காட்சி: 1

பாத்திரங்கள் : முறுக்கு பாட்டி (முத்தாச்சி), ராமாத்தாள் (பக்கத்து வீட்டுக்காரி)

நேரம் : மத்தியான நேரம்

இடம் : முத்தாச்சி வீட்டு முற்றம்

ராமா : எக்கா, சௌக்கியமா இருக்கியா? உன்னக் கண்ணப் படச்சிப் பார்த்து ரொம்ப நாளாச்சே...

முத் : ஏதோ, இருக்கேண்டிய்யம்மா... அந்த பேராச்சி புண்ணியத்திலேயும், மூங்கிலடியான் புண்ணியத்திலேயும்.

ராமா : என்னக்கா, ரொம்பச் சலிப்பா சொல்லுதியே... உனக்கென்ன குறைச்சல், ஒத்தைக்கு ஒரு மகள். அவளைச் செல்லமா வளர்த்தே. அவளுக்கும் மாலை பூத்துட்டு. இனிமே உன் பாடு யோகம்தானே!

முத் : ஒத்தப் புள்ளய வச்சிக்கிட்டு நா(ன்) படுகிற பாடு எனக்குத்தான் தெரியும் எனக்குச் சொந்த பந்தம்னு சொல்லிக்கிட இந்த ஊர்ல யாரு இருக்கா...? இந்த மாதிரி லாப, நஷ்டக் காலத்துல, நாலு காசுபணத்தைக் கொடுத்து உதவ எந்த நாதி இருக்கு எனக்கு..? ஏதோ அந்த பேராச்சி புண்ணயித்திலேயும், மூங்கிலடியான் புண்ணியத்திலேயும் எல்லாக் காரியமும் நடந்துக்கிட்டு இருக்கு.

ராமா : எக்கா, கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு..?

முத் : ஏதோ.. அந்த பேராட்சி புண்ணியத்திலேயும், மூங்கிலடியான் புண்ணியத்திலேயும் எல்லாக் காரியமும் ஒண்ணொண்ணா நல்லபடியாத்தான் நடந்துகிட்டிருக்கு. பெண்ணை அழைச்சிக்கொண்டுபோய் கைலாசபுரத்துல என் சித்தி மகள் ரத்தினம் வீட்டுல விட்டாச்சி. மற்ற ஏற்பாட்டை எல்லாம் அவள் பொறுப்பாய் பார்த்துக்குவாள். நாளைக் காலையில கல்யாணம்.. தாலி கட்டுக்கு உன்னால வரமுடியாட்டாலும் மறுவீட்டிற்காவது வந்திரு.

ராமா : என்னக்கா நான் வராம இருப்பனா... உன் மகள் என் மகள் மாதிரியில்ல.. ரொம்ப பாசக்காரப் புள்ளையாச்சே.. அது கிடக்கட்டும். மாப்பிள்ளை என்ன ஜோலி பாக்காஹ?

முத் : மாப்பிள்ளை வெள்ளைக்கார துரைகிட்ட உத்தியோகம் பார்க்காகளாம். அந்த துரை பேருகூட என்னம்மோ ‘விண்டில்’னு சொன்னாங்க. அந்தப் பேரைக்கூட என்னால ஒழுங்காக சொல்ல முடியலை. வெள்ளைக்காரத் துரைமார்களின் பெயர்கள் நம்ம வாயில நுழையவா செய்யும்? மாப்பிள்ளை அந்த துரை வீட்டுல ‘பங்கா’ இழுக்கிற உத்யோகம் பார்க்காகளாம். காலணாச் சம்பளம் என்றாலும் கவர்மெண்ட் சம்பளமாச்சா.. ஒண்ணாந்-தேதியானா, வெள்ளக்காரன் காசு சும்மா டாண்ணு கைக்கு வந்திருமே!

ராமா : அது என்னக்கா ‘பங்கா’ இழுக்கிறதா..? அப்படின்னா என்ன வேலை, எனக்குத் தெரியலையே, கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லேன்.

முத் : ராமாத்தா, வெள்ளைக்கார துரைகள் நம்மள மாதிரி, கையில ஒரு ஓலை விசிறியை வச்சிக்கிட்டு காத்து வீச மாட்டாங்களாம். அவங்க பாட்டுக்கு நாற்காலியில உக்காந்து அவங்கவங்க வேலை ஜோலியைப் பார்ப்பாங்களாம். இந்த மாதிரி வேக்காடான, கோடை காலத்துல காத்து வேணுமே. அதனால தலைக்கு மேல ஒரு வட்டை கட்டித் தொங்கவிட்டு அதுல ஒரு அகலமான தட்டு மாதிரி செய்த விசிறியைக் கட்டி தொங்க விட்டிருப்பாங்களாம். ஒரு ஓரமா நின்னு ஓராள். கைப்பிடிக் கயிற்றைப் பிடிச்சி இழுக்கும்போது, துரை உக்கார்ந்திருக்கிற இடத்துல தலைக்கு மேலே தொங்குகிற அகலமான தட்டு முன்னும் பின்னும் போக, துரைக்கு நல்லாக் காத்து வீசுமாம். இந்த காத்தாடிக்குத்தான் ‘‘பங்கா”ன்னு பேராம், நான் என்னத்தக் கண்டேன். மாப்பிள்ளை வீட்டுக்குச் சொந்த பெரியப்பா ஒருத்தர், தலையாரியா இருக்கார். அவர் கிராம முனிசீப்கூட கணக்கப்பிள்ளை கூட எப்பவாவது துரையைப் பார்க்கப் போவாராம். அப்ப அந்த பங்காவைப் பாத்திருக்காராம், அவுகதான் எனக்கு பங்காவைப் பத்திச் சொன்னாக. மத்தப்படி நான் பங்காவைக் கண்டனா... கிங்காவைக் கண்டனா...?

