கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நந்தகுமார்
- பிரிவு: தொழில்நுட்பம்
சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களிலும், இணைய பயன்பாட்டினர்களிடையேயும் “Net Neutrality”(இணைய சமத்துவம்) எனும் ஒரு புதிய சொல் புழங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது தான் இந்தியத் தொலை தொடர்பு ஒழுங்கு அமைப்பு வாரியம் (TRAI) Regulatory Framework for Over-the-top (OTT) services என்னும் புதிய ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. அதில் நமக்கு இணைய சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வலைதளங்களும் தனித்தனியே விலையை நிர்ணயத்து வசூலிக்கலாம் என்று ஒரு கார்ப்பரேட் நல யோசனையை முன்வைக்க, மக்கள் தங்கள் எதிர்ப்பை முழுவேகத்தில் பதிவு செய்தார்கள்.
இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்த அதிகார வர்க்கம் அடுத்து களத்தில் இறக்கிய சூப்பர் ஹீரோ(super hero) தான் facebook நிறுவனத்தின் நிறுவனரான Mark Zuckerberk. எப்படி இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அங்கு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல சல்மான் கான், அசின், கமல்ஹாசன் போன்றோர்கள் களம் இறக்கப்பட்டார்களோ, கூடங்குளம் பாதுகாப்பானது, இந்த அரசாங்கம் பேரிடரை சமாளிக்கும் வல்லமை பெற்றது என்று கூற அப்துல்காலம் போன்றோர் களம் இறக்கப்பட்டார்களோ, அது போலத்தான் Mark Zuckerberk களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
ஏப்ரல் மாத இறுதியில் TRAI’இன் புதிய ஆலோசனையை மக்கள் காறித் துப்ப, அப்பொழுது களத்தில் இறக்கப்பட்ட Mark Zuckerberk பயன்படுத்திய ஆயுதம் தான் interner.org. “இந்த உலகம் முழுவதும் நான் இலவச இணையதள வசதியைத் தரப் போகிறேன், இந்த உலக முழுவதையும் நான் இணையத்தால் இணைக்கப் போகின்றேன்” என்று கொக்கரித்தார் Mark Zuckerberk. இலவச இணைய வசதி நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் அதை எதிர்க்க வேண்டும் என்றும் கேக்கலாம். இங்குதான் Mark Zuckerberk வைக்கிறார் ஒரு twist. அதாவது உலகம் முழுவதும் இணையம் இலவசம், ஆனால் Mark Zuckerberk சொல்லும் இணையதளங்களை மட்டும் தான் நீங்கள் பயன்படுத்த முடியும். மற்றவை internet.org முலம் பயன்படுத்த முடியாது. இதுதான் internet.org’இன் சுருக்கம்.
TRAI சொல்லும் ஒவ்வொரு வலை தளங்களுக்கும் தனித் தனி விலை என்பதற்கும், internet.org சொல்லும் சில வலைத் தளங்கள் இலவசம்; மற்ற வலைத்தளங்கள் விலை என்பதற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. “பூ” வை “பூ” வென்றும் சொல்லலாம், “புஷ்பம்” என்றும் சொல்லலாம் என்ற கதை தான். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் TRAI சொன்ன போது அதை எதிர்த்த சிலர் internet.org என்று சொன்னவுடன் அதை ஆதரிக்க ஆரம்பித்தனர். “இலவசம்” என்ற சொல் யாரைத்தான் விட்டுவைத்தது?
இந்த internet.org பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் தான், இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் மோடி Facebook அலுவலகம் சென்றதும், மூவர்ணக் கொடி Profile Picture’யும். internet.org இணைய சமத்துவத்துக்கு எதிரானது என்ற கருத்தை, மக்களிடத்தில் பலபேர் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவாக சில மக்களும் அதைத் எதிர்க்க தொடங்கினர். அதன் பிறகு internet.org வேறு ஒரு முகமூடியை அணிந்து மக்களிடத்தில் வந்தது. அந்த முகமூடி தான் “Digital India”. Facebook சமூக வலைத் தளங்களில் இயங்கிய பலர் தங்கள் முகப்பு படங்களை(Profile Picture) மூவர்ண சாயம் அடித்தது அப்பொழுதுதான். நமது நண்பர்கள் தங்கள் முகப்பு படங்களுக்கு சாயம் அடித்தவுடன் நாமும் அதை பின்பற்றத் தொடங்கினோம். அப்படி அடிக்கும் பொழுது அவர்கள் internet.org எனும் சேவையை ஏற்பதாக ஒத்துக் கொள்கின்றனர் என்று facebook தனது Source Code’இல் எழுதி இருந்தனர். இதை சிலர் கண்டு பிடித்துக் கேட்டதற்கு எழுத்துப் பிழை செய்து விட்டோம் என்று கூறியது facebook நிறுவனம். எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நாம் மந்தை போல் செயல் பட்டதைக் கொண்டு அதிகார வர்க்கம் நம் கையை வைத்து நம் கண்ணைக் குத்தியது.
