவ்வொரு மரஇனமாக எங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. முதலில் இந்தக் காடுகளில் இருந்து சின்ஹார் எனப்படும் ஒட்டகப் பாதம் என்ற கொடியும், அடுத்து மூங்கிலும் அழிந்தன. தற்போது சால் மரங்களும் அழியத் தொடங்கிவிட்டன. பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் ஒரு நாள் காடு மொத்தமும் அழியத் தொடங்கிவிடும்” என்கிறார் பழங்குடிகளில் ஒருவரான நாங்கி பாய்.
120 செ.மீ. சுற்றளவுக்கு வளர்ந்த சால் மரங்களை வனத்துறை வெட்டுகிறது. அந்தச் சுற்றளவுக்குப் பிறகு மரங்கள் பெரிதாக வளராது என்கிறார்கள் அதிகாரிகள். 25 ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டிவிடும் சால் மரங்கள், அதற்குப் பிறகும் நீண்ட காலம் வளரும் என்கிறார்கள் பழங்குடிகள். வயதான மரங்களில்தான் பறவைகள், பற்றியேறும் கொடிகள், காட்டுயிர்கள் வாழும் என்கிறார் அவற்றோடு ஒட்டி உறவாடும் ரஞ்ச்ராவைச் சேர்ந்த லல்லா சிங். சிந்த்வாடாவில் உள்ள வனத்துறை மனிதவள மையத்தின் இயக்குநரும் தாவரவியல் அறிவுடையவருமான சுனில் பக்ஷியோ, "சால் மரங்கள் 100 ஆண்டுகள் வரை வாழும். ஆனால் 120 செ.மீ. வளர்ந்த பிறகு, அந்த மரங்கள் உள்ளீடற்ற கடின மரமாகி விடும். இதனால் மரத்தின் மதிப்பு குறையும்" என்கிறார்.
அறிவியல் ரீதியில் வாழும் மரத்தின் மதிப்பைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டிய வனத்துறை, மரங்களை வெட்டி வெறும் காசாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. சுற்றுச்சூழலின் மதிப்பை இப்படித் தட்டையாகப் புரிந்து கொள்கிறது வனத்துறை. காலங்காலமாக காடுகளைக் காத்து வரும் பழங்குடிகளின் அறிவு மேம்பட்டிருப்பது இந்த நடவடிக்கையிலும் வெளிப்பட்டுள்ளது. விதிமுறைப்படியும், தங்கள் ஆலோசனைகளின் பேரிலும்தான் மரங்களை வெட்ட வேண்டும் என்கிறார்கள் பழங்குடிகள், நியாயமான கோரிக்கை.
தொகுப்பு: ஆதி வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதர்களிடையே அண்ணன்-தங்கை போன்ற நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே சிலவகையான பறவை, எலி, பல்லி இனங்களிலும் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் பாலுறவு தவிர்க்கப்படுகிறது என்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. கறுப்புக்கால்களை உடைய “கிட்டிவேக்” என்னும் கடற்கரைவாழ் பறவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை BMC Evolutionary Biology என்னும் ஆய்வு இதழ் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
மனிதர்களிடையே ஒருதாரமணத்தை பின்பற்றுபவர்கள், பலதாரமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்றெல்லாம் பாகுபாடு இருப்பது நமக்கெல்லாம் தெரியும். இதைப்போலவே, பறவைகளில்கூட ஒரே நேரத்தில் பல பறவைகளுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒரு சமயத்தில் ஒரு பறவையுடன் மட்டுமே பாலுறவு கொள்ளுதல் என்ற கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. கறுப்புக்கால்களை உடைய kittiwake என்னும் கடற்கரையோரமாக வாழக்கூடிய பறவை மிகத்தீவிரமான ஏகபத்தினி விரதன். இவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதுதான் BMC Evolutionary Biology இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம். பல ஆய்வர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இருந்து பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
Kittiwake பறவைகள் நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதும் அவ்வாறு பாலுறவு கொள்ள நேரிட்டால் உயிர்பிழைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து போகிறது என்பதும் சுவையான செய்தி. கிட்டிவேக் பறவைகள் தங்களுடைய இரத்த உறவுகளை எத்தனை பெரிய பறவைக்கூட்டத்திலும் கண்டுபிடித்து விடுகின்றன. அப்படி தவறுதலாக ஏதேனும் பாலுறவு ஏற்பட்டாலும்கூட முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை அல்லது பொரித்த குஞ்சுகளும் இறந்துபோய் விடுகின்றன.
