மக்களுக்கு வாக்குரிமை அளித்து இருப்பதே ஜனநாயம் என்றும், அதன் மூலம் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்ல. அதன் மூலம் மட்டும் தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேட வேண்டுமே ஒழிய வேறு வழி வகைகளைப் பற்றிச் சிந்திப்பதே பயங்கரவாதம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் தேர்தல் மூலம் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?

நம் நாட்டில் இலவச அரிசி, இலவச உரல், இலவச உலக்கை என்ற பெயரில் மக்களின் வாக்குகளைப் பெறும் தேர்தல் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து, ஊடகங்களில் உயர்த்திப் பிடிப்பதன் மூலம் வாக்குகளைப் பெறும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும்; புரிந்து கொள்ளக் கூட முடியாது என்பது தான் உண்மையான நிலைமை. இதனால் வாக்களிப்பதில் எந்த விதமான பயனும் இல்லை என்று புரிந்து கொணடு உள்ள பலர் வாக்குச் சாவடிக்குச் செல்வதே இல்லை. வாக்களிக்க மறுப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதைக் கண்ட முதலாளித்துவ அறிஞர்கள், இப்பொழுது பொருட்படுத்தத் தேவையில்லாத அளவில் இருக்கும் இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்தால், முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரான கருத்து வலிமை பெற ஆரம்பித்து விடும் என்று அஞ்சி, நாங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை (NOTA – none of the above) என்று என்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். இவ்வாறு செய்தால் இவர்களுடைய எதிர்ப்பு தனிப்பட்ட மனிதர்களுக்குத் தான் என்று பிரச்சாரம் செய்து, முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தை மறைத்து விட விரும்புகின்றனர்.

கல்வி அறிவு குறைந்து உள்ள "புண்ணிய பூமியான" இந்தியாவில் தான் மக்கள் அரசியலில் இருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கல்வி அறிவும், அரசியல் அறிவும் பெற்றுள்ளதாகக் கருதப்படும், வளர்ந்த நாடுகளின் மக்களும் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் போக்கு வளர்ந்து கொண்டு வருகிறது. இதைப் பற்றி பிரிட்டன் செய்தி நிறுவனம் (BBC) 2.5.2015 அன்று ஒரு ஆய்வுரையை வெளியிட்டது.

அமெரிக்காவில் கிளிண்டன், புஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கத்தில் இருந்து வருவது குறித்து, சாதாரண மக்களிடையே மட்டும் அல்லாது, அரசியல்வாதிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய இரு நாடுகளிலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 20% இலிருந்து 30% வரை குறைந்து உள்ளதைச் சுட்டிக் காட்டி, மக்கள் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. இவ்வாறு தேர்தல் அரசியலில் மக்கள் ஆர்வம் இழந்து கொண்டு இருக்கும் நிலையில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளை, அரசியல் பிழைப்புவாதிகள் சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் நிலை உருவாகி உள்ளது. (Professional polticians tend to be surrounded by political professionals.) இதனால் தரமான அரசியல்வாதிகள் அழிந்து போகும் உயிரினங்களைப் போல் ஆகிவிட்டனர். (Conviction politicians have arguably become something of an endagered species.) அதாவது பிரிட்டனும், அமெரிக்காவும் அரசியலில் இந்தியாவைப் போல் ஆகிக் கொண்டு இருக்கின்றன. இனி இந்தியர்கள் தான் உலக அரசியலுக்கு வழிகாட்டி என்று பெருமைப்பட்டுக் கொளளலாம்.

சரி! நாம் பெருமைப்பட்டுக் கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். மக்கள் தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படாமல் இருந்தால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடுமா? அதாவது தேர்தலில் மக்கள் தீவிரமாகப் பங்கு கொண்டு, தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?

முடியாது என்று சே குவாராவும், ஃபிடல் காஸ்ட்ரோவும் கூறினார்கள். முடியும் என்று சிலி நாட்டின் சால்வடார் அலெண்டே (Salvador Allende) கூறினார். அவ்வாறு கூறியது மட்டும் அல்லாமல் மக்களிடையே அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 1970 ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றியும் பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்ற பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த முதல் (ஒரே) அதிபர் என்ற புகழையும் பெற்றார். ஆனால் அவரால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியவில்லை. அவர் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கிய உடனேயே, சிலி நாட்டின் முதலாளிகளும், அமெரிக்க உளவாளிகளும் அவரை ஒழித்துக் கட்டும் திட்டத்தைத் தீட்டத் தொடங்கி விட்டனர். அவர்கள் 11.9.1973 அன்று அலெண்டேயையும் அவரது கூடடாளிகளையும் கொன்று விட்டனர். முக்கியமாக, அலெண்டேயைக் கொன்றதிலும் மனம் ஆறாத அவர்கள் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அடக்கம் செய்வதற்கு உடலே கிடைக்காதபடியும் செய்து விட்டனர்.

மக்கள் வாக்களித்து, தேர்தலில் வெற்றி பெற்ற அலெண்டே, தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முனைந்த போது, அவர் வெட்டிக் கொல்லப்படுகிறார் என்றால், முதலாளித்துவத் தேர்தல் என்பது எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று தெளிவாக விளங்குகிறது அல்லவா? முதலாளித்துவ முறையை ஒப்புக் கொள்வதற்கும், அதனால் ஏற்படும் கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்வோம் என்பதற்குமான அடிமை முறிச் சீட்டு தான் முதலாளித்துவத் தேர்தல் முறை.

மக்கள் தங்கள் பிரச்சிகைளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அதற்குச் சமதர்ம (சோஷலிச) முறையே சரியான வழியாகும். மற்றவர்களை அடிமை கொள்ளும் ஆசை இருந்தால் சமதர்ம அமைப்பில் அது முடியாது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு.

தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் மக்களே! இவ்வாறு அந்நியப்படுவது பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய முதல் படியாக இருக்கலாம். அப்படி முதல் படியிலேயே இருப்பது பயனை விளைவித்து விடாது. தொடர்ந்து சமதர்ம சமூகம் அமைக்கவும் அணியம் ஆக வேண்டும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.5..2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It