கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
பிரான்ஸ்
நேட்டோ, வார்ஸா இராணுவ ஒப்பந்தக் கூட்டு நாடுகளுக்கு அப்பால் தனியொரு நாடாக அணுசக்தித் தொழிலில் மிக அதிகம் ஈடுபட்டிருக்கும் நாடாகவும், ஆயுத விற்பனை செய்து வரும் நாடாகவும் பிரான்ஸ் இருக்கிறது. இந்நாட்டுக்குத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் 60% அணுசக்தி நிலையங்கள் மூலம் பெறப்படுகின்றன. உலகிலேயே அதிகமான சதவீதம் அணுமின் சக்தியைப் பெறும் நாடு பிரான்ஸ் என்றே அறியப்படுகிறது.
இவ்வாறு, அதிகமாக அணுசக்தி சார்ந்து இயங்குவதால் பிரான்சின் மின்சாரக் கழகத்திற்கு மட்டும் 32 பில்லியன் அதாவது 3,200 கோடி அமெரிக்க டாலர் கடனாக உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகமாக அணுசக்தித் தொழிலில் ஈடுபடுவதால் கழிவுகளும் அதிகமாகச் சேர்ந்து கழிவுகளை என்ன செய்வது என்பது இந்த நாட்டுக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இங்கு லாஹேக் என்னும் தீபகற்பப் பகுதியில் எரிபொருள் மறுபதனம் செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. 1981ஆம் ஆண்டில் இங்கு ஒரு தீ விபத்து ஏற்பட்டது. பிறகு 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கசிவு விபத்தில் 726.1 ரெம் அளவுக்கு அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 800டன் எரிபொருள் மறுபதனம் செய்யத் திட்டமிட்டப்பட்டது.
ஆனால், நடைமுறையில் 79 முதல் 704டன் வரையே மறுபதனம் செய்ய சாத்தியப்பட்டது. இங்கு 1984ல் ஏற்பட்ட கசிவுக்குப் பிறகு, அணு உலைகள் பற்றிப் பத்திரிகைகள் அக்கறை காட்டத் தொடங்கின. மக்கள் விழிப்புற்று அணு சக்திக்கெதிராகப் போராடத் தொடங்கினார்கள். இங்கு 900 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்த போதும் 300 மெகாவாட் அளவே உற்பத்தி நடைபெறுகிறது.
பிரான்சு நாடு இந்த ஹேக் தீபகற்பப் பகுதியை எரி பொருள் மறுபதனம் செய்யும் தொழிற்சாலை நிறுவுவதற்காக தேர்ந்தெடுத்ததன் காரணம், இத்தீவு பிரான்சின் பிரதான நிலப்பகுதியை விட்டுத் தள்ளியுள்ளது. இங்கு ஏதும் விபத்து நேர்ந்தால், ஏற்படும் கதிரியக்கம் பிரான்ஸ் நாட்டு மக்களை அதிகம் பாதிக்காத வகையில், அக்கதிரியக்கத்தை வேறு திசைக்குக் கொண்டு செல்லும் வகையில் இங்கு வீசும் பருவக்காற்றுகள் அதற்குச் சாதகமாக உள்ளன.
இத்தொழிற்சாலை மூலம் கடலில் கொட்டப்படும் கழிவுகளும், கடலின் நீரோட்டத்தோடு கலந்து, அது கடலின் தொலை தூரத்துக்குக் கொண்டு சென்றுவிடும் வகையிலும், அது பிரான்சைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளைப் பாதிக்காத வகையிலும் வாய்ப்பாக உள்ளதாகச் சொல்லுகிறார்கள். அதோடு, பேரபாயம் விளைவிக்கும் விபத்து எதுவும் நேர்ந்தால் இப்பகுதியைப் பிரான்சிலிருந்து எளிதாகத் துண்டித்து விடலாம் என்றும் சொல்கிறார்கள்.
இதுபற்றி ஜெர்மானிய அறிஞர் ராபர்ட் யங் என்பவர் 1978இல் ‘அணுசக்தி அரசு’ என்ற நூலை எழுதியிருப்பதாகப் புறப்பாடு ஜூலை ஆகஸ்டு- 88 இதழ் ‘கதிரியக்க உணவு’ என்கிற கட்டுரை தெரிவிக்கிறது. அக்கட்டுரையில் உள்ள தகவல்களாவன,
ஹேக் கிராமம், பிரான்சு நாட்டில் உள்ள சிறு தீபகற்பப் பகுதியாகும். அங்கு வாழும் மக்களது விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடக்கி ஒடுக்கியும், மிரட்டியும், அச்சுறுத்தியும், சிலரைக் கொன்றும் இந்த நிலையம் கட்டப்பட்டது.
இந்த எரிபொருள் மறுபதன நிலையத்திலுள்ள புகை போக்கியிலிருந்து ஆக்டினைடு என்ற விஷப்பொருள் காற்றில் கலக்கிறது.
1974ஆம் ஆண்டு முதல் மெர்குரி 203, அயோடின் 131, மேலும் டிரிட்டியம், கிரிப்டான் 85 ஆகிய நச்சுப் பொருள்கள் ஆபத்தான அளவுக்கு வெளியிடப்பட்டன.
1975ஆம் ஆண்டு மட்டும் 11,000 கியூட் டியூரிட்டியம், 23,000 கியூரி ருத்னியம் 106, 1,000 கியூரி சீலியம் 134, 137 ஆகிய தனிமங்கள் அக்குழாய்கள் வழியாக வெளியேறின.
கடலில் புளுட்டோனியக் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாய்களில் 30 தடவைக்கும் மேலே கசிவு ஏற்பட்டுள்ளது.
மீன்கள் கதிர் வீச்சுக்குள்ளாகி, அவற்றில் விநோதமான பருக்களும், தசைகள் கருத்தும், பல தலைகள் உடையதுமான விசித்திர மீன்கள் வலையில் அகப்பட்டன.
அப்பகுதியில் டீ, பால் விற்பனை ஆகவில்லை. 1978ஆம் ஆண்டிலிருந்து அணுசக்தித் துறையினரே பாலை வாங்க வேண்டியதாயிற்று.
விலங்கினங்களும், பறவைகளும் கதிரியக்கத்தைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்கின்றன.
கதிரியக்கக் கழிவுகள் ஈயக்கலனில் அடைக்கப்பட்டு 300 அடி ஆழத்தில் புதைக்கப்படுகின்றன.
இவை 700-8000C வரை வெப்பமுள்ளவை. இவை மேலும் வெப்பமேறாமல் தடுக்கவும், உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் இராட்சத யந்திரங்கள்மூலம் குளிரூட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இயந்திரங்கள் பழுது அடையும் போதும், அல்லது சிறுசிறு தடைகள் ஏற்படும் போதும் ஈயக் கலனில் வெடிப்போ கசிவோ ஏற்பட்டு வருகிறது.
அடுத்து, இங்கு ப்ளான் மின்விலே என்ற இடத்தில் அணு மின் நிலையத்தின் குளிர்விக்கும் திறன் குறைந்து, இரண்டு முறை தடங்கல் ஏற்பட்டது.
நோஜெண்ட் சர்சேன் என்ற இடத்தில் ரேடியோக் கதிர் கொண்ட ஆவி வெளியேறியது.
இப்படி, அணுசக்தியை அதிகம் பயன்படுத்துவதால் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் 4 மடங்கு பெருகி 2,900 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி உயர்ந்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு 3,900 கோடி டாலர் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
1980இல் ஆண்டுக்கு 6 அணுமின் நிலையங்கள் அமைப்பதாக இருந்த திட்டம் ஆண்டுக்கு ஓர் அணுமின் நிலையமாகக் குறைக்கப்பட்டது. ஆயினும் மொத்த மின்சாரத்தில் 90 சதவீதத்தை அணு உலைகளிலிருந்தே உற்பத்தி செய்யப் போவதாக அரசு தீர்மானித்துள்ளது. கதிரியக்கச் சாம்பல் கழிவைப்பற்றி அரசு தவறான தகவலைத் தந்தது எனப்பொது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். அணு உலையின் பத்திரத் தன்மை பற்றி ஆராய அரசு உத்திரவிட்டுள்ளது.
மொத்த மின் உற்பத்தியில் எவ்வளவு சதவீதம் அணுசக்தி மூலம் பெறப்படுகிறது என்பது தெரியவில்லை.
இங்கு 1957ஆம் ஆண்டு விண்ட்ஸ் கேல் என்னுமிடத்தில் உள்ள அணுசக்தி நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுப் பெரும் தீ பரவியது. கதிரியக்க மேகம் ஒன்று சூறாவளியாகக் கிளம்பியது. இதனால் சுற்றுப்புறம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. சுமார் 20 இலட்சம் லிட்டர் பால் கதிரியக்க அபாயம் காரணமான பயத்தால் பயன்படுத்தப்படாமல் கொட்டப்பட்டு விட்டது.
இங்குப் புதிய அணு உலைகள் நிறுவுவதற்கான எதிர்ப்பு 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. குடிமக்கள் கதிரியக்கக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடங்களில் மறியல் செய்து வருகிறார்கள். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அரசு, தனது அணு ஆற்றல் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொழிற்கட்சியும் லிபரல் கட்சியும் அணு உலைகளை மூடும்படி கோருகின்றன.
