genetic-seedsஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு வழியில் செல்வது என்று முடி வெடுத்து மிகவேகமாக பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு பல்லக்குத் தூக்கும் பணியில் இந்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.

பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குத் தங்குதடையில்லாமல் கதவைத் திறந்துவிடுவதற்காக இந்திய அரசு முன்வைத்த “உயிரித் தொழில் நுட்ப ஒழிங்காற்றுச் சட்டவரைவு’’ கடும் எதிர்ப்பின் காரணமாக சட்டமாக நிறைவேறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டுள்ளது. இந்தச் சூழலில் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி மரபீனி மாற்ற விதைகளுக்கு அனுமதியை வழங்கி ஆணையிட்டார்.

அவரது ஆணைக்கு இணங்க மரபீனி பொறியியல் ஏற்பிசைவு குழு, (Genetic Engineering Approval Committee) மரபீனி மாற்ற நெல், கோதுமை, சோளம் உள்ளிட்ட இரு பது மரபீனி மாற்றப் பயிர்களின் வெளிக்கள ஆய்வுக்கு இசைவு வழங்கி உள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் முடிகிற தருணத்தில் சனநாயக மரபுகள் எவை பற்றியும் கவலைப்படாமல் அவசர அவசரமாக இந்த ஏற்பிசைவுகள் வழங்கப் பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில் காங்கிரசுக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் பகாசுர விதை நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாய் கையூட்டுப் பணம் பெறுவதற்காகவே இவ்வளவு அவசர கோலத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டுள்ன என்று ஐயுற இடமுண்டு!

இதற்கென்றே திட்டமிட்ட முறையில் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஊகங்கள் உலவுகின்றன.

அறிவியலாளர்களும், உழவர் அமைப்புகளும், சூழலியல் அறிஞர்களும் வலுவானக் காரணங்களை முன் வைத்து மரபீனி மாற்றப் பயிர்களை வெளிக்கள ஆய்வுக்கோ, வணிக வகை விற்பனைக்கோ அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக பிட்டி கத்தரிக்கு இசைவளிப்பது என இந்திய அரசு கடந்த 2010இல் முடிவெடுத்தபோது அம் முடிவுக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன.

இதற்கு முன்னர் மான்சாண்ட் டோவின் பி.ட்டி பருத்திக்கு கொல்லைப்புற வழியில் அனுமதியளிக்கப்பட்டதின் விளைவாக ஆந்திராவிலும், விதர்பாவிலும் வேளாண்மைக்கும் சுற்றுச் சூழலுக்கும் கால்நடைக்கும் ஏற்பட்ட பேரழிவு உண்டாக்கிய பட்டறிவில் இந்த எதிர்ப்புகிளம்பியது. பி.ட்டி பருத்தியின் இலைகளைத் தின்ற ஆடுகள் மற்றும் பிற கால் நடைகள் மடிந்து வீழ்ந்தன.

பருத்திச் செடிகளைக்கையாளும் பெண் தொழிலாளிகளுக்கு இனம் புரியாத ஒவ்வாமை நோய்கள், கருப்பைக் கோளாறுகள் போன்றவை ஏற் பட்டன.

மான்சாண்டோவின் முற்றுரிமை விலைக்கு விதை வாங்கி அந்த நிறுவனத்திடமே அதிக விலைக்கு பூச்சிக் கொல்லிகள் வாங்கி வளர்த்த பருத்தியோ நெட்டிழை பருத்தியாக இல்லாமல் தெளிவான வெண்மை நிறமும் இன்றி தரம் குறைந்த நிலையில் இருந்தன. இதனால் சந்தையில் குறைந்த விலைக்குவிற்கும் நிலைக்கு பருத்தி உழவர்கள் தள்ளப்பட்டார்கள்.

கடன்பட்ட உழவர்களில் பலர் விதர்பாவிலும் ஆந்திராவிலும் நஞ்சுண்டு மடிந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்க மான்சாண்டோவின் பி.ட்டி கத்தரிக்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.

அதுமட்டுமின்றி பி.ட்டி கத்தரிக்கு அனுமதி வழங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதைடவுன் டு எர்த் ஏடு அம்பலப் படுத்தியது. பி.ட்டி கத்தரிக்கு ஏற்பிசைவு வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர்குழுவில் இருந்த கே.கே. திரிபாதி, மதுராராய், வசந்தா முத்துசாமி, சசிகரன், திலிப்குமார் ஆகிய அறிவியலாளர்கள் மான்சாண் டோவின் கையாட்கள் என்பது அம்பலமானது.

