கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மஞ்சை வசந்தன்
- பிரிவு: தொழில்நுட்பம்
ஆதிக்க சக்திகள் அறிவியலை எப்படியெப்படியோ தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஒழிந்து போயிருக்க வேண்டிய புராணக் குப்பைகள், சாஸ்திரங்கள், இதிகாசங்களுக் கெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மெருகும், கவர்ச்சியும், ஆர்வத் தூண்டலும் ஏற்றி இளைய தலைமுறையை ஈர்த்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து வருகின்றனர்.
ஆதிக்கக் கருத்துக்களை நிலைநிறுத்த அல்லது வளர்க்க அறிவியலை உண்மைக்கு மாறாகப் பயன்படுத்தி வெற்றிபெற முயலுகின்றனர்.
அவ்வப்போது மூக்குடைபட்டாலும் அவர்கள் சூடு,சொரணையில்லாமல் மீண்டும் மீண்டும் இந்த அறிவியல் வழி மடமை பரப்பும் முயற்சியை கைவிடாது முயற்சித்தே வருகின்றனர்.
பிள்ளையார் பால் குடிக்கிறார், அம்மன் கண்கள் அசைகின்றன என்று எதையாவது புதிது புதிதாய்ச் சொல்லி, பக்தியும், கடவுள் நம்பிக்கையும் குறைந்து விடாமல் வளர்க்க முயற்சிக்கின்றனர். அதேபோல், ஜாதியைச் சொல்வதே கேவலமாய்க் கருதும் உளநிலை வளர்ந்து, ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருகி வந்த நிலையில், ஜாதி யென்பது அறிவு சார்ந்தது, அறிவியல் சார்ந்தது என்பதுபோன்ற கருத்தை அண்மையில் அறிவியல் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிஸ் என்ற கல்வி நிறுவனத்தில், மனித மரபணுக்கள் மூலம் ஜாதி அடையாளங்களைக் காணமுடியும் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளனர். ஜாதி யென்பது மனித மரபணு சார்ந்தது அல்ல. அது பாதியில் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட பிரிவினை. ஒருவன் கிறித்தவனாக இருப்பதும், இஸ்லாமியனாக இருப்பதும், இந்துவாக இருப்பதும் எப்படி பிறப்பு வழி திணிக்கப்படுகிறதோ, அவ்வாறே ஜாதியென்ற பிரிவும் பிறப்புவழி திணிக்கப்படுகிறது.
ஜாதி, மதம் இரண்டும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட கருத்து சார் அடையாளங்கள். கருத்து சார் அடையாளத்திற்கும் மரபணுவிற்கும் எந்த வகையில் தொடர்பு வரமுடியும்? அடிப்படை தர்க்கத் தகுதிகூட இல்லாத ஒன்றை ஆய்வு என்று சொல்லி கருத்துக் கூறுவது அறிவியல் போர்வையில் செய்யப்படும் மோசடிச் செயலாகும். ஜாதி யென்பதுகூட இந்தியாவில் ஆரிய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட சதியே அல்லாமல் உலகம் முழுவதும் உள்ளதல்ல. அப்படியிருக்க அதன் அடையாளம் எப்படி மரபணுவில் வரும். மரபணு என்ன இந்தியாவிற்கு மட்டும் உரியதா?
இனத்தின் அடையாளங்கள்தான் மரபணுவில் வரும். காரணம், இனம் என்பது மரபணு சார்ந்தது. ஜாதி வேறு, இனம் வேறு. திராவிடர், ஆரியர், மங்கோலியர், சீனர் என்பன போன்று இயற்கையாய் மரபுவழி அமைந்த பிரிவு இனம். எனவே, இது மரபணு சார்ந்தது. ஆனால், ஜாதி யென்பது மனிதனுக்குச் சூட்டப்பட்டது. அது மரபணுவோடு தொடர்புடையதல்ல.