இங்குச் செல்லாஃபீல்டு அணு எரிபொருள் பதன நிலையம் அபாய நிலையில் உள்ளதாகவும், வட கடல் பிராந்தியம் முழுவதும் மிகக் கதிரியக்கமுள்ள பகுதியாக மாறும் அபாயம் நிலவுவதாகவும், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இதுபற்றி ஆய்வு செய்ய உள்ளது.
1980-87க்கு இடைப்பட்ட 8 ஆண்டுகள் கடுமையான விவாதத்துக்குப்பின் சைஸ்வெல் என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
புதிதாக இனி எதுவும் அணுஉலை நிறுவப்பட வேண்டு மானால் மக்களிடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்னும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அயர்லாந்து
அரசுக்கு அணு ஆற்றல் தவிர்ப்புக் கொள்கை இல்லாத போதிலும், பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அணுமின் ஆற்றலுக்கு எதிராக அமைந்துள்ளது.
அர்ஜென்டினா
நான்கு அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டன. கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரே ஒரு அணுமின் நிலையமும் பூர்த்தி செய்யப்படாமல் போகலாம் என்று நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலியா
தொழிற்கட்சி அரசு அணு ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை என்கிற கொள்கையை வைத்திருக்கிறது.
கிரீஸ்
தனது முதல் அணு உலையைக் கைவிடத் தீர்மானித்துள்ளது.
நார்வே
அணுமின்சாரமே தயாரிப்பதில்லை என முடிவு செய்துள்ளது.
சீனா
ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த 10 அணுமின் நிலையங்களில் 8 ரத்து செய்யப்பட்டன.
டென்மார்க்
நாடாளுமன்றம் எப்போதும் அணு உலைகளைக் கட்டுவதில்லை என முடிவு செய்துவிட்டது. தான் என் றென்றும் அணுசக்தி உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என 1885ல் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
நியூசிலாந்து
தொழிற்கட்சி அரசு அணு ஆற்றலற்ற மண்டலத்தை நிறுவும் கொள்கை கொண்டது. அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது.
பிரேசில்
1986இல் 8 அணுமின் நிலையத் திட்டங்களில் 6 அரசால் ரத்து செய்யப்பட்டன. மீதி இரண்டும் தாமதிக்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ்
நாட்டிலுள்ள ஒரே ஒரு அணுமின் நிலையத்தையும் பிரித்து விட அரசு முடிவு.
பின்லாந்து
அணு உலைகளுக்கு எதிர்ப்பு இரு மடங்காகி 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. 4,000 பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிக்கின்றனர். புதிதாக அணு உலைகள் நிறுவும் திட்டங்கள் கைவிடப்பட்டன. ஏற்கனவே உள்ள நான்கு அணு உலைகளுக்கு மேலே 5ஆவது அணு உலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
மெக்சிகோ
1982இல் 20 அணுமின் நிலையங்களை அமைக்க இருந்த திட்டம் கைவிடப்பட்டது. மூன்றாவது, நான்காவது அணு உலைகளை அமைப்பது ரத்து செய்யப்பட்டது.
மேற்கு ஜெர்மனி
கடந்த 10 ஆண்டுகளாகப் புதிய அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. அணுமின் நிலையங்கள் இங்குப் படிப்படியாக மூடப்படுவது சாத்தியமே.
போலந்து
சர்வதேச அணு ஆற்றல் முகமை (IAEA) பார்வையிட்டு சோதிக்கும்வரை அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி வைக்கக் கோரி 3,000 பேர் அரசுக்கு மனு. பத்திரத்தன்மை அளவை அதிகரிக்க அரசு வாக்குறுதி.
இங்கு நிறுவப்பட இருந்த ஜார்னோவிச் அணுமின் நிலையம் தள்ளிப் போடப்பட்டது.
லக்சம்பர்க்
அணு ஆற்றல் உற்பத்தி நடைமுறையில் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய அரசு ஒரு தெளிவான அணு ஆற்றல் எதிர்ப்புக் கொள்கையை வைத்திருக்கிறது.
ஜப்பான்
1984இல் உற்பத்தி இலக்குகள் எட்டப்பட்டன. ஒரு ஆண்டுக்கு 2 அணுமின் நிலையங்கள் மட்டுமே கட்டப்படும். ஆயினும் அரசு அணுமின் உற்பத்தித் திட்டத்தைக் கைவிடாது என அறிவித்துள்ளது.
ஸ்பெயின்
கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற 5 அணுமின் நிலையங்கள் 1984ல் கைவிடப்பட்டன.
ஸ்வீடன்
1980ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி 2010ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூடப்படும். 1986ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்கின்றன.
இதில் 1995க்குள் தனது 12 அணு உலைகளை மூடிவிட பொதுமக்கள் கருத்துக்கணிப்பு கேட்டு, 2010க்குள் எஞ்சிய அணு உலைகளையும் சேர்த்து எல்லாவற்றையும் மூடிவிடவும் திட்டம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த மின் உற்பத்தியில் 40% அணு சக்திமூலம் பெற்றுவரும் நாடாகும்.
யுகோஸ்லாவியா
அணு ஆற்றலுக்கு எதிர்ப்பு இருமடங்காகியுள்ளது. உள்ளூர் அளவில் அணுஆற்றல் எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. பத்திரத்தன்மை மதிப்பிடப்படும் வரை புதிய அணு உலைகளை நிறுவும் திட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இங்குப் பிரெவ்லகா என்னுமிடத்தில் அணுஉலை அமைக்கப்படுவதை எதிர்த்து ‘ஸ்லாவ் கோபுலிக்’ என்கிற விஞ்ஞானி ஜனநாயகத்துக்கும் சோஷலிஸ சுய ஆட்சி அமைப்புக்கும் அணு மின் சக்தி எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
யுகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இவானோவிச், அணுஉலை நிறுவும் முயற்சியை எதிர்த்து, ‘யுகோஸ்லாவியாவின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டாதீர்கள்’ என்று குரலெழுப்பியிருக்கிறார்.
இதன் விளைவாக மாற்றுத் திட்டம் காணும் வரை புதிதாக எதுவும் திறப்பதில்லை என முடிவு செய்யப்பட்டு, நீர்மின் சக்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆஸ்திரியா
பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அணுமின் நிலையம் இயங்குவதைத் தடை செய்தது. இருந்த ஒரே ஒரு அணு உலையையும் பிரித்துவிட அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு அணு உலையும் கட்டுமானப் பணி முடிந்து இன்னும் செயல்படத் துவங்காத நிலையில் இருந்ததாகும். செயல்படத் தொடங்கும் முன்பே மூடிவிட முடிவு செய்யப்பட்டு விட்டது.
இந்த அணு மின்நிலையம் ஸ்வென்தார்ப் என்ற இடத்தில் அமைக்கப்பட்டதாகும். இது முழுப் பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது என்று பாராட்டப்பட்ட அணு உலையாகும்.
இத்தாலி
அணு உலையைப்பற்றிக் கருத்துக் கணிப்புக் கோரி பத்து இலட்சம் பேர் மனு. எல்லா முக்கிய கட்சிகளும் அணு உலைத் திட்டத்தை எதிர்க்கின்றன. 2000ஆம் ஆண்டில் 13,500 மெகாவாட் உற்பத்திசெய்ய இருந்த திட்ட அளவு கடுமையாகக் குறைக்கப்பட்டது. ஒரே ஒரு அணுமின் நிலையம் மட்டுமே பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.
மோண்டால்-டி-காஸ்ட்ரோ என்னும் இடத்தில் கட்டப்பட்டு வந்த ஒரு புதிய அணுமின் நிலையக் கட்டுமானப் பணியை நிறுத்தி, நடப்பில் உள்ள 3 அணு உலைகளையும் ஏககாலத்தில் அல்லாமல் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வருகிறது.
இதுவரை குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் Re-assessing Nuclear Power State of the World 1987, A World Watch Institute Report, New York 1987இல் வெளிவந்தவை.
இது தவிர கிடைக்கும் தவல்கள்:
ஸ்காண்டிநேவியா
எல்லாத் திட்டங்களையும் ஒத்திவைத்துள்ளது.
பெல்ஜியம்
எல்லா திட்டங்களையும் கால வரம்பின்றி ஒத்தி வைத்துள்ளது.
ஹாலந்து
ஒரு அணுமின் நிலையம் கூட இல்லை. எதுவும் வேண்டாம் என முடிவு.
நெதர்லாந்து
தற்போதுள்ள இரண்டு அணு உலைகளுக்கு மேல் புதிதாக எதுவும் தொடங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து
1980க்குப்பின் புதிதாக எந்த அணுமின் நிலையத்தையும் கட்டவில்லை. 6ஆவது அணுமின் நிலையத்தைக் கட்டும் 22 ஆண்டுக்கால திட்டத்தை இரத்து செய்துவிட்டது.
ஆஸ்திரியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளை அணுசக்தியற்ற பிரதேசங்களாக (NUCLEAR FREE ZONE) ஆக்கத் திட்டம் தீட்டியுள்ளன.