இந்த internet.org மற்றும் Digital India நாடகங்களின் பொழுதுதான் TRAI இரண்டாம் கட்ட கருத்துக் கேட்டலை mygov.in எனும் வலை தளத்தில் நடத்தியது. இப்பொழுது TRAI மூன்றாம் முறையாக மக்களிடத்தில் இணையத்தின் வாயிலாக கேட்டலை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தான் உலக நாயகன் Mark Zuckerberg, “Act now to save Free Basics in India” என்று அடுத்த பெயரை இட்டு அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் . இதற்கு நம் இணைய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் காக்கும் பொருட்டு நம் எதிர்ப்பினை பதிவு செய்தாக வேண்டும். மறுபடியும் “Free”, “இலவசம்” என்ற சொற்களுக்கு நாம் ஏமாறாமல் இருப்போம். அப்புறம் ஒன்றை நீங்கள் மறந்து விட வேண்டாம். இந்த Facebook தான் உங்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்காவின் NSA’வுக்கு உங்கள் அனுமதி இல்லாமல் கொடுத்த நல்லவர்கள்.
- நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்
- விவரங்கள்
- மு.நாகேந்திர பிரபு
- பிரிவு: தொழில்நுட்பம்
எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும். இதுவரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 92 தனிமங்கள் இயற்கையான வகையிலும் (உலோகங்கள் - 72, அலோகங்கள் - 16, உலோகப் போலிகள் - 4), 26 தனிமங்கள் செயற்கை முறையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 112 தனிமங்களுக்கு மட்டுமே International Union of Pure and Applied Chemistry (IUPAC) அதிகார பூர்வமாகக் குறியீடு வெளியிட்டுள்ளது. மேற்சொன்னவைகளைத் தாண்டி பிரபஞ்ச பொருள் அத்தனையும் சேர்மங்களாலே ஆனது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து சேர்மத்தை உருவாக்குகிறது.
சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் மற்றும் கரிமச் சேர்மங்கள் என இருவகைப்படும். பாறை, தாதுக்கள் போன்ற உயிரற்ற மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் ஆகும். தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் ஆகும். ஒரு சேர்மம் உருவாகும்போது வெப்பத்தை வெளியிடுதலோ, உறிஞ்சுதலோ நிகழ்கின்றது. ஒரு சேர்மம் அதற்கென்று தனியாக ஒரு குறிப்பிட்ட உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கிறது. சேர்மத்தின் பண்புகள் அதன் பகுதிப் பொருள்களின் பண்புகளிலிருந்து மாறுபடுகின்றது. ஒரு சேர்மத்தில் உள்ள பகுதிப்பொருள்களை இயற்பியல் முறைப்படி பிரிக்க இயலாது. சேர்மம் ஒரு படித்தானது. பிரித்து பார்க்க இயலாதது.
ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறை அது தன் கவர்ச்சிப் புலனுக்குள் இருந்தால் மட்டுமே கவர்ந்திழுக்கும். ஒரு மூலக்கூறினை நடுவாகவும், மூலக்கூறு கவர்ச்சி எல்லையை ஆரமாகவும் கொண்டு ஒரு கோளம் வரையப்படுமானால் அது அந்த மூலக்கூறின் கவர்ச்சிப் புலம் எனப்படும். ஒரு குவளை நீரில் கலக்கப்பட்ட நிற மையானது கலன் முழுவதுமாக பரவுகிறது என்பதன் மூலம் மூலக்கூறுகள் தொடர்ந்து நகர்ந்து ஒன்றோடொன்று கலக்கிறது என அறியலாம். எல்லா சேர்மங்களும் மூலக்கூறுகளுக்கிடையே இடைவெளியைக் கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளிகளை மட்டும் நிரம்பிவிடக்கூடியதாக ஒரு தனிமமோ அல்லது சேர்மமோ இருந்து சேர்ந்தால் அளவில் மாற்றம் அடைவது கிடையாது.
