கடந்த செப்டம்பர் 28 இரவு நேரத்தில் உலகில் எங்கும் காணக்கிடைக்காத அக்கொடூரம் நடந்தது. தங்களுக்குப் பிடிக்காத உணவை வேறொருவர் உண்டார் என்பதற்காக அவரை அடித்துக் கொலை செய்தது ஒரு கும்பல். மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பிசாராப் பகுதிக்குட்பட்ட தாத்ரி எனும் குக்கிராமத்தில் நடந்த அப்படுகொலை இந்தியாவில் சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வுரிமையின் நிலையை உலகிற்குப் பறைசாற்றுவதாக இருக்கிறது. தாத்ரியில், முகம்மது அகலாக் என்ற பெரியவர் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் பசுக் கன்றைக் கொன்று உணவாக்கிக் கொண்டார் என்ற புரளி அந்தக் கிராமத்தின் கோயிலில் அறிவிக்கப்பட்டது.

cow 340அறிவிப்பினைக் கேட்ட அக்கிராமத்தின் இந்துக் கும்பல் ஒன்று வெறியோடு, முகம்மது அக்லாக்கின் வீட்டை நோக்கிச் சென்றது. தையல் எந்திரம், இரும்புத் தடிகளைக் கொண்டு முகம்மது அக்லாக்கைத் தாக்கி அந்நிமிடமே கொன்றதுடன், அக்லாக்கின் மகன் தனீஸையும் கொடூரமாகத் தாக்கியது. இதில் கடுமையான காயங்கள் அடைந்த தனீஸ் இன்னும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அபாய கட்டத்திலேயே உள்ளார். முகமது அக்லாக்கின் வீட்டிலிருந்தது மாட்டிறைச்சி அன்று என்ற உண்மை கண்டறியப்பட்டது. மாட்டிறைச்சியே உண்ணப்பட்டிருந்தாலும் ஓர் உணவை உண்டதற்காக உயிரை எடுக்கும் உரிமையை யார் வழங்கியது? மாட்டிறைச்சி உண்ணாமல் தங்களைப் புனிதர்களாக சித்தரித்துக் கொள்ளும் இந்துமத ஆதிக்கவாதிகளுக்கு வரலாறும் தெரிவதில்லை. அரசியல் சாசனம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகள்குறித்த அறிவும் இருப்பதில்லை. வெறுமனே கொம்பு சீவிவிடப்பட்ட ஐந்தறிவு விலங்கினைப் போல மூர்க்கமாகச் சக மனிதர்களைக் காவு வாங்க வெறிகொண்டு அலைகின்றனர்.

வரலாற்றைக் கொல்வதும் உண்மைகளைக் கொளுத்துவதும் தானே உங்கள் வேலை இந்து வெறியர்களே! உலகில் சைவராகத் தோன்றிய மனித இனம் என ஏதுமில்லை. பார்ப்பனர்களே, உங்கள் வேதங்களைப்புரட்டிப் பாருங்கள். உங்கள் வேதங்களும் தர்மங்களும் சொல்கிறபடி உங்கள் பாட்டனுக்குப் பாட்டன் ஒரு நேரத்தில் எத்தனை ஆயிரம் மாடுகளையும் கன்றுகளையும் எருமைகளையும் யாகங்களில் கொன்று, அவற்றைப் பாகம் பாகமாகப் பங்கிட்டுத் தின்று தீர்த்தார்களென அப்போது தெரியும்.

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்'' என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன'' என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.

“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன'' என்றும் “மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்'' என்றும் மநுதர்மம் கூறுகிறது.

சைவமோ, அசைவமோ, உணவென்பது தனி நபர்களின் விருப்பத் தேர்வு. ஆடோ, கோழியோ, காய்கறியோ, பன்றியோ, மாடோ, புழுப் பூச்சியோ ஒருவர் எதைத் தின்ன வேண்டும் என்றும் எதைத் தின்னக் கூடாது என்றும் சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஒருவரின் நாக்கு எந்த உணவை ருசியென உணர்கிறதோ அதை உண்ணும் உரிமையே அவரது முதல் உரிமையாகிறது. மாட்டுக்கறி உண்டார்களெனத் தலித்களையும் இஸ்லாமியர்களையும் கொல்லும் இந்து வெறியர்களே உங்கள் உடலில் இருக்கும் அசைவ மரபணுக்களை எந்த அமிலத்தைக் கொண்டு பொசுக்கிக் கொள்வீர்கள்?! ஆடும் கோழியும் மணக்கிறபோது மாடு மட்டும் குமட்டலை உண்டாக்குவதாக மூக்கைப் பொத்திக் கொள்ளும் சாதி இந்துக்களே. மாட்டிறைச்சி உண்ணுதல் தீண்டத்தகாத மக்களிடமிருந்து உங்களை வேறுபடுத்துவதாகக் கருதும் உமது அறியாமைச் செருக்கைக் கண்டு வரலாற்று உண்மைகள் கேலி செய்வதை அறிவீராக!

