திராவிட இயக்க வரலாறு தொகுதி 1 முரசொலி மாறன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. திராவிட இயக்கம் நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த 2012களில் திராவிட இயக்க வரலாறு குறித்த பதிவுகளைப் பலரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவரான முரசொலி மாறன் பதிவுகளை திராவிட இயக்கத்தின் ஒற்றைப் பார்வை என்று அடையாளப் படுத்தப்படுவதில் சிக்கல்கள் இருந்தாலும் திராவிட இயக்க வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பவர்களும் ஏற்கனவே எழுதியவர்களும் திராவிட இயக்கம், திராவிட இயக்க வரலாறு என்று வகுத்திருக்கும் எல்லைக்கோடு அவர்களின் இன்னொரு முகத்தை வெளிச்சப்படுத்திவிட்டது என்பதை அவர்களே உணர்ந்த மாதிரி தெரியவில்லை.  அவர்களுக்கு அதை உணர்த்தவும் அதையும் உரத்தக் குரலில் பதிவு செய்ய வேண்டிய தேவையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. 

சென்னை நகரில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தாங்கள் பார்ப்பனர் அல்லாதோராக இருக்கின்ற காரணத்தால் அரசுத் துறையில் பதவி உயர்வு போன்ற நியாயமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் மனம் புழுங்கி 1912 ஆம் ஆண்டு சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த டாக்டர் நடேசனார் இல்லத்தில் கூடி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற பெயரில் ஓரமைப்பை ஏற்படுத்தினார்கள். அந்த அமைப்பே தென்னிந்திய நல உரிமை சங்கமாகி, நீதிக்கட்சி என்று பத்திரிகை பெயரால் அடையாளப்படுத்தப்பட்டது.

2012 ஐ திராவிட இயக்கத்தின் நூற்றாண்டாக கொண்டாடுவதின் காரணமும் இதுவே ஆகும்.

1918ல் கோவையில் நடைபெற்ற இரண்டாவது பார்ப்பனர் அல்லாதோர் மாநாட்டு உரையில் நல்லசாமி பிள்ளை தென்னிந்திய பார்ப்பனர் அல்லாதாருக்கெனத் தனி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க பலமுறை முயற்சி செய்யப்பட்டது என்று பேசி இருக்கிறார்.

எனவே 1912ல் ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற பார்ப்பனர் அல்லாதோரின் இந்த அமைப்பு தான் திராவிட இயக்க வரலாற்றின் முதல் பக்கம் என்பதை எவ்விதமான கருத்து வேறுபாடுகளுமின்றி திராவிட இயக்கத்தார் ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படியானால் சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆதிதிராவிடர் மகாஜன சபா ????? அதுவும் 1890களில் ஆரம்பிக்கப்பட்ட ஆதிதிராவிட மகாஜன சபா, திராவிட இயக்க வரலாற்றில் ஏன் வரவில்லை? ஆதிதிராவிடர்கள் திராவிடர்கள் இல்லையா ? அல்லது பார்ப்பனர் அல்லாதோர் பட்டியலில் இல்லையா? இந்தக் கேள்வி விசுவரூபமெடுக்கும் போதுதான் திராவிட இயக்கத்தின் படிநிலை சாதியப் பார்வையை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.  

முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு புத்தகமும் இக்கருத்தை மேலும் உறுதி செய்கிறது. திராவிட இயக்கம் ஆதிதிராவிட இயக்கத்துடனும் அச்சமூகத்தலைவர்களுடனும் கலந்து பணி ஆற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தியது வெறும் அரசியல் காரணமாக மட்டுமே இருந்தது. அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ பார்ப்பனர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின் உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாகத் தெரியவில்லை. அன்றைக்கு ஒட்டுமொத்த பார்ப்பனர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் திராவிட இயக்கத்தின்-- நீதிக்கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அதுதான் 1909ல் முஸ்லீம்களுக்கு மிண்டோ மார்லி சட்டப்படி தனித்தொகுதி வழங்கப்பட்ட நிலையில் அதை மனதில் கொண்டு பார்ப்பனர் அல்லாதாரின் நிலையை எப்படி இந்தியா வர இருக்கும் மந்திரி மாண்டேகுவிடம் விளக்குவது என்ற நிலையில் நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயர் "நீதிக்கட்சி தான் சென்னை மாகாணத்தில் உள்ள 4 கோடி பார்ப்பனர் அல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது " என்று மாண்டேகுவிற்குத் தந்தி அனுப்பினார்.

நான்குகோடி பார்ப்பனர் அல்லாதாரின் பிரதிநிதி நீதிக்கட்சிதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக இருந்த ஆதிதிராவிடர்களின் ஒருமித்த ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டது. இந்த அரசியல் காரணம் மட்டுமே நீதிக்கட்சி ஆதிதிராவிட இனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது.

திராவிட இயக்க வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் முரசொலி மாறன் "நீதிக்கட்சிக்கு இவர்கள் ஆதரவைப் பெறுவதற்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஏனெனில் அந்தச் சமுதாயமும் வெகுகாலமாகவே திராவிட உணர்வு பெற்றிருந்தது. .... சென்னையில் ஆதிதிராவிட மகாஜன சபா என்னும் அமைப்பு 1892லிருந்தே அவர்களது நலன்களுக்காக பாடுபட்டு வந்தது" என்று குறிப்பிடுகிறார். (பக் 198) 

1917 அக்டோபர் 2ல் எழும்பூர் ஏரியில் நடைபெற்ற ஆதிதிராவிடர் கூட்டத்தில் பேசிய டாக்டர் நாயர் அவர்கள் "பஞ்சமர் கட்சியும் பார்ப்பனர் அல்லாதார் கட்சியும்" அரசியலில் இணைந்து செயல்பட வேண்டுமென்பதை வற்புறுத்தி பேசி இருக்கிறார். 

