கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதர்களின் இன்றைய வாழ்க்கைமுறை இயற்கையோடு இயைந்ததாக இல்லை. விளைவாக புவிமாசுபடுதல், புவிவெப்பமடைதல் போன்ற ஆபத்துகளிடையே நாம் தளர்ந்த நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மை இன்னுமொரு ஆபத்தும் எதிர்நோக்கியிருப்பதாக அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களை தொற்றக்கூடிய நோய்களின் அச்சுறுத்தல் உச்சத்தில் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள்.
வனவிலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் மற்றும் நோயூக்கிகளினால் உருவாகக்கூடிய புதிய நோய்களைத் தடுக்கும்பணியில் U.S.Agency for International Development (USAID) என்னும் அமைப்பு இயங்கிவருகிறது. விஞ்ஞானிகளின் பார்வையில் முழுசுகாதாரம் என்பது மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. உலகநாடுகள் அனைத்திலும் நோய்க்கிருமிகளின் பரவலை கண்காணித்து கட்டுப்படுத்தும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. தென் அமெரிக்காவின் அமேசான் வடிநிலம், ஆப்பிரிக்காவின் காங்கோ வடிநிலம், அதனை ஒட்டிய ரிஃப்ட் பள்ளத்தாக்கு, தெற்கு ஆசியாவின் கங்கை சமவெளி, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகள் இந்த உலகளாவிய நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ளன. இங்கெல்லாம் விலங்குகளிடையே தோன்றி மனிதர்களிடம் பரவக்கூடிய நோயூக்கிகள் கண்காணிக்கப்படுகின்றன.
பெருவாரியான மக்களை அழித்தொழிக்கும் கொள்ளை நோய்கள் ஒவ்வொரு 30 முதல் 40 ஆண்டுகளில் தோன்றுவதாக வரலாறு கூறுகிறது. நவீன உலகத்தில் இதுவரை தோன்றியிராத புதிய நோய்கள் மனிதர்களைத்தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய வாழ்க்கை முறை மாறிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதையும் விட மனிதர்கள் இப்போது அதிகமாக பயணம் மேற்கொள்கிறார்கள். நம்முடைய குடியிருப்புகளும் சாலைகளும் காடுகளை அடுத்தும், பல இடங்களில் காடுகளுக்குள்ளும் அமைந்திருக்கின்றன. நாம் வளர்க்கும் விலங்குகளும், பறவைகளும் வனவிலங்குகளுடன் நெருங்கி வருவதால் நாம் இதுவரை அறிந்திராத வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வெகுவேகமாக மனிதர்களிடம் பரவுகின்றன. மனிதர்களிடம் நோயை உண்டாக்குபவை என்று இதுவரை சுமார் 1,461 நோயூக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏறத்தாழ 60 சதவீதம் நோயூக்கிகள் விலங்குகளிடமிருந்து தோன்றியவைதான். இவ்வாறு மனிதகுலம் தாக்குதலுக்குள்ளான நோய்களின் பட்டியல் நீளமானது.
1918ல் உலகை உலுக்கிய இன்புளூயன்சா என்னும் கொள்ளைநோய் ஏறத்தாழ 50 மில்லியன் மக்களை பலிவாங்கியது. இந்த நோய்க்குக்காரணமான வைரஸ் பறவைகளிடமிருந்துதான் மனிதருக்குப் பரவியது. The human immunodeficiency எனப்படும் HIV வைரஸ் உலகில் மில்லியன் மக்களை பீடித்திருக்கிறது. சிம்பன்ஸி குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தாவின. 2003ல் சீனாவின் தெற்குப்பகுதியில் SARS எனப்படும் Severe acute respiratory syndrome நோய் தாக்கியது. அந்தப்பகுதியில் சேறுநிறைந்த சந்தைகளில் உணவிற்காக விற்கப்பட்ட வன விலங்குகளிடமிருந்துதான் இந்த நோய் தொற்றியது. இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஃப்ளூ நோய்க்கு காரணமான H5N1 வைரஸ் தோன்றிய இடம் பறவைகள்தான்.