சோதனைக் குழாயில் இடப்பட்ட சர்க்கரையானது வெப்பப்படுத்தப்படும்போது உருகிப் பழுப்பு நிறமாக மாறும். மேலும் வெப்பப்படுத்தப்படும்போது கருகி கருப்பாக மாறுவதுடன் சோதனைக் குழாயின் விளிம்பில் நீர்த்துளிகள் தெரிவதைப் பார்க்கலாம். நீர்த்துளிகள் உருவான விதம் வெப்பப்படுத்துவதால் ஏற்பட்டனவே தவிர காற்று குளிர்வடைவதால் அன்று. எனவே, சர்க்கரை சிதைவுற்றே நீர் உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. எஞ்சியுள்ள கருமை நிறப்பொருள் கார்பனே. எனவே சர்க்கரை என்பது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இணைந்து உருவாவது என்று அறியலாம். இவ்வாறே சேர்மங்களில் சிலவாக அம்மோனியா = நைட்ரஜன் + ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு = கார்பன் + ஆக்ஸிஜன், சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) = சோடியம் + குளோரின் என்பனவற்றின் கூட்டு விதியால் உருவானவையே.
நீர் ஓரு சேர்மம். ஹைட்ரஜன் (மூலக்கூறு எடை 1) மற்றும் ஆக்சிஜன் (மூலக்கூறு எடை 16) என்ற இரண்டு தனிமங்களின் விகித கூட்டு. நீரை உலகத்தின் எந்த மூலையிலிருந்து, சூழலிலிருந்து எடுத்தாலும் அது தன் சேர்ம விதியின்படி தான் இருக்கும். மழை காலங்களில் வாகனங்களின் உட்புற கண்ணாடியில் படியும் நீர்த்திவலை, குளிர்ந்த பொருள் வைக்கப்பட்ட கலனைச் சுற்றி சேரும் நீர்த்திவலை, இரவில் பொழியும் பணித்துளி என இவையாவும் காற்றில் உள்ள ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வெப்பத் தன்மையை இழக்கும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து நீராக மாறுவதையும், வெப்பத்தை ஏற்கும் போது வாயு நிலைக்குச் சென்று விடுவதையும் உணர்த்துகிறது.
வெப்ப நிலை உயரும் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இயக்க ஆற்றல் அதிகரிப்பதால் துகள்கள் வேகமாக அதிர்வடைந்து மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. இதன் மூலம் துகள்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. பொருட்கள் ஒளியைப் பிரதிபலிக்கும் என்பதன் படி, பூமியின் மேற்பரப்பில் இருக்கும் வெப்ப அளவை விட சூரியனுக்கும் பூமிக்குமான இடைவெளி பகுதி குறைந்த அளவு வெப்பத்தையே கொண்டு இருக்கும்.
- மு.நாகேந்திர பிரபு (
- விவரங்கள்
- சதுக்கபூதம்
- பிரிவு: தொழில்நுட்பம்
மான்சாண்டோ நிறுவனம் ரவுண்ட் அப் என்ற களைகொல்லி மருந்தை பல காலமாக விற்பனை செய்கிறது. இந்த களைகொல்லி மிகவும் சக்தி வாய்ந்தது. பெரும்பாலான களைகளை இந்த களைகொல்லி அழித்துவிடும். முக்கியமாக பல புல் வகைகளை அழிப்பதால் விவசாயிகளிடமும் பிரபலமானது. ரேசன் கடைகளில் பெரிய கேன்களில் பிடித்து மண்ணெண்ணெயை விற்பனை செய்வது போல் இந்த களைகொல்லியை விற்பனை செய்யும் காலம் எல்லாம் இருந்தது. சில களைகளுக்கு எதிர்ப்பு தன்மை வந்து விட்டதாகவும், சில உடல் நல தீங்குகள் ஏற்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. இருந்தாலும் தற்போது உபயோகத்தில் உள்ள களைகொல்லிகளில் மிக பிரபலமானவற்றில் ஒன்று இது என்றால் அது மிகையாகாது.
