எப்பொழுதாவது வந்து
பாட்டியின் குசலம் விசாரித்துச் செல்லும்
சித்தப்பாவும்
அத்தையும்
இரகசித்துக்கொண்டார்கள்
அவ்வளவாய் அம்மா
பாட்டியை அக்கறைப்படுவதில்லையென்று.

-----

சாராயமருந்த வந்த
கனகசுப்புவும் மாணிக்கமும்
யதேச்சையாக
ஒரே டேபிளில் சந்திக்க நேரும் பொழுது
தங்கள் நலன்களை
உறுதி செய்துகொள்கிறார்கள்
அண்ணே சௌக்கியமா?
நான் சௌக்கியம் நீங்க?

-----

அந்தக்கால
வாகனக் கண்காட்சியென்றுதான்
சொல்லியழைத்தார்கள்
வலமும் இடமும்
உள்ளும் புறமுமாய்
நன்றாய் அலசிவிட்டேன்
பால்ய கால
நொங்கு மட்டை வண்டியை
காணவே இல்லை.

Pin It