உலகம் முழுவதிலும் பரவும் இத்தகைய கொள்ளை நோய்களால் மொத்தமக்கள் தொகையில் கால்பகுதியினர் பாதிக்கப்படுவார்கள். இவர்களுள் 51 மில்லியன் முதல் 81 மில்லியன் மக்கள் மரணத்தை சந்திப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் 4,00,000 உயிரிழப்புகள் ஏற்படும். உலகின் பொருளாதார இழப்பை கணக்கிட்டால் அது நான்கு டிரில்லியனை தாண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/releases/2009/10/091026180207.htm
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகிலேயே போதை மருந்து கடத்தலுக்கு அடுத்ததாக அதிகப்படியான பழம் புழங்கும் தொழில் விலங்குகளை கள்ள வேட்டையாடி கடத்துவதுதான். அரசின் அலட்சியம், நிர்வாகத்தின் பொறுப்பின்மை, மக்களின் விழிப்புணர்வு குறைவு காரணமாக நமது காட்டுயிர்கள் கணக்கு வழக்கின்றி அழிகின்றன. இந்தக் கூற்று எவ்வளவு தூரம் உண்மை? கீழே உள்ள விவரங்களைப் படியுங்கள்:
இந்தியாவில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சராசரியாக 40,000. 70களில் புலி பாதுகாப்பு செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகும்கூட, தற்போது புலிகளின் எண்ணிக்கை 1500க்கும் குறைவு என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா, மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா போன்ற புலி சரணாலயங்களிலேயே அவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. புலிகளின் அழிவுக்குக் காரணம் அவற்றின் தோலுக்கு சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலை. புலித் தோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ. 10 லட்சம். சீன மருத்துவ முறையில் புலியின் உறுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. –
சர்வதேச சந்தையில் சிறுத்தைப் புலி தோலின் விலை ரூ. 3 லட்சம். நேபாளத்தில் ரூ. 30,000. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கும், அங்கிருந்து மற்ற ஊர்களுக்கும் சிறுத்தைகள் கொல்லப்பட்டு கடத்தப்படுகின்றன. –
ஒரு காலத்தில் மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள ஈரான் வரை பரந்த பரப்பில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் இன்றைக்கு குஜராத்திலுள்ள கிர் என்ற ஒரே ஒரு காட்டுப் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 360 வரை எஞ்சியுள்ளன. உள்ளன இனப்பெருக்கத்தால் இவை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. –
இந்தியாவில் யானைத் தந்தம் ஒரு கிலோ விலை ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை. அதே நேபாளத்தில் ரூ. 25,000. இதற்காக யானைகள் நாடு முழுவதும் கொல்லப்படுகின்றன. –
சர்வதேச சந்தையில் இந்திய காண்டாமிருக கொம்பு ஒன்றின் விலை ரூ. 4 முதல் 7 லட்சம். சீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவத்தில் மூடநம்பிக்கை காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநில காடுகளில் பெருகிக் கிடந்த இவை, இன்றைக்கு அவை அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் காசிரங்கா சரணாலயத்தில் 1855 காண்டாமிருகங்களே உள்ளன. –
இந்தியாவில் 78 பறவை வகைகள் அழியும் ஆபத்தில் உள்ளன. அவற்றில் 13 அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவை: இமாலய காடை, பிங்க் ஹெடட் டக், வெள்ளை வயிற்றுக் கொக்கு, மஞ்சள் திருடிக் கழுகு, வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு, இந்திய பிணந்தின்னிக் கழுகு, சிறிய அலகு பிணந்தின்னிக் கழுகு, வங்க வரகுக் கோழி, சைபீரிய கொக்கு, (சோஷியபிள்) ஆள்காட்டி, கரண்டி மூக்கு உள்ளான், ஜெர்டான் கல்குருவி, காட்டு ஆந்தை –
நாம் பயன்படுத்தும் அனைத்து மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை குரங்கு, முயல், எலி போன்றவற்றிடம் முதலில் பரிசோதிக்கப்பட்ட பிறகே நமது பயன்பாட்டுக்கு வருகின்றன.