ஆக, உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக,
1. இனி புதிதாக அணுமின் திட்டங்களைத் தொடங்குவ தில்லை எனவோ,
2. உள்ள திட்டங்களையும் மூடிவிடுவது எனவோ,
3. அல்லது எந்தக் காலத்திலும் அணுசக்தி பக்கம் திரும்புவதில்லை எனவோ,
தீர்மானம் செய்துள்ளது என ஓரளவு புரிந்து கொள்ளலாம். இதில் சோஷலிச நாடுகளும் விதிவிலக்கில்லை என்பதையும் நாம் புரிந்து கொண்டு மேலே செல்வோம்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
சோவியத் யூனியனின் அணுமின் உற்பத்தி பற்றிப் பலர் பல்வேறு விதமான புள்ளி விபரங்களைத் தந்தாலும், சோவியத் யூனியனின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதத்தை மட்டுமே அணுமின் சக்தி தருகிறது எனச் சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த திரு. P.K.G. மேனன், இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர் கடிதப் பகுதியில் குறிப்பிடுகிறார்.
அணு சக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவது என்பதன் முதன் முயற்சியாக, உலகிலேயே முதல் அணுசக்தி நிலையம் 1954இல் கலுகாவுக்கு அருகில் உள்ள ஒபினின்ஸ்க் என்னும் சிறு நகரத்தில் நிறுவப்பட்டதாக, சோவியத் பிரசுரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், அமெரிக்காவைப் போலவே சோவியத் யூனியனிலும் அணுசக்தி நிலையங்களோடு அணு ஆயுதத் தொழிற் சாலைகளும், அணுமின் நிலையங்களுக்குக் கருவிகளை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலைகளும் பரவலாக விரவியுள்ளன.
இங்கு ஏற்பட்ட முதல் விபத்து 1958இல் யூரல் மலைச் சாரல் பகுதியிலுள்ள அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து ஆகும். இங்கு அணுக்கழிவுகள் வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்று வெடித்ததனால் ஏற்பட்ட கதிரியக்கம் 60 கிராமங்கள் வரை பரவியது.
இந்த 60 கிராமங்களையும் சோவியத் யூனியனின் தற்போதைய வரைபடங்களில் காணவில்லை எனவும், இந்தப் பிரதேசத்தில் புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை எனவும், இதில் ஏற்பட்ட சேதம் மற்றும் இதர பின் விளைவுகளைச் சோவியத் நாட்டிலிருந்து வெளியேறிய கோராஸ் மெத்தோவ் என்பவர் 1976இல் ஆதாரங்களுடன் நிரூபித்ததாக ஜூனியர் விகடன் தொடர் கட்டுரை கூறுகிறது.
இதற்கு அடுத்த விபத்து 1974இல் காஸ்பியன் கடல் பகுதியில் செவ்செங்கோ அணு உலையில் ஏற்பட்ட விபத்து என்று அறியப்படுகிறது. இங்குள்ள ஈனுலையில் சோடியம் தீப்பற்றியதால் அணு உலை வெடித்தது. கதிரியக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் விளைவுகள் பற்றி விவரமாக எதுவும் வெளியே தெரியவில்லை.
அதற்கு அடுத்த விபத்து 1986இல் ஏற்பட்ட செர்னோபில் விபத்து. உலகில் இதற்குமுன் எவ்வளவோ அணு உலை விபத்துகள் நேர்ந்திருந்தாலும் அணுசக்தியின் ஆபத்து குறித்து உலகம் முழுவதற்கும் புரிய வைத்த பெருமை இந்த விபத்தையே சேரும் என்று சொல்லப்படுகிறது. இதில் விபத்து நடந்த உடனே இறந்தவர்கள் 31 பேர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விபத்து நடந்த சமயத்தில் சோவியத் யூனியன் செய்த ஏற்பாடுகளைப் பற்றி உலக நாடுகள் வெகுவாகப் பாராட்டின. அந்த ஏற்பாடுகளினால் உடனடி உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது என்றாலும், பல தலைமுறைகளுக்கு வேண்டிய நாசம் இந்த விபத்தால் விதைக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.
விபந்து நடந்து ஒரு வருடம் கழித்து மேற்கு ஜெர்மனி யில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மேற்கு ஜெர்மனியில் ஊனமுடன் குழந்தைகள் பிறப்பது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பது போன்றவை அதிகரித்துள்ளதற்கும், செர்னோபில் விபத்துக்கும் தொடர்பு உள்ளதாக அதில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்கள் ஐரோப்பாவில் நிகழ்ந்த தாகக் கூறப்படுகின்றன. இவ் விபத்து நேர்ந்த உடன் 1,35,000 மக்கள் அதைச் சுற்றி உள்ள இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
செர்னோபில்லுக்கு அருகில் உள்ள செர்னோவ்ஸ்கி என்னும் நகரத்தில் காரணம் கண்டறியப்படாத மர்மமானதொரு நோயின் காரணமாக 130 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இவர்கள் கீவ், லெனின்கிராடு, மாஸ்கோ நகர மருத்துவமனைகளில் வெற்றிகரமாகக் குணமாக்கப்பட்டு விட்டார்கள் என மாஸ்கோ ரேடியோ 19-11-88 அன்று அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வானொலி அறிவித்ததாவது,
இந் நோய், சுமாரான தலைமுடியுள்ள, நீல விழிகளைக் கொண்ட குழந்தைகளையே அதிகம் பாதித்துள்ளது. முடி உதிருதல், எரிச்சல், பிரம்மைப் பார்வை ஆகிய அறிகுறிகளோடு இந்நோய் துவங்கியது. இந் நோயின் காரணம் பற்றி ஆராய அரசு பல ஆய்வுக் குழுக்களை நிறுவியது. அதில் ஒரு குழு இந்நோய் செர்னோபில் விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக இருக்கலாம் என்கிற கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தது.
இந்நோய் மிகமிக மெதுவாகத்தான் பரவுகிறது என்றாலும், பகுதிவாழ் மக்களிடையேயும், அரசு வட்டாரத்திலும் இது ஆழ்ந்த கவலையளிப்பதாய் உள்ளது. இந்தக் கவலையின் காரணமாகச் சுமார் 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அதன் பெற்றோர்கள் செர்னோவ்ஸ்கி நகரத்தை விட்டு அப்பால் கொண்டு சென்றுவிட்டிருக்கிறார்கள்.
கீழ்க் குறிப்பிட்டுள்ள இத் தகவல்களையும்மேற்கண்ட செய்திகளின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.
காரணம் அறியமுடியாத மர்மமான நோயின் காரணமாக 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் ‘கீவ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முடி உதிர்தல், நரம்புக் கோளாறுகள், மனநிலைப் பாதிப்புகள், பிரம்மைப் பார்வைகள் ஆகியவற்றினால் இக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச் சூழலிலும் நிலத்திலும் ‘தல்லியம்’ விஷப் பொருள் அதிகமாகப் பரவியிருப்பதுதான் இந்நோய்க்குக் காரணம் என்று விசேஷ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அர்மீனியன் பகுதியில் அர்மீனியாவின் தலைநகரமான எரவான் நகரில் இயங்கி வந்த அணு சக்தி நிலையம் செயல்முடக்கம் செய்யப் பட்டுள்ளதாகச் சோவியத் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இந்த அணுசக்தி நிலையம் இந்த நில நடுக்கத்தால் எந்தச் சேதாரத்துக்கும் உள்ளாகவில்லை என்பதோடு, இது மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஒரு அணுமின் நிலையம் என்றாலும் மக்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்த நிலையம் செயல்முடக்கம் செய்யப்பட்டதாகவும், இது நிரந்தரமாகவே மூடப்படவும் உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். 1989 - 90இல் இதை நிரந்தரமாகவே மூடும் பணி தொடங்கி அது இரண்டு ஆண்டுகளில் நிறைவேறிவிடும் என்றார்.
இது அர்மேனியா பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியைப் போல மூன்று மடங்கு மின் சக்தியை உற்பத்தி செய்து வந்தது என்பதும், இது ஜார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய குடியரசுகளுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்க அபாயம் காரணமாகவும், செர்னோபில் விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், சோவியத் யூனியன் 6 அணுசக்தி நிலையங்களை மூடிவிடுவது என முடிவு செய்திருக்கிறது. இத்தகவலைச் சோவியத் யூனியன் அணுசக்தி அமைச்சர் 24-12-88 அன்று அறிவித்திருக்கிறார்.
செர்னோபில் விபத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பணிகள்:
விபத்து நடந்த இடத்தில் சில துப்புரவுப் பணிகளை, மனிதர்கள் கிட்ட நெருங்கவே முடியாது என்பதால் யந்திர மனிதர்களை அனுப்பி, தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கொண்டு மேற்கொண்டார்கள். கதிரியக்கம் அதிகமாய்த் தாக்க முடியாத ஈயத்தாலான அடிப் பகுதிகளைக் கொண்ட ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்துக்கு மேலே பறந்து 40 டன் போரான் கார்பைடையும், 800 டன் சுண்ணாம்புக் கல்லையும், 2400 டன் ஈயத்தையும், மேலும் பல ஆயிரக் கணக்கான கான்க்ரீட் கலவைகளையும் நிலத்தின்மீது கொட்டினார்கள்.
