எனக்கு ஆட்சேபணை ஒன்றும் கிடையாது
இதோ இந்நாழிகை முதல் பசுவை வழிபட
மாட்டுக்கறி தின்னும் பழக்கத்தை கைவிட
இந்தத் துப்புரவாளன் துணிந்தான் என்க.
உன் வேண்டுதலுக்கு செவிமடுத்து
இயேசுவை வெறுத்து
முகம்மதுவை வசைபாடுகிறேன் நானும்.
ஒருகாலத்தில்
யாகங்களில் பசுவைப் பொசுக்கித் தின்ற நீ
ஊருக்கு வெளியே என்னை ஒதுக்கி
செத்த மாட்டை சுமக்கவும் தின்னவும் வைத்த
உன் கலியுக வஞ்சனைகளை மறந்துவிடுகிறேன் இன்றோடு.
உன் மந்திர உச்சாடனங்களுக்குக் கட்டுப்பட்டு
மந்திரித்துவிட்ட கோழிபோலத் திரிந்து
உன் உத்தரவுகளை செயல்பாடுகளாக மாற்றிக்காட்டும்
ஆகச்சிறந்த செயல்வீரனாகவாகி மெய்ப்பிக்கிறேன் என்னை.
இன்னும் என்ன உறுதிமொழிகளை எதிர்நோக்குகிறாயோ
அவற்றை பத்திர ஏட்டில் பதித்து வா
எழுதப் படிக்கத் தெரியாத நான்
சுயநினைவோடு படிக்கக் கேட்டேன் என்று
இடது கைவிரல் ரேகைப் பதித்துத் தருகிறேன்.
உன்பொருட்டு இவ்வளவையும் செய்யத் துணிந்த எனக்கு
கைமாறாக ஒன்றை மட்டும் செய்தால் போதும் நீ
ஒரே ஒரு நாள் மட்டும்
என் உடலுக்குள் நீயும்
உன் உடலுக்குள் நானுமாக
கூடுபாய்ந்துகொண்டு
ஒரே ஒரு வேளை மட்டும்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கருவறைக்குள்
பூசை செய்து தீபராதனைக் காட்டுகிறேன் நான்.
நீ இரயில் நிலையத்தின் தண்டவாளங்கள்மேல்
வழிந்த நிலையில் உறைந்துக் கிடக்கும்
மஞ்சள் நிற மலத்தை
என்னைப்போலவே
கையிலெடுத்துத் துப்புரவு செய்துக் காட்டு வாடா.

- வெ.வெங்கடாசலம்

Pin It