கடைசி மரணத்தை இன்றோடு முடித்துக் கொள்
பிரபஞ்ச மினுங்களுக்கு மரணம் நட்சத்திரங்கள் அல்ல
எல்லாம் தாண்டி இயற்கையிடம் கெஞ்சுகிறேன்
ஆழ்மனதில் இருந்து நான் நம்புவதெல்லாம்
எல்லாம் சரி ஆகி விடும் என்பது மட்டும் தான்
அடைபட்டது குறித்து ஒரு சலிப்பும் இல்லை
எவர் மீதும் எந்த குற்றச்சாட்டும் இல்லை
நேரத்துக்கு எனக்கு சாப்பிடக் கிடைத்து விடுகிறது
தங்குவதற்கு வீடு இருக்கிறது
அன்பான உறவுகள் என்னைச் சுற்றிலும்
இது எதுவுமற்ற ஓர் உலகம் வாசல் தாண்டி இருப்பதை
ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொள்கிறேன்
செத்துப் போக காத்திருக்கும் சக மனிதன் ஒருவனின்
இருமலுக்கு பதில் சொல்ல முடியாத எதிர் வினைக்குத்தான்
இன்னமும் என் கதவு அடைத்தே கிடக்கிறது
சுயநலத்தில் இருந்தே பொதுநலம் பிறக்கிறது
இன்னொரு கதவையும் சாத்தியே வைக்கிறேன்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.