அடிமண்ணிற்குக் கதிரியக்கம் பரவிவிடக் கூடாது என்பதற்காகப் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருவகைப் பிளாஸ்டிக் துகள் தெளிக்கப்பட்டது. பின்னர் இந்தப் பிளாஸ்டிக் ஈய டின்களில் அடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்தத் தகவல்களை ‘After Chernobyl’ என்கிற நூலில் ‘Christer Flavin’ என்பவர் குறிப்பிட்டு, ‘Science Age’ ஜூலை 87 இதழில் வெளி வந்ததாகப் “புறப்பாடு” இதழ் தெரிவிக்கிறது.
இந்த அணு உலை வெடித்தபோது 7,000 கிலோ எடையுள்ள 5 முதல் 10 கோடி கியூரிகள் ஆற்றல் உள்ள கதிரியக்க வீச்சுடன் 50 தனிமங்களின் கதிர் இயக்க ஐசோடோப்புகள் காற்றுடன் கலந்து 2,000 கி.மீ. சுற்றளவுக்கு உலக நாடுகளில் பரவியதாகக் கணக்கிடப்படுகிறது. இப்படிப் பரவிய 20 நாடுகளில் கதிர் இயக்கப் பொருள் கலந்துவிட்ட பால், இறைச்சி போன்ற உணவுகள் உட் கொள்ளப்படுவது தடுக்கப்பட்டது. இவற்றின் விலை கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.
செர்னோபில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிக்சை செய்வதற்காக இரஷ்யாவுக்குச் சென்று வந்த அமெரிக்க மருத்துவரான டாக்டர் இராபர்ட்கேல் என்பவர், குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது ஆபத்து விளைவிக்கும் அளவிற்கான கதிரியக்கத்தைப் பெற்றுள்ளனர் என்கிறார்.
விபத்து நடந்த இடங்களைச் சுற்றியிருந்த கருவுற்ற பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு வேண்டப் பட்டனர். அதிகாரப் பூர்வமான அறிவிப்பு ஏதும் இல்லாமலே இப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
செர்னோபில் விபத்தில் பிரும்மாண்டமான கனத்த கதிரியக்க மேகம் ஒன்று விபத்து நடந்த இடத்திற்கு மேலே எழுந்தது. இது அப்படியே வானில் நகர்ந்து பல இடங்களில் கதிரியக்கமுள்ள மழையைப் பொழிந்தது. இந்த மழையின் காரணமாக மண்ணில் முளைத்தெழுந்த புற்களிலும் கதிரியக்கம் பரவியிருந்தது. இதை மேய்ந்த விலங்குகளும் அபாயகரமான கதிரியக்கத்துக்கு ஆளாயின.
ஸ்வீடன் காடுகளில் ‘மூஸ்’ எனப்படும் ஒருவகைக் காட்டு மான்களை அதன் இறைச்சியின் சுவைக்காக அதிகம் வேட்டை யாடுவார்களாம். இப்படி வேட்டையாடப் படுவதன் காரணமாக அந்த விலங்கினமே பூண்டற்று அழிந்து போய்விடுமோ என்று அரசாங்கம் மான் வேட்டையைத் தடை செய்திருந்தது. ஆனால் செர்னோபில் விபத்துக்குப் பிறகு திருட்டுத் தனமாகக் கூட அந்த மான்களை யாரும் வேட்டையாடுவதில்லையாம். காரணம் அந்த மான்கள் கதிரியக்கமுள்ள புல்லை மேய்ந்து இறைச்சியும் கதிரியக்கத்துக்கு ஆளானதுதான். இதனால் 1,36,000 எண்ணிக்கையளவே இருந்த ‘மூஸ்’ வகை மான்கள் ஒரே ஆண்டில் இரட்டிப்பாகி, 4,00,000மாகப் பெருகியதாம். இப்போது இந்த மான்கள் காடுகளிலும் இடம் கொள்ளாமல் அடிக்கடி மந்தை மந்தையாகக் காட்டோரப் பகுதிச் சாலைகளை ஆக்ரமித்து, அதன் காரணமாக சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கிறதாம்.
இந்தச் செர்னோபில் விபத்தால் ஸ்வீடன் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது காவ்லே பகுதியாகும். இரண்டு ஆண்டு களுக்குப் பின் ‘மூஸ்’ மான்களின் கதிரியக்கம் இரட்டிப் பாகியுள்ளது. 1 கிலோ இறைச்சியில் சுமார் 3,000 ‘பெக்காரெல்’ கதிரியக்கம் இருக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டில் இது இன்னும் அதிகமாகுமாம்.
29.1.89 இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்த செய்தி:
“செர்னோபில் இன்னும் குடியேற்றத்துக்கு இலாயக்கற்ற இடமாகவே இருக்கிறது. அதன் சுற்று வட்டாரம் 30 கி.மீ. தூரத்துக்குப் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. செர்னோபில் விபத்துக்குப் பின் ஏற்கெனவே அங்குக் குடியமர்ந்திருந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு வெளியேறி விட்டனர். அதன் பிறகு யாரும் மீண்டும் குடியேறவே இல்லை. இப்போதும் அது யாரும் குடியேற முடியாத பகுதியாகவே காட்சியளிக்கிறது. காரணம் இந்த விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் தணிந்த பாடில்லை.
இந்தச் செர்னோபில் விபத்துக்குப் பிறகு, அதாவது அர்மீனியன் பகுதி நிலநடுக்கத்துக்குப் பின், பல அணுசக்தி நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பே, செர்னோபில் விபத்தின் விளைவாகச் சோவியத் யூனியனில் மின்ஸ்க், ஒடேஸ்ஸா, கிளாஸ்னடார் ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள அணுசக்தி நிலையங்கள் மூடப்பட்டன. இது தொடர்பான மேலும் சில செய்திகளை 28.8.88 தேதியிட்ட ‘தினமணி’ இதழில், சோஷலிச நாடுகளிலும் அணுமின் உலைக்கு எதிர்ப்பு என்கிற கட்டுரையில் நாகர்ஜூனன் என்பவர் குறிப்பிடுகிறார்.
சோவியத் அணுசக்தி விஞ்ஞானியும், சோவியத் அறிவியல் தலைமைக் குழு உறுப்பினருமான 57வயது விஞ்ஞானி வாலெரி லெகசோவ் 1988 ஏப்ரல் 27ல் தற்கொலை செய்துகொண்டார். அவர், தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுத்த நாள் செர்னோபில் விபத்து நடந்த நாள். அதாவது 1986 ஏப்ரல் 27இல். செர்னோபில் விபத்து நடந்து சரியாக இரண்டாமாண்டு நினைவு நாளில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவர், குட்சட்டாப் அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர். பல அணுசக்தி நிலையங்களை வடிவமைத்தவர். செர்னோபில் விபத்தின் பின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கேற்றவர்.
செர்னோபில் விபத்தினால் தைராய்டு புற்றுநோய்க்கு ஆளானவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்...
அவர் தற்கொலை செய்துகொண்டதன் காரணம்... மரணப் படுக்கையில் அவர், எழுத்தாளர் அலெஸ் அடெமோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : “அணுசக்தி என்பது கட்டுப் படுத்த முடியாத பேரபாயமாக எழுந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இதுவரை விஞ்ஞானம் விடைகாண முடிய வில்லை. விடைகாண முடியுமா என்பதும் சந்தேகம். இந்தச் சக்தியின் பேரழிவிலிருந்து மனித குலம் விடுதலை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரே வழி... இச்சக்தியைக் கையாளாமல் இருப்பதே.” மேலும் அவர் சொன்னார் :“செர்னோபில் விபத்து போன்ற விபத்து இரஷ்யாவில் உள்ள பிற அணுமின் நிலையங்களிலும் நிகழலாம். இதற்கான காரணங்களைத் தடுக்கவே முடியாது”.
இவர் ஆரம்ப முதலே அணுசக்தியின் ஆதரவாளராக இருந்தவர். அணுசக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர மனித குலத்துக்கு வேறு மாற்று வழியில்லை என்று வாதாடியவர். அணு சக்தியே மனித குலத்தின் எதிர்கால நெருக்கடிகளுக்கு விமோசனமாக இருக்கப் போகிறது என்று வலுவாக நம்பியவர். இறுதி நாட்களில் தன் நம்பிக்கையெல்லாம் தகர்ந்து போனதை அடுத்து, அணுசக்தியின் எதிர்ப்பாளராக மாறியவர்.
1979 அமெரிக்க மூன்றுமைல் தீவு விபத்துக்குப் பின்னிருந்தே பெரும் தொழில் நகரங்களுக்கு அருகில் அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குச் சோவியத் ஏடான ‘கம்யூனிஸ்டு’ இதழில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. இருந்தும் இது செர்னோபில் விபத்துக்குப் பிறகே முழுமையாக உணரப்பட்டது.
‘பிராவ்தா’ சோவியத் இதழின் விஞ்ஞான ஆசிரியர் ‘குபரேயவ்’ என்பவர் செர்னோபில் விபத்து பற்றி ஒரு நாடகம் எழுதினார். ‘சார் கோஃபகஸ்’ என்பது நாடகத்தின் பெயர். இது இலண்டன், பாரீஸ், நியூயார்க் உட்பட பல நகரங்களில் நடந்தேறி அமோகப் பாராட்டுதல்களைப் பெற்றது.
