விளைவயல் நெற்கதிர் குறையக் கவர்ந்து
வளைக்குள் சேர்க்கும் எலிகளைப் போல
இயற்கை வளத்தில் உழைப்பின் படைப்பைச்
சுயநல மாகத் திருடி இலாப
வேட்டை யாடும் முதலியின் ஆட்சி
கேட்டை விளைத்து நாட்டை அழிக்கும்.
உழைப்பால் விளைந்த அனைத்தையும் பொதுவாய்
மழைபோல் வைத்து உழைப்பின் அளவில்
ஊதியம் தன்னில் மனநிறை வடையும்
தீதிலார் ஆட்சியே நாட்டைக் காக்கும்
(விளைவயலில் விளைந்த நெற்கதிர்களைக் கவர்ந்து எலியானது தன் வளையில் கொண்டு போய்ச் சேமித்துக் கொள்வதால் வயலில் அவற்றின் அளவு குறைகிறது. அது போல இயற்கை வளத்திலிருந்து உழைப்பினால் உருவாக்கப்பட்ட பொருட்களை முதலாளித்துவ ஆட்சி, இலாபம் என்ற பெயரில் வேட்டையாடி (உழைப்பவர்கள் பெற வேண்டிய பங்கைக் குறைத்து) நாட்டை அழிக்கிறது. உழைப்பால் விளைந்த பொருட்கள் அனைத்தையும் மழை போலப் பொதுவாய் வைத்து, அவரவர் உழைப்பின் அளவிற்கு ஊதியம் அளித்து மன நிறைவு அடையும் தீமை இல்லாத (சோஷலிச) ஆட்சியே நாட்டைக் காக்கும்)