ராமா : எக்கா, உன் மருமவன் பேரு என்னது?

முத் : அடி கூறு கெட்டவளே, காலம் ரொம்பத்தான் கெட்டுப் போச்சி.. நீ என்ன செய்வே..? எவளாவது, மகள் கெட்டப்போற மருமகனின் பெயரைச் சொல்லுவானா..? நீயும் கூசாம நாக்கு மேல பல்லப் போட்டுக் கேட்டுட்டியே.. என்றாலும் நீ கேட்டதால, உனக்கு மட்டும் சொல்லுதேன். நம்ம தெரு தலைமாட்டுல இருக்கே, தென்ன ஓலை வேய்ந்த மூக்காத்தா மதினிவீடு. அவுக புருசன் பேரு தெரியுமா.. உனக்கு, அந்தப் பேருதான், என் மருமகனுக்கும்...!

ராமா : அட... மாடசாமிதான் உன் மருமகன் பேரா? சாமி பேருதான்! அப்ப நல்ல பையனாத்தான் இருப்பான். இருக்கட்டும் யக்கா, நகைக்கு என்ன செஞ்சே?

முத் : எங்க ஆத்தாவும், ஐயாவும் சேர்ந்து என்னைக் கட்டிக் கொடுக்கும்போது, எனக்கு காது வளர்த்து ஒரு ஜோடி பாம்படமும், தண்டட்டியும் போட்டாக. அத இது நாள் வரைக்கும் நான் கழட்டி, அடகு வச்சிராம வித்திராம காபந்து பண்ணி வச்சிருந்தேன். இப்ப அதை அழிச்சி, அதோடு கொஞ்சம் தங்கமும் வாங்கிப் போட்டு, இந்த நவநாகரிக காலத்துக்கு ஏத்த மாதிரி புது தினுசாச் செய்யணும்னு, நம்ம ஊரு தங்கவேலு ஆசாரியாரிடம் கொடுத்திருக்கேன். அவரு புதுப் பாம்படத்தை இன்னைக்கு தாரேன்னு சொல்லி இருக்காரு. ஆசாரியார் பட்டரைக்கு போயி.. பாமடத்தை வாங்கிட்டு.. நான் நாளைக் காலையில பொழுது விடியுமுன்னால, நம்மூரு பொத்தைக்கு மேற்க... இருக்க கைலாசபுரத்துக்குப் போகணும், நான் போனாத்தான், மாப்பிள்ளை பொண்ணு கழுத்துல தாலிய கட்டுவாக.. அதான், இப்படி அரக்கப் பரக்கப் புறப்பட்டுகிட்டு இருக்கேன். இல்லைன்னா, உங்கிட்ட உக்கார்ந்து சாவகாசமாய் பேசிக்கிட்டிருக்க மாட்டனா...?

ராமா : சரி, சரி, நேரமாகுது, நீ போக்கா, சீக்கிரமாப் போயி, அந்த ஆசாரியை நெருக்கு.. அப்பதான் அவரு நேரங்காலத்தோடு, பாம்படத்தைச் செஞ்சி தருவாரு.. இல்லைன்னா நாளைக்குத் தாரேன், நாளான்னைக்குத் தாரேன்னு இழுத்தடிப்பாரு...

முத் : அப்ப சரி, நான் வாரண்டியம்மா, மறந்துராம மறுவீட்டு அழைப்புக்கு வந்திரு...!

ராமா : சரிக்கா, நான் வந்திருதேன் மறுவூட்டுக்கு.. இப்ப நீ ஜாக்கிரதையாப் போயிட்டு வா.. தங்கச் சாமானைப் பத்திரமா, சூதானமாகக் கொண்டுபோய்ச் சேரு... காலம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு.. இந்தக் காலத்துல யாரைத்தான் நம்ப முடியுது...? ஏதோ உன் மகள் கல்யாணம் நல்லபடியா முடியணும். அந்தப் பேராச்சியும் மூங்கிலடியானும்தான் உனக்குத் துணை செய்யணும்.

முத் : ம், ‘‘ஆசாரி சொல் அரைச் சொல்லும்பாக”.. அந்த மனுசன் என்ன பண்ணி வச்சிருக்காரோ? யாரு கண்டா...! (முனங்கியபடியே நடக்கலானாள் முத்தாச்சி)

காட்சி-2

இடம் : தங்காசாரியின் பட்டரை
பாத்திரங்கள் : தங்காசாரி (தங்கவேல்), முத்தாச்சி (முறுக்குப் பாட்டி)
நேரம் : மாலை நேரம்

முத் : என்ன ஆசாரியரே, இப்படி இழுத்தடிக்கீர்! நேத்து வரச் சொன்னீர் நேத்து வந்தேன், பிறகு இன்னக்கிக் காலையில் வரச் சொன்னீர். இன்னைக்கி காலையில வந்தேன். ‘‘இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு மத்தியானம் வா”ன்னு சொன்னீர். மத்தியானம் வந்தேன். பிறகு ‘‘சாயங்காலம் வா”ன்னு சொன்னீர். இப்ப சாயங்காலமும் ஆயிட்டு. பாமடத்தைத் தரப்போறீரா இல்லையா..?