சோவியத் யூனியனில் 1958 யூரல் மலை, சிஷ்டிடாவ் என்னுமிடத்தில் அணுக் கழிவுப்பொருள் கிடங்கு வெடித்ததோ, 1974ல் ஷெவ்ஷென்கோவில் பரிசோதனை ஈனுலை வெடித்ததோ, 1983 ஆட்டோமாஷில் உள்ள அணு உலை தயாரிப்பு தொழிற்சாலை வெடித்ததோ வெளியுலகுக்கு உடனடியாகத் தெரியவில்லை. இவை, சோவியத் யூனியனிலிருந்து வெளியேறிய விஞ்ஞானிகள் தந்த தகவல்கள் மூலமும், மற்றும் பல விவரங்கள் சமீபத்திய சோவியத் கொள்கையான ‘கிளாஸ் நாஸ்த்’துக்குப் பிறகு தெரிய வந்தவைகளே. அல்லது மிகக் காலம் கடந்து சோவியத் இதழ்களில் வெளியிடப் பட்டவைகளே.
உதாரணமாய் 1958இல் யூரல் மலைப் பகுதியில் ஏற்பட்ட விபத்து பற்றி சோவியத் அதிருப்தி விஞ்ஞானி டாக்டர் ஜோரஸ் மெட்வேதெவ் 1979இல் எழுதுகிறார். அதன்பிறகே இவ்விபத்து பற்றி விரிவான தகவல்கள் தெரியத் தொடங்கின.
சோவியத் யூனியனில் உள்ள பல அணுசக்தி நிலையங்கள், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பகுதியான அர்மீனியா, லிதுவேனியா, லெனின் கிராடு, குர்ஸ்ட், ஸ்மோ லென்ஸ்க், ரோவ்னா ஆகிய பகுதிகளிலேயே அதிகம் உள்ளன.
அணுமின் நிலையங்களுக்கான அணு உலைகள் தயாரிக்கும் தொழிற்சாலை சோவியத் யூனியனில் உள்ள ஆட்டோமாஷ் தொழிற்சாலை. சேர்னோபில் விபத்துக்குப் பிறகு சோவியத் அணுசக்தித் தொழில் எதிர்காலமற்று, பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. தற்போது இந்தியா போன்ற நாடுகளுடன் சோவியத் யூனியன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மீண்டும் அணுசக்தித் தொழிலுக்கு நம்பிக்கையூட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அணுவின் ஆற்றல் பற்றியும், இவ்வாற்றல் குறித்த சாதக மானதும், பாதகமானதும் ஆன கருத்துகள் பற்றியும் இதுவரை பார்த்தோம்.
இனி உலகு தழுவிய நாடுகளில், இந்த அணு ஆற்றல் என்பது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அதற்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது? அங்கு ஏற்பட்ட அணுசக்தி நிலைய விபத்துகள் மற்றும் கழிவுகளின் நிலை என்ன? என்பதைப் பார்ப்போம்.
உலகத்தில் இன்று ஆக்க சக்தி எனப்படும் மின் சக்திக் காகவும், அழிவு சக்தி எனப்படும் அணுகுண்டு தயாரிப்புக்கு மாகவும் பல வழிகளில் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது எப்படிப் பயன்படுத்தப்பட்டாலும், இந் நிலையங்கள் செயல்படும் காலத்திலும் சரி, அது ஏற்படுத்தும் கழிவுகள் விஷயத் திலும் சரி ஒரே விதமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
இவ் விளைவுகள் மொத்த உலகத்தின் சுற்றுப்புறச் சூழலையே பாதித்து வருகிறது. இதனால் இது மக்கள் மத்தியில் கடுமையான பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாகவே இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் பெருகி வருகிறது. இதனால் பல நாடுகளில் இனி புதிய அணு சக்தி நிலையங்களையே திறப்பதில்லை எனவும், அல்லது உள்ள நிலையங்களையே மூடி விடுவது எனவும் பல்வேறு வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இதுபற்றித் தினச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள், தகவல்களை நாடு வாரியாக மொத்தமாக இங்குத் தொகுத்துப் பார்ப்போம்.
அமெரிக்கா
அணுசக்தி நிலையங்கள், அது அணுமின் நிலையமாகவோ அல்லது அணு ஆயுத உற்பத்தி நிலையமாகவோ மிகவும் அதிகம் கொண்டுள்ள ஒரு நாடு அமெரிக்கா. உலகில் உற்பத்தியாகும் மொத்த அணுசக்தி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் உற்பத்தியாவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நாட்டில் ஏற்பட்ட முதல் அணு விபத்து 1961இல் இடாஹோ நீர் வீழ்ச்சிக்கருகில் உள்ள ஓர் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தாகும். இந்த அணு உலை வெடித்ததில் 3 தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே மாண்டார்கள். இறந்தவர்களின் உடல்கள் கடுமையான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டதால் 20 நாட்கள் வரை சடலத்தை நெருங்கவே முடியவில்லையாம். பின்னர் சடலங்களை ஈயக் கல்லறைப் பெட்டிகளில் போட்டுப் புதைத்து அந்தக் கல்லறைகளையும் ஈயத்தால் பூசினார்களாம்.
அடுத்து ஏற்பட்ட விபத்து 1966இல் என்ரிகோ பெர்மி பகுதியில் உள்ள வேக ஈனுலை அநேகமாக உருகி விட்டதால் ஏற்பட்ட விபத்து. இந்த விபத்து, அணுகுண்டு வெடிப்புக்குச் சமமான சம்பவமாக மாறியிருக்க வேண்டியது மயிரிழையில் தப்பியது என்கிறார்கள். இதனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட டெட்ராயிட் நகரம், அதிருஷ்டவசமாக உயிர் தப்பியது. இச் சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா இப்படிப்பட்ட ஈனுலைகளைக் கட்டுவதில்லை என்ற முடிவுக்கு வந்தது.
அடுத்து, 1975இல் ப்ரௌன்ஸ் பெர்ரி அலபாமா பகுதியில் உள்ள ஓர் அணுசக்தி நிலையத்தில், ஏற்பட்ட விபத்து. ஒரு மெழுகு வர்த்தியை வைத்துக் கொண்டு காற்றுக் கழிவுகளைக் கண்டு பிடிக்க முயன்றபோது இரு அணு உலைகள் தீப்பற்றி எரிந்தனவாம். தீ 7 மணிநேரம் நின்று எரிந்ததாம். முற்றிலும் உருகியிருக்க வேண்டிய அணு உலை எப்படியோ தப்பியது என்கிறார்கள். அதன் பிறகு இந்த உலை இழுத்து மூடப்பட்டது.
அடுத்து, உலகளவில் இன்றும் பிரசித்தமாகப் பேசப்படும் அளமவுக்குப் பாதிப்பை உண்டாக்கிய 1979இல் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தின் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்து. ஒரு பம்பு சரியாக வேலை செய்யாததால் அணு உலை உருகும் நிலை ஏற்பட்டது. இதனால் அபாயகரமான கதிரியக்கம் ஏற்பட்டது. கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அந்தச் சிறிய நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலை முழுதும் உருகும் முன்பு மூடப்பட்டு விட்டது. இந்த விபத்துக்குப் பின்னர்தான் அணு மின் சக்தி தயாரிப்பது என்பது எவ்வளவு அபாயகரமான விஷயம் என்பதை அமெரிக்க மக்கள் உணர்ந்தார்கள்.
தற்போது அமெரிக்காவில் ஆறு அணுமின் நிலையங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 107 அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகார உத்தரவு திரும்பப் பெறப்பட்டு விட்டது. கடந்த 35 ஆண்டுகளில், அதாவது 1974க்குப் பிறகு எந்தப் புதிய அணுமின் உலைத் திட்டங்களும் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் அந்த நாட்டின் அணு மின் நிலையங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது எனக் குறிப்பிடப் படுகிறது.
அமெரிக்காவில் ‘லாங் ஐலண்டு’ பகுதியில் வில்கோ என்கிற கம்பெனி நிர்மாணித்துள்ள 900 மெ.வா. ‘ஹோர்காம்’ அணுமின் நிலையத்தை மூடி விடுவதற்கு அக்கம்பெனியும், நியூயார்க் மாநில அரசும் கடந்த மே 26ஆம் தேதி (26-5-1988) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம்.
530 கோடி டாலர் செலவில் 21 ஆண்டுகள் கடும் உழைப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்நிலையம் அமெரிக்காவிலேயே மிகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டதாம். இப்படிப்பட்ட ஓர் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்குவதற்கு முன்பே மூடப்பட்டுவிட்டது என்பதோடு, இயங்கத் தொடங்கு முன்பே மூடப்படும் முதல் அணு மின் நிலையமும் இதுதானாம். இதில் நியூயார்க் மாநிலத்துக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்பட்ட போதிலும், அதையும் பொருட்படுத்தாமல் அரசு இதை மூடிவிட முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமென்டா மாவட்டத்தில் “ரான்சோ சேக்கோ’ அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடிவிடலாமா என்பது பற்றி அந்த மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் 6-6-88 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. முடிவு தெரியவில்லை. மூடியிருந்தால் உலகிலேயே வாக்காளர் விருப்பப்படி மூடப்படும் முதல் அணு மின் நிலையம் இதுவாகவே இருக்கும் என்று சொல்லப் படுகிறது.