எனவே திராவிட இயக்கம் என்று இன்றைக்கு அறியப்படும் திராவிட இயக்கத்தின் வட்டத்திற்குள் ஆதிதிராவிடர் அமைப்புகள் விலக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர் அல்லாதார் என்று திராவிட இயக்கம் வகுத்திருக்கும் பிரிவில் அந்த பார்ப்பனர் அல்லாதாரின் பட்டியலில் கடைநிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்கள் இல்லை என்கிற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது. 

1886ல் வெஸ்லியன் மிஷினரியைச் சார்ந்த Rev. ஜான் ரத்தினர் என்பார் திராவிடர் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவருடன் சேர்ந்தே பண்டித அயோத்திதாசர் திராவிட பாண்டியன் என்கிற இதழை ஆரம்பித்தார். ஆதிதிராவிட மகாஜன சபா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. 1890களில் ஆரம்பிக்கப்பட்டது என்பார் சிலர். 1891ல் சென்னையில் சுப்பிரமணிய பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார் டாக்டர் பி. செர்மாகனி (Dr. P Sermakani in History of people and their Environs) 1891ல் அயோத்திதாசர் தலைமையில் ஊட்டியில் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார் மீனா கந்தசாமி. ஆதிதிராவிடர் மகாஜன சபாவின் முதல் மாநாடு 1891 டிசம்பர் 1ல் நடைபெற்றது என்கிறார் அவர். எந்த ஆதாரத்தை எடுத்துக் கொண்டாலும் ஆதிதிராவிடர் மகாஜனசபா 1912க்கு முன்னர் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. 

1885 ல் திராவிட மித்ரன்

1886 ல் திராவிட பாண்டியன்

1907 ல் திராவிட கோகிலம்-

ஆகிய பத்திரிகைகள் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பே ஆதிதிராவிட சமூகத்தில் தோன்றி வளர்தெடுக்கப்பட்ட திராவிட இதழ்கள். 

1898ல் ஒடுக்கப்பட்டோர் அரசுத் துறை தேர்வுகளில் வெற்றி பெற தகுதிக் குறைவு வழங்கப்பட வேண்டும் (Lower the standard of qualifying test) அதாவது குறைந்த மதிப்பெண் பெற்ற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்ததும் ஆதிதிராவிட மகாஜன சபா தான். 

1918ல் ஆதிதிராவிட மகாஜன சபா அரசாங்கத்திற்கு ஒரு மனு கொடுத்தது. பறையர் என்கிற பெயருக்குப் பதிலாக தொன்றுதொட்டு நிலவி வருவதும் தங்களுக்கு உரிய பெயருமாகிய 'திராவிடர்' என்கிற பெயரால் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அப்பெயரை அரசும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை நீதிக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதியான எம்.சி.ராஜா அவர்கள் சென்னை மாகாண சட்ட சபையில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். நீதிக்கட்சியும் அத்தீர்மானத்தை நிறைவேற்றியது. 1922 மார்ச் 22 ல் அப்பெயரை அங்கீகரித்து அரசு ஆணை பிறப்பித்தது. பழைய பஞ்சமர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடா, ஆதி ஆந்திரா என்ற அங்கீகாரம் சட்டப்படி வழங்கப்பட்டது.

எம்.சி.ராஜா தீர்மானம் கொண்டு வந்தார் என்பதைப் பற்றியோ நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டசபையிலிருந்த முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எம்.சி.ராஜா என்றோ எவ்விதமான குறிப்புகளையும் பதிவு செய்யாமல் தங்கள் வரலாற்றை எழுதிச் சென்றிருக்கிறார் முரசொலி மாறன் அவர்களும்! (பக் 198 & 199).

ஒருவேளை எம்.சி.ராஜா பற்றி எழுதினால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் எழுதியாக வேண்டும் என்பதால் வசதியாக அந்தப் பக்கங்களை கடந்து செல்கிறார்கள் திராவிட இயக்க வரலாற்றை எழுதுபவர்கள். 1921ல் பனகல் அரசர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவர அதை எதிர்த்தவர் எம்.சி.இராஜா அவர்கள். அவர் எதிர்ப்புக்கான காரணம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பதல்ல. அவர்களையும் விட பிறபடுத்தப்பட்ட கடைநிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதியாகது என்கிற காரணத்தால் தான்.

எம்.சி.ராஜாவின் எதிர்ப்புக்கு ஒட்டு மொத்த நீதிக்கட்சியின் அரசும் கள்ள மவுனம் சாதித்தது. கலவரம் மூண்டது. புளியந்தோப்பு பகுதியில் 1921ல் நடந்த கலவரம். அதன் பின் தான் எம்.சி.ராஜா கூட்டணியிலிருந்து விலகினார். எனினும் 1923 முதல் 1926 வரை சட்டசபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.

-1912ல் ஆரம்பித்த திராவிடர் இயக்கத்திற்கு 2012ல் ஒரு நூற்றாண்டாகி விட்டது என்று நூற்றாண்டு கொண்டாடுகிறவர்கள் திராவிடர் இயக்கத்தின் இந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றுக்கும் பின்னோக்கிப் பார்த்தால் பெருமையுடன் சமூக தளத்தில் சாதிகளற்ற திராவிடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஆதிதிராவிடர்களின் வரலாற்றை ஏன் திராவிடர் இயக்க வரலாற்றின் முன்னோடியாகப் பார்க்கத் -தவறிவிட்டார்கள் என்கிற கேள்வி அவர்கள் முன் வைக்கப்படுகிறது.

- புதிய மாதவி, மும்பை

Pin It