பார்ப்பனர்களே! விலங்குகளை வயிறு முட்ட உண்டு வந்த உங்களை அவற்றை உண்ண வேண்டாமென நாங்கள் சொல்லவில்லை. சாதி இந்துக்களே... உங்களையும் தான்... மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் என உங்களை நாங்கள் தடுக்கவில்லை. உங்களது சூழ்ச்சியும் அறியாமையுமே உங்களைச் சைவர்களாக்கியது, மாட்டிறைச்சி உண்ணாதவர்களாக்கியது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் சொந்தச்செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளச் செய்தது. அதே சூழ்ச்சியையும் அறியாமையையும் ஆயுதமாக்கி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உண்ணும் உரிமையைப் பறிக்கப் பார்க்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. ஏனென்றால் மாடுகளைக் காப்போம் என்று கூவிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கும் உங்களது கீழான அரசியலைக் காலந்தோறும் கண்டவர்கள் அவர்கள்.

மாட்டிறைச்சி உண்ணுவதை எதிர்ப்போரே, பசுவைக் கொல்வதைப் பாவம் என்று நினைப்பீர்காளானால் மாட்டுத் தோலில் அழகான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட உங்கள் பெல்ட்டுகளையும் ஷூக்களையும் கழற்றி எறியுங்கள். லெதர் பேக்குகளை வாங்கி மாட்டிக் கொள்வோரே அதையும் வீசி எறியுங்கள். மாட்டுக் கொழுப்பில்லாமல் சோப்புகள் இல்லை, அழகுப் பொருட்கள் இல்லை ஏன் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட சைவ உணவுப் பண்டங்கள் பல இல்லை. அவற்றையும் விசிறி அடியுங்கள். அதிகளவு மாடுகள் அதற்காகவே வெட்டப்படுகின்றன. அதனோடு ஒப்பிடும் போது உணவுத் தேவைக்காக வெட்டப்படும் மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே!

இந்து வெறியரே அறிவீராக... இந்தியாவின் சொற்ப மக்களைத் தவிர, பலரும் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். பல மேட்டுக்குடி ஆதிக்கச்சாதி இந்தியர்கள் இந்தியா வுக்கு வெளியே மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். உலகம் முழுக்கவே மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தச் சொற்ப இந்துக்களுக்காகப் பசுக்கள் மீதான அவர்களின் பற்றுணர்ச்சிக்காக உலகமே அதைக்கைவிட வேண்டுமென எதிர்பார்ப்பது, ஜனநாயகத்திற்கு எதிரான கருத்தியலின்றி வேறில்லை. பிடிக்காத ஒரு உணவைத் தின்றுதான் ஆக வேண்டுமென வலியுறுத்திச் சட்டம் இயற்றுவது எவ்வளவு அறிவின்மையோ, அதைப் போலத்தான் பிடித்த ஒரு உணவை உண்ணக் கூடாது என தடை விதிப்பதும். இந்துத்துவவாதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்தையும் பசு மீதான பற்றுணர்ச்சியையும் இந்தியாவின் பல்வகை மக்களுடைய தாக உலகத்திற்குக் காட்டுவது கண்டிக்கத்தக்கது, உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.

விரும்பியதை உண்ணும் மனிதரின் அடிப்படை உரிமையைச் சிதைக்கும் இந்து மத வெறியர்கள் மீது... தேச ஒருமைப்பாட்டிற்குக் கேடு விளைவிக்கும் குற்றத்திற்காகவும் சக மனிதரின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதற்காகவும், நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக நடந்து கொள்வதற்காகவும், வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் வித்திடும் ஆதிக்கக் கருத்தியலை பரப்புவதற்காகவும், மொத்தத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்வதற்காகவும், சட்டப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மாட்டிறைச்சியைத் தடை செய்ததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமையில் கை வைத்திருக்கும் மாநிலங்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான சட்டப் போராட்டத்தையும் சமூகப் போராட்டத்தையும் உடனடியாகத் தொடங்கியாக வேண்டிய நெருக்கடியை உணருவோம். இந்து வெறியர்களுக்கும் இந்துவெறி ஆட்சியாளர்களுக்கும் எதிரான மாட்டிறைச்சிப் புரட்சி நாடெங்கும் வெடிக்கட்டும். 

Pin It