அன்புக்கு வழிவகுக்க வேண்டிய ஆன்மீகம், இப்போது வம்புக்கு வழி வகுக்கிறது என்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவலையோடு தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!
அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் கிருத்துவ தேவாலயத்திற்கு முன்பு, இந்து ரக்க்ஷா தள் என்ற அமைப்பினர், ஒரு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்!
தேவாலயத்துக்கு முன்பு ஒரு மேசையை வைத்து, அதன் மீது வாள், ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்களை அடுக்கி, ஜெய்ஸ்ரீராம் என்னும் கோஷத்தைத் தவிர வேறு முழக்கம் எதுவும் இங்கு கேட்டால், இனி எங்கள் கைகள் அவற்றுக்குப் பதில் சொல்லாது, இவைதான் பேசும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்!
இது நாடா அல்லது விலங்குகள் வாழும் காடா என்று தெரியவில்லை. நம் நாட்டிற்கு என்று ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டம் எல்லோருக்கும் வழங்கியிருக்கும் உரிமைகளில் ஒன்று, மத உரிமை ! அதை முழுமையாக இந்து மத வெறிக் கூட்டங்கள், கொன்றழித்துக் கொண்டிருக்கிறார்கள்!
வடநாட்டில் மட்டுமின்றி, நம் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற செயல்கள் சில தொடங்கி இருக்கின்றன. தூத்துக்குடியில் அனுமன் ஜெயந்தி என ஒரு புதிய விழாவைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆயிரம் இளநீர்களை வாயால் கடித்து, தலையில் உடைப்பது என்பதே அந்த விழாவின் மையம்.
தலையில் தேங்காய் உடைத்தால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்னும் மருத்துவ அறிவுரைகள் எல்லாம் குப்பையில் வீசப்பட்டுள்ளன!
எல்லோரும் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது! இந்த நாடு மத வெறியர்களால் அழிக்கப்படுவதற்கு முன், அதனைக் காப்பதற்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது!
- சுப. வீரபாண்டியன்