ஜாதிக்கும், இனத்திற்கும் வேறுபாடு தெரியாத அரைவேக்காடுகளின் அர்த்தமற்ற பிதற்றலே இதுபோன்ற கருத்துக்கள். பாதியில் பிரிக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகூட இன்றைக்கு பல காலக்கட்டத்தில் பல கலப்புகளை ஏற்று வருகிறது. எனவே, இது இன்ன ஜாதிக்கு உரிய மரபணு என்ற கருத்தே முற்றிலும் தவறானது. வன்னியர் அனைவரின் மரபணுவிலும் ஒரே மாதிரியான அடையாளம் இருப்பதில்லை, அவ்வாறே செட்டியார், ரெட்டியார், நாயுடு எல்லாம்... உண்மை இப்படியிருக்க ஜாதிய அடையாளம் மரபணுக்களில் இருக்கிறது என்ற கருத்துப் பரப்பல் மோசடியானது; அறிவியலுக்கும் மனித மேன்மைக்கும் எதிரானது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது தமிழ் சித்தர்
“பறைச்சி யாவ தேதடா?
பார்ப்பனத்தி யாவ தேதடா?
இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்க மிட்டிருக்குதோ?
என்று கேட்டுள்ளார். அவருக்குள்ள அறிவுகூட இன்றைய அறிவியலாளர்க்கு இல்லாதது வெட்கக் கேடு!
- மஞ்சை வசந்தன்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையத்தில் மட்டும் நாம் பார்த்து வந்த பேஸ்புக் நிறுவனம், கடந்த சில நாட்களாகப் பக்கம் பக்கமாக ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் திட்டத்தைப் பற்றிப் பெரிய நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வருகிறது. அவ்விளம்பரத்தில், இத்திட்டத்தின் மூலம், இந்தியாவே முன்னேறி விடும், இந்தியர்களுக்கு இலவச இணையம் கிடைக்கும் என்னும் கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஓர் அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவின் மீதும் இந்தியர்கள் முன்னேற்றம் பற்றியும் இவ்வளவு அக்கறையா? ‘யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கேன்?’ என்று பராசக்தி பாணியில் கேட்கத் தோன்றுகிறது. எங்கள் மீது எங்களுக்கும் எங்கள் அரசுக்குமே இல்லாத கரிசனை உனக்கேன்? என்று பேஸ்புக்கைக் கேட்கலாம் என்று பார்த்தால், இது இந்திய மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் திட்டம் என்னும் உண்மை பட்டென்று வெளிவருகிறது. ஏற்கெனவே, சாதித்தலைவர்களால், மதத் தலைவர்களால், மூட நம்பிக்கைகளால், வெகுமக்கள் ஊடகங்களால், அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட சராசரி இந்தியன், இப்போதைய டிஜிட்டல் காலத்தில் இணைய நிறுவனங்களாலும் ஏமாற்றப்பட பேஸ்புக் நிறுவனம், புள்ளி வைக்கத் தொடங்கியிருக்கிறது. இதை இப்படியே விட்டால், அடுத்து வரும் நிறுவனங்கள், அப்புள்ளியைப் பயன்படுத்திக் கோலம் போட்டு, இந்தியர்கள் கோலத்தை நிர்மூலமாக்கி விடுவார்கள். இச்சூழலில் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் பற்றிச் சில அடிப்படை தகவல்களைப் பார்ப்போம்.
பேஸ்புக்: ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் எந்த டெவலப்பரும் இணைந்து பங்களிக்கலாம். ஏற்கெனவே ஏறத்தாழ 800 டெவலப்பர்கள் இத்திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.
உண்மை: கூகுள், யாஹூ, ஐஆர்சிடிசி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, இபே, பேடிஎம், ரெட்பஸ், அமேசான், பிளிப்கார்ட், டிவிட்டர், லிங்கிடுஇன், ஸ்னாப்டீல், குயிக்கர் எனப் பல முன்னணி இணையத்தளங்கள் இத்திட்டத்தில் இணையவேயில்லை. காரணம் – வெகு எளிதானது – இத்திட்டத்தின் கீழ், இந்த இணையத்தளங்களின் பயனர்கள் அனைவரும் பேஸ்புக்கால் கண்காணிக்கப்படுவார்கள்; அவர்களது தனிப்பட்ட தகவல்களைத் தன்னுடைய சர்வர் மூலம் பேஸ்புக்கால் எளிதாக எடுக்க முடியும் என்பது தான்! இதெல்லாம் ஏன் - ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பே, இத்திட்டத்தை எதிர்க்கிறது.