தங் : எம்மா, தாயி, கோவப்படாதே, இப்படிச் செத்தோடம் உக்கார். உன் அவசரம் எனக்குத் தெரியாதா..? கல்யாணக் காரியம் என்பது எனக்குப் புரியாதா..? இடையில ஒரு அவசர வேலை, சிறுகுளம் சுப்பையா பண்ணையார் வந்து ஒரு திருமாங்கல்யத்தைக் கொடுத்து இப்ப உடனே செஞ்சி தரணும்னு சொல்லி, ராவாப்பகலா, பட்டரையிலேயே பழிகிடையா கிடக்க ஆரம்பிச்சிட்டார். பெரிய மனுஷன் பகை தொள்ளாளிக்கு ஆகுமா? அடிக்கடி வேல தருகிற மனிதன். அவர், அதனால இடையில் ஒருநாள், அன்னந்தண்ணிகூடக் குடிக்காம, ராவாப் பகலா உக்கார்ந்து, அவர் வேலையை முடிச்சிக் கொடுத்துட்டேன். இனிமே, உன் வேலைதான். இன்னும் செத்த (சிறிது) நேரத்துல உருப்படியைத் தந்திருதேன்.”

முத் : ஐயா, உங்களுக்குத் தெரியாத யோசனையா? நான் ஒத்தப்பேரி (தனி ஆள்). ஆம்பளை துணை இல்லாதவள். ஒத்த ஒரு பொட்டப் பிள்ளைன்னாலும், என் வீட்டுக்காரவுக இல்லாமல், அப்பிள்ளையை வளர்த்து ஆளாக்கி, ஒரு மாப்பிள்ளை வீடும் பார்த்துப் பேசி முடிக்கதுக்குள்ள தவிடு தாங்கிப் போச்சி. ‘‘என் வீட்டுக்காரவுக, உயிரோட இருக்கும்போதே, கூப்பிட்ட ஆட்களுக்கு வேலைக்குத்தான் போனாக.. அந்தக்கொத்து (தினக்கூலி) தான் பார்த்தாக. அவுகளும் நான் சின்ன வயசா இருக்கும்போதே பாம்பு கடிச்சதால ‘‘திருநாடு” (மேல் உலகம்) போய்ச் சேர்ந்துட்டாக. என் கையில ஒரு முறுக்கு யாவாரம் கிடச்சிது, அதை வச்சுத் தாயும் பிள்ளையும் பசி, பட்டினி இல்லாமல் வயித்தைக் கழுவத்தான் முடிஞ்சது. இடையில, காலும், அரையுமா சிறுவாடாகச் சேர்த்து வச்சது, கொஞ்சம், கையிலயும், மடியிலயும் இருந்திச்சி, அதை வச்சித்தான், இப்ப இந்தக் கல்யாணத்தை எடுத்து நடத்த முடிஞ்சுது. பெத்த பிள்ளையை ஒரு மகராசன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா பெத்த கடமை முடிஞ்சிடும். பிறகு நிம்மதியா கண்ணை மூடலாம்.

தங் : முத்தாச்சி, இருந்தாலும் நீ கெட்டிக்காரிதான். நாலு பேரப்போல, ‘‘தாம், தூம்” என்று ஆடம்பரம் பண்ணாம, சிக்கனமா, இருந்துக்கிட்டு, முறுக்கைச் சுட்டு நாலு ஊருக்கு போய் வித்துக்கிட்டு, நாலு காசு, பணமும் சம்பாதிச்சி இப்ப பெத்த புள்ளையை ஜாம், ஜாம்னு கெட்டிக் கொடுக்கப் போறே! நீ ஒண்ணும் கவலைப்படாதே! உனக்கு அந்தப் பேராச்சியும், மூங்கிலடியானும் ஒரு குறையும் வைக்க மாட்டாங்க. அது சரி, உன் மகளை எந்த ஊர்ல கட்டிக் கொடுக்கப் போறே?

முத் : நம்ம ஊருக்கு மேக்கால இருக்க, கைலாசபுரத்துக்குத்தான் கட்டிக் கொடுக்கப் போறேன். அங்க எனக்கு என் வீட்டுக்காரர் வழியில நிறைய சொந்த பந்தங்கள் இருக்கு.. என் மதினிக்காரி துப்புலதான் இந்த மாப்பிள்ளை வீடு வந்தது. அங்க, என் வீட்டுக்காரரோட சொந்த பந்தங்கள் நல்ல ‘‘சுதை”யோடே இருக்காங்க.. புள்ளையை நல்லபடியாப் பார்த்துக்குவாங்க.. அதான் அந்த மாப்பிள்ளைக்கு கெட்டிக் கொடுக்கேன்.. மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை, மாப்பிள்ளைப் பையனை எனக்குச் சின்ன பிள்ளையில இருந்தே தெரியும், எந்தக் கெட்ட பழக்கமும் அவுகளுக்கு கிடையாது. அடிச்சிட்டு ஒரு வாய்க் கஞ்சைக் குடுத்தாக்கூட குடிச்சிக்குவாக.. அதோட வெள்ளைக்கார துரைகிட்டயில்ல வேலை பார்க்காக..

