இந்தியநாடு விடுதலை பெறுவதற்கு 17ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசியல் சட்டம் உருவாக்க அடித்தளமாக அமையக் காரணமான முதல் ""வட்ட மேசை மாநாடு'' இங்கிலாந்தில் இலண்டன் மாநகரில் 1930, நவம்பர் திங்கள் 12 ஆம் நாள் தொடங்கியது.

பிரிட்டிசு பேரரசர் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் 89 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் 13 பேர் பிரிட்டிசு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள். 53 பேர் இந்தியப் பிரதிநிதிகள். இவர்களில் 20 பேர் இந்தியச் சமஸ்தானங்களைச் சார்ந்தவர்கள் (ராஜாக்கள், மன்னர்கள்) 13 பேர் முற்போக்குச் சிந்தனை கொண்ட இந்துத் தலைவர்கள். மற்றும் இசுலாமியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் சார்பில் சிலர் கலந்துக் கொண்டனர்.

தீண்டப்படாத மக்களின் பிரதிநிதிகளாகப் புரட்சியாளர் அம்பேத்கரும், இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொண்ட 53 பேரில் மேற்கண்ட இருவரைத் தவிர மற்றவர்கள் எவரும் வறுமையில் கொடிய வடிவங்களை அனுபவித்தவர்கள் அல்ல. இந்தியாவில் ஏழையருள் ஏழைகளாக, அரைப்பட்டினியுடன் அரையாடையுடன் ஊமையோராக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகளாக அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டனர்.

ஈராயிரம் ஆண்டுவரலாற்றில் பிரிட்டிசு இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் அய்ந்தில் ஒரு பகுதியினராக வாழும் தீண்டப்படாதவர்கள் தம் தாய்நாட்டை ஆளுவது பற்றியும்,இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவது பற்றியும் தமது குரலைப் பதிவு செய்திட முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது வட்டமேசை மாநாடே.அந்த வாய்ப்பை அம்பேத்கரும்,இரட்டைமலை சீனிவாசனும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

அம்பேத்கர் தனது மாநாட்டு உரையில் "ஆங்கிலேயர் வருவதற்கு முன் தீண்டாமை காரணமாக நாங்கள் வெறுத்தொதுக்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்தோம்.இந்த நிலையை அகற்றிட ஆங்கிலேயர் ஆட்சி ஏதேனும் செய்ததா? பிரிட்டிசாரின் வருகைக்கு முன் கிராமங்களின் கிணறுகள் நாங்கள் தண்ணீர் எடுக்க முடியாது.

கிணற்றில் நீர் எடுக்கும் உரிமையைப் பிரிட்டீசு அரசு எமக்குப் பெற்றுத் தந்ததா?ஆங்கிலேயர் ஆட்சி அமைவதற்கு முன் நாங்கள் கோயிலுக்குள் நுழைய முடியாது.இப்போது நாங்கள் நுழையும் நிலையை வந்துவிட்டதா? பிரிட்டிசு ஆட்சிக்கு முன்பு நாங்கள் காவல் துறையில் சேர்ந்து பணியாற்றத் தடை இருந்தது.இப்போது பிரிட்டிசு அரசு எங்களைக் காவல்துறையில் சேர்த்துக் கொள்கிறதா? 150 ஆண்டுக்கால பிரிட்டானியர் ஆட்சி உருண்டோடி விட்டது.

எந்த மாற்றத்தை நாங்கள் கண்டோம்?''என்ற உணர்வு மேலிடப்பேசினார். ஆங்கிலேயர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

முன்னதாக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்ற வருகை தந்த பிரிட்டிசு பேரரசர் மாநாட்டிற்கு வருகை தந்தவர்களைக் கை குலுக்கி வரவேற்றார்.மன்னர் இரட்டைமலை சீனிவாசனைக் கைகுலுக்க முனைந்த போது சீனிவாசன் மறுத்து ""தன்னைத் தொட்டால் தங்களுக்குத் தீட்டு ஒட்டிக் கொள்ளும் இழிவு நிலை உள்ளது''என்று கூறி இந்தியாவில் தீண்டப்படாதோரின் நிலையை நாசுக்காக வெளிப்படுத்தினார்.

மன்னரும் கூடியிருந்த ஆங்கிலேயர்களும் அதிர்ச்சியுற்றனர்.ஆனால் மன்னரோ அவரை அருகே அழைத்து கைகுலுக்கித் தன் அன்பை வெளிப்படுத்தினார். இச்செய்தி இந்திய நாட்டில் வாழும் சாதி வெறிப்பிடித்த சனாதன கூட்டத்திற்குச் சம்மட்டி அடி கொடுத்தது போல் இருந்தது. இம்மாநாட்டைக் காந்தி தலைமையிலான காங்கிரசுக் கட்சி புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1860 ஆம் ஆண்டு சூலை திங்கள் 7 ஆம் நாள் செங்கழிநீர்ப்பட்டு  என்று அழைக்கப்பட்டு வந்த செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகிலுள்ள கோழியாலம்என்னும் குக்கிராமத்தில் தீண்டப்படாத சமூகத்தில் இரட்டைமலை –ஆதி தம்பதியினருக்குச் சீனிவாசன் பிறந்தார். பின்னர் அவர்கள் தஞ்சை மாவட்டத்துக்குக் குடிபெயர்ந்தனர்.

அங்கு எப்படியோ தன் மகனைப் படிக்க வைத்தனர்.திண்ணைப் பள்ளியில் சாதி இந்து ஆசிரியர்கள் சொல்லித் தந்ததை மிகவும் தள்ளி உட்கார்ந்து சீனிவாசன் பாடம் படித்தார். சிரமப்பட்டுப் பள்ளி உயர்வுப் படிப்பை முடித்தார்.