- ஆதி
(பூவுலகு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அடர்ந்த காடுகளில் அதிர்வெண் குறைந்த ஒலி எளிதாக பரவும். பறவைகளின் சுற்றுப்புறத்தில் மரங்கள் அடர்த்தியாக வளரும்போது அவை காதல் கீதத்தின் அதிர்வெண்ணையும் மாற்றிக்கொள்வது விந்தையானது. வரைமுறை இல்லாது மரங்களை வெட்டும்போது வனங்கள் அழிந்து போகின்றன. புவி வெப்பமடைவதும்கூட காடுகளின் அழிவிற்கு ஒரு காரணம்தான். அழிந்துபோன காடுகளுக்கு புத்துயிர் அளிக்கும்போது அங்கே பசுமை மலரத் தொடங்குகிறது. உயிரினங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றன.பச்சைப்பசேலென்று மரங்கள் நெருக்கமாக செழிக்கத் தொடங்கும்போது பறவைகளின் குரலோசை அடர்த்தியான வனத்தில் தொலைதூரத்திற்கு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆண்பறவையின் குரல் அருகில் வாழும் எதிர்பாலினத்தை ஈர்க்கத்தானே? தாழ்ந்த அதிர்வெண்ணில் அந்தக் காதல் பாட்டு இருந்தால் போதாதா? வீட்டிற்குள்ளேயே பாட்டுக் கேட்பவர் வானொலிப் பெட்டியின் ஒலிஅளவை குறைத்துக் கொள்வதை போலத்தான் இதுவும். சுரம்தாழ்ந்த காதல் பாடல்கள் மட்டுமே அடர்த்தியான வனங்களில் தெளிவாக எதிரொலிக்கும் என்பதால் பறவைகளின் குரலில் இந்த தகவமைப்பு ஏற்படுகிறது. வாழும் வனத்தின் அடர்த்திக்கேற்ப பறவைகள் தங்கள் குரலை மாற்றிக் கொள்கின்றன.
எலிசபத் டெர்ரிபெர்ரி என்னும் உயிரியல் ஆய்வாளர் இதுபற்றிய தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை டியூக் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் ஆகிய இடங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மொட்டையடிக்கப்பட்ட மரங்கள் இப்போது மீண்டும் செழிக்கத் தொடங்கியிருக்கின்றன. மரங்களின் அடர்த்தி அதிகரிப்பதால் அங்கு வாழும் வெள்ளைக் கொண்டை குருவிகள் தங்களுடைய காதல் பாடலின் சுரத்தை தாழ்த்தி அடக்கமாக பாடத் தொடங்கியிருக்கின்றன.
இந்த ஆய்வாளர் 15 இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 1970களில் இந்த இடங்களில் வாழ்ந்த பறவைகளின் குரலோசை கலிபோர்னியா அறிவியலாளர் அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே இடங்களில் 2003ல் வாழ்ந்துகொண்டிருக்கும் பறவைகளின் குரலோசையுடன் நிலப்பகுதிகளின் பழைய, புதிய படங்களை ஒப்பிட்டு நோக்கும்போது மேற்காணும் ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன.மரங்களின் அடர்த்தியில் எங்கெல்லாம் மாற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் பறவைகளின் குரலோசையின் அதிர்வெண்ணில் மாற்றம் தெரிந்தது. மரங்களின் அடர்த்தி மாறுபடாத இடங்களில் பறவைகளின் குரலோசையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆய்வகச் சோதனைகளில் புதிய காதல் கீதம் முடிவதற்கு முன்பாகவே பெண்பறவை வாலை உயர்த்தி இனச்சேர்க்கை நடனத்தை தொடங்கிவிட்டனவாம். ஒரு தலைமுறையில் பிடித்துப்போன காதல்பாடல் அடுத்த தலைமுறைக்கு பிடிக்காமல் போனதன் காரணம் என்ன? பறவைகளின் குரலோசையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டும் பதிவைப் பாருங்கள்......