தங் : அப்படியா... ரொம்ப சந்தோசம், உன் மகளுக்கும் ஒரு குறையும் வராது. யாருக்கு என்ன கெடுதல் செஞ்சிருக்கோம். பேராச்சி நமக்கு ஒரு குறையும் வைக்க மாட்டா. என் கைனால பாமடம் செய்துகொடுத்த பிள்ளைகள் எல்லாம், பெத்துப் பெருவாழ்வு வாழுறாங்க. என் ‘கைராசி’ அப்படி. அதனாலதான், எனக்கும் நிமிடி முடியாம வேலை வந்துக்கிட்டே இருக்கு.. அது கிடக்கட்டும். கைலாசபுரம் போகணும்னு சொல்லுதியே.. ஊருக்கு மேற்கே இருக்கிற பொத்தைக் காட்டைக் கடந்துல்ல போகணும். இப்பமே பொழுது கண்ணுக்குள்ள விழுந்துட்டே, தங்கச் சாமானை வேற கொண்டுக்கிட்டுப் போக வேண்டியதிருக்கே, மலங்காட்டு வழியா, ஒத்தயில போகவா, போற? இப்ப இந்த வெள்ளைக்காரங்க ஆட்சியில ஊர்க்காவல்கூட கிடையாதே. ராத்திரியில் காடுகரைகளுக்குப் போயிட்டு வரக் கூடப் பயமா இருக்கு. அதனால நான் சொன்னேன்னு கேளு. யாரையாவது ஒரு இளவட்டப் பிள்ளையை துணைக்கிக் கூட்டிக்கிட்டுப் போ.. பிறகு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிட்டுன்னா.. உன்னால தாங்க முடியுமா..? கல்யாணக் காரியத்தை முன்னால வச்சிக்கிட்டு ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா..?

முத் : ஆசாரியாரே, நீர் சொல்லுறது எல்லாம் சரிதான், இப்ப போய் நான் கூப்பிட்டா எந்த இளவட்டப் பிள்ளை எனக்குத் துணைக்கு வருவாம்? நீர் வேலையை முடிச்சிப் பாமடத்தைத் தாரும். நான் அடிமடியில ஒழிச்சி வச்சிக்கிட்டு எப்படியாவது சாமானைக் கல்யாண வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திடுவேன். அந்தக் கவலை உமக்கு வேண்டாம். இருட்டு, வழியில ஒத்தையில போகணுமேன்னு பயந்துதான், சீக்கிரம் உருப்படியைச் செஞ்சி தாரும்ன்னு கெஞ்சினேன். நீருதான், அன்னா, இன்னான்னு காலத்தைக் கடத்திட்டீர், இப்ப தங்கச் சாமானைக் கொண்டுக்கிட்டு ஒத்தயில போகாதேன்னு பயங்காட்டுதீரு! எனக்கு அந்த பேராச்சியும், மூங்கிலடியானும் துணைக்கு இருக்கிறவரை எந்தப் பயமும் இல்லை. ஒவ்வொரு சொட்டு ரெத்தமும் சுண்டும்படியா, ராவாப்பகலா, முறுக்குச் சுட்டு விற்று உழைத்த முதல், இதை யாரும் அபகரிக்க மாட்டாங்க. அப்படியே உழைச்ச முதலைக் கொள்ளை இடணும்னு நினைச்சி எம் பொருளை அபகரிச்சாங்கன்னா, அவங்க விளங்காமத்தான் போயிருவாங்க!

தங் : எம்மா, தாயி நீ சொல்வது எல்லாம் சரிதான், நானும் இல்லைன்னு சொல்லலை. நக்குத நாயி செக்கைக் கண்டுதா? சிவலிங்கத்தைக் கண்டுதாங்கறது பழமொழி. கொள்ளைக்காரப் பெயல், நல்ல முதல், கெட்ட முதல்ன்னு பார்ப்பானா? அவன் என்ன ஜோசியக்காரனா? உழைச்ச முதல் எது உழைக்காத முதல் எதுன்னு பார்த்துக் களவாங்க! இப்ப சமீப காலமா, நம்ம ஊருக்கு மேற்கால இருக்கிற பொத்தையில, சங்குத் தேவன்னு ஒரு பெரிய கொள்ளைக்காரன் தங்கி இருக்கான்னு கேள்விப்பட்டேன். நாலு நாளைக்கு முன்னாலதான். நம்ம மேலப்பண்ணை வீட்டுல புகுந்து இரும்புப் பெட்டியை உடைச்சி ரெண்டாயிரம் ரூபாயைக் களவாண்டுக்கிட்டுப் போயிட்டானாம். ரெண்டு நாளைக்கு முன்னால, காசுக்கடைச் செட்டியார், பத்தமடைக்கு வட்டித் துட்டு பிரிக்க போயிட்டுத் திரும்பி வார வழியில, அவரிடம் இருந்த காசு பணத்தை எல்லாம் சங்குத் தேவன் புடுங்கிட்டு உட்டுட்டான்னு சொல்லுதாங்க. அதனால ஜாக்கிரதையா தங்கச் சாமானைக் கொண்டுக்கிட்டு போ.. இந்தா உருப்படிகளை நல்லாப் பார்த்துக்க. சூதானமாக மறைச்சி வச்சிக்க.. கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டு வந்து கூலியைக் கொடு போதும்.