பின்னர் கோயம்பத்தூரில் கல்லூரிப் பட்டப் படிப்பைத் தொடங்கினார்.தனது படிப்பு அனுபவத்தைத் தான் எழுதிய ""ஜீவிய சரித்திர சுருக்கம்'' நூலில்.

"கோயம்பத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள். சாதி கோட்பாடுகள் மிகக் கடுமையாக கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சினேகிதத்தால் சாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து கல்லூரிக்கு வெளியே வசித்து இருந்து மணி அடித்தபிறகுதான் வகுப்பிற்குள் போவேன்.

வகுப்பு முடியும் போது என்னைச் சக மாணவர்கள் எட்டாதபடி வீட்டுக்கு கடுகடுவென நடந்து செல்வேன்.மாணவர்களோடு கூட விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து மனங்கலங்கி எண்ணி இந்த இறுக்கத்தை எப்படிப் போக்கிக்கொள்வதென்று யோசிப்பேன்''

இந்தியத் துணைக்கண்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வரலாற்றில் முதன் முதல் பட்டப் படிப்பை எதிர் நீச்சல் போட்டுப் பயின்றவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே.

1882 ஆம் ஆண்டு தன்னைப் பொருளாதார ரீதியில் வலிமைப் படுத்திக் கொள்ள நீலகிரியில் கிழக்கிந்திய கம்பெனியில் கணக்காயராகப் பணியில் சேர்ந்தார்.அயோத்தி தாசப் பண்டிதர் இவருக்கு முன்பே உதகமண்டலத்தில் தீண்டத்தகாத மக்களுக்காகப் பாடுபட்டு வந்தார்.இரட்டைமலை சீனிவாசன் அவரோடு இணைந்து பணியாற்றினார்.

உதகமண்டலத்தில் அய்ரோப்பிய நாகரிக வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வாய்ப்பைப் பெற்ற இவர் 1882ஆம் ஆண்டிலேயே தியோசாபிகள் சொசைட்டியில் சேர்ந்து கர்னல் ஆல்காட்,பிளாவட்ஸ்கி ஆகியோருடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.அந்த சபையில் உறுப்பினராகச் சேர்ந்ததால் இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடினார் தன் நிலையை உயர்த்திக் கொண்டார்.

1889 ஆம் ஆண்டு ரெங்கநாயகி அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் 4 ஆண் பிள்ளைகள் பிறந்தனர். இருவரும் இணைந்து தீண்டாமைக்கு எதிராகப் பாடுபட்டனர். 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சென்னைக்குத் திரும்பினார்.

1890 இல் அயோத்திதாசப் பண்டிதர் இரட்டைமலை சீனிவாசனும் இணைந்து ஏற்படுத்திய "திராவிடர் கழகம்' எனும் அமைப்பு  பின்னர் ""திராவிட மகாசன சபை'' எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1893 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ""பறையன்'' என்ற பெயரில் இதழ் ஒன்றினைத் தொடங்கி 1900வரை நடத்தினார்.அதன் பிரதி ஒன்றை மதிப்புரைக்காகச் ""சுதேச மித்திரன்'' பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். அப்போது அப்பத்திரிகைக்கு ஆசிரியரான சி.ஆர். நரசிம்மன் என்ற பார்ப்பனர் மதிப்புரைக்கு வந்து

"பறையன்'' பத்திரிகையைக் கையில் எடுத்துப் பார்க்காமல் மை தொட்டு எழுதும் கட்டைப் பேனாவைக் குச்சிப்போல் பிடித்து அதனைக் கொண்டு "பறையன்'' பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தாராம். பறையனைத் தொட்டால் மட்டும் தீட்டல்ல ""பறையன்''என்ற பெயரில் வெளிவரும் இதழைத் தொட்டால் கூடத் தீட்டாகிவிடும் என்று நினைக்கும் கூட்டத்தாரோடு வாழ வேண்டிய நிலையில் இராவ் பகதூர் சீனிவாசன் இருந்தார்.

1895 ஆம் ஆண்டு பிரிட்டிசு அரசாங்கத்தில் பிரதிநிதியும் கவர்னர் ஜெனரலுமான எல்வின் பிரபு சென்னைக்கு வருகை தந்தார்.அவருக்கு ஆதிதிராவிடர்கள் சார்பில் அண்ணா சாலையில் (மவுண்ட் ரோட்டில்) அன்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல் முறையாக மகாசன சபையைச் சார்ந்த ஆதிதிராவிடத் தோழர்களை அழைத்துக் கொண்டு கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னர் ஜெனரலைச் சந்தித்து உரையாடினார்.அது முதல் ஆதிதிராவிட சமுதாயத்தினர்,இந்து சமூகத்திலிருந்து பிரிந்து தனித்த சமுதாயமாக அங்கீகரிக்கப்பட்டனர்

இந்துப் பார்ப்பனர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதிய சமூகச் சிலந்து வலையில் தாழ்த்தப்பட்டோர் என்றுமே உள்ளடங்கியதில்லை என்றார் சீனிவாசனார்.

1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு சென்று அங்கு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். அப்போது காந்தியடிகளுக்கு "மோ.க.காந்தி' என்று தமிழில் கையெழுத்துப் போட கற்றுத்தந்தார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து 1920 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி இந்திய அரசியலில் தீவிர பங்குகொண்டார். இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராக செயல்பட்டார்.

1926 ஆம் ஆண்டு அவரின் சீரிய பணிகளைப் பாராட்டி ஆங்கிலேயே அரச"இராவ்சாகிப்' பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

இரட்டைமலை சீனிவாசனார் சுமார் 50ஆண்டுகள் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு 1945 ஆம் ஆண்டு தனது 86 ஆவது வயதில் இயற்கை எய்தினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடரவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

Pin It