வழக்கமாக பிச்சைக்காரர்கள் கோயில் வாசல்களிலும், பேருந்து நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிச்சை எடுப்பார்கள். இவர்களில் பல பேர் மாற்றுத் திறனாளிகளாகவும், பிள்ளைகளால் கைவிடப் பட்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து அம்மா! தாயே! என்று சொல்லும் போது இவர்கள் எல்லாம் இந்தியாவின் மானத்தையே வாங்க வந்த அயோக்கியர்கள் என்றும், உழைத்து சாப்பிட வக்கில்லை என்றால் பேசாம செத்து தொலைய வேண்டியது தானே என்றும் சொல்லும் பல நடுத்தர, மேட்டுக்குடி வர்க்க ஆசாமிகளை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் மூலம் மானியம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கித் திண்ணும் அதிகார வர்க்கத்தைப் பற்றி இதே நடுத்தர, மேட்டுக்குடி வர்க்க முதலாளித்துவ அறிஞர்கள் என்ன சொல்கின்றார்கள், அதை தொழிற்வளர்ச்சி என்றும், நாட்டு நலன் என்றும் சொல்கின்றார்கள்.

உலகிலேயே இந்தியாவில் தான் மிக அதிகமாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உள்ளனர். 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாடால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் கூறியுள்ளது. கோடான கோடி இந்திய மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு வழியற்று பட்டினியால் சாகும் போது. மக்கள் நல அரசு என்று தம்மை சொல்லிக்கொள்ளும் இந்திய அரசு என்ன செய்கின்றது?.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சாப்பிடுவதற்காக நடத்தப்படும் கேன்டீன்களில் அவர்களுக்கு 150 சதவீதம் வரை மானியமாக உணவு வழங்கப்படுகின்றது. இதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ 61 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டு மெனுவைப் பார்த்தால் ஊராம் ஊட்டு காசுல இப்படி உக்காந்து திங்கிறீங்களே உங்களுக்கு வெட்க மானமே கிடையாதாடா? என்று கேட்கத் தோன்றுகின்றது. சாமானிய மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு நாய் படாதபாடு படுகையில் இந்த ஊழல் பெருச்சாளிகள் விதவிதமாக சாப்பிட்டு மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

மட்டன் கட்லட் ரூ18.0, முழு அசைவ சாப்பாடு ரூ.23.0 சப்பாத்தி மற்றும் பூரி ரூ1.0, அவித்த காய்கறிகள் ரூ.4 சிக்கன் ரோஸ்ட் மற்றும் காய்கறி ரூ.41 மசால் தோசை ரூ.6.0 , அவித்தமுட்டை ரூ.4.0, சிக்கன் மசலா ரூ.37.0 என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த மெனுவில் இருக்கும் பல உணவு பொருள்களை நாம் கேள்விப்பட்டே இருக்கமாட்டோம். இப்படி விதவிதமா நாக்குக்கு ருசியா கம்மியான காசுல திண்ணுட்டுதான் நம்மல பார்த்து மாட்டுக்கறி திங்காதே, திண்ணா பாகிஸ்தானுக்கு ஓடுன்னு கொழுப்பெடுத்து சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்.

இது மட்டும் அல்ல இவர்கள் பெரும் சலுகைகள், மாதாந்திர சம்பளத்துடன் சேர்த்து, மாதாந்திர தொகுதிப் படி, அலுவலகப் படி, தபால் செலவு, அவருடைய உதவியாளருக்கு சம்பளம், டெல்லியின் மையப்பகுதியில் ஒரு வீடு, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது அதில் கலந்துகொள்ள தினப் படி, டெல்லியில் உள்ள வீட்டிற்கு இலவசமாக 50000 யூனிட் மின்சாரம், 4000 லிட்டர் தண்ணீர், இரண்டு தொலைபேசி இணைப்புகள், ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலம் 50000 இலவச இணைப்புகள், இந்தியா முழுவதும் ரயிலில் செல்ல பயணச்சீட்டுகள், இந்தியாவிற்குள் 34 முறை மனைவி அல்லது உதவியாளருடன் இலவச விமானப் பயணம், முதல் வகுப்பு ஏ.சி ரயிலில் தனது குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதி, சோபா, மேஜை வாங்க ஆண்டொன்றுக்கு ரூ. 75000-மும் வழங்கப்படுகின்றது. ஏறக்குறைய ரூ. 2 லட்சம் வரை சலுகைகளைப் பெறுகின்றனர். சரி மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு சலுகைகளைப் பெறுகின்றார்களே அந்த மக்களுக்கு இவர்கள் உண்மையாக நடந்து கொள்கின்றார்களா என்று பார்த்தால் ஒரு வெங்காயமும் இல்லை. எந்த மக்களின் வரிப்பணத்தில் நாக்குக்கு ருசியாக விதவிதமாக தின்று ஏப்பம்விட்டார்களோ அந்த மக்களுக்கு ஆப்பு அடிக்கும் வேலையையே கண்ணும் கருத்துமாக தொடர்ந்து செய்கின்றார்கள்.

பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வயிற்றுக்குள்ளே இந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.61 கோடி பணம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உள்ளே போய் வெளியே வந்திருக்கின்றது. ஆனால் என்ன செய்தார்கள்? ஏழை மக்களின் நிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடு, தொழிலாளர்கள் உயிரைக்கொடுத்து உழைத்து சேர்த்த வருங்கால வைப்பு நிதித் தொகையை பங்குச்சந்தையில் போட்டு சூதாட அனுமதி, தொழிலாளர் நல சட்டங்களை ஒழித்துக்கட்டுதல், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு காடுகளில் இருந்து கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், சோத்துக்கு வழியைக் கேட்டால் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள், யோகாவை கற்றுக்கொள் என்று கண்ட கருமாந்திரத்தை எல்லாம் மக்கள் மீது திணிப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் மானியத்தை அடியோடு ஒழித்துக்கட்டும் சதிவேலைகளில் ஈடுபடுதல் என்று எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்.

ஏற்கெனவே பெரும் கோடிஸ்வரர்களாக இருக்கும் இவர்கள் தொழிற்வளர்ச்சி என்ற பெயரில் மானியமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை திருடிக் கொள்கின்றார்கள். மற்றொரு புறம் அப்படி திருடிக் கொள்வதற்ககான ஊதியத்தையும் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றார்கள். போதாத குறைக்கு மானிய விலையில் சாப்பாடு வேறு. இதைத்தான் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலே அன்றே சொன்னார் “அவன் அதற்கு உண்டி அளிப்பதற்கு பதில் அது அவனுக்கு உண்டி அளிக்க வேண்டிய ஒரு நிலைக்கு அதன் அடிமை தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடியவில்லை”

முதலாளித்துவம் தான் மக்களைக் காப்பாற்றும் என்று சொன்னார்கள், ஆனால் அந்த முதலாளித்துவம் மக்களின் வரிப்பணத்தை பிச்சை எடுத்துக் கூட அல்ல, திருடி சோறு தின்கிற ஒரு கேடுகெட்ட நிலைக்கு வந்துவிட்டதை நாம் இப்போது நேரடியாகவே பார்த்துவிட்டோம். ஆனால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இந்த மக்கள் எப்படித் தான் கோபப்படாமல் சும்மா இருக்கின்றார்களோ தெரியவில்லை! நன்றாக மனசுவிட்டு கோபப்படுங்கள் மக்களே! அதுதான் நமக்கும் நல்லது! நாட்டுக்கும் நல்லது!

- செ.கார்கி

Pin It