முத் : ஏதோ, இந்தமட்டுக்காவது நகையைச் செஞ்சி கொடுத்தீரே, உமக்குக் கோடி புண்ணியம். ஆசாரியாரே, நாம் போயிட்டு வாரேன். கல்யாணக் கதை எல்லாம் முடிந்த பிறகு சாவகாசமாக வந்து உம்முடைய கூலியைத் தருகிறேன். கூலியோடு கூடவே பிள்ளைகளுக்கு முறுக்கும் கொண்டுக்கிட்டு வாரேன்.

காட்சி - 3

இடம் : மலையடிவாரம், காட்டு வழி, ஒத்தையடிப்-பாதை
காலம் : முன்னிரவு நேரம், நிலாக்காலம்
பாத்திரங்கள் : முத்தாச்சி (முறுக்குப்பாட்டி), சங்குத்தேவன் (கொள்ளைக்காரன்)

(இருளில் ஒத்தையடிப் பாதையில், தனி வழியே போவதனால், முறுக்குப்பாட்டி முத்தாச்சி ஒரு நாட்டுப்புறத் தெம்மாங்குப் பாடலைப் பயம் தோன்றாமல் இருக்கப் பாடிக்கொண்டே நடக்கிறாள்)

முத் : (மனதிற்குள்) ஐயா, மூங்கிலடியானே..! பேராச்சித்தாயே! ஏதோ நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில், கிளம்பிவிட்டேன். விடிந்தால் என் மகளுக்குக் கல்யாணம். என்னையும் என் நகைகளையும் நீங்கள்தான் காபந்து பண்ணி ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்.

சங்கு : (கரடுமுரடான குரலில்) யாரது? பொம்பளப் பாட்டுச் சத்தம் மாதிரிக் கேக்குது..?

முத் : ஐயா, சாமி, நான் முறுக்குப் பாட்டி முத்தாச்சி.. கைலாசபுரத்துக்குப் போய்கிட்டு இருக்கேன். நீங்க யாரு? உங்க சத்தம் மட்டுந்தான் கேக்கிறது. உங்க உருவம் கண்ணுக்குத் தெரியலையே! ஏற்கனவே எனக்கு வயசாயிட்டு, இந்த மங்கலான நிலவு வெளிச்சத்துல, ஒரு எழவும் தெரிய மாட்டங்குது. கிட்ட வாங்க ஐயா, நான் வயசு காலத்துல ஒத்தயில நடக்க மாட்டாம நடந்து போயிக்கிட்டு இருக்கேன், நீங்க கிட்ட வந்தீங்கன்னா, எனக்கு வழித்துணையா இருக்கும், பேச்சுத் துணைக்கு ஆள் கிடச்ச மாதிரியும் இருக்கும்.

சங்கு : பாட்டி இப்ப, நான் கிட்ட வந்துட்டேன், என்னை இப்ப நல்லாப் பார்த்துக்க.

முத் : அட, என்னப்பா, நீயி, இப்படி கப்படா மீசையும், தாடியுமா, கக்கத்துல கம்பும், தலப்பாக் கட்டும், பார்க்க பெரிய கொள்ளைக்காரன் மாதிரி இருக்கே.. நீர் உடுத்தி இருக்கிற வேட்டியத் துவச்சே, பல நாளா, இருக்கும் போல இருக்கே.. என்னம்மா, புளுங்கி வீசுது, நாலு மனுஷர், மக்களை மாதிரி முகத்தைச் சிரைச்சி, வேட்டி, சட்டையைத் துவச்சி உடுத்திக்கிட்டு வரக் கூடாதா..? ஏன் இப்படி நாடோடி மாதிரி இருக்கே? பேசாம, என்கூட நான் போகிற ஊருக்கு வா.. அங்க என் தாய் பிள்ளைகள் ஏராளமா இருக்காங்க. ரெண்டு, மூணு நாள், அங்க தங்கி, குளிச்சி மொழுகி, துணி மாத்திப் புது மனுஷனாகலாம்.

சங்கு : தாயி, நீ யாரோ? யார் பெத்த புள்ளையோ? முன்னப் பின்னத் தெரியாத என்மேலே இவ்வளவு அக்கரை காட்டுதியே! நீ நல்லா இருக்கணும். நீ. நல்லாதான் இருப்பே, என் தலைவிதி இது. இப்படி காட்டுக்குள்ள கிடந்து சாவுதேன். சரி, அது கிடக்கட்டும், முதல்ல நீ யாரு, நீ எங்கிருந்து வாரே? எந்த ஊருக்குப் போற? என்ன காரியமா, இப்படி ரா வேளையில, இந்தக் காட்டு வழியா ஒத்தயில போற? உனக்கு கள்ளர்கள் மேல் பயம் இல்லையா? பேய் பிசாசு மேலயும் நம்பிக்கை இல்லையா?