பேஸ்புக்: ஃப்ரீ பேசிக்ஸ் என்பது வளர்ந்து வரும் திட்டமாகும். ஏற்கெனவே இத்திட்டம் 36 நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
உண்மை: இது வடிகட்டிய பொய். தனது தாயகமான அமெரிக்காவில் இணைய சமத்துவம்(நெட் நியுட்ராலிட்டி) பற்றி வாய் கிழியப் பேசும் பேஸ்புக், இந்த நல்ல திட்டத்தை அங்கிருந்தே தொடங்கலாமே? அதை விட்டு விட்டு, கணக்குக் காட்டுவதற்காக மிகவும் ஏழைநாடுகளாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் வளர்ந்து வரும் சில ஆசிய நாடுகளையும் இத்திட்டத்தில் சேர்த்து, இப்படிச் சொல்கிறது பேஸ்புக். ஜப்பான், நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா போன்ற இணையத்தில் முன்னேறிய நாடுகள் பலவற்றில் இத்திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை இத்திட்டத்தை எதிர்த்து, பன்னிரண்டு இலட்சம் மின்னஞ்சல்கள் இணைய ஒழுங்கமைவு அமைப்பான டிராய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, இணையத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீயே இத்திட்டத்தைக் கண்டித்திருக்கிறார் என்றால் இது எவ்வளவு ஆபத்தான திட்டம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பேஸ்புக்: இத்திட்டம் மக்கள் நலனுக்கான திட்டமே தவிர, இலாப நோக்கம் இல்லை.
உண்மை: அடேயப்பா! இலாப நோக்கம் இல்லாமலா, பெரிய பெரிய நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார்கள்? எங்கோ இடிக்கிறதே! விவரம் தெரிந்தவரை, பேஸ்புக், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே ஏறத்தாழ 150 கோடிக்கும் அதிகமான பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவர்களை வைத்து கூகுள் 70000 கோடி சம்பாதிக்கிறது; பேஸ்புக் 14000 கோடி தான்(!) சம்பாதிக்கிறது. அதாவது, கூகுள் ஒரு வாடிக்கையாளரை வைத்து 48 ரூபாய் சம்பாதிக்கிறது; ஆனால் பேஸ்புக்கிற்கோ 8 ரூபாய் தான் கிடைக்கிறது. இதை அதிகப்படுத்த வேண்டும். கூகுளைப் பின்தள்ள வேண்டும் என்னும் வணிகப் போட்டி தான் இப்படி ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் வடிவம் எடுத்திருக்கிறது.
கருத்து: ஃப்ரீ பேசிக்ஸ் என்பது புதிய, இளம் வணிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் கருத்து கட்டமைக்கப்படுகிறது.
உண்மை: பேஸ்புக் தான் எந்தெந்தத் தளங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், எவ்வளவு பெரிய வணிகராக இருந்தாலும், அவர்களை பேஸ்புக்கில் பணம் கட்ட வைத்து விளம்பரம் வாங்குவது தான் இத்திட்டமாக இருக்குமே தவிர, வேறெந்தப் பயனும் இருக்காது.
பேஸ்புக்: இணையத்தை இலவசமாக்கி இந்தியர்கள் பலரை இணையத்திற்குக் கொண்டு வந்து பலன் கொடுக்கப் போகிறது ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்.
உண்மை: இணையத்தை இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்க ஃப்ரீ பேசிக்சை விட ஏர்செல்லின் திட்டம்(http://www.medianama.com/2015/10/223-aircel-free-internet/ ), மொசில்லாவின் சம மதிப்பீட்டுத் திட்டம்(http://www.thehindubusinessline.com/info-tech/net-neutrality-mozilla-suggests-equal-rating/article7177532.ece ), ஜிகாட்டோவின் சுங்கமில்லா இணையத் திட்டம் (http://www.digit.in/general/gigatos-toll-free-internet-28094.html ) எனச் சிறந்த பல திட்டங்கள் இருக்கின்றன. ப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கை முன்னிறுத்தும் திட்டமே தவிர, இலவச இணையத்தை முன்னிறுத்தும் திட்டமாக இல்லை.
