கொழும்பு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சூரியமால் இயக்கம் மிகப்பெரிய –புகழ்வாய்ந்த இயக்கமாக ‍ இடதுசாரி மாணவர்கள் முன்னெடுத்த முதலாவது பெரிய இயக்கமாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து இராணுவத்தில் காயமுற்றவர்கள் மற்றும் இறந்தோர் குடும்பங்களுக்கு உதவும் முகமாக பொப்பி நிதியம்(Poppy fund) என்ற நிதியம் உருவாக்கப்பட்டு வருடா வருடம் நிதி சேகரிக்கப்பட்டு வந்தது. பொப்பி மலரை விற்று நிதி சேகரிக்கப்பட்டதால் பொப்பி நிதியம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இச்சேமிப்புக்கு அக்காலத்தில் உலகிலேயே அதிகளவு பணத்தை இலங்கை வழங்கி வந்தது. மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சூரிய காந்தி மலரை விற்று வறிய மக்களுக்கு நிதி சேகரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் சேர்க்கப்பட்ட பணம் வறுமையில் வாடிய மக்களுக்கு உதவவும் அவர்தம் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சூரிய காந்தி இயக்கம் (சூரிய காந்தி சிங்களத்தில் சூரியமால் என்றழைக்கப்பட்டது) வேகமாகப் பற்றிப் பரவியது.

ஏகாதிபத்திய யுத்தத்துக்கு அவர்தம் இராணுவத்துக்கு நாம் உதவத் தயாரில்லை என்று இந்த இளையோர் வாதிட்டனர். இந்த இயக்கம் பலமாக வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில் தான் 1933இல் வெள்ளவத்தைத் துணி மில்லில் (Textile Mill) வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற் குதித்தனர். தமது சம்பளம் வெட்டப்படுவதற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இந்த தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராட ஏ.ஈ.குணசிங்க தலைமை வகித்த தொழிற்சங்கம் முன்வரவில்லை. மாறாக இந்த வேலை நிறுத்தம் சட்டத்துக்குப் புறம்பான வேலை நிறுத்தம் என்று வாதாடிய குணசிங்க, இந்தத் தொழிலாளர்களுக்கு எதிரான முகமாக இனவாதச் சொல்லாடல்களை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குள் அறிமுகப்படுத்தினார். வெள்ளவத்தை மில்லில் வேலை செய்தவர்களிற் பலர் இந்திய மற்றும் இலங்கைத் தமிழ்பேசும் தொழிலாளர்களாக இருந்தமையை அவர் தமது இனவாதப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார். இதே தருணம் சூரியமால் இயக்கத்தின் மூலம் கவனத்திற்கு வந்திருந்த இளம் இடதுசாரிகள் இந்த வேலை நிறுத்தத்துக்குத் தமது முழு ஆதரவையும் வழங்கினர்.

குணசிங்கவின் இனவாதப் பிரச்சாரத்தை முறியடிக்க வெள்ளவத்தைத் தொழிலாளர்களுக்கென தனிப்பட்ட தொழிற்சங்கத்தை உருவாக்கிய இவர்கள், வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினர். இது ஒரு முக்கிய நிகழ்வு. இனவாதப் பிளவு எவ்வாறு தோற்கடிப்பட்டு வந்தது என்பதற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குணசிங்கவின் செல்வாக்கு தொழிலாளர்கள் மத்தியில் வேகமாக மங்கத் தொடங்கி விட்டது.

மலேரியா

அடுத்த ஆண்டு 1934இல் பரவிய கொடிய மலேரியா நோயும் இளம் இடதுசாரிகளின் உறுதியான நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துக்காட்டியது. அத்தருணம் பரவிய இக்கொடிய நோய்க்கு குறைந்தபட்சம் 125,000 மக்கள் பலியாகியதாகக் கூறப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உணவும் மருத்துவ உதவிகளும் வழங்குவதில் இடது சாரி மாணவர்கள் முன்னின்று உழைத்தனர். இதன்மூலம் பிலிப் குணவர்த்தன (Philip Gunawardena), என்.எம்.பெரேரா (N M Perera), கொல்வின் ஆர் டி சில்வா (Colvin R de Silva) போன்ற பெயர்கள் தொழிலாளர் மற்றும் வறிய மக்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர்களாயின. வடக்கிலும் வறிய மக்கள் மத்தியிலும் தொழிலாளர் மத்தியிலும் வேலை செய்து வந்த யாழ்ப்பாண மாணவர் சபை தெற்கு மாணவர்களுடன் நெருங்கிய உறவை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலாவது அரசியற் கட்சியின் தோற்றம்

இதைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாணவர் சபையும், தெற்கு இளம் இடதுசாரிகளும் ஒன்று சேர்ந்து 1935ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சி (Lanka Sama Samaja Party) என்ற இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியைத் தோற்றுவித்தனர். சமசமாஜ கட்சி இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது அரசியற் கட்சியாக மட்டுமின்றி, இலங்கைக்கான சுதந்திரக் கோரிக்கையை முன்வைத்த முதலாவது அரசியற் கட்சியாகவும் இருந்தது. அக்காலத்தில் சிங்கள- தமிழ் - முஸ்லிம் - மலையக இளையோர் இணைந்து செய்த அரசியலை உள்வாங்கும் அளவுக்கு முதிர்ச்சியான எந்த அரசியற் கட்சியும் அன்று இலங்கையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்சியைத் தோற்றுவித்த ஆரம்ப உறுப்பினர்கள் சோசலிசச் சமுதாயத்தைக் கட்டமைப்பதைத் தமது குறிக்கோளாக ஏற்றுக் கொண்டனர். இக்கட்சியைத் தொடக்கி வைத்த 40க்கும் அதிகமான இளைஞர்களில் ஏராளமான தமிழ் சோசலிஸ்டுகளும் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. சிங்களத்திலோ தமிழிலோ சோசலிசம் என்ற சொல்லுக்கு இணையான சொல் இல்லாததால் இரு மொழியிலும் அர்த்தம் தரவல்ல சமசமாஜ என்ற சொல் சோசலிசத்துக்கு நிகரான சொல்லாக அறிமுகப்படுத்தப்பட்டு கட்சி பெயராகச் சிங்கள-தமிழ் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் சமசமாஜ என்ற சொல் சிங்களச் சொல்லாகவே தமிழர்கள் மத்தியில் பார்க்கப்பட்டதால் பின்பு இனவாதம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இப்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்யத் தடையாகவிருந்தது உண்மையே.

இரண்டாம் உலக யுத்தம்

இரண்டாம் உலக யுத்தத்துக்கு எதிராக சமசமாஜிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். யுத்தத்துக்கு எதிராக அவர்கள் எடுத்த நிலைப்பாடு கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்களித்தது. இந்தியாவில் சத்தியாக்கிரக போராட்டத்தை இரத்துச் செய்த காந்தி, இந்தியர்களை பிரித்தானியாவுக்கு ஆதரவாகப் போராடச் சொன்ன அதே தருணம் இலங்கையில் சமசமாஜிகள் யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.

ஏகாதிபத்தியத்துக்காகச் சண்டை போட நாங்கள் தயாரில்லை என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். சூரியமால் இயக்கத்தின்போது யுத்தத்துக்கு எதிராக அவர்கள் வாதிட்டதும் அதற்கு அவர்களுக்குக் கிட்டியிருந்த பேராதரவும் இத்தருணத்தில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியது. இது அவர்களைச் சரியான போராட்ட வழிமுறைகள் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது.

பல்வேறு வர்க்கங்கள் ஒன்றிணைந்த பொது ஒன்றுபடலை (Popular Front) வலியுறுத்திய ஸ்டாலினிஸ்டுகள் மூன்றாம் அகிலத்தில் பங்குவகித்த கட்சிகளைத் தமது கொள்கைகளைப் பின்பற்றுமாறு தூண்டினர். தொழிலாளர் அரசான சோவியத் யூனியனை ஏகாதிபத்திய தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதுதான் முக்கியமானது, ஆதலால் சோவியத் யூனியன் சார் நாடுகளில் இருக்கும் கம்யூனிச கட்சிகள் அந்தந்த நாட்டு முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். இந்தியாவிலும் கம்யூனிச இயக்கம் சிதிலமடைய இது உதவியது. கம்யூனிஸ்டுகள் காங்கிரசில் சேர்ந்து இயங்கும்படி பணிக்கப்பட்டனர். இதேபோல் உலகெங்கும் புரட்சிகர இடதுசாரிகள் பிழையாக வழி நடத்தப்பட்டனர். இது புரட்சிகர மாற்றத்துக்கான சாத்தியம் பல நாடுகளில் அழித்தொழிக்கப்படுவதற்கு வழியேற்படுத்தியது. தமது அரச இயந்திரத்தைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருந்த ஸ்டாலின் ‍ அதற்காக கிட்லருடன் கூட ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்த ஸ்டாலின் ‍ உலகெங்கும் புரட்சிகர சக்திகள் உடைபட்டு பல்வேறு நாடுகளில் ஒடுக்கப்படுபவர்களின் எதிர்காலம் முடக்கப்படுவது பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.