முத் : அடேயப்பா, எத்தனை கேள்விகளை கேள்வி மேல கேள்வியா அடுக்கிட்டீரு? எனக்கு சொந்த ஊரு ஆயங்குளம். இப்ப நான் கைலாசபுரத்திற்குப் போய்க்கிட்டு இருக்கேன். நான் பரம ஏழை. நான் பிறந்த வீட்டுலயும், பெருசாச் சொத்து சுகம் ஒண்ணும் கிடையாது. நான் வயசுக்கு வாரது வரையிலயும், என் கூடப் பிறந்த தங்கச்சியை வீட்டுல வச்சிக் கவனிக்கிறதும், காடு, கரைகளுக்கு வேலைத் தலத்துக்கு ஆய், அப்பனுக்கு கஞ்சி கொண்டுபோறதும்தான் எனக்கு வேலை. சாயங்கால நேரத்துல, காடு கரைகளுக்குப் போய் விறகு சுள்ளிகளைப் பெறக்கிக்கிட்டு வருவேன்.. அது ராத்திரி சோறு பொங்கறதுக்கு ஆகும்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, என்னை ஆடு மேய்க்க அனுப்பிட்டாக. அதுக்குள்ள என் தங்கச்சிக்காரி கைநிமுந்து, காடு, கரையில் வேலை பார்க்கிற, ஆய், அப்பனுக்குக் கஞ்சி கொண்டுக்கிட்டு போக ஆரம்பிச்சிட்டா.

நான் மழைக்குக்கூட பள்ளிக்கூடத்துல ஒதுங்கினதில்லை! நான் வயசுக்கு வந்ததும் ஒரு மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டிக் கொடுத்துட்டாக.

சங்கு : அம்மா, தாயே! நான் உன்னிடம் உன் பிறந்த கதையைச் சொல்லு, வளர்ந்த கதையைச் சொல்லுன்னு கேட்டனா..? எந்த ஊருக்குப் போறன்னு சொல்லு, அது போதும்.

முத் : எய்யா, உன்னைப் பார்த்ததும் முதல்ல, நான் பயந்துதான் போயிட்டேன். இந்த மீசையையும், தாடியையும், தலைப்பாக் கட்டையும் பார்த்தா யார்தான் பயப்படாம இருப்பா? ஆனா, உன்னிடம் பேச்சுக் கொடுத்த பிறகுதான், உன்னைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டேன்.

நான் பயந்துக்கிட்டே வந்தேன். ராத்திரி நேரத்துல. இப்படிக் காட்டு வழியா, தன்னந்தனியா போக வேண்டியதிருக்கேன்னு நினைச்சி, அந்தப் பேராச்சித் தாயையும், மூங்கிலடியானையும் மனசுக்குள்ளேயே நினைச்சு கும்பிட்டுக்கிட்டேதான் நடந்தேன். அந்த ரெண்டு சாமிகளும் சேர்ந்துதான், எனக்கு வழித்துணையா உன்னை அனுப்பி வச்சிருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

ஏதாவது கதை மாதிரி சொல்லிக்கிட்டே நடந்தால், பயமே தோணாதுன்னு நினைச்சிதான், என்னோட சொந்தக் கதையைச் சோகக் கதையை உன்னிடம் சொல்ல ஆரம்பித்தேன். நீ என்னடான்னா என் கதையைச் சொல்லவிட மாட்டங்கே..

சங்கு : சரி, சரி, அப்பன்னா, உன் சொந்தக் கதையைச் சொல்லு, உன் கதையை நானும் கேட்டுக்கிடுதேன்.

முத் : என்னக் கெட்டிக்கொடுத்த இடத்துலேயும் வாய்ப்பு வசதி ஒண்ணும் இல்லை. என் வீட்டுக்காரம் கையையும், காலையும்தான் சொத்து சுகமா வச்சிருந்தாக..! பத்து விரலால உழைச்சி, அஞ்சு விரலால அள்ளிச் சாப்பிடணும்கிற நிலையிலதான் அவுகளும் இருந்தாக.

யாரு செஞ்ச பாவமோ, ஒரு நாள் வயக்காட்டுல இருந்து, இருட்டுன பிறகுதான் வந்தாங்க. அப்ப எப்படியோ கால் தவறி ஒரு பாம்பு மேல மிதிச்சிட்டாக. அதனால, அந்தப் பாம்பு அவுகளைக் கடிச்சிட்டு. அந்த இடத்துலேயே நுரை தள்ளிச் செத்துட்டாக.

எனக்கு ஒத்த ஒரு பொட்ட பிள்ளைதான் பிறந்திச்சி. அந்தப் புள்ளையும் ஏந்து பிள்ளையா இருக்கும்போது, அவுக மண்டையைப் போட்டுட்டாக, அன்னையில இருந்து நான் முறுக்குச் சுட்டு யாவாரம் பார்க்க ஆரம்பிச்சேன். அதனால அஞ்சு வயசுப் பிள்ளைகூட என்னை முறுக்குப் பாட்டின்னுதான் கூப்பிடும். என் நெசத்துப் பேரு நிலைக்கலை. முறுக்குப் பாட்டின்ன பேருதான் நிலைச்சிருச்சி.