இது தவிர்த்து முதலில் சொன்னது போல, இத்திட்டத்தில் சேரும் எல்லாருடைய தகவல்களும் பேஸ்புக் நிறுவனம் வசம் இருக்கும். ஏற்கெனவே அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பிற்குத் தன்னுடைய பயனர்கள்ச் பற்றிய தகவல்களைக் கொடுத்து உலகத்தையே உளவு பார்க்க அமெரிக்காவிற்கு பேஸ்புக் உதவி வரும் வேளையில் (பார்க்க: http://www.globalresearch.ca/nsa-and-facebook-work-together/5439110 ), இந்தியர்களின் தகவல்கள் இப்படிப் பெறப்படுவது, இந்தியாவின் பாதுகாப்பிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது.
இவ்வளவு சிக்கல்கள் நிரம்பிய இத்திட்டத்தைத் தான், ‘டிஜிட்டல் இந்தியா’வைக் கட்டமைக்க உதவுங்கள் என்னும் பெயரில் பேஸ்புக் மூலமாகவும், தவறிய அழைப்பு (‘மிஸ்டு கால்’)கள் மூலமாகவும், பல கோடி செலவழித்து பெரிய பெரிய விளம்பரங்கள் மூலமும் பேஸ்புக் கொண்டுவரத் துடிக்கிறது. உண்மை நிலவரம் என்னவோ, இந்தியர்கள் என்னும் ஆடுகள் நனைகிறதே என்று பேஸ்புக் என்னும் ஓநாய் அழுகிறது என்பது தான்!
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
என்ன தலைப்பே புரியவில்லை! சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது; தொடர்ந்து பார்ப்போம். போக்ஸ்வாகனுக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் இருக்கும் தொடர்பைப் பார்ப்பதற்கு முன்னர், போக்ஸ்வாகன் மோசடி என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்!
ஃபோக்ஸ்வாகன் மோசடி :
ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வாகன் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். டொயோட்டாவிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக போக்ஸ்வாகன் இருந்து வருகிறது.
நிறுவனம் பெரிதாகப் பெரிதாகப் பணத்தாசை வருவதும், அந்த ஆசை பேராசையாகி நிறுவனத்தையே விழுங்குவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. இதே பணப்பேராசை தான் ஃபோக்ஸ்வாகனையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நம் ஊரில் இருப்பது போல ஏப்பை சாப்பையாக இல்லாமல் சுற்றுச்சூழல் விதிகள் ஓரளவு பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காரும் இவ்வளவு புகையை வெளியிடலாம் என்றும் அதற்கு மேல் வெளியிட்டால் அந்த கார்களுக்கு அனுமதி கிடையாது என்பதும் அங்கு கடைபிடிக்கப்படும் சுற்றுச்சூழல் விதிகளாக உள்ளன.
பேராசை என்னும் பேய் இந்த விதிகளை எல்லாம் ஒழுங்காகக் கடைபிடிக்க விடுமா? அந்தப் பேய் ஃபோக்ஸ்வாகனைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டது அவ்வளவு தான்! ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான் - இந்தப் புகை அளவைக் குறைத்துக் காட்டும் சிறிய மென்பொருளைத் தன்னுடைய கார்களில் நிறுவி அமெரிக்க அரசை நன்றாக ஏமாற்றி விட்டது. அதுவும் ஆண்டுக்கணக்கில்! சும்மா விடுவார்களா? விளைவு - ஏறத்தாழ 80 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஃபோக்ஸ்வாகன் இன்று கோடிக்கணக்கான தன்னுடைய கார்களைத் திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றால் ஃபோக்ஸ்வாகனுக்கு 6600 கோடி டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு 1800 கோடி டாலர் வரை அமெரிக்க அரசுக்குத் தண்டம் வேறு கட்ட வேண்டும்.
புகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் எப்படித் தப்பியது ?
புகை அளவுச் சோதனையை அரசாங்கத்திடம் நடத்தி ஒப்புதல் வாங்கித் தானே ஃபோக்ஸ்வாகன் தன்னுடைய கார்களைச் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கும்? அப்படியிருக்க ஃபோக்ஸ்வாகன் மீது என்ன தவறு இருக்க முடியும் என்கிறீர்களா? உங்கள் கேள்வி நியாயமானது தான்! இங்குத் தான் தன்னுடைய மென்பொறியாளர்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அவர்கள் உருவாக்கிய ஒரு மென்பொருள் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் கார்கள் தப்பியிருக்கின்றன.