பறவைகள் தங்களின் குரல் அதிகதூரத்திற்கு போகவேண்டிய அவசியம் இல்லை என்பதால் குரலை தாழ்த்தி காதல் கீதம் இசைக்கின்றன. ஆனால் மனிதனிடம் இந்த பண்பு இல்லை. எட்டடிக்குச்சுக்குள் வாழ்க்கையை நடத்தும் இந்த மனிதன் டிவி பெட்டியின் ஒலிஅளவை தெருமுழுவதும் கேட்குமாறு வைக்கிறான் இல்லையா?
இந்த ஆய்வுகள் இன்னும் முடிவுபெறவில்லை. பறவைகளின் குரலோசையில் ஏற்படும் மாற்றங்கள் இரு பாலினத்திற்கும் பொதுவானதா என்பதையும், பறவைகளின் குடியிருப்புகளை தேர்ந்தெடுப்பதில் இந்த குரலோசை உதவி செய்கிறதா என்பதையும் இன்னும் ஆராய வேண்டியிருக்கிறது. மரங்களை வெட்டுவதாலும், புவிவெப்பமடைவதால் வனப்பிரதேசங்களின் அடர்த்தி மாறுபட்டுவரும் தென் அமெரிக்காவில் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வலதுபக்கம் தென்படும் பெரிய பாறை மேட்டில் தேனடைபோல் பறவைகள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. இடதுபக்கமுள்ள மேட்டில் டப்பா படம் காட்டப்படும் சினிமா கொட்டையில் உட்கார்ந்திருக்கும் கூட்டம்போல ஏதோ கொஞ்சம் இருக்கிறது. இவை ஒதுக்கப்பட்டவை. இவை ஜோடி கிடைக்காத ஒண்டிக்கட்டைகள். காதலில் தோல்வியடைந்ததால் இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தகுதியையிழந்தவை. இந்த சோதாக்களுக்கு சந்ததிகள் இல்லாது போவது ஒருவகையில் நல்லதாகப் போய்விடுகிறது. மேலும் பல சோதாக்கள் உருவாகாமல் இருக்குமல்லவா.மாதமொருமுறை சலூனுக்குப் போகாவிட்டால் தலைமுடி காடுபோல வளர்ந்துவிடுகிறதல்லவா. மக்கள்தொகையும் அப்படித்தான். கட்டுப்பாடு இல்லாவிட்டால் வச வசவென்று பெருகிவிடும். இதற்காகத்தான் குடும்பக்கட்டுப்பாடு அது இது என்று பல வரம்புகள் வைக்கப்படுகின்றன.
ஆனால் என்றைக்காவது காகங்கள் ஏன் பெருகுவதில்லை, குருவிகள் எப்போதும் ஒரே எண்ணிக்கையில் உள்ளன என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறதே தவிர அதிகரிப்பதாகக் காணோம்.
கரப்பான் பூச்சி, எலி, போன்றவை சிலநேரங்களில் பெருகி தொல்லை கொடுப்பதுண்டு. தானாகவே அவை ஒரு கட்டுக்குள் அடங்கிவிடுகின்றன. விலங்குகள் எப்படியோ தம் இனத்தொகையை எப்போதும் ஒரே சீராக வைத்துக் கொள்கின்றன.
மிருகங்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடாமல் எப்போதும் ஒரு அளவில் இருப்பதற்கு கிடைக்கும் தீனியின் அளவு, இயற்கையாக ஏற்படும் நோய், இன்னொரு விலங்கு அடித்துச் சாப்பிட்டுவிடுவது, அல்லது விபத்து போன்றவை காரணம் என்று நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.
சிங்கத்துக்கு மேலே ஒரு வேட்டை மிருகம் இல்லாதபோது அது எப்படி சாகிறது? புலி, சிறுத்தை, ராஜாளி, கழுகு, பருந்து போன்ற வேட்டையாடிப்பிழைக்கும் மிருகங்ககள் தாமாகவே செத்தால்தான் உண்டு. அவற்றை அடித்துக்கொல்ல வேறு எதற்கும் துணிச்சல் கிடையாது. பின் எப்படி அவற்றின் எண்ணிக்கையும் காடுகளில் மிகாமலிருக்கிறது?