இந்தப் பின்னணியில் தான் இந்தியாவின் பல பகுதிகளில் பி.ட்டி கத்தரிக்கு அனுமதி அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை அன்றைய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டங்கள் அனைத்திலுமே அறிவியளாளர்களும் உழவர் அமைப்புகளும் பி.ட்டி கத்தரியின் தீமைகளை வலுவான ஆதாரங்களோடு எடுத்து வைத்தனர்.

உலகின் முன்னணி உயிரியல் வல்லுனர்கள் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக எழுதியுள்ள 400-க்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றின் விளைவாக பி.ட்டி கத்தரிக்கு அளித்த அனுமதியை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார். இதையொட்டி ஒட்டு மொத்த மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து முழு அளவில் விவாதம் நடைபெற வேண்டும் என்றக் கோரிக்கை வலுபெற்றது.

உத்திரபிரதேசம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மரபீனி மாற்றப் பயிர்களின் கள ஆய்வுக்கும் விற்பனைக்கும் தடை விதித்தன. இந்த நிலையில் இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்து ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் நாடாளுமன்றக் குழுவை அமைத்தது. காங்கிரசு கட்சியின் ஏழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முப்பத்தோறு நாடாளு மன்ற உறுப்பினர்களும் பல துறைகளைச் சேர்ந்த ஐந்து வல்லுனர்களும் கொண்ட இக்குழு மிகவிரிவாக ஆய்வு செய்து கடந்த 2012 ஆகஸ்ட்டில் தனது அறிக்கையை இந்திய அரசுக்கு அளித்தது.

வெவ்வேறு பருவ நிலை மண்ட லங்களைச் சேர்ந்த பல நாடுகளில் மரபீனி மாற்றப் பயிர்கள் குறித்த ஆய்வறிஞர்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் ஐ.நா.வின் சுற்றுச் சூழல் அமைப்பின்கள ஆய்வு அறிக்கையையும் இந்தியாவின் பல மாநிலங்களின்கள ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு பாசு தேவ் ஆச்சார்யா குழு அறிக்கை அளித்தது.

எக்காரணம் கொண்டும் மரபீனி மாற்றப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என தெளிவாக பரிந்துரை செய்த அக்குழு உயிரிப் பன்மயத்தைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

கிரீன் பீஸ் அமைப்பு சார்பில் மரபீனி மாற்ற விதைகளுக்கு எதி ராக தொடுக்கப்பட்ட வழக்கில் மரபீனிப் பயிர்களுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

நாடாளுமன்றக் குழு வின் அறிக்கையையோ,உச்சநீதி மன்றத்தின் தடை ஆணையையோ முற்றிலும் புறம்தள்ளி கடந்த 3.2.2014 அன்று ஜம்முவில் நடை பெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்தார்.

இதனடிப்படையில் கடந்த 2014 மார்ச் 1 அன்று சுற்றுச் சூழல் அமைச்சர் வீரப்பமொய்லி நெல் கோதுமை உள்ளிட்ட 20 மரபீனி மாற்றப் பயிர்களின் கள ஆய்வு களுக்கு அனுமதி வழங்குவதாக அறிவித்தார்.

கள ஆய்வுக்கு அனுமதிப்பதும் விற்பனைக்கு அனுமதிப்பதும் கிட்டத் தட்ட ஒரே விளைவையே உண்டாக்கும். ஒரு தடையை காரணம் காட்டி அறிவியல் ஆய்வுகளை முடக்கிப் போட முடியாது என்று தனது முடிவுக்கான காரணத்தை வீரப்ப மொய்லி கூறினார். ஆய்வகங்களில் நடக்கும் மரபீனீ மாற்றப் பயிர்கள் குறித்த ஆய்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென்று யாரும் கோரவில்லை. வெளிக்கள ஆய்வுகளுக்குதான் எதிர்ப்பு உள் ளது. ஏனெனில், பல வயல்களுக்கு இடையில் ஒரு நிலத்தில் வெளிக்கள ஆய்வுக்காக மரபீனி மாற்ற விதைகள் விதைக்கப்பட்டால் இதனால் மண்ணுக்கும் , நீருக்கும், காற்றுக்கும் ஏற்படும் சூழல் பாதிப் புகள் அணுக்கதிரியக்கத்தைப் போன்று தொடர் விளைவுகளை உண்டாக்கக் கூடியவை. மீளச் சரி செய்ய முடியாதவை.