இந்த நிலையத்தை நடத்தி வரும் சாக்ரமென்டா மாவட்ட ஆட்சி மன்றம், இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப் படுத்துவதற்காக மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 கோடி டாலருக்குமேல் செலவிட்டதாம். இப்படிச் செலவிட்டு ஏற்பாடு செய்த அணுமின் நிலையத்தை மூடவே வாக்கெடுப்பு.
மசாசூ செட்சில் உள்ள பில்கிரிம் அணுமின் நிலையத்தில் மிக மோசமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக அது மூடப்பட்டிருக்கிறது. அதை மீண்டும் திறக்கக் கூடாது எனவும், நிலையத்தை மூட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பகுதி வாழ் மக்கள் கோரியிருக்கின்றனர்.
நியூ ஹான்போர்டு மாநிலத்தில் ‘ஸீபுரூக்’ அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மக்களுக்குச் சந்தேகம் தோன்றியதன் காரணமாக அங்கு இரண்டாவது பிரிவைத் தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டது. முதல் பிரிவில் உற்பத்தியைத் துவங்குவதும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
மிச்சிகன் மாநிலத்தில் மிட்லண்ட் அணுமின் நிலையத்தை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது அபாயமுள்ள அணுசக்திக்குப் பதிலாக அபாயமற்ற எரிவாயுக்கு மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.
செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறை பாடுகள் காரணமாக டென்னசி அணைத்திட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று அணுமின் நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன.
இது போன்ற நிகழ்ச்சிகள் காரணமாக அமெரிக்காவில் அணுமின் உற்பத்தித் தொழிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற் பட்டுள்ளது. புதிய நிலையங்கள் அமைக்க ஆர்டர்கள் எதுவும் கிடைப்பதில்லை என்பதுடன் பழைய ஆர்டர்களும் இரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்துகள், அணு உலைகளின் பாதுகாப்பு, ஆபத்துக் காலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள், கதிரியக்கக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகியவை சம்மந்தமாக அமெரிக்க மக்களுக்குக் கவலை ஏற்பட்டிருப்பதே மேற்கண்ட நட வடிக்கைகளுக்குக் காரணம் என்கிறார்கள்.
அதோடு அமெரிக்க சிவிலியன் மற்றும் இராணுவ அணு உலைகளின் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதாகக் கண்காணிப்பு நிலையங்களும், தகவல் சாதனங்களும், குடிமக்களின் ஆய்வுக் குழுக்களும் கண்டுபிடித்துள்ளன என்பதும் இதற்குக் காரணம்.
இவ்வகையான எதிர்ப்புகளில் மக்கள் மட்டுமல்ல, அதிகாரத்தில் இருப்பவர்களும் பங்கு பெறுகிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம், முன் குறிப்பிட்ட ஷோர்காம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நியூயார்க் ஆளுநரும் ஜனநாயகக் கட்சி பிரமுகருமான ‘மரியா குவோமா’ என்பவரே முன்நின்று நடத்தியிருக்கிறார். இந்த நிலையம் ஒருக்காலும் பாதுகாப்பாக இயங்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு 500 மெகாவாட் உலையை நிறுவ வில்கோ கம்பெனி அனுமதி வாங்கியது. பிறகு அது 900 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
ஆரம்பம் முதலே இந்த நிலையம் பற்றிச் சர்ச்சை இருந்திருக்கிறது. எனவே இந்த நிலையம் பூர்த்தி செய்யப்பட்ட பின் நெருக்கடிகால ஏற்பாடுகளில் - அதாவது மக்களை அப்புறப் படுத்துதல் போன்ற ஒத்திகை நடவடிக்கைகளில் - பங்கு பெற முடியாது என மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகள் கூறி விட்டதால் அக்கம்பெனியால் உலையை நடத்த முடியவில்லை. பிறகு சர்ச்சைக்கிடமான அந்த உலையை மூடிவிடுவது என முடிவு செய்து மூடியும் விட்டார்கள்.
அமெரிக்க இராணுவ தளவாட உற்பத்திக்கு ட்ரிட்டியம் (ஹைட்ரஜன் ஐசோடோப்) வழங்கிவரும் ஒரே நிலையமான, தென் கரோலினாவில் எய்க்கினுக்கு அருகில் உள்ள ‘சவன்னா அருவி’ அணு ஆயுத நிலையத்தில் (அரசுக்குச் சொந்தமானது), குளிரூட்டும் பைப்பில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டுள் ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விரிசல் மிகவும் அபாய கரமானது என்றும் அதிக நாள்பட்ட இந்த அணு உலையில் ஏற்பட்ட இக்கோளாறுகள் உலைக் கட்டமைப்பின் காரணமாக ஏற்பட்டது எனவும் செய்தியை வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையத்தில் உள்ள மூன்று உலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இது நிரந்தரமாக மூடப்பட்டு விடலாம் என்றும் தெரிகிறது.
இதுவல்லாமல் அமெரிக்கா பற்றி பல்வேறு இதழ்களில் வந்துள்ள சில பொதுவான தகவல்கள்:
அமெரிக்காவில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ததில், இதில் 4 இலட்சம் குழந்தைகள் 1950-69க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க அரசு நடத்திய அணுகுண்டு சோதனைகள் காரணமாக இறந்திருக்கின்றன என்று டாக்டர் ‘எர்ணட்ஸ்டார்ன் கிளாஸ்’ என்பவர் கூறியுள்ளார்.
மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவிலேயே இச்செய்தி பத்திரிகைகளில் வெளிவர முடியவில்லை என ‘லோ லெவல் ரேடியேஷன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக நமது பத்திரிகைகளில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்று அமெரிக்காவிடம் 20,000 டன் அணுக் கழிவுகள் கைவசம் உள்ளன. இதை அப்புறப்படுத்த இட வசதியோ, பண வசதியோ இல்லாமல் அமெரிக்கா தவித்துக் கொண்டிருக்கிறது. 70,000 டன் கழிவுகளை நீண்ட கால அடிப்படையில் கொட்டுவதற்கான இடமொன்றை அமெரிக்கா தேடி வருகிறது. உலை உள்ள இடங்கள் தவிர கழிவுகள்,வேறு 375 இடங்களில் கொட்டப்பட்டுள்ளன.
1991க்குள் அணுத் துப்புரவுப் பணிக்கு மட்டும் எட்டா யிரத்து ஐந்நூறு கோடி (8,500,00,00,000) டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.
ஹான் போர்டு என்னும் இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையத்தைச் சுத்தப்படுத்த மட்டும் 100 கோடி டாலர்கள் தேவைப்படுகிறதாம். பணம் இல்லாததால் இவ்வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இங்கு 10 கோடி காலன் கழிவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கெனவே பல கோடி காலன் குறைந்த அளவு கதிரியக்கப் பொருட்கள் ஏரிகளிலும் குளங்களிலும் கொட்டப்பட்டது.
இடாஹா மாநிலத்தில் 1952 முதல் சேமிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை 1,20,000 பீப்பாய்களிலும், 11,000 உலோகப் பெட்டிகளிலும் தற்காலிகமாகச் சேமித்து வைத்திருக்கின்றனர்.
இவற்றைப் பூமிக்குக் கீழே 3000 அடி ஆழத்தில் உள்ள உப்புச் சுரங்கங்களில் புதைக்கப் போவதாக ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் மலேயே இருக்கிறது.
ஹான்போர்டு தொழிற்சாலையிலிருந்து மட்டும் 1944இல் இருந்து 1956 வரை 5,30,000 கியூரிகள் கதிர் வீச்சு ஆற்றல் கொண்ட அயோடின் கழிவுப் பொருள்கள் காற்றுடன் கலந்துவிட்டன. இந்த இடத்தைச் சுற்றி 1 மைல் தூரம் சாவு மைல் என வர்ணிக்கப்படுகிறது. அங்குப் புற்றுநோயால் தாக்கப்பட்டு மக்கள் மடிந்து வருகிறார்கள்.
வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் கதிரியக்க அயோடின் கலந்துவிட்ட புல்வெளிகளில் மேய்ந்த பசுக்களின் பாலைப் பருகியதால் 20,000 குழந்தைகள் மிகையான கதிர் வீச்சினால் தாக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
ஒகையோ மாநிலத்தில் பெர்னால்டு என்னுமிடத்தில் யுரேனியப் பிரிப்புத் தொழிற்சாலையிலிருந்து கடந்த 37 ஆண்டுகளில் 1,67,000 பவுண்டு நிறையுள்ள கதிரியக்கக் கழிவுகள் மியாமி நதியில் கொட்டப்பட்டுள்ளன. இது தவிர 1.27 கோடி பவுண்டு கழிவுப் பொருள்கள் குழிகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கெடும் அபாயம் தோன்றியுள்ளது. எனவே இந்தத் தொழிற்சாலையை மூடி விட வேண்டும் என்று ஒகையோ மாநில ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அணு உலையைக் குளிர்ப்படுத்தும் நீர் சவன்னா நதியில் கலப்பதால் அங்கு மீன்பிடித் தொழிலுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.