இந்த மோசமான தொழிலாளர் வர்க்கத்துக்குப் புறம்பான கொள்கைகளை எதிர்த்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒவ்வொரு நாட்டிலும் யுத்தத்துக்கு எதிராக மற்றும் பாசிசத்துக்கு எதிராக தொழிலாளர்கள்கள் ஒன்றுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். பாசிசத்தை எதிர்ப்பதற்காக ஏகாதிபத்தியத்தை நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் முட்டாள்த் தனத்தைச் சரியானபடி விமர்சித்த அவர்கள், எவ்வாறு பாசிசத்தை எதிர்ப்பது என்பது தொடர்பாகத் தெளிவான நடைமுறைச் செயற்திட்டங்களை வரையறுத்தனர். இத்தருணம் மூன்றாம் அகிலத்தின் முரட்டுத்தனமான பிடியில் பல்வேறு நாட்டு இடதுசாரி இயக்கங்கள் இருந்தமையால் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அதை எதிர்த்துச் சரியான வழியில் தொழிலாளர்களை வழிநடத்த நான்காம் அகிலத்தைத் தோற்றுவிக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இந்தப் பின்னணியில் தான் இலங்கையில் யுத்தத்துக்கு எதிராகத் திரண்ட சோசலிஸ்டுகள் -ஏகாதிபத்திய யுத்தத்திற்குத் தொழிலாளர்கள் பலிகிடாய் ஆகமுடியாது என்று பிரச்சாரம் செய்த சோசலிஸ்டுகள் -ஏற்கனவே ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களுடன் பரிச்சயமான சோசலிஸ்டுகள் ‍ முதற் தடவையாகத் தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.

பதவிக்கு முண்டியடித்த உயர்வர்க்கத்தினர்

GG_Ponnambalam_Chelvanayagam

யுத்த முன்னெடுப்புகளின்போதோ, அதற்கு முன்போ தமிழ் சிங்கள உயர்வர்க்கம் ஒருபோதும் பிரித்தானிய ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்பைத் செய்யவில்லை. மாறாக லெயிஸ்லேட்டிவ் கவுன்ஸில் பதவிகளுக்காக சிங்கள் - தமிழ் வர்க்கத்தினர் முண்டியடித்துப் போட்டி போட்டனர். இத்தருணத்தில் தான் ஜி.ஜி.பொன்னம்பலம் 50க்கு 50 பிரதிநிதித்துவ கோரிக்கையை ஆரம்பித்தார். சிங்கள உயர் வர்க்கத்தினர் ஒருசொட்டும் விட்டுக் கொடுக்க மறுத்தமையால் தமிழ் உயர்வர்க்க‌த்தினர் மத்தியில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகப் பொன்னம்பலத்தின் ஜம்பதுக்கைம்பது கோரிக்கை 1938ல் இருந்து ஒரளவு செல்வாக்கு பெறத்தொடங்கியது. அந்தச் செல்வாக்கை அரசியல் மூலதனமாக்கும் முயற்சியுடன் 1944ல் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசை (All Ceylon Tamil Congress) ஜி.ஜி.பொன்னம்பலம் தோற்றுவித்தார். அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகள் உட்பட முக்கிய பதவிகள் பல சிங்கள் உயர் வர்க்கத்தினரால் நிரப்பப்பட்டிருந்த இக்காலத்தில் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய தூண்டுதல் செல்வாக்குப் பெறத்தொடங்கியது ஆச்சரியமானதல்ல.

இதே வேளை சிலோன் தேசிய காங்கிரசின் தலைமை உறுப்பினரான டி.எஸ்.சேனநாயக்கா, பொன்னம்பலத்துடன் நெருங்கிய நட்புப் பாராட்டி வந்ததும் கவனத்திற் கொள்ளத் தக்கது. சேனநாயக்காவைப் பொறுத்தவரை, வளரும் இடதுசாரிய இயக்கமே பெரிய கிலியை உண்டு பண்ணியிருந்தது. ஸ்டாலினின் கட்டளைப்படி சிலோன் தேசிய காங்கிரசில் சேர்ந்த கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரிப்பதைக் கடுமையாக எதிர்த்த சேனநாயக்கா கட்சியில் இருந்து இராஜினாமா செய்தார். அதன்பிறகு 1946ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆங்கிலேய ஆட்சியாளரின் ஆசியுடன் ஜக்கிய தேசியக் கட்சியைத் (United National Party) தோற்றுவித்தாரவர். இக்கட்சி தோற்றுவிக்கப்படும் வரையும் இலங்கை முதலாளித்துவ சக்திகளுக்கென்று தனியான அரசியற் கட்சி இல்லாமல் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. முதலாளித்துவக் கட்சி தோன்ற முதலே இடது சாரி கட்சி தோற்றுவிக்கப்பட்டமையும் இலங்கையின் குறிப்பிடத்தக்க தனி வரலாறாகும்.