எனவே தான் வெளிக்கள ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. பி.ட்டி பருத்தி வெளிக்கள ஆய்வுக்கு என்று அனுமதிக்கப் பட்டக் காலத்தில் தான் முறையான அனு மதி ஏதுமின்றி திருட்டுத் தனமாக சந்தைக்கு வந்தது. அதன் விளைவு களை மக்கள் சந்தித்து வருகிறார் கள். வெளிக்கள ஆய்வை எதிர்ப்ப தற்கு இந்தப் பட்டறிவும் ஒரு முக்கிய காரணமாகும். இவற்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி வெளிக்கள ஆய்வுக்கு இசைவு அளித்திருக்கிறார் வீரப்ப மொய்லி.

கடந்த ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் மரபீனி மாற்றப் பயிர்களின் வெளிக்கள ஆய்வை தடை செய்து அளித்த அறிக்கை வலுவானது. “அறிவியலாளர் சமூகம் மரபீனி மாற்றப் பயிர்கள் மற்றும் அவற்றின் வெளிக்கள ஆய்வை அனுமதிக்க லாமா வேண்டாமா என்பது குறித்த பிரச்சினையில் செம்பாதியாக பிரிந்து நிற்கிறது. இச் சூழலில் விரிவான ஆய்வுகள் இன்றி இவற்றை அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஓர் அரசு வரமுடியாது. “ என்று ஜெயந்தி நடராஜன் குறிப் பிட்டிருந்தார்.

அண்மையில் போலந்தில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டிலும் இக் கருத்தை அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய சூழலில் மான்சாண்டோ, சின்ஜெண்ட்டா, பாயர் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக திடீரென்று அப்பதவியி லிருந்து ஜெயந்தி நடராஜன் “கட்சிப் பணிகளுக்கு’’ என்று சொல்லி நீக்கப்பட்டார். கடந்த 2013 டிசம்பரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.

சுற்றுச் சூழலை கெடுப்பதில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் பெட்ரோலியத் துறைக்கு பொறுப்பான ஒருவரே சுற்றுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பதற்கான அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.

காங்கிரசுக் கூட்டணி அமைச் சரவையின் பதவிக் காலம் முடிகின்ற தருவாயில், அடுத்து காங்கிரசுக் கட்சி பதவிக்கு வருவதற்கான வாய்ப்ப்புகள் குறைந்துள்ள சூழ லில் அவசர அவசரமாக இந்த அமைச்சரவை மாற்றங்கள் திட்ட மிட்டமுறையில் நடந்தேறின. வீரப்ப மொய்லி கடந்த டிசம்பரில் பதவி ஏற்றவுடன் மூன்றே வாரங்களில் 70 நிறுவனங்களுக்கு சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மறுப் பின்மைசான்றிதழ் வழங்கி ஆணையிட்டார். அதற்கு அடுத்து மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இசைவு வழங்கினார்.

இவ்வாறு மரபீனி மாற்றப் பயிர்களுக்கு இசைவளித்திருப்பது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்து உழவர்களை பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் காலடியில் கட்டிப் போடுகிற இழிசெயல் இது.

மாநில அரசுக்கு உள்ள அதிகா ரத்தைப் பயன்படுத்தி வீரப்ப மொய்லியின் முடிவுக்கு எதிராக கேரள அரசு களம் இறங்கியுள்ளது. தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்றப் பயிர்களுக்கான கள ஆய் வுக்கோ, அவ்விதைகளின் விற் பனைக்கோ அனுமதி இல்லை என்று கேரள அரசு திட்டவட்ட மாக அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில அரசும் இந்த முடிவுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டு முதலைமைச்சர் செயலலிதா மரபீனி மாற்றப் பயிர்களை இந்திய அரசு அனுமதித்த தைக் கண்டித்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பேசிவருகிறார். இது வெறும் பேச்சாக இல்லாமல் தமிழக அரசு இதற்கு உறுதியான தடை விதிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள், வேளாண் ஆய்வு மையங்கள், தனியார் நிலங்கள், ஆகிய எந்த வழியிலும் மரபீனி மாற்றப் பயிர்கள் கள ஆய்வுக்கோ விற்பனைக்கோ தமிழ் நாட்டிற்குள் வர அனுமதிக்கக் கூடாது .

உழவர்களும் இந்த மண்ணை நேசிக்கிற அனைவரும் இந்திய அரசின் சூதான இந்த முடிவை எதிர்த்து உறுதியாகக் களம் காண வேண்டும். 

Pin It