இந்த களைகொல்லியை அடித்தால், வளர்ந்த நிலையில் உள்ள களை செடியுடன் பயிரையும் அழித்துவிடும் தன்மையுள்ளது. எனவே பயிரை விளைவிக்கும் முன் தண்ணீர் விட்டு களையை வளர செய்து இந்த களைகொல்லியை அடித்து களைகளை அழிக்க முடியும். ஆனால் வளர்ந்த நிலையில் உள்ள பயிர் இருக்கும்போது அதனுடன் வளர்ந்த களையை அழிக்க இதைப் பயன்படுத்த முடியாது. இதற்காக மாண்சான்டோ நிறுவனம் புதிய வகை ஜீன் மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதைகள் ரவுண்ட் அப் களைகொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது. எனவே பயிர் வளரும் போதும் இந்த களைகொல்லியை தெளித்தால் பயிர் உயிரோடு இருக்கும்; ஆனால் பயிரின் ஊடே வளரும் களை அழிந்து விடும்.
இதனால் உலகளவில் விவசாயிகளிடம் இந்த தொழில்நுட்பம் பிரபலமடைந்து இருந்தது. மான்சான்டோ மற்றுமல்லாது பிற விதை நிறுவனங்களும் தங்களது விதைகளில் ரவுண்ட் அப் எதிர்ப்பு ஜீனை இணைத்து விற்பனை செய்தார்கள். இதனால் மான்சான்டோவைப் பொருத்த வரையில் பிற விதை நிறுவனங்களிடமிருந்த ராயல்டியாக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பணமும், இதனால் ரவுண்ட் அப் களைகொல்லியின் விற்பனை ஏற்றமும் கிடைத்தது. பிற விதை நிறுவனங்கள் அதிக விளைச்சலைத் தரும் தங்களது விதைகளை உபயோகபடுத்தும்போது களை கட்டுபாட்டுக்கான எளிய வழியாக கூறி தனது நிறுவன விதைகளை விற்றன. விவசாயிகளைப் பொருத்தவரை விளைச்சளும் களை கட்டுபாட்டிற்கான ஒரு தீர்வாகவும் இது இருந்தது.
உலகை அதிர வைத்த ஆராய்ச்சி
அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உற்பத்தியாகும் சோளத்தில் பெரும் பகுதி இந்த தொழில்நுட்பத்தில் வளர்ந்ததே. இந்த வகை சோளம் மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சில வருடங்களாக மக்கள் உண்டு வருகின்றனர். 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் The Journal of Food and Chemical Toxicology என்ற ஆராய்ச்சிப் பத்திரிக்கையில் பிரான்சைச் சேர்ந்த செராலினி என்ற அறிஞரது ஆராய்ச்சிக் கட்டுரை அறிவியல் உலகத்தை அதிர வைத்தது. அவரது ஆராய்ச்சியின் படி ரவுண்ட் அப் ஜீன் மாற்றம் செய்யப்பட்ட சோளம் எலிகளுக்கு பல்வேறு சுகாதார கேட்டினை ஏற்படுத்துவதுடன் கேன்சர் கூட ஏற்படுத்தும் தன்மையுடையது. இது 2007ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் Department of Environmental Health and Toxicology செய்த ஆராய்ச்சிக்கும் 2012ம் ஆண்டு University of Nottingham செய்த ஆராய்ச்சியின் முடிவுக்கும் எதிர்மறையாக இருந்தது.
இந்த ஆராய்ச்சி பற்றி கூறிய செரிலினி, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட சோளத்தை ஒரு வருடத்துக்கு மேலாக எலியை சாப்பிட வைத்தால் தான் இந்தத் தீங்கு ஏற்படும் என்றும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் குறைந்த கால அளவிலேயே செய்து முடிக்கப்படுவதாகவும், அதனால் இந்த தீய விளைவை கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த ஆராய்ச்சி முடிவு உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரான்சு அதிபர் ஐரோப்பிய அளவிலான தடையை NK603 என்ற சோள வகைக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார். ரஸ்யா இந்த வகைப் பயிரை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. கென்யா மரபணு மாற்றப் பயிர்களுக்கு தடை விதித்தது. பொதுவாக ஐரோப்பிய நிறுவனங்கள் அதிக அளவில் பூச்சு மருந்து வேதிப் பொருட்களையும், அமெரிக்க நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளையும் உற்பத்தி செய்வதால் ஐரோப்பிய நாடுகளிடம் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவு ஐரோப்பாவில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான எதிர்ப்பை அதிகப்படுத்தியது.
