boatஇன்னும் எத்தனை பிணங்களை
பார்க்க இருக்கிறதோ
முற்றத்துக் கட்டில்.
_____________________

சில்லறை கனக்க
பிச்சைக்காரனின் மனம்
சிறிது லேசாகியது.
______________________

கடை ஊழியனுக்கும்
வணக்கம் வைக்கிறது
ஜவுளிக்கடை பொம்மை.
_______________________

எலிப்பொறியும்
தேங்காய் கேட்கிறது
கையூட்டாக.
___________________

காலிக் கோப்பையில்
நிரம்பி வழிகிறது
காற்று.
_____________________

உதறிய பேனாவிலிருந்து
வெளித்தெறித்து விழுந்தன
சில கவிதைகள்.
_____________________

படு சாமர்த்தியமாக
காலடித் தடயங்களின்றி
மணலைக் கடக்கிறது காற்று.
_____________________

பிரயாணியின் கதைக்கு
தலையாட்டிக் கேட்டுக்கொண்டு வந்தது
படகு.
_______________________

பக்பக்கென்றிருந்தது
இல்லாத சில்லரைக்காய்
பேருந்தில்.

-‍ எஸ்.எம்.ஜுனைத் ஹசனீ

Pin It