Abdul Kalam 340கலாம் நல்லவர் தான்;
ஆனால் அதை நிரூபித்திருக் கலாம்! 

ஈழத்தில்
பாஸ்பரஸ் குண்டுகளால்
பிஞ்சுகள் உடல்
சிதறிய போதும்
சிங்கள காடையர்களால்
தமிழ் பெண்கள் குதறப்பட்ட போதும்
இனப்படுகொலையால்
இனத்தை நாம்
இழந்து கொண்டிருந்த போதும்
வாய் திறந்திருக் கலாம்!

நிலமிழந்து உறவிழந்து
அகதியாக்கப்பட்டு
முள்வேலிக்குள்
சிறைப்பட்ட போது
குறைந்தது
முணுமுணுத்தாவதிருக் கலாம்!

மீத்தேனெனும் கொடும் பூதம்
காவிரிப் படுகையின் நீர் குடித்து
வங்கக் கடல் நீரை
துப்புவதை
பசுமை திட்டமென
பார்ப்பனிய சுரண்டலரசு
பறைசாற்றியதற்கு
முகமாவது சுளித்திருக் கலாம்!

மேற்கு தொடர்ச்சி மலை தேவாரத்தில்
நியூட்ரினோ ஆய்வகத்திற்கு
3,50,000 காலன்கள் நீர்
தேவையிருக்கையில்
350 குடும்பங்களுக்கான
நீர் தான் தேவைப்படுமென
முதல் பொய்
சொல்லாதிருந்திருக் கலாம்!

மானமுள்ள கூடங்குளம் போராளிகள்
மக்களுக்காக
அரசிற்கெதிராய்
நிராயுதபாணிகளாய்
அணிதிரள்கையில்
மாணவர்களின் நாயகன்
எங்களணியிலுருப்பவர் என கனவு
கண்டு கொண்டிருக்கையில்
தலையில் குண்டு வைத்தது போல்
எதிரணிக்குச் சென்று
சுரண்டலரசுக்கு
ஆதரவாய் கைநீட்டி
இரண்டாம் முறை
பொய் பேசியதற்கு
மெளனமாக விலகியிருந்திருக் கலாம் !

ஊரை நினைப்போரை
ஊர் நினைக்குமெனச்
சொன்ன பாவேந்தரின்
வாக்கை பொய்யாக்கி
வீதிதோறும் இப்போது
flex வைக்கும் அப்பாவி
ராமேசுவர மீனவர்கள் நித்தமும்
சுட்டுக் கொல்லப்பட்ட போது
ஜென் நிலையை
கலைத்திருந்திருக் கலாம் !

சாதி தீண்டாமை,
பாலியல் வன்முறைகள்,
காஷ்மீரிலும், கிழக்கு மாநிலங்களிலும்
ராணுவ அத்துமீறல்,
சமூக ஒடுக்குமுறைகள்,
வர்க்க ஏற்றத்தாழ்வுகள் ,
தேசிய இனப் பிரச்சனைகள்,
என எதற்கும்
வாய் திறவா
உயர்திணையாய் பிறந்ததற்கு
அக்னிச் சிறகை
பெற்றிருந்திருக் கலாம் !

நாளொன்றுக்கு 50 விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டிருக்கையில்
அம்பானிகளுக்கும் அதானிகளுக்குமான
பல்லக்கு தூக்கும்
முதலாளித்துவ அரசுக்கு
அணுகுண்டு தயாரித்து
கொடுத்ததற்கு
அணு அளவாவது
ஹிரோஷிமா நாகசாகியை
நினைத்திருந்திருக் கலாம் !

சில்லறை வர்த்தகத்திலும்
அந்நிய நேரடி முதலீட்டிலும்
பன்னாட்டு நிறுவனங்கள்
நாட்டைக் கொள்ளையடிக்கையில்
கனவு காணாமல்
கொஞ்சம் விழித்திருந்திருக் கலாம்!

அகிம்சை போதித்த
குஜராத்து மண்ணில்
இந்து தீவரவாதிகள்
கம்சனாய் உருமாறி
இஸ்லாமிய கர்ப்பிணி
பெண்களின் வயிறு கிழித்து
சிசுக்களை கொன்ற
திசுக்களும்,
பட்டு குழந்தைகளை
கோத்ரா ரயிலில்
கொளுத்திக் கொன்ற
இரத்தமும்,
ஒட்டியிருந்த
பிணந்தின்னி இந்திய அரசின்
கைகளில் கொடுத்த
ஜனாதிபதி பதவியை
மறுதலித்திருந்திருக் கலாம் !

ஐ.நா வில்
திருக்குறள் மொழிந்து
தமிழ்வழிக்கல்வியை
சிறக்கச் செய்ததும்
போற்றி புகழ்ந்ததும்
நயமாக ஊடகங்கள்
மறைத்ததும்
மக்களின் மொழியை
நேசிப்போர்
மக்களையும் நேசிக்க
வேண்டுமெனும் பெருமுண்மையையும்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
மக்கள் பகுத்தாய்ந்திருக் கலாம்!

கலாம் சிதற வேண்டிய
பிம்பமென பேச வைத்ததிலிருந்து
நீங்கள் என்ன சாதித்திருக்கிறீர்களென
அகத்தாய்வு செய்திருக் கலாம்!

கீதையை உயர்த்தி
திருப்பதி ஏழுமலையானிடம் கரைந்து
காஞ்சி சங்கர மடத்தில்
முதுகெலும்பை செருப்போடு வாசலில் கழட்டி வைத்து
பார்ப்பனியத்திற்கு
செல்லப் பிள்ளையாக
வாழ்ந்ததற்கு
சாமானியனாய்
செத்திருக் கலாம்!

கலாம் நல்லவர் தான்
ஆனால் அதை நிரூபித்திருக் கலாம் !

- வெ.நா.சுபாஷ், சூலூர், கோவை

Pin It