lonely devilதனித்தலையும் சர்ப்பம் நான்....
என் இடம் விட்டு தற்செயலாய் வெளியேறினேன்...
எதிர்படுவோரையெல்லாம்
எதிரியென பாவித்தேன்!

பிளவு நாக்கினை வெளிநீட்டி
துழாவிக் கொண்டலைந்ததேன்.
தனித்தே இருந்ததனால் எனக்கோ..
தாகம் தீராதிருந்தது...

என் இடம் தவறவிட்டதன்
தவிப்பும் இருந்தது...
தப்பிக்க வழி தேடி
தனித்தே அலைகிறேன்!

புற்று இடித்து
புது வீடு கட்டியதறியாது.
தனித்தலையும்
சர்ப்பம் நான்!
சற்று
தவித்தேயலைகிறேன்!

ஆறு தேடியலையும்
மழையைப் போல..
வீடு தேடியே
வீதியெங்கும் அலைகிறேன்!

என்னைக் காக்கவே
தக்க வைக்கிறேன்
விஷமதனை...
எனைச் சீண்டுவோரைக்
கண்டே தான்...
சீறுகிறேன் நான்!

விஷமிகளின் மத்தியிலே
விஷங்கொண்டலைகிறேன்!
வன்மமிக்கோர் மத்தியில்
நான் வாழ வைத்திருக்கிறேன்..
விஷமதனை!
தனித்தே வாழும் சர்ப்பம்
நான்!
தற்போது தவித்திருக்கிறேன்!

- இசைமலர்

Pin It