ஆழ்ந்த உறக்கத்தில் வருவதில்லை கனவுகள்
அரையுறக்க பகல் கனவுகள் பலிப்பதுமில்லை
ஆகவே நீ கண்திறந்த நிலையிலேயே கனவு காணடா கருப்பா!
கோட்டு சூட்டு போட்ட முதலாளியாகி
காசு பணத்தில் புரள்வதுபோல கனவு வேண்டாமடா உனக்கு
சேஷசமுத்திரம் பொதுப்பாதையில் அமைதியாக தேரோட்டிவிட்டு
எரிக்க முடியாத வீட்டில் நிம்மதியாக தூங்குவதுபோல
எரித்தவன் எரிந்த சாம்பலில் நீதிமாதா உயிர்த்தெழுதல்போல்
அற்ப சொற்பக் கனவையாவாது காண்பாயாடா கருப்பனே
விழிப்பாய் இருக்கும்போது கண்களில் அலைமோதும் கனவுகள்
காலத்தைப் புரட்டும்
உரிமைகளை வெடுக்கென்று பிடுங்கியெடுக்கும்
அதனாலே கருப்பா கண்திறந்த நிலையில் கனவு காணடா நீ!

- வெ.வெங்கடாசலம்

Pin It