ஆராய்ச்சி முடிவை திரும்ப பெற்ற பத்திரிக்கை
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை The Journal of Food and Chemical Toxicology திரும்பப் பெற்றுக் கொண்டது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு கேன்சர் பெரும் தன்மை அதிகமாக இயல்பிலேயே இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டதால் தான் கேன்சர் ஏற்பட்டது என்று மதிப்பிட சரியான புள்ளியியல் கோட்பாடுகளை பயன்படுத்தவில்லை என்றும் காரணம் கூறியது. அதே போல் ஆராய்ச்சியாளர் எவ்வாறு மரபணு மாற்றப் பயிர் கேன்சரை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிப் பூர்வமாக விளக்கவில்லை என்றும் கூறியது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைத் திரும்பப் பெற்றதனால் மரபணு மாற்றப் பயிருக்கு எதிரான உடல்நல கேட்டினை ஏற்படுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் மிகப் பெரிய ஆராய்ச்சிப் புத்தகங்களில் இல்லாமல் போனது.
இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவாக பல ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு மாற்றப் பயிருக்கு எதிரானவர்களும் உள்ளனர். இந்த ஆராய்ச்சி வெளிவந்த ஆறு மாதம் கழித்து, அந்த ஆராய்ச்சிப் பத்திரிக்கை Associate Editor for Biotechnology என்ற பதவியை ஏற்படுத்தி அந்தப் பதவிக்கு மான்சான்டோவின் முன்னாள் பணியாளரான Richard E. Goodman என்பவரை நியமித்தது அனைவரிடமும் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியது.
வளர்ந்து வரும் மக்கள் தொகையும், குறைந்து வரும் விவசாயத் தொழிலாளர்களும், குறைந்து வரும் விவசாய நிலப்பரப்பும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. மேலை நாடுகளில் சென்ற நூற்றண்டுகளில் இருந்தது போல் அடிமை முறை கொண்ட மலிவான தொழிலாளர்களோ, இந்தியாவில் இருந்தது போல் வர்ணாஸ்ரம முறைப்படி சொந்த மக்களையே அடிமையாக வைத்து மலிவான கூலித் தொழிலாளர்களாக உபயோகப்படுத்தி அதிக தொழிலாளர்களைக் கொண்ட விவசாயத்தை செய்வது தற்போது வாய்ப்பில்லை. அதே போல் குறைந்த நிலப் பரப்பில் தொழில்நுட்பம் கொண்டு உற்பத்தித் திறனை அதிகப்படுத்தினால் தான் அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். மேலை நாடுகளில் இருப்பது போல் இயற்கை விவசாயத்தில் இரு மடங்கு விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் கூட கோடிகணக்கான ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு உற்பத்தியை தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யத்தான் வேண்டும்.
ஆனால் இது போன்ற சுகாதார ஆபத்து இருக்குமா அல்லது இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சிகளை ஒரு சில வருடங்கள் பல்வேறு நாடுகளில் கூட்டாக யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நடு நிலைமையுடன் செய்வது அவசியம். அப்போது தான் மக்களும் பயமின்றி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர். நடு நிலைமையிலான பல்வேறு ஆராய்ச்சிகளால் இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் இந்த ஆராய்ச்சியின் பயன் அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடையும். அதே சமயம் மிகப் பெரிய சுகாதார ஆபத்து இருக்குமானால் ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு மாற்று முறை நோக்கி ஆராய்ச்சியை கவனம் செலுத்தலாம்.