ஆக, அமெரிக்காவில் அணுக் கழிவுகள் மலிந்து அமெரிக்க சுற்றுச் சூழலையே கடுமையாகப் பாதித்துள்ளது. அணு சக்திக்கு அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமல்ல, ஆளும் மாநில நிர்வாகங்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, நடப்பில் உள்ள பல அணுமின் நிலையங்கள் மூடப்படுவதோடு, புதிதாக எதுவும் தொடங்கப்படாத நிலையும் நீடித்து வருகிறது.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை அணுசக்தி மலிவானது, பாதுகாப்பானது, தூய்மையானது, நம்பகமானது என்று முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பார்த்தோம். இந்த எல்லா வாதங்களையுமே நோக்க இவை எல்லாவற்றிலும் அடிநாதமாய் இயங்கும் பிரச்சனை ‘கதிரியக்கப் பிரச்சனையே’ என்பது ஒரளவுக்குப் புரிந்திருக்கும். இந்தக் கதிரியக்கப் பிரச்சனையே மேற்கண்ட எல்லா வாதங்களையும் முறியடிக்கும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.
இப்படிக் கதிரியக்கப் பிரச்சனைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அது பற்றியே அதிகம் பேசுவதால்தான், சிலர் நாம் இந்தப் பிரச்சனையை அதிகம் மிகைப்படுத்துவதாகவோ அல்லது அது பற்றித் தேவையற்ற அச்சத்தை மூட்டுவதாகவோ குற்றம் சாட்டுகிறார்கள்.
இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், 1. மற்ற தொழில் நுட்ப விபத்துகளை நோக்க, அணுசக்தி நிலையங்களின் விபத்து விகிதாசாரம் மிகவும் குறைவு. 2. அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம், இயற்கையாகவே பிரபஞ்சத்தில் நிகழ்ந்து வரும் கதிரியக்கத்தைக் காட்டிலும் ஒன்றும் அதிகமானதோ ஆபத்தானதோ அல்ல. ஆகவே அதுபற்றி அஞ்சுவதும் சரியல்ல என்கிறார்கள். ஆகவே, இதுபற்றியும் நாம் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.
அவர்கள் சொல்கிற காரணங்கள்: உதாரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் மிகப் பெரிய மூன்று நீர் மின் நிலைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரியது, 1979இல் மோர்லியில் ஏற்பட்ட அணை உடைப்பு. இதில் மட்டும் 1,335 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல அனல் மின் நிலையங்களிலும் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் தந்து, இது போன்ற அபாயங்கள் அணுமின் நிலையத்தில் குறைவு என்கிறார்கள். நியாயம். நீர் மின் நிலையங்களில் அணை உடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதாகவே வைத்துக் கொள்வோம். இதில் ஒரு கேள்வி. ஆண்டுதோறும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, நிலங்களெல்லாம் பாளம் பாளமாக வெடித்துக் கிடப்பதையும் அல்லது கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, எங்குப் பார்த்தாலும் வெள்ளக் காடாக இருப்பதையும் பார்த்திருக்கிறோம், இதில் இயற்கையான பருவமழை வலுக்கும் போது அபரிதமான வெள்ளம் வந்து அணைகளே கட்டப்படாத நதியில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடுவதும், கரையோரப் பகுதி வாழ்மக்களையும் குடிசை களையும் அடித்துச் செல்வதையும் பார்த்தோ, படித்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கிறோம்.
ஆகவே, இப்படிப்பட்ட விபத்துகள் அணைக்கட்டுகள் கட்டப்படுவதால் மட்டும் நேருவதில்லை. அணைக்கட்டுகளே எதுவும் கட்டப்படாத நதிகளிலும் கூட இப்படிப்பட்ட இயற்கைச் சேதங்கள் நிகழும். ஆனால், இச்சேதங்கள் இயற்கையான மழைப் பெருக்கம் காரணமாக ஏற்படுபவை என்பது கண் கூடு. எனவே இதை அணுசக்தி விபத்துகளோடு ஒப்பு நோக்குவது என்பது முறையாகாது.
காரணம், வெள்ளப் பெருக்கு விபத்து என்பது இயற்கைக் காரணங்களால் நிகழ்வது. ஆனால் அணுசக்தி விபத்து என்பது, கதிரியக்கம் குறிப்பிட்ட அந்தத் தனிமத்தின் இயற்கைப் பண்பு என்றாலும் கூட, மனித முயற்சியால் விளைவது. அதாவது செயற்கையான திரட்டப்பட்ட கட்டுமானங்களின் மூலம் நிகழ்வது.
ஆகவே, நீர்மின் நிலையங்களில் ஏற்படும் விபத்தை அணுமின் நிலைய விபத்துகளோடு ஒப்பு நோக்காமல், அனல்மின் நிலையங்களில் ஏற்படும் விபத்தை மட்டும் அதோடு ஒப்பு நோக்குவதே சரியாயிருக்கும்.
இந்த ஒப்பு நோக்கிலும் ஒரு சிக்கல். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களையும், அனல் மின் நிலைய விபத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களையும், இந்த காரணங்களால்தான் இறந்தார்கள் என்று சொல்லிவிடலாம்.
ஆனால், அணுமின் நிலைய விபத்து அப்படியில்லை. அணு மின் நிலையத்தில் ஏதாவது விபத்து நேர்ந்து உடனடியாக அதனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மட்டுமே இந்தக் கணக்கில் வருவார்கள். அப்படி இறக்காமல் பாதியும், கால் வாசியுமாக இறப்பு நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் இந்தக் கணக்கில் வர மாட்டார்கள். அதோடு இப்படி பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஏதாவது விபத்தின் காரணமாகத்தான் நேர வேண்டும் என்று இல்லை. சாதாரண தினப்படி பணிகளிலேயே அவர்கள் அதிகமான கதிரியக்கத்துக்கு ஆளாகி இன்னும் 6 மாதம், 1 வருடம், 2 வருடங்களில் இறக்கும் நிலையை அடையலாம்.
ஆனால் அவர்கள் அந்த நிலையை அடைந்து இறக்கும் வரை பணியில் வைத்திருக்கப்படுவதில்லை. அதற்குள்ளாகவே அவர்கள் மருத்துவக் காரணங்களால் வேலை நீக்கம் செய்யப்பட்டு அல்லது கட்டாய ஓய்வு தரப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். பணியிலிருந்து நீங்கிய பிறகு அவர்களுக்கு ஏற்படும் ‘இறப்பு’ அணுசக்தியால் ஏற்பட்ட ‘இறப்பின்’ கணக்கு விகிதத்தில் வராது. இதுதான் மற்ற விபத்து இறப்புக் கணக்குக்கும் அணுசக்தி விபத்து இறப்புக் கணக்குக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எனவே மற்ற விபத்துகளால் ஏற்படும் இழப்பையும் அணுத் தொழில் நுட்பத்தால் ஏற்படும் இழப்பையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.ஒப்பிடுவதும் நியாயமாகாது.
அடுத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அணுமின் நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம், இயற்கையான சுற்றுச் சுழலில், சூரியன் மூலமும் இதர கதிரியக்கத் தனிமங்கள் மூலமும் ஏற்படும் கதிரியக்கத்தைவிட ஒன்றும் அதிகமில்லை. ஆகவே இது பற்றி அஞ்சுவது அறியாமை என்று ஒரு புள்ளி விவரம் தருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களைச் சுற்றி ஏற்படும் கதிரியக்கம் ஆண்டுக்கு 4.6 மில்லி ரெம் தானாம். ஆனால் இயற்கையான, சாதாரண சூழ்நிலையில் சூரியனிடமிருந்தும், இதர பூமியின் மேற்பரப்பு மூலமும் பெறப்படும் கதிரியக்கம் ஆண்டுக்கு 100 முதல் 200 மில்லி ‘ரெம்’ மாம். இன்னும் கதிரியக்கத் தாதுக்கள் மிகுந்த சில பகுதிகளில் 1000 முதல் அதற்கு மேற்பட்ட மில்லி ‘ரெம்’கள் கூட இருக்குமாம். ஆகவே, அணுமின் நிலையத்தால் ஏற்படும் 4.6 மில்லி ‘ரெம்’ பற்றி அஞ்சத் தேவையில்லை என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
அடுத்து, மனிதன் எப்போதும் கதிரியக்கச் சூழலிலேயே வாழ வேண்டியுள்ளது. எனவே, மனிதன்மேல் கதிரியக்கம் ஏற்படுத்தும் பாதிப்பில் 75 சதவீதம் இயற்கைச் சூழலிலேயே ஏற்படுகிறது. 10 முதல் 20 சதவீதம் வரையிலான கதிரியக்கம் மனிதன் மருத்துவ சிகிச்சை பெறும் காரணங்களால் - அதாவது நோய் பற்றி அறியும் எக்ஸ்ரே, மற்றும் கதிரியக்க சிகிச்சை முறை ஆகியவற்றால் - ஏற்படுகிறது. எனவே இப்படி 85 முதல் 95 சதவீதம் வரை கதிரியக்கம் பெற்ற மனிதன் 2 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே அணுமின் சக்தி காரணமான கதிரியக்கத்துக்கு ஆளாகிறான் என்று சொல்கிறார்கள்.
