அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதா? சாதி வெறியர்களுக்கு ஆதரவானதா?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும், காதலர்களாகப் பழகி வந்திருக்கிறார்கள்.

26.06.2015 அன்று, கோகுல்ராஜூம் சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பேசிக் கொண்டிருந்த போது, பெண்ணின் வகுப்பைச் சேர்ந்த சாதி வெறியர்கள் கோகுல்ராஜைக் கடத்திக் கொண்டுபோய், அவரது தலையைத் துண்டித்து தண்டாளத்தில் தற்கொலை செய்து கொண்டதுபோல், போட்டுவிட்டுத் தப்பியுள்ளார்கள்.

கோகுல்ராஜ் சாதி வெறியர்களால் கடத்தப்பட்டார் என்பதற்கு, கண்ணுற்ற சாட்சியாக சுவாதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அர்த்தநாரீசுவரர் கோவில் கண்காணிப்பு ஒளிப்படக் கருவியில், கடத்தல் நிகழ்வு பதிவாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கொலைகாரர்களைத் தளைப்படுத்த வலியுறுத்திப் போராடி வருகின்றன.

ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் கொலையா தற்கொலையா என்று இன்றுவரை முடிவு செய்யாமல், நாள் கடத்துவது அவர்கள் சாதி வெறிக் கொலைகாரர்களைப் பாதுகாக்க மறைமுகமாக முயலுகிறார்களோ என்ற ஐயத்தை வலுவாக ஏற்படுத்துகிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மற்றும் பலவீனமான சமூகங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையைத்தான் கோகுல்ராஜ் கொலையில் ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் ஒருதலைச்சார்பான போக்கு உறுதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சாதி வெறியர்கள் தங்குதடையின்றி அட்டூழியங்கள் செய்ய அரசின் இப்போக்கு தூண்டுகோலாக அமையும்.

கோகுல்ராஜை கொலை செய்தவர்கள் மீது கொலை வழக்குப் போடாமல் சாக்குபோக்கு சொல்லிவரும் தமிழக அரசின் ஒடுக்கப்பட்ட மக்கள் விரோதப் போக்கையும், சாதி வெறியர்களுக்கு மறைமுகமாகக் கைகொடுக்கும் செயலையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக முதலமைச்சர் அவர்கள், மிகமுக்கியமான இந்த சமூகச்சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, கோகுல்ராஜை கொலை செய்த சாதி வெறிக் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாகத் தளைப்படுத்த ஆணையிடுமாறும், மேற்படி இளம் பெண் சுவாதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளி கொண்டா காவல் நிலையக் கொலைகாரர்களை உடனடியாகக் கைது செய்க!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஷமீல் பாட்சா என்பவரை விசாரணைக்கென்று அழைத்துச் சென்று மூன்று நாட்கள் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, கொலை செய்த பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜையும் இக்கொலையில் இவருக்குத் துணை செய்த மற்ற காவல்துறையினரையும் கொலை வழக்கில் கைது செய்து, சிறையிலடைக்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஷமீல் பாட்சா குடும்பத்திற்கு தமிழக அரசு, 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Pin It