என்ன தான் செய்தது அந்த மென்பொருள் ?
புகை அளவுச் சோதனையின் போது காரின் வட்டு(ஸ்டீரிங்) எப்படி இயங்கும், காரின் வேகம் எப்படி இருக்கும், இஞ்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பன போன்ற பல விவரங்களை உள்ளிட்டு ஒரு மென்பொருளை(சாப்ட்வேரை) உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மென்பொருளானது, மேல் சொன்ன விவரங்களைக் கொண்டு வண்டி புகை அளவுச் சோதனையில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடும். அப்படிக் கண்டுபிடித்து, புகை அளவுச் சோதனை என்றால், குறைவான அளவு கரியை வெளிவிடும். சாதாரணமாக, பிற நேரங்களில் சாலையில் செல்லும் போது புகை அளவுச் சோதனையைப் போல, 15 – 40 மடங்கு அதிகக் கரியை வெளிவிடும். இப்படிச் செய்வதன் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து எளிதில் தப்பி விடலாம் இல்லையா? இப்படித் தான் ஃபோக்ஸ்வாகன் கார்கள் அனைத்தும் புகை அளவுச் சோதனையில் இருந்து தப்பியிருக்கின்றன. இதைப் பார்த்துத் தான், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது திட்டம் போட்டுச் செய்த திருட்டுத்தனம் என்று கொதித்து எழுந்து விட்டார்கள். பின்னே, அவர்கள் கொதிப்பிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?
சரி, இதெல்லாம் புரிகிறது - இதற்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் என்ன சம்பந்தம்? பார்த்து விடுவோம்.
ஓபன் சோர்ஸ் மென்பொருள் :
ஓபன் சோர்ஸ் மென்பொருள் என்பதைத் தமிழில் திறந்த மூல மென்பொருள் என்கிறார்கள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது! கிட்டத்தட்ட, சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், (அதுவும், இரகசிய ஒற்றர்களாகப் பல மென்பொருட்கள் உலாவி வரும் இன்றைய காலக்கட்டத்தில்) அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? இதைத் தான் திறந்த மூல (ஓபன் சோர்ஸ்) மென்பொருள் என்கிறார்கள்.
ஃபோக்ஸ்வாகன் மோசடியை ஓபன் சோர்ஸ் தடுத்திருக்குமா ?
ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய மோசடியை மிக எளிதாக ஒரு சிறிய மென்பொருளை எல்லா கார்களிலும் நிறுவிச் செய்து காட்டியிருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறிய மென்பொருள் மட்டும் ஓபன் சோர்ஸ் மென்பொருளாக இருந்திருந்தால்? இந்த மென்பொருள் எப்படி இயங்கும் என்பதையும் அதற்குரிய புரோகிராம்களை எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மென்பொறியாளர்கள் முன்னரே எளிதாகக் கண்டுபிடித்திருப்பார்கள்.
ஃபோக்ஸ்வாகன் கார்களில் இப்படிப்பட்ட தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் இருக்கிறது என்பது தொடக்கத்திலேயே தெரிந்திருக்கும். அதன் மூலம் அந்நிறுவனத்திற்குப் பல கோடிக் கணக்கில் தண்டமும் நட்டமும் கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது. இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த கார்களில் இருந்து அளவுக்கதிகமான கரி வெளிவந்து பூமி மாசு பட்டிருக்காது.
சரி தானே நான் சொல்வது? இது போன்ற தவறுகளையும் மோசடிகளையும் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் தான் திறந்த மூல மென்பொருளுக்காகப் (இதன் மற்றொரு பெயர் - கட்டற்ற மென்பொருள்) நல்ல பல மென்பொறியாளர்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவு அவர்களுள் ஒருவராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ இருக்க முயலுங்களேன். (எனக்குத் தெரிந்தவரை, தமிழ்நாட்டில் கட்டற்ற மென்பொருளுக்காக உழைப்பவர்களைத் தொடர்பு கொள்ள http://fsftn.org/ தளத்தையோ http://www.kaniyam.com/ தளத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.)