சுதந்திரம்?

Dudley Senanayakeஇரண்டாம் உலக யுத்தத்தின்போது இலங்கையின் பிராந்திய முக்கியத்துவம் அதிகரித்தது. இலங்கையைத் தமது நலன்களுக்குத் தொடர்ந்தும் உபயோகிக்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் டி.எஸ்.சேனநாயக்காவின் வேண்டுதல்களுக்கு இணங்கினர். 1947ஆம் ஆண்டு யூன் 18ஆம் திகதி ‘முழு அதிகாரமும்’ கையளிப்பதாகவும் சேனநாயக்காவின் கோரிக்கைகளை ஏற்பதாகவும் பிரித்தானிய ஆட்சியாளர் அறிவித்தனர். இதற்குப் பின்னணியில் இருந்தது இலங்கையில் வேகமாக வளர்ந்து வந்த இடதுசாரிகள் பற்றிய பயமே என்பதை இன்று வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் பலர்கூட ஒத்துக் கொண்டுள்ளனர். இதற்கு முதல் 53ஆம் ஆண்டளவில் புதிய யாப்புமுறை ஒன்றை அமுலுக்குக் கொண்டுவர மட்டுமே பிரித்தானிய ஆட்சியாளர் ஒத்துக்கொண்டிருந்தனர். இதற்கு இலங்கை வலதுசாரிகளிடமும் எதிர்ப்பிருக்கவில்லை. ஆனால் அவர்கள் யுத்தத்தின் பின் அவசர அவசரமாகத் தமக்கு நம்பிக்கையான உள்ளுர் (சுதேசி) உயர் வர்க்கத்திடம் அதிகாரத்தைக் கைமாற்றுவதில் மிக மும்முரமாக இயங்கினார்கள்.

இடதுசாரி கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு பெருகி வந்தது ஆளும்வர்க்கத்துக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. 1946ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வேலை நிறுத்தத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. 1947இல் நிகழ்ந்த பொது வேலை நிறுத்தம் மிகவும் முக்கியமானது. இதுவரை நிகழ்ந்த வேலை நிறுத்தங்களில் மிகப்பெரிய வேலை நிறுத்தமாக இது இருந்தது. ஜம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்த வேலை நிறுத்தம் ஆளும் வர்க்கத்தை ஒரு உலுப்பு உலுப்பியிருந்தது. அத்தருணம் கவர்னராக இருந்த சேர் கென்றி மொண்க் மேசன் (Henry Monck-Mason) இவ்வேலை நிறுத்த காலத்தில் எழுதியிருந்த குறிப்பொன்று முக்கியமானது. அவர் குறிப்பு வருமாறு.

‘நான் அப்போது கண்டியில் இருந்தேன். யோர்ஜ் டி சில்வா (George De Silva) உடனடியாக எதிர் நடவடிக்கை எடுக்கும்படி என்னைத் தூண்டினார். நான் உடனடியாக கொழும்பு சென்று மந்திரிகளைச் சந்தித்தேன். அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தி சர்வாதிகார அதிகாரத்தை நிலைநாட்டும்படி எல்லோருமாகச் சேர்ந்து என்னை வற்புறுத்தினர். இவ்வாறு அவசர காலச் சட்டத்தை அறிமுகப்படுத்திச் சகல அதிகாரங்களையும் கையிலெடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருந்ததை மிக மிக இரகசியமாக நாம் வைத்திருந்தோம். ஆனால் அவ்விடயம் இவர்களுக்கு எப்படியோ தெரியவந்திருந்தது.

