ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புகள் வெளியேறினால் நிலைமை மோசமாகும் என்று ஆப்கானியர்களை நம்ப வைக்க அமெரிக்காவும் தாலிபானும் கூட்டு சதி செய்து குண்டு வெடிப்புகளை நடத்துவதாக ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் புது குண்டை போட்டிருக்கிறார்.

கடந்த 9ம் தேதியன்று ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் அருகே நடைபெற்ற உயிர் தியாக தாக்குதலில் 19 நபர்கள் கொல்லப்பட்டனர். மேலும் அதே நாளில் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் காவல்துறை செக் போஸ்ட் அருகே இன்னொரு தாக்குதல் நடந்தது.

இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஆப்கன் அதிபர் கர்சாய் "இத்தாக்குதல்கள் அமெரிக்காவின் விருப்பப்படியே நடந்துள்ளன. திட்டமிட்டபடி ஆப்கனைவிட்டு வெளிநாட்டு படைகள் வெளியேறினால் இத்தகைய சம்பவங்கள் நடக்கும் என்று எங்களை பயமுறுத்த நினைக்கின்றனர்'' என்றார்.

மேலும் தாலிபான்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க இத்தாக்குதல் களை நடத்தவில்லை என்றும் அமெரிக்கர்களின் இருப்பை ஆப்கனில் நீட்டிக்கவே தாலிபான்கள் விரும்புகின்றனர் என்றும் கர்சாய் கூறினார்.

ஏற்கனவே தாலிபானுடன் இணைய போவதாக மிரட்டியவர் கர்சாய் என்பதும் நேட்டோ படைகளை ஆப்கனின் வளங்களை கொள்ளையடிக்க வந்தவர்கள் என்றும் கர்சாய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It