- முத்துக்குட்டி
(கட்டுரை – அக்டோபர் 16-31, 2015 ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் வெளிவந்தது)
- விவரங்கள்
- நீச்சல்காரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இன்று தொலைத்தொடர்புத் துறையில் அதிகம் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையான ஒரு விசயம் இலவச இனையத்தளத் திட்டங்கள். அண்மையில் பிரி பேசிக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அது இதற்குமுன் அறிமுகப்படுத்திய இண்டர்நெட் ஆர்க் போன்ற அம்சத்தையுடையது, அதாவது சில அடிப்படையான இணையத் தளங்கள் மட்டும் இலவசமாக (அதாவது டேட்டா கட்டணமின்றி) அணுகக்கூடியவகையில் மக்களுக்கு வழங்குவதாகும். பலர் விரும்பினர், பலர் விரும்பவில்லை. இதற்கிடையில் இது இணையச் சமநிலைக்கு எதிரானது அதாவது இத்திட்டம் இணையச் சமநிலையைப்(net neutrality) பாதிக்கும் என்று ஒரு பிரிவினர் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இது ஒருவகையில் தொழிற்நுட்பம் சார்ந்துள்ளதால் தொழிற்நுட்ப வல்லூனர்கள் எதைச் சொன்னாலும் ஏற்கும் போக்குவுள்ளது. கம்பசூத்திரமாக இருப்பதால் சாதாரண மக்களும் இவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டிய நிலையில் உள்ளனர். உண்மையில் இது தொழிற்நுட்ப பின்புலம் என்றாலும் இது சமூகப் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. ஒவ்வொருவரும் யோசித்து சரியான முடிவை எடுக்கவேண்டும்.
பேஸ்புக் மீதுள்ள ஆதரவு எதிர்ப்பு நிலையைத் தாண்டி அடிப்படையான விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இலவசத் தளச் சேவையை அனுமதிக்கும். அதைக் கொண்டு பல நிறுவனங்கள் சேவை அளிக்க முன்வரலாம். குறுகிய தளங்கள் மட்டும் தருவதால் புதியவர்களுக்கு வெளி இணைய உலகம் தெரியாது என்பதை ஏற்கமுடியாது. நியாயவிலை கடையில் அத்தியாவசிய அரிசியும் கோதுமையும் மட்டும் போடுவதால் முந்திரியும் பிஸ்தாவும் அறியமாட்டார்கள் என்பது போல உள்ளது. முதலில் இணையத்திற்கே வர செலவு செய்ய இயலாதவர்கள் குறைந்தபட்சம் பேஸ்புக் போன்ற சமூகத் தளத்திற்கு வந்தால்தானே சமூக மாற்றத்தைக் கற்றுக் கொடுக்க முடியும். பிற நாடுகளைவிட குறிப்பாகத் தமிழகத்தில் சமூகத் தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறோம். அரசியல் மாற்றங்கள் இங்கிருந்து உதயமாகிறது. இதையெல்லாம் யோசிக்காமல் இலவசங்களைத் தடுப்பதால் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை. கீழ்த்தட்டு மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை வறட்டு சமநிலை பேசி கெடுக்கிறோம்.
இணையச் சமநிலை என்பது எதிர்ப்போரைப் பொறுத்த மட்டில் என்னவென்றால் அனைத்து இணையத்தளங்களும் சமமான வேகத்திலும், சமமான கட்டணத்திலும் கிடைக்கவேண்டும் என்பதாகும். இணையத்தில் இடவொதிக்கீடு வேண்டாம் என்ற ஒற்றைவரி புரிதலாகவும் கொள்ளலாம். ஆனால் ஆழமாகவும் பார்க்கவேண்டும். ஒரு வணிக நிறுவனம் இலவசமாகச் சில தளங்களைத் தருகிறார்கள் என்றால் அதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்குமானால் அதை எதிர்க்கலாம் ஆனால் அத்திட்டமே சமநிலை பறிப்பு என்பது எப்படிச் சரியாகும்? நாட்டில் எத்தனையோ மக்கள் அடிப்படை இணைய வசதியின்றி இருப்பது கணினிக்கு முன் அமர்ந்து கருத்துச் சொல்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு மாறாக ஒருசில தளங்கள் வழியாக இணையத்தை அனுபவிக்க முடியும். சில தளங்களை மட்டும் இலவசமாகத் தருவதால் மற்ற தளங்கள் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கிறோம் என்ற வாதமுண்டு. இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் அது பத்திரிக்கை சமநிலை பறிப்பு அதை எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை.