அவர்கள் பங்குபற்றிய அரச கவுன்சிலும் இத்தகைய அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தலாம் என்று நான் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். இது சரியான தருணம் என்று நினைத்தால் அவர்கள் அச்சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரலாம் என்றும் அவ்வாறு அவர்கள் செய்ய நேரிட்டால் அவர்களுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும் என்பதையும் நான் தெரிவித்தேன். அவர்கள் அதன்படியே செய்தனர். சட்டப்படி வரையறுக்கப் பட்டிருந்ததை விட அதிகமான தண்டனைகளை அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வழங்கினர். இவர்களது இந்நடவடிக்கை தப்பித்தவறி விமர்சனத்துக்குள்ளாகினால் என் பெயரைச் சொல்லித் தப்பித்துவிடும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததை அறிந்திருந்ததாலேதான் நான் இவ்வாறு செயற்பட்டேன்’

வேலை நிறுத்தத்தை உடைக்க வேகமாகக் கூட்டுத் தீர்மனத்தை அமுல்படுத்தி கடும் தண்டனைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்கிய இலங்கை உயர் வர்க்கம் எவ்வாறு பிரித்தானிய ஆளும் வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்தது என்பதையும் - பிரித்தானிய ஆட்சியாளர் எவ்வாறு தமது வர்க்க நலனைக் காப்பாற்ற இலங்கை உயர் வர்க்கத்திடம் அதிகாரத்தைக் கைமாற்ற முன்வந்தனர் என்பதையும் விளக்க மேற்கண்ட மேற்கோள் மிகச் சிறந்த உதாரணம். மக்கள் எழுச்சியின் மூலம் அதிகாரம் இடதுசாரிகள் வசம் நழுவிப் போய்விடாமல் இருப்பதில் ஏகாதிபத்தியமும் உள்ளுர் முதலாளிகளும் குறியாக இருந்தமையை இது தெளிவாகப் படம் போட்டுக் காட்டுகின்றது.

இந்த வேலை நிறுத்தத்தின் போது சிங்கள-தமிழ்-முஸ்லிம்-பேகர் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமை குறிப்பாக அவதானிக்கப்பட வேண்டியது. சிங்கள-தமிழ் உயர் வர்க்கம் பதவிகளுக்காக அடிபட்டுக்கொண்டிருந்த இத்தருணத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்தமை முக்கியமானது. இதன் காரணமாகத்தான் இனவாரியான பிளவு இக்காலத்தில் கூர்மையடைய முடியாமல்  இருந்தது.

பாலதம்பு (Bala Tampoe)  கே.வைகுந்த வாசன் (K Vaikunthavasan) ஏ.ஆர். ஆசீர்வாதம் (A R Asirwatham) மற்றும் ஜெஃப்ரி குணநாயகம் (Geofry Gunanayagam) முதலான தமிழ்த் தொழிலாளர் தலைவர்கள் இந்த வேலை நிறுத்தத்தின் போதுதான் முன்னணிக்கு வந்து அறியப்பட்டவர்களாயினர்.

இத்தருணத்தில் என்.எம்.பெரேரா (N M Perera) தலைமையில் நடந்த தொழிலாளர் ஊர்வலத்தில் பங்குபற்றிய வேலுப்பிள்ளை கந்தசாமி (Velupillai Kandasamy) என்ற தொழிலாளர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல், மரணச்சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது வைத்தியசாலையில் இருந்து ரயில்நிலையம் வரையும் அவருடலைச் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் தோள்களில் சுமந்து சென்றனர். அவரது உடலை வழியனுப்பி வைக்கப் பெருந்தொகைத் தொழிலாளர்கள் இரயில் நிலையத்தில் திரண்டிருந்தனர். இந்த ஒற்றுமையும் இவர்தம் விடாப்பிடிப் போராட்டமும் ஆளும் வர்க்கத்துக்குப் பெரும் கிலியை உண்டாக்கியிருந்தது. பின்னாள் பிரதமரும் சிறிலங்கா சுதந்திர கட்சி தலைவரும் - தனிச்சிங்கள மொழிச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவருமான- பண்டாரநாயக்காவே (SWRD Bandaranaike) பிற்காலத்தில் பிரித்தானிய ஆளும்வர்க்கம் பின்வாங்கியதற்கு இவ்வேலை நிறுத்தம் ஒரு முக்கிய காரணம் என்பதை ஒத்துக் கொண்டிருந்தார்.

‘கந்தசாமியைச் சுட்டுக் கொன்ற குண்டு பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த குண்டானது’ என்ற அவரது கூற்று நியாயமானதே.

இந்த தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டமே பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க முக்கிய காரணமானதேயன்றி முதலாளித்துவ உயர்வர்க்கத் தலைவர்களின் ‘போராட்டமல்ல’. வலதுசாரியப் பாடப் புத்தகங்களில் படிப்பிக்கப்படுவது போல் பிரித்தானியர் ஒன்றும் இரக்கப்பட்டுச் ‘சுதந்திரத்தை’ தாரை வார்த்துவிட்டுப் போகவில்லை.

தொடர்ந்து.........

பகுதி : 5.  அதிகாரத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திணறிய வலதுசாரிகள்

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It