aiadmk workers protest

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் அரசியல் அறிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குத் தரம்தாழ்ந்து போய் இருக்கின்றது. தம்முடைய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கொள்கை சார்ந்த பற்று என்பது முதன்மையாக இல்லாமல் அவர்களைப் புனிதர்களாக வழிபடும் வழிபாட்டு மரபுகளையே வளர்த்தெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு அரசியல் கட்சியை, ஒரு அரசியல் தலைவரை பின்பற்றுவதற்கான எந்த நியதியும் அவர்களிடம் தற்போது இல்லை. தன்னலம், பிழைப்புவாதம், அற்பவாதம் போன்றவை கட்சித் தலைமையிடம் இருந்து கடைநிலை உறுப்பினர் வரை அனைவரையும் செல்லரித்துப் போகச் செய்திருக்கின்றது. உள்ளீடு அற்ற எலும்புக் கூடுகளாய் கட்சித் தலைமையும், தொண்டர் படையும் மாறி இருக்கின்றது.

 நான் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் இலவச சமச்சீர் கல்வியைக் கொடுப்பேன், தரமான இலவச மருத்துவம் கொடுப்பேன், படித்து முடித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்வேன், அனைத்து மக்களுக்குமான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றுக்கு உத்திரவாதம் கொடுப்பேன் என்று சொல்லி எந்த அரசியல் கட்சித் தலைவரும் மக்களிடம் ஓட்டு கேட்பதில்லை. நம்முடைய மக்களும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதில்லை. அதிகபட்சமாக ஒரு டீவியோ, கிரைண்டரோ, மிக்சியோ, பேனோ இருந்தால் போதும். அதுவும் இல்லையா ஓட்டுக்கு ஆயிரமோ, ஐநூறோ கொடுத்தால் போதும். அவர்களைப் பொருத்தவரை அதற்குப் பெயர்தான் தேர்தல். அதற்காக மட்டும் தான் அவர்களுக்கு தேர்தல் தேவைப்படுகின்றது. மற்றபடி வேறு எதற்காகவும் அவர்களுக்கு இந்த அரசு தேவைப்படுவதில்லை.

 இதை எல்லாம் எதற்காக சொல்கின்றேன் என்றால் தற்போது தமிழ்நாட்டில் நடந்துவரும் மிகப்பெரிய லட்சியப் போராட்டத்தைப்(!) பற்றி பேசுவதற்காகத்தான். கடந்த ஒருமாத காலமாக மதுவிலக்கு வேண்டி தமிழகத்தின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் போராடினார்கள். யாருக்கு எதிராக? ஆளும் கட்சிக்கு எதிராக. ஆனால் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான போராட்டம் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது. எப்படி அவரு எங்கம்மாவைப் பார்த்து அப்படி! சொல்லலாம், மன்னிப்பு கேட்கிற வரைக்கும் அவர சும்மா விடமாட்டோம் என்று அதிமுகவின் தொண்டர் பட்டாளமும், எப்படி அவரு மோடியப் பார்த்து அந்த மாதிரி பேசலாம் என்று பாஜகவின் தொண்டர் பட்டாளமும் களத்தில் இறங்கி கொடும்பாவிகளே வெட்கப்படும் அளவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியைக் கொளுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஈ.வி.கே.எஸ். சொன்னது எல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சாதாரணம். அதுவும் குறிப்பாக ஜெயலலிதா போன்றவர்களுக்கு. நம்ப முடியவில்லையா! “கோமாளியின் கூத்தியாராய் இருந்தாள்; கொடுப்பவர்கள் எவரெனினும் பறந்தாள்; ஏமாளிகள் அரசியலில் இறக்கி விட எச்சிலை மாமாக்களின் மடியினிலே சிறந்தாள்!” இப்படி ஒரு கவிதையை நம்மைப் பற்றி யாராவது எழுதி இருந்தால் நாம் என்ன செய்வோம், அப்படி எழுதியவனிடம் கை குலுக்குவோமா அல்லது அவனது கையை உடைப்போமா? மானம் உள்ள மனிதர்களாக இருந்தால் கையை உடைப்பார்கள் மானமற்ற மனிதர்களாக இருந்தால் கை குலுக்குவார்கள். இந்தக் கவிதையை வெளியிட்டது பா.ம.க நடத்திவந்த தினப்புரட்சி நாளேடு. இந்தக் கவிதையின் பாடு பொருளாக இருப்பவர் சாட்சாத் ஜெயலலிதாவேதான். இந்த கவிதை வெளிவந்ததற்கு அப்புறம் ஜெயலலிதா பலமுறை பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 கட்சித் தலைமையே வெட்கமானம் இல்லாமல் பொருக்கித் தின்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கும் போது கட்சித் தொண்டர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கின்றது.

 ஜெயலலிதாவாக இருக்கட்டும், மோடியாக இருக்கட்டும், இளங்கோவனாக இருக்கட்டும் இவர்கள் அனைவருமே மக்கள் விரோதிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வெட்கம், மானம் எல்லாம் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த வார்த்தைக்கான எந்த அர்த்தமும் அவர்களது அகராதியில் கிடையாது. நீர் அடித்து நீர் விலகாது என்பார்கள், அதுபோல மலம் அடித்து மலம் ஒருகாலும் விலகாது!.

 தமிழகம் முழுவதும் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பேரை குடிநோயாளியாக்கி தமிழ்நாட்டை விதவைகள் நிறைந்த மாநிலமாக மாற்றி அதில் வரும் பாவக்காசில் வயிறு வளர்க்கும் ஜெயலலிதாவுக்காக நீங்கள் போராடப் போகின்றீர்களா? இல்லை ஆயிரக்கணக்கான முஸ்லீம்களின் ரத்தத்தால் குஜராத்தை சிவப்பாக்கிய கசாப்புக்கடைக்காரர் மோடிக்காக போராடப் போகின்றீர்களா? ஒரு தன்மானம் உள்ள மனிதன் செய்யக்கூடிய காரியமா இது!

 படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லை, மலம் கழிக்க கழிப்பறை இல்லை, தமிழகத்தின் இயற்கை வளங்களான ஆற்றுமணல், கிரைனைட், தாதுமணல் அனைத்தும் கொள்ளை அடிக்கப்படுகின்றது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கேவலமான பிரச்சினைகளுக்காகவெல்லாம் மக்கள் போராடுவது அவர்களது அரசியல் அறியாமையே ஆகும்.

 சாமானிய மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் மதுவிலக்குப் போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கின்றது. தன்மீதான ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவும், சாராய வியாபாரி என்ற பட்டத்தை மக்களிடம் இருந்து மறக்கடிக்கவும் இதை ஒரு ஆயுதமாக ஜெயலலிதா பயன்படுத்தி இருக்கின்றார். மற்றபடி தன்மான உணர்ச்சியால் உந்தப்பட்டெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை..

- செ.கார்கி

Pin It