இன்னொன்று, கடந்த 19 ஆண்டுகளில் அணுசக்தி நிலையங்கள் உள்ள இடங்களில் நடத்திய சோதனைகளில், இயற்கையாகச் சுற்றுச்சூழல் காரணமாக ஏற்படும் கதிரியக்கத்தைவிட அணுசக்தி நிலையங்கள் மூலமாக ஒன்றும் அதிகமான கதிரியக்கம் ஏற்பட்டு விடவில்லை என்ற ஒரு புள்ளி விவரம் காட்டுகிறார்கள்.
ஆக, இப்புள்ளி விவரங்கள் மூலம் இவர்கள் பொதுவாகச் சொல்ல முன்வருவது என்ன? கதிரியக்கம் என்பது அஞ்சத்தக்க அளவுக்கு அபாயகரமானது அல்ல. ஏனெனில் இயற்கையான சுற்றுச்சூழலே கதிரியக்கமுள்ளதாகத்தான் இருக்கிறது என்பதுதான்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். கதிரியக்கத்தால் ஆபத்தே இல்லை. காரணம் அது மருத்துவத்துக்கெல்லாம் பயன்படுகிறது. இப்படி மருத்துவத்துக்காகப் பயன்படும் கதிரியக்கத்தையெல்லாம் பார்த்து அஞ்சுவதாவது... ‘அபசாரம் அபசாரம்’ என்பதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
இவர்கள் எல்லோரது வாதத்தையும் கேட்டு நாம் சில விஷயங்களைச் சிந்திப்போம்.
1. ICRP கதிரியக்கத் தாக்கத்தின் அளவைச் சாதாரண மக்களுக்கு 0.5 ரெம் (அல்லது 5 அளல) அளவு வரையறையும், அணுமின் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 ரெம் (அல்லது 50 அளல) அளவு வரையறையும் வைத்துள்ளதே, அது ஏன்? மனித உடம்பு என்பது எல்லோருக்கும் பொது தானே...? அப்படியிருக்க, சாதாரண மக்களைவிட 10 மடங்கு அதிகமுள்ள கதிரியக்கம் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவது ஏன்? கொஞ்ச நாள் பொறுத்து வீட்டுக்கு அனுப்பி வேறு ஆள் வைக்கவா...?
2. இயற்கைச் சூழலில் நிலவும் கதிரியக்கம் இம்மாபெரும் பிரபஞ்ச வெளியில், அல்லது நாம் வாழும் புவிக்கோளைச் சுற்றியுள்ள பிரும்மாண்டமான வளி மண்டலத்தில் பரவலாகக் கிடப்பது. ஆனால் அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிர் இயக்கம், ஓரிடத்தில் ஒருங்கு குவிக்கப்பட்டது. இந்த மொத்த புவிக்கோளிலும் அவ்வப்பகுதியிலும் நிலவும் கதிரியக்கத்தை விட அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம் குறைவாகவே இருக்கலாம். குறைவாகத்தான் இருக்கும். ஆனால் முன்னது பரவலானது. பின்னது ஓர் இடத்தில் திரட்டப்பட்டது. எனவே இரண்டாவது குறிப்பிட்டது ஆபத்தானது. இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். எங்கோ, பூமிக்கடியில் பிட்ச் பிளௌன்ட் தாதுவில் மிக மிகச் சொற்பமான அளவில் கலந்துள்ள யுரேனியம் பரவலாக அது ஏற்படுத்தும் கதிரியக்கமும், இந்த யுரேனியத்தை யெல்லாம் ஒருங்குதிரட்டிச் செறிவூட்டி யுரேனியத் தண்டுகளாக்கி, ஓர் இடத்தில் வைத்து, அதன் அணுக்கருக்களைப் பிளப்பதன்மூலம் அது ஏற்படுத்தும் கதிரியக்கமும் இரண்டும் ஒன்றாக முடியுமா?
முன்னதன் வீச்சும் சக்தியும் என்ன? இரண்டாவதன் வீச்சும் சக்தியும் என்ன..? இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதே மாதிரி மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் கதிரியக்கத்தின் மொத்தஅளவைச் சொல்லி, அந்த அளவால் ஒன்றும் பாதிப்பில்லை என்றும் சொல்லக் கூடாது. காரணம், இந்த அளவு, சிகிச்சை பெறும் எத்தனையோ நூறு, ஆயிரம் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது. ஆனால் இதுவே நாலு பேர் ஐந்து பேருக்கு மட்டும் இந்த அளவு செல்லுமானால் என்ன ஆகும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அடுத்து, கதிரியக்க மருத்துவப் பயன்பற்றி....
நாம் ஏற்கெனவே பார்த்த ஐசோடோப்புகள் சிலவற்றைக் கதிரியக்கமுள்ளவைகளாக மாற்றி மருத்துவ சிகிச்சைக்கும், நோய் அறியும் ஆய்வுக்கும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இதை வைத்து, அணு உலையால் ஏற்படும் கதிரியக்கத்தால் ஆபத்து எதுவும் இல்லை என்பது சுத்த அபத்தம்.
காரணம், மருத்துவத்துக்குப் பயன்படும் ஐசோடோப்புகளால் ஏற்படும் கதிரியக்கம் மிகவும் அற்பத்திலும் அற்பமானது. என்றாலும் இதுவே சிறிது அளவு கூடினாலும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. ஆனால், அணு உலையால் ஏற்படும் கதிரியக்கம் என்பது சாதாரண கதிரியக்க ஐசோடோப்புகளால் ஏற்படும் கதிரியக்கத்தை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகம் ஆற்றல் உள்ளது. அபாயம் மிக்கது.
எனவே, இரண்டையும் ஒன்றாக்கிச் சரிசமமாகப் பாவிப்பது என்பது சரியாயிருக்க முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாய், நல்ல பாம்பின் விஷத்திலுள்ள ஒரு வகைப் புரோட்டீனைத் தனிப் பிரித்து எடுத்து கான்சரைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். இதற்காக நல்ல பாம்பின் விஷமே ஆபத்தற்றது. காரணம் அது மருத்துவப் பயன் விளைவிப்பது என்று பாம்புக் கடியைக் கண்டுகொள்ளாமல் சும்மா விட்டு விட முடியுமா?
உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று தூக்கத்துக்காகச் சிறுஅளவிலான தூக்க மாத்திரை தருகிறார்கள். அதற்காகத் தூக்க மாத்திரை மருத்துவப் பயனுள்ளது என்று 10, 15 சேர்த்து விழுங்கினால் என்ன ஆகும்? இதே மாதிரி தலைவலி மாத்திரை, வயிற்றுவலி மாத்திரை, சளி மாத்திரை என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு பாம்பின் விஷத்தை 20, 30 பேருக்குப் பகிர்ந்து கொடுத்தால் யாருக்கும் மரணம் சம்பவிக்காது. சாதாரணமாய்ப் பாம்பு ஒருவரைக் கடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறு யாரையாவது கடித்தால் முதலில் கடிபட்டவரைவிட இரண்டாவது கடிபட்டவருக்கு விஷத்தின் வீரியம் கம்மி என்கிறார்கள். அப்படியிருக்க இப்படி, பகிர்ந்தளிக்கப்படாமல் விஷம் ஒருவருக்கே தரப்பட்டால்....
20 தூக்க மாத்திரைகளை 20 பேருக்கும் பகிர்ந்தளித்தால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அந்த 20 மாத்திரைகளையும் ஒருவருக்கே தந்து விட்டால்... சும்மாவா சொன்னார்கள்... ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்’ என்று.
நோய் தீர்க்கும் ஒளஷதமாகக் கருதப்படும் அமிர்தத்துக்கே இந்தக் கதி என்றால், பல வகையிலும் அபாயத்தை விளைவிக்கும் கதிரியக்கத்தின் கதி என்ன...?
இயற்கை, இப் புவிப் பரப்பு முழுதும், வளி மண்டலம் முழுதும் பகிர்ந்தளித்து செலுத்தி வரும் கதிரியக்கத்தை மெனக்கெட்டு ஒன்று திரட்டி, அதை ஒட்டு மொத்தமாக ஓர் அணு உலை மூலம் வெளிப்படுத்தினால் எப்படியாகும்?அதனால்தான் இதை அணுகுண்டுக்கு ஒப்பானதாகும் என்கிறோம்.
இதெல்லாம் அணுசக்தி மீது நாம் காழ்ப்பு கொண்டோ அல்லது அணு சக்தியின் ஆதரவாளர்களுக்கு எதிராக நாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகவோ சொல்ல வில்லை.
இதுபற்றிய உண்மைகளை நாம் உணரவேண்டும், உணர்ந்து பார்த்து சிந்தித்து மனித குலத்தை அச்சுறுத்தி வரும் இக்கதிரியக்க அபாயம் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம்.
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்
- அணுகுண்டும் அணு உலையும்
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்
- பல்வகை ஆற்றல்கள்
- அணுவின் இயற்பியல் & வேதியியல் பண்புகள்
- அணுவின் வகைகள்
- அணு ஆற்றல் என்றால் என்ன?
- மின் ஆற்றலை வழங்கும் ’செயற்கைச் சூரியன்’கள்
- லேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா!
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
- உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
- வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?
- புதிய முறையில் மின்சார தயாரிப்பு
- மின்கலத்தில் இயங்கும் இரு சக்கர வண்டி
- டன்னல் டையோடு