1940களில் பூச்சுக்கொல்லியாக அறிமுகப்படுத்தப்பட்ட DDT, இயற்கை மற்றும் மனித சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் சீர்கேட்டைப் பற்றி ராச்சல் கார்ல்சன் என்ற அறிஞர் 1962ல் மவுன வசந்தம் என்ற புத்தகம் மூலம் வெளிப்படுத்தினார். அவருக்கு எதிராகவும் பெரும் அவதூறுகள் வெளியிடப்பட்டன. 1972ல் அவரது கருத்தில் உண்மை இருப்பதை அறிந்து DDT விவசாய உபயோகத்துக்கு தடை செய்யப்பட்டது. அதே நிலை தற்போதைய மரபணு மாற்ற ஆராய்ச்சிக்கும் வந்துவிடக் கூடாது.
- சதுக்கபூதம் (
- விவரங்கள்
- ராஜு சரவணன்
- பிரிவு: தொழில்நுட்பம்
வெப்பத்தை மூலமாகக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பல செலுத்தங்களில் (Process) வெப்பம் பலவகைகளிலும் விரயமாகிறது. இந்த விரயங்களை மீண்டும் மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய நுட்பத்தை (Technology) ஆஸ்திரேலியவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மின்நிலையங்கள் மற்றும் வாகன புகைக் கழிவுகளில் வெளியேறும் வெப்பத்தில் இருந்து நேரிடையாக மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
மோனஷ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் அயனி திரவத்தைச் (Ionic Liquid) சார்ந்த கரிய உமிழ்வற்ற (Carbon Emissions) அதிசக்தி வெளிப்பாடு கொண்ட மின்சாரம் தயாரிக்கும் வெப்பசெல் (Thermo Cell)ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது சுமார் 212 முதல் 392 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இயங்கக்கூடியது.
ஒரு பொருளின் ஒரு பகுதியை குளுமையான பரப்பிலும் மற்றொரு பகுதியை சூடான பரப்பிலும் வைக்கும் போது அந்தப் பொருளில் சூடான பகுதியில் இருந்து குளுமையான பகுதியை நோக்கி மின் நகர்வு ஏற்படும். இதைச் செய்யும் சாதனம் தான் வெப்பசெல் (ThermoCell) என்று அழைக்கப்படுகிறது.
மின்நிலையங்களில் தரங்கெட்ட(Low Grade) நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது அதிலிருந்து கழிவாக வெளியேறும் 266 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட புகையில் இந்த புதுவித முறையைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மோனஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மின்நிலையங்களில் புகையுடன் சேர்ந்து வெளியேறும் வெப்பத்தை வெப்பசெல்லின் (ThermoCell)ஒரு பகுதியிலும், காற்று மற்றொரு பகுதியிலும் படும்படி வைக்கும் போது மின்சாரம் சேமிக்கப்படுகிறது/உருவாக்கபடுகிறது.
"பொதுவாக வெப்பசெல்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த நீரை மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் நாங்கள் உருவாக்கிய வெப்பசெல்களில் நீருக்குப் பதில் மின்பகுபொருள் கொண்ட திரவப் பொதியை (Liquid packed with electrolytes) பயன்படுத்துகிறோம். அது அதிக கொதிநிலையை தாங்கக் கூடியது" என்று மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சூடான எந்தவொரு பொருளில் இருந்தும் மின்சாரத்தை உண்டாக்குவது இந்த வெப்பசெல்கள் (ThermoCell). சூடான இடம் என்றால் கார்களின் எஞ்சின்கள், சூரிய வெப்பம், மின்நிலையங்கள் என சொல்லலாம். ஏன் மனிதனின் உடல் சூட்டில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் (கூகுளின் அறிவியல் சந்தையில் இதைப் பற்றிய செய்தி உண்டு)
வெப்பசெல்கள் சாதாரண மின்சார தயாரிப்பு செலுத்தங்களைக் (Process) காட்டிலும் விலை மலிவானது. மேலும் மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் மின்சார வெளிப்பாட்டை (Output)அதிகரிக்க அதற்குரிய மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே
- இந்திய அணுசக்தி துறையின் திட்டமும் திண்டாட்டமும்
- இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள்
- அணு உலை எதிர்ப்பும் உலக நாடுகளும்
- செர்னோபில் அணு உலை விபத்து
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
- அணுசக்தி - பொதுவான வாதங்கள்
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்
- அணுகுண்டும் அணு உலையும்
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்