முறுக்கு சுட்டு நாலு ஊருக்கு, வீடு, வீடாக் கொண்டுக்கிட்டுப் போயி வித்து, யாவாரம் பார்த்து, அதுல கிடைச்ச காசு, பணத்தைக் காலும், அரையுமாச் சேர்த்து வச்சி, நகை நட்டு உண்டுபண்ணினேன்.

என் மகளும், வளர்ந்து ஆளாயிட்டா(ள்) அவளுக்கு, இந்த பொத்தைக்கு மேற்க இருக்க, கைலாசபுரத்துல மாப்பிள்ளை பார்த்துப் பேசி முடிச்சிட்டேன். நாளைக் காலையில விடிஞ்சாக் கல்யாணம், பெண்ண முன்கூட்டியே அழைச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. என் மகள் இப்ப, என் தங்கச்சிக்காரி வீட்டுல, கைலாசபுரத்துலதான் இருக்காள்.

எங்க ஊரு தங்கவேல் ஆசாரி இடம், என் மகளுக்கு நகை செய்யக் கொடுத்திருந்தேன். அவரு, அன்னா, இன்னான்னு இம்புட்டு நேரமாக்கிட்டாரு. இப்பதான், செஞ்சு கொடுத்தாரு. நகையை அதை வாங்கி, இடுப்புல முடிஞ்சி வச்சிக்கிட்டுத்தான் இந்த காட்டு வழியில ஒத்தயில நடந்து வாரேன். ஊர்ல இருந்து புறப்படும்போது தங்கவேல் ஆசாரி, ஏம்மா, தாயி, அந்தக் காட்டு வழியே ஒத்தயில போகாதே! அங்க கள்ளன் கிடக்கான், கத்தி வச்சிருக்கான்னு என்னப் பயங்காட்டினாரு. நான் கடவுள் விட்ட வழின்னு நினைச்சி தைரியமா தங்க நகையையும் வச்சிக்கிட்டு கள்ளன் வருவானோ..? நகையைப் புடுங்கிட்டுப் போயிடுவானோன்னு பயந்து நடுங்கிக்கிட்டுத் தன்னால பாட்டும் படிச்சிக்கிட்டு இந்தக் காட்டு வழியா நடந்து வந்துகிட்டு இருந்தேன். நான் கும்பிடுகிற அந்த பேராச்சித் தாயும், மூங்கிலடியானும் என்னைக் கைவிடலை. உன்னை வழித்துணையா அனுப்பிட்டாங்க.

சங்கு : பாட்டி, உன் கதையைக் கேட்டாலே, கள்ளாளிப் பெயலுக்குக்கூட இரக்கம் வந்திரும். ஏழைபாழைகளுக்கு யாரும் இடைஞ்சல் கொடுக்கக் கூடாதுங்கறதுதான் என்னோட எண்ணம். பாட்டி, நீ பயப்படாம என்னோடு வா, கைலாசபுரம் கோயில் கோபுரம் தெரியும், ஊர் எல்லைவரை உன்னோடு துணைக்கு நான் வருகிறேன். அதற்கு பிறகு நீ ஊருக்குப் போயிரு. நான் என்னோட வழியே போயிருதேன். இது முன்நிலாக்காலம், சீக்கிரம் முதல் ஜாமத்திலேயே நிலா அடஞ்சிடும். அதனால காலை விரசாப் போட்டு எட்டி நட.

முத் : எப்பா, என்னோட கதையை நான் சொன்னேன். நீயும் கேட்டுக்கிட்டே. இப்போ உன்னோட கதையை நீ சொல்லேன். நானும் கேட்டுக்கிடுதேன்.

சங்கு : என்னோட கதை நாலு மனுஷர் மக்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும்படியான கதை இல்லை, என் கதையை யாரும் தெரிஞ்சிக்க வேணாம். அதோ, கோயில் கோபுரத்தின் உச்சி தெரிகிறது. இன்னும் சற்று நேரம் நடந்தால் போதும், கைலாசபுரத்தின் ஊரின் எல்லை வந்திரும்.

முத் : சரி, உம்ம கதையைச் சொல்ல வேணாம். வழி நடை அலுப்புத் தெரியாமல் இருக்க ஒரு தெம்மாங்குப் பாட்டாவது பாடும், உம்ம பாட்டைக் கேட்டுக்கிட்டே நானும் நடந்து வாரேன்.
(சங்குத்தேவன், ஒரு தெம்மாங்குப் பாட்டை ராகத்துடன் பாடுகிறான்)

முத் : ஏம்ப்பா, என்ன அருமையா பாடுகிறீர், ஆளைப் பார்த்தா முரடா இருக்கிறீர், ஆனால் உம்ம குரல் தேனா இனிக்கே..!

சங்கு : அம்மா, தாயே, இதோ, ஊர் எல்லை வந்தாச்சு, போயிட்டு வா. உன் மகள் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்..! உன் மகளுக்கு இந்த தங்கச் சங்கிலியை என் சீதனமாகக் கொடுத்திரு. இந்தா இந்தச் சங்கிலியை வாங்கிக்க.