சொல்லுவீர்கள்..... கிடைக்கின்ற தீனியின் அளவுக்கேற்ப அவற்றின் எண்ணிக்கை அமையும் என்று. அதாவது பசி, பட்டினியால் குறிப்பிட்ட அளவு செத்துப்போகின்றன என்று நினைக்கிறீர்கள். அதுவும் இல்லை. வேட்டை மிருகமோ, ஏன் பொறுக்கித் தின்று பிழைக்கும் மிருகம்கூட பட்டினியால் செத்ததாகச் சரித்திரமே இல்லை. தொடர் வறட்சி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக வேண்டுமானால் பஞ்சம் ஏற்பட்டு பசியால் செத்திருக்கலாம். அது எப்போதாவதுதானே!
நோய் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லமுடியாது. மனிதர்கள் வளர்க்கும் கோழிப்பண்ணைகளில்தான் கொள்ளை நோய் ஏற்படுகிறது. ஆனால் காட்டில் கொள்ளை நோய்தாக்கி மொத்தமாக அழிவதென்பது கேள்விப்படாத விஷயம். எனவே மிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் கட்டுக்கோப்பாக இருப்பதின் இரகசியம் என்ன என்பதை புதிய கோணத்திலிருந்து பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
எல்லைப்போராட்டம்
உங்களுக்குத் தெரியுமா ஏன் நாய்கள் நிற்கின்ற பொருள் வாகனமாக இருந்தாலும் மரமாக இருந்தாலும் அதன் மேல் பின்னங்காலைத் தூக்கி சிறுநீர் கழிக்கின்றன என்று? ஒவ்வொரு நாய்க்கும் சொந்தமாக தெரு உண்டு அந்தத் தெருவில் வேறுநாய் அதன் அனுமதியில்லாமல் நடமாட முடியாது. நாய் தன் பேட்டையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் இப்படி சிறுநீர் தெளித்த அடையாளம் செய்தாக வேண்டும். மிருகங்களும், பறவைகளும் இப்படி நில உரிமையைக் காப்பாற்றுவதில் பயங்கரமாகப் போராடினாலும் தேவைக்கு அதிகமாக நில வரம்பை அதிகரிப்பதில்லை. ஒவ்வொரு மிருத்திற்கும் அல்லது மிருகக் கூட்டத்திற்குமென்று வாழ்விட எல்லை உள்ளது. அதை அவை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாகவேண்டும். குட்டிகளுக்கும் குஞ்சுகளுக்கும் போதிய தீனி கிடைக்கவேண்டுமானால் அதற்கான வேட்டைத் திடலும் வேண்டுமல்லவா!
கடற்கரையில் பறந்து திரிந்து கடலில் மீன்பிடித்து வாழும் பறவைகள், கடல் மணலிலேயே பள்ளம் பறித்து கூடுகளைக் கட்டுகின்றன. ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் மணலைக் குவித்து கோபுரமாக்கி நடுவே பள்ளமிட்டு அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஒரு பறவையின் மணல் குவியலுக்கு சற்றுத் தள்ளித்தான் மற்றது கூடுகட்டுகிறது. நெரிசல் மிகும்போது கூடுகளுக்கிடையே உள்ள இடைவெளி கொஞ்சம் குறையலாம். ஆனால் நிச்சயமாக கூடுகளுக்கிடையே இடைவெளி இருந்தே தீரும்.
கூடுகட்ட இடம் பிடிப்பதில் பறவைகளிடையே போராட்டம் ஏற்படும்போது, வல்லமையுள்ளவை வெல்கின்றன. கூடுகட்ட இடம் கிடைக்காத பறவைகளுக்கு பிழைக்க தீனி கிடைத்தாலும், தமக்கென்று சந்ததிகளை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. உண்மையில் தீனி கிடைக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை, அங்கே கிடைக்கும் ‘ரியல் எஸ்ட்டேட்’ தான் விலங்கின் இனத்தொகையை நிர்ணயிக்கிறது.