பிரிபேசிக்ஸ் திட்டமாகட்டும், ஏர்டெல் ஜீரோ திட்டமாகட்டும் அதில் திரைமறைவு தனிக்கையோ, கட்டுப்பாடோ இருந்தால் அந்நிறுவனத்தை எதிர்க்கலாம். அனைத்துத் தளங்களும் இலவசமாக வேண்டுமென்று அரசைக் கேட்கலாம். அதற்குமாறாக ஒரு சாதாரணப் பயனர் பலனைடையும் வகையில் வழங்கப்படும் இலவசத்தை எதிர்ப்பது ஆரோக்கியாமா என யோசிக்கவேண்டும். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற தன்னார்வலர்களைக் கொடுக்கவிடாமல் தடுத்து, "நீங்கள் கொடுத்தால் அரசியல்வாதியான எங்களை மக்கள் மதிக்கமாட்டார்கள்" என்றார்களாம் அதுபோலுள்ளது. பிரச்சனைகளைச் சீர்செய்ய வேண்டுமே தவிர காரணமானவர்களை விரட்டக் கூடாது.
இலவசத் தளங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்குக் குரல் கொடுப்பதே இணையச் சமநிலையாகும். காரணம் அதிகம் பொருளீட்டும் நிறுவனம் தங்களைத் தளத்தை விலையில்லாமல் அதாவது பயனரின் டேட்டா செலவைத் தாங்களே ஏற்றுக் கொண்டு இலவசமாகக் கொடுப்பது அவர்களின் விருப்பம். அதைப் பயன்படுத்துவதோ, தவிர்ப்பதோ மக்களின் உரிமை, இதற்கிடையில் இது இணையச் சமநிலை இல்லை என்று கொந்தளிப்பது தேவையற்றது. அனைவருக்கும் சம அளவிலா வருமானவரி கோரப்படுகிறது? அனைத்து உணவகங்களும் சமமான தரத்திலா உணவை வழங்குகின்றன? அனைத்து ஊர்களிலும் சமமான அளவிலா ரியல் எஸ்டேட் மதிப்புள்ளது? வெள்ள நிவாரணமாக அனைவருக்குமா வீடு கட்டிக் கொடுக்கிறோம்? வசதிக்கு ஏற்பவும், ஏழ்மைக்கு உதவவும், விருப்பத்திற்கு இணங்கவும், தேவைக்கு வழங்கவும் செய்யப்படுகின்றன. அதுதான் ஒரு சமூகத்திற்கு வளர்ச்ச்சியை அளிக்கும். லட்சம் சம்பாரிப்பவருகும், ஆயிரம் சம்பாரிப்பவருக்கும் சமமாக வரிவிதிக்கலாமா? எனவே பல்வேறு பொருளாதாரக் காரணங்களையும், சமூகக் காரணங்களையும் கணக்கில் கொண்டே சமநிலை தீர்மானிக்கப்படும் அதுபோல இணையச் சமநிலையும் அவ்வாறே இருக்கவேண்டும். அரசு தொலைக்காட்சி எப்படி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதுபோல அரசின் இணையத்தளங்கள் எல்லாம் இலவசமாக அரசே வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படும் போது இந்த இணையச் சமநிலை என்ற வாதம் வலுயிழக்க நேரும். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இணையச் சமநிலை பயன்படவேண்டுமே தவிர இலவசங்களைத் தடுப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.
- நீச்சல்காரன்
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே
- இந்திய அணுசக்தி துறையின் திட்டமும் திண்டாட்டமும்
- இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள்
- அணு உலை எதிர்ப்பும் உலக நாடுகளும்
- செர்னோபில் அணு உலை விபத்து
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
- அணுசக்தி - பொதுவான வாதங்கள்
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்