முத் : எய்யா, நீர் இதுவரை எனக்கு துணையா வந்ததே போதும். நான் உழைத்த முதலில் செய்த நகையைக் காப்பாத்திவிட்டீரே. அதுவே போதும்! உம்ம முதலு எனக்கு வேண்டாம். அந்தச் சங்கிலியை நீரே வச்சிக்கரும்.. நான் போயிட்டு வாரேன்.. ஆயிசோட அந்த பேராச்சி, மூங்கிலடியான் புண்ணியத்துல புளைச்சிக் கிடந்தா, இனி ஒரு தரம் பார்ப்போம்.

சங்கு : அம்மா, தாயி, என்ன உன் உடன் பிறக்காத தம்பியா நினைச்சுக்கோ. இதை உன் மகளுக்குத் தாய்மாமன் சீரா நினைச்சிக் கொடு, இந்தா பிடி, இந்தச் சங்கிலிய வாங்கிக்க..

முத் : அட, என்ன நீரு இப்படி, தங்கச் சங்கிலிய என் கையில போட்டுட்டுப் போறீரு! இதுவரை என்னோடு துணைக்கு வந்தீரே! உம்ம பெயர் என்னன்னு சொல்லலியே... இந்த நகையை யார் தந்தான்னு சொல்லி, எம் மகள் கழுத்தில் போட? உம்ம பெயரையாச்சும் சொல்லும் தெரிஞ்சிக்கிடுதேன்.

சங்கு : எம்பேருதான் சங்குத்தேவன், இந்த ஊர் உலகமே கொள்ளைக்காரன்னு சொல்லி எந்தப் பேரைக் கேட்டு நடுநடுங்குதோ... அந்தக் கொள்ளைக்காரச் சங்குத்தேவன் நான்தான். நான் பொல்லாதவங்களுக்குத்தான் பொல்லாதவன், உன்னை மாதிரி ஏழை பாளைகளுக்கு நான் காவல்காரன், அதுதான் சங்குத்தேவனின் தர்மம்!

காட்சி - 4

இடம் : திருமண வீடு
நேரம் : காலை நேரம்
பாத்திரங்கள் : முத்தாச்சி, முத்தாச்சி மகள் முருகாத்தாள்.

முத் : அந்தப் பேராச்சி தாயி புண்ணியத்துலேயும், மூங்கிலடியான் புண்ணியத்துலயும் நல்லபடியா என் மகள் திருமணம் நடந்திருச்சி.

மகள் : (ராமாயி) ஆத்தா, தங்கச் சாமாக்கள் அழகா இருக்கு, தங்கவேல் ஆசாரியார், நல்லபடியா செய்திருக்கிறார், பாமடத்தை. அது சரி ஆத்தா, தங்கச் சங்கிலி தந்தியே, கழுத்துல போட்டுக்கிடச் சொல்லி, அது ஏது? யார்ட்டயாவது இரவல் வாங்கிட்டு வந்தியா?

முத் : என் கூடப் பிறக்காத பிறப்பு ஒருத்தன், என் கூடப் பிறந்ததா நினைச்சி, இது என் தாய்மாமன் சீர்னு நினைச்சி, உன் கழுத்துல போடச் சொல்லித் தந்தான். ரொம்ப நல்ல மனுஷன் அவன். பார்க்கத்தான் ஆளு ரொம்ப முரடனா இருந்தான். ஆனால் ஏழை, பாளைகள் மேல் இரக்கம் உள்ள மகராசன் அவன்.

முரு : அப்படியா, அவரு பேரு என்னன்னு சொல்லம்மா..

முத் : அந்த மகராசன் பேரு சங்குத்தேவன்.

முரு : என்னது சங்குத்தேவனா? அவரைப் பெரிய கொள்ளைக்காரன்னுல்ல சொல்லுவாங்க.. நீ, என்னடான்னா, அவரைப் போயி மகராசன்னு சொல்லுதியே!

முத் : அவன் யாரு முதலை எப்படி கொள்ளை அடிச்சானோ? எனக்குத் தெரியாது! அந்த பேராச்சிக்குத்தான் தெரியும்! ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் அவன் மகராசன்தான். தலைநாள்ல மகளே, உன் வயித்துல ஒரு ஆம்பளைப் பிள்ளை பிறந்ததுன்னா, அந்த பிள்ளைக்கு சங்குத்தேவன்னுதான் பேரு வைக்கணும். தாழம்பு ஏடெல்லாம் முள்ளாகத்தான் இருக்கு. அதனால, அதைப் பறிச்சி தலையில வைக்காமலா இருக்காங்க, பொம்பளைங்க?குறையில்லாத மனுசர் இந்த உலகத்துல ஏது? அவன் திருடனாகவே, இருக்கலாம். ஆனா அவன் எனக்குக் கடவுள் மாதிரி, அவனைக் கை எடுத்துக் கும்பிடணும். சங்குத்தேவனின் தர்மமே தர்மம்!

குறிப்பு: காவியங்களை மறு எழுத்தில் புத்தாக்கம் செய்வதைப் போல அமரர் புதுமைப்பித்தனின் சங்குத்தேவனின் தர்மம் என்ற சிறுகதையை நாடகமாக்கிப் பார்க்கும் முயற்சியில் உருவானது இப்படைப்பு.

Pin It