கூட்டமாக வாழும் பழக்கமுடைய பறவைகளும், மிருகங்களும் தனித்தனியாக ரியல் எஸ்டேட் அமைப்பதில்லை. கூட்டமாகத்தான் இடம் பிடிக்கின்றன. எனவே கூட்டத்தில் அங்கத்தினராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஒரு மந்தை அல்லது கூட்டத்தில் இத்தனை உறுப்பினர்கள்மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு குழுதர்மம் பறவைகளிடம் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு கூட்டத்தில் 300 பறவைகள்தான் இருக்கமுடியும் என்று வைத்துக்கொண்டால், 301 ஆக வரும் பறவைக்கு அக்கூட்டத்திற்குள் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. அது கூட்டத்திற்குள் சேர முயலும்போது வேறொன்றை விரட்டியடிக்க வேண்டும். அப்போது போட்டி ஏற்படும். போட்டியில் தோற்றுப் போய் கூட்டத்தில் சேர இயலாவிட்டால் ஜோடிப்பறவை கிடைக்காது.
ஒவ்வொரு கூட்டத்திலும் தலைவர் ஒருவர் இருப்பார். அவருக்குக்கீழே இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களும் இருப்பார்கள். மீதமுள்ள உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து வரையறை செய்யப்பட்ட எண்ணிக்கையுடைய குழு ஏற்படும். குழுவில் இடம்பிடிப்பதும் ஆட்சி வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடிப்பதும் திறமையைப் பொறுத்து அமைகிறது. இதை பெக்கிங் ஆர்டர் (Pecking Order) என்கிறார்கள்.
குழுவில் தனது அந்தஸ்த்து என்ன, வரிசையில் எங்கிருக்கிறோம் என்கிற நினைப்பும் அறிவும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கும். இந்த அமைப்பு எப்போதும் குழுவின் அளவை ஒரே சீராக வைக்கிறது. குழுவுக்குள் சேர்க்கப்படாமல் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களுக்குத் தனி குழு அமைக்க வாய்ப்பிருக்கிறது. அது காட்டின் அளவுவைப் பொருத்தது. காடு பெரிதாக இருந்தால் இன்னொரு என்ன எத்தனை குழு வேண்டுமாலும் அமையலாம். இது குரங்குகள், மான்கள், சிங்கங்கள், மீன்கள், பறவைகள் போன்ற சகல உயிரிகளனைத்துக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு விலங்குக்கும் அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் அத்துப்படி. அடிக்கடி உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டுக் கொள்கின்றன.
காகங்கள், தவிட்டுக்குருவிகள் சில சமயம் தந்திக்கம்பிகளில், அல்லது புதர்களில் மாநாடு போட்டுக்கொண்டு சள சளவென்று கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ‘காக்கா ஸ்கூல்’ என்று தாத்தா சொல்லுவார். அவை பள்ளிக்கூடம் படிப்பதில்லை தமது குழுவின் கூட்ட நெரிசலை எடை போடுகின்றன.
காலை அல்லது மாலை போன்ற சந்திநேரங்களில் மரங்களில் பறவைகளின் ஒலி பேரிரைச்சலாகக் கேட்கும். ஏன் இப்படி சத்தம் போடுகின்றன என்று நான் நினைத்ததுண்டு. அவை தம் குழுவின் அடர்த்தியைக் கணித்துக் கொள்ள இப்படி சத்தம் செய்கின்றன. உண்மையில் நிலத்தகராறுகள் அங்கு நடைபெறுகின்றன. குழுவிலிருந்து வெளியேற்றம், அல்லது ஆள் சேர்ப்பு ஆகியவை அப்போது நடைபெறுகின்றன.
விலங்குகள் ஆண்டு முழுவதும் இப்படி நிலத்தகராறில் இறங்குவதில்லை. சுமுகமாக சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இனப்பெருக்கத்திற்கென்று ஒதுக்கப்படும் ஒரு சில மாதங்களில் மட்டுமே ரியல் எஸ்ட்டேட் பிரச்சனை தலைதூக்குகிறது.
கிடைக்கும் வாழ் ஆதார நிலஅளவே உயிரினங்களின் இனவிருத்தியின் அளவைக் கணிக்கிறது. நில ஆதாரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதால் உயிரினங்களின் எண்ணிக்கையும் இயற்கையில் சீராகவே பராமரிக்கப்படுகிறது. ஜனநெரிசல், பார்க்கிங் பிரச்சனை, பட்டா கேட்டு சாலை மறியல், தர்ணா, தொற்று நோய், கலாச்சார கேடுகள், லா ஆண்டு ஆர்டர் பிரச்சனைகள் ஏதுமில்லை. கோர்ட்டுமில்லை, வழக்குகளுமில்லை.இயற்கை ஒரு தானியங்கி இயந்திரம் போன்றது. தன்னைத்தானே சமச்சீராக காத்துக்கொள்கிறது. மனிதன் வேட்டையாடி வாழ்ந்தபோது, அவனது ஜனத்தொகை ஒரே சீராக இருந்தது. என்றைக்கு மனிதன் வேளாண்மை, மாட்டுப் பண்ணை போன்றவற்றை ஏற்படுத்திக்கொண்டானோ அன்றிலிருந்து இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து அவன் விலகிவிட்டான். அதன் விளைவாக கட்டுப்பாடற்ற மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகிறான்.
மாலை வேளைகளில் ஸ்டார்லிங் என்ற பறவைகள் இப்படி வானத்தில் திருவிழா நடத்துகின்றன. சொந்தங்கள் சந்தித்துக்கொள்ளும் நேரம். ஒவ்வொரு பறவையும் தன் இனத்தின் அங்கத்தினரைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. நெரிசல் அதிகமாக இருக்கும்போது இனப்பெருக்க ஆசை அவற்றிடையே குறைகிறது. நெரிசல் குறையும்போது இனப்பெருக்க ஆவல் அவற்றிடையே மீதூறுகிறது. இதன் மூலம் இப்பறவைகள் ஜனத்தொகையை கிடைக்கும் தீனியின் அளவுக்கு ஏற்றாற்போல் காப்பாற்றிக் கொள்கின்றன.
‘பிளாக் பக்’ எனப்படும் மான்களில் இரண்டு காளைகள் ஒத்தைக்கு ஒத்தை என்று பலப்பரிட்சை நடத்துகின்றன. வென்ற மானுக்கு இடம் சொந்தமாகிறது. தோற்றது இடத்தை காலிபண்ணிவிடுகிறது. சொந்தமாக இடமில்லாத மானுக்கு பெண்மான் கிடைப்பதும் அரிது. இதன் மூலம் இனப்பெருக்க வாய்ப்புகள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.
பிளாக் கிரௌஸ் என்ற காட்டுக்கோழிகளில், ஆண்கள் அடிக்கடி இப்படி சடங்கு முறையில் முறைத்துக் கொள்கின்றன. இதில் தோல்வியுறும் ஆண்கள் விரட்டப்படுகின்றன. அவை ஒதுங்கியிருப்பதால் சந்ததிகளை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பினை இழக்கின்றன.
- முனைவர் க.மணி
பயிரியல்துறை, பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
- நஞ்சு துப்பும் பாம்புகள்
- கார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்
- காதல் கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்
- வீட்டை மாற்றிய வண்ணத்துப்பூச்சி!
- நன்னீரைத் தேடும் கடல் பாம்புகள்
- சுறாவுக்கு எத்தனைப் பற்கள்?
- அணில் ஏன் விழுவதில்லை
- நச்சுத் தாவரம் நம்பர் ஒன்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- திட்டம் தீட்டும் சிம்பன்ஸி
- கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
- சிலை வடிக்கும் சிலந்தி
- நாய்கள் குரைப்பதேன்?
- கல்பாசி விவசாயம்
- நீர்யானையின் சொந்தம் பன்றியா திமிங்கலமா?
- கிளிக்கு சாயம் போனால் என்னாகும்?
- சயனைட் அருந்தும் யானைகள்?
- கிட்டிவேக் எனும் ஏகபத்தினிவிரதன்
- இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி?
- ஊர்வன