குஞ்சுகளைப் பொரித்தவுடன் அவற்றின் பெற்றோர் நெருங்கிய இரத்த உறவில் வந்த குஞ்சு இது என்று இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி, குஞ்சுகளை வெறுக்கத் தொடங்குகின்றன. இந்த வகை குஞ்சுகள் நோய், உண்ணி இவற்றால் எளிதில் தாக்கப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் மெதுவாக இருப்பதால் மற்ற பறவைகளுடன் போட்டியிட்டு வாழமுடிவதில்லை. கிட்டிவேக் பறவைகள் வாழ்க்கை முழுவதும் சேர்ந்தே வாழுகின்றன என்பதும் மணமுறிவு எக்காலத்திலும் ஏற்படுவதில்லை என்பதும் வியப்பான செய்தி. உடல் வாசனையைக் கொண்டு நெருங்கிய இரத்த உறவுகளை இந்த கிட்டிவேக் பறவைகள் அடையாளம் காண்கிறதா என்பதைப்பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090629200636.htm
- மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார். முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம்.
இருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும், தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது.
கருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய பணிக்காக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.
இருட்டு உயிரிகளின் உட்கரு சிறிய லென்ஸர் மாதிரி செயல்பட்டு இருட்டில் கிடைக்கும் சொற்ப வெளிச்சத்தையும் விழித்திரையில் சிதறாமல் சேகரித்து வழங்குகிறது. பகல் உயிரிகளில் உட்கருவானது வெளிச்சத்தை சிதறடித்துவிடுகிறது. பகலில் போதிய வெளிச்சம் இருப்பதால், இது பெரிய குறையாகத் தெரிவதில்லை.
செல்லின் உட்கருவிற்கு இப்படி ஒரு பூதக்கண்ணாடி போல் செயல்படக்கூடிய பணி இருக்கும் என்பது உயிரியலில் புத்தம் புதிய செய்தி. அதனால்தான் இந்த கண்டுபிடிப்பு முதலில் கேலி செய்யப்பட்டது.
- முனைவர். க. மணி (
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஊர்வன என்பவை தரையோடு தரையாக ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஆகும்.ஊர்வனவற்றின் சிறப்புக் குணங்கள்:
1. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தல்
2. முதுகெலும்புள்ள பிராணிகள்
3. கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்ட விரல்கள்.
பறவைகளும் கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக் கொண்டிருக்கின்றன. எனவே பறவை அல்லாத ஊர்ந்து செல்லும் உயிர்களை ஊர்வன என்று வகைப்படுத்தலாம். எறும்பு, தேள், பூரான், பூச்சிகள், சிலந்தி போன்றவற்றிற்கு முதுகெலும்பு இல்லை. எனவே ஊர்வன என்று இப்பிராணிகளைக் கூற இயலாது.
சிறுவர்கள் வேலிகள், புதர்கள் இவற்றில் காணப்படும் ஓணான்களை எந்தவித காரணமும் இன்றி அடித்துக் கொன்றுவிடுகின்றனர். ஓணான்கள் நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மாறாக நமக்கு அவை நன்மையே செய்கின்றன. பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அவை இரையாக உண்ணுகின்றன.
பாம்பைக் கண்டால் அடித்துக் கொல்லும் மானிடர்கள் உண்டு. பயந்து ஓடும் மானிடர்களும் உண்டு. பாம்புகள் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கிழைப்பதில்லை. பாம்பு கடித்து சிலர் இறந்திருக்கலாம். தனக்கு ஆபத்து என்று உணரும்போது மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. மனிதர்களைத் தேடிவந்து எந்த பாம்பும் கடிப்பதில்லை.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி