naamalavar statue 600விதை இயற்கை அங்காடியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா

இயற்கைவழி வேளாண்மையின் வழிகாட்டு தலோடு இயங்கி வருவதே விதை இயற்கை அங்காடி. இதுபோன்ற அங்காடிகள் ஊரெங்கும் பல்வாறாகப் பெருகி வருகின்றன. மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைக்கின்றது. மகிழ்ச்சி.

ஆனால், இந்த இயற்கை விவசாயத்தின் அடையாளமாக இருந்தவர்களில் முன்னோடி கோ.நம்மாழ்வார் மட்டுமே. இன்றளவில் அவரது கொள்கைகளும், இயற்கை விவசாய வழிமுறைகளும் மட்டுமே நம்மிடத்தில் உள்ளன. இந்நிலையில் நம்மாழ்வாரின் இறப்பிலிருந்தே அவருக்கான உருவச்சிலையை இந்த அங்காடியின் முன்னணியில் நிறுவ வேண்டும் என்றேற்றப்பட்ட எண்ணம், விதை இயற்கை அங்காடியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில்தான் நிறைவேறியிருக்கின்றது.

இச்சிலையை மருத்துவர் கு.சிவராமன், சூழலியலாளர் பாமயன், அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையேற்று திறந்துவைத்தனர். இம்மூவருமே ஊடகங்கள் வாயி லாகவும், சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கு களில் பங்கேற்றும் மக்கள் மத்தியில் நன்கு பரிச்ச யமானவர்கள். இவர்கள் பேச்சைக் கேட்கவே நூற்றிற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங் கெடுத்துக்கொண்டனர். நிகழ்வு தொடங்கும் முன்பாக ‘வினோத்பாலுச்சாமி’ நம்மாழ்வார் பற்றி எடுத்திருந்த ஆவணப்படமான ‘நிரந்தரவேளாண்மை’, சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, புல்வெளித் தரையில் திறந்தவெளி திரையரங்கில், திரையிடப்பட்டது.

திரையிடல் முடிந்தபின்பு முதலாவதாக, திரு.பாமயன் பேசியபோது, விவசாயிகள் எவ்வாறெல்லாம் பூச்சிக்கொல்லிகளை நம்புகின்றனர், மாறாக அவை அந்த விவசாயிக்கும், மண்ணிற்கும் செய்கின்ற தீங்குகள் என்னென்ன? என்பதை தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார். பொதுவாகவே நிலத்தில் நன்மைசெய்கின்ற பூச்சிகளும் இருக்கின்றன, கெடுதல் செய்கின்ற பூச்சிகளும் இருக்கின்றன. நம் விவசாயி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி முதலில் நன்மை செய்கின்ற பூச்சிகளை அழித்து விடுகின்றான். அதனால் தீமை செய்கின்ற பூச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. மீண்டும் அவன் முன்பு பயன்படுத்தி யதைக் காட்டிலும் அதிக வீரியமான பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்தி தீமை செய்யும் பூச்சிகளை இம்முறை அழிக்கின்றான். இவன் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகள் மூலம் விளைந்த உணவுப்பொருட் களைத்தான், நாம் உட்கொண்டு வருகிறோம் என்று பாமயன் அழகாக எடுத்துரைத்தார்.

ஆனால், பன்னெடுங்காலந்தொட்டே நாம் பயன்படுத்தியிருக்கின்ற தானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவை உரம் போட்டால் நல்ல விளைச்சலைத் தருவதில்லை என்று விவசாயிகள் அண்மையில் கண்டு தெரிந்து கொண்டிருக்கின்றனர். இதனால், எவ்வித செலவும் இல்லாமலேயே இந்த தானியங்கள் இயற்கையான முறையில் நமக்குக் கிடைக்கின்றன என்று பாமயனைத் தொடர்ந்து பேசிய மருத்துவர் கு. சிவராமன் தெரிவித்தார். மேற்கொண்டு அவர் பேசுகையில், பேருந்து நுழைய முடியாத கிராமங்களில் கூட லேய்ஸ் (lays), குர்குரே (Kurkure) போன்ற நொறுவைகள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. பிள்ளைகளும் அதன் தீமைகள் பற்றித் தெரியாமல் சாப்பிட்டுவருகின்றனர். பெற்றோர்களும், அதற்கு உடன்படுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெண் குழந்தைகள் பூப்பெய்தும் பருவம் பதின்மூன்று வயதிற்கு மேற்பட்டதாக இருந்தது. ஆனால் அண்மைக்காலங்களில் ஒன்பது, பத்து வயதுகளிலேயே பெண்கள் பூப்பெய்திவிடுகின்றனர். இம்மாதிரியாக சிறுவயதில் பூப்பெய்தும் பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக அறிவியல் கூறுகின்றது. முன்பெல்லாம் எங்கோ ஓரிருவர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், ஆனால் இன்று நம் அண்டை வீட்டிலும், நண்பர்களுமேகூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து உணவுகளைச் சாப்பிடுவ தாலும், இராசயன முறையில் தயாரிக்கப்படும் சத்தில்லாத நொறுவைகளைச் சாப்பிடுவதாலும்தான் இந்த நிலை ஏற்பட்டது என்றார் மருத்துவர்.

மேலும், இந்தியாவில் பரவலாக நிலவிவருகின்ற கண்பார்வை குறைபாட்டினைத் தீர்க்க ‘பீட்டா கரோட்டின்’ சத்து தேவை என்றும், அவை அதிகம் உள்ள அரிசி ரகங்கள் விரைவில் உற்பத்தி செய்யப் படும் என்றும் இந்திய அறிவியலாளர்கள் கூறிவரு கின்றனர். அதற்கான ஆராய்ச்சியும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஆனால், இயற்கை வழியில் நம் முப்பாட்டன்கள் பயன்படுத்தி வந்த தினை அரிசி மஞ்சளாக இருப்பதன் காரணம் நமக்குத் தெரியுமா? அதில் அறிவியலாளர்கள் கூறுகின்ற ’பீட்டா கரோட்டின் சத்து’, முழுமையாக நிரம்பியுள்ளது.

பரிசோதனை செய்கின்றவர்கள், இந்தத் தினை அரிசியை ஒதுக்கும் அரசியலைச் செய்து, தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோல விட்டமின் ஏ அதிகமாக இருக்கின்ற உணவு “கேரட்”, என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக முருங்கைக்கீரையில் இந்த விட்டமின் ஏ உள்ளது. இதனை யாரும் அடுத்த தலைமுறையினருக்குச் சொல்வதில்லை.

முப்பது, நாற்பது வயதினைக் கடந்துவிட்ட வர்களாக இருந்தால் உங்கள் உடல்முழுவதிலும் ஏற்கனவே இந்தப் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் அதிகமாகயிருக்கும். பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தாய்ப்பாலில்கூட இந்தப் பூச்சிக் கொல்லிகளின் தாக்கம் இருப்பதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே முதலில் குழந்தைகளுக்கு இந்த உணவுமுறைகளைப் பழக்குங்கள். ‘குழந்தை சாப்பிட மாட்டேன்’, என்கிறது என்பதே தற்போதைய பெற்றோர்களது வாதமாக இருந்து வருகின்றது. ஆனால், ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், சாப்பாடு ஊட்டுவது என்பது கலை. நீங்கள் ஆடுவீர்களோ, பாடுவீர்களோ எதை வேண்டுமானாலும் செய்யலாம், அது உங்கள் விருப்பம், ஆனால் குழந்தை நல்ல உணவை உட்கொள்ள வேண்டும், எதிர்காலத் தலைமுறையை பலவீனமானவர்களாக மாற்றாமலிருக்க அவர்களுக்கு இந்த இயற்கை உணவுமுறைகளை உண்ணக் கொடுங்கள் என்றும் மருத்துவர் கு. சிவராமன் கூறினார்.

விதை இயற்கை அங்காடி உயிர்ப்புடன் இருக்க அதற்காக உழைத்து வருகின்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னார் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் திரு. சந்தோஷ்குமார்.

நிகழ்ச்சியை இறுதி வரையிலும் இரசித்துக் கேட்ட வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் வரகு சாம்பார் சாதம், குதிரைவாலி தயிர்ச்சோறு, தினை அரிசி பாயாசம் என இயற்கை உணவுகளே பரிமாறப்பட்டன.

நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்தார் விதை இயற்கை அங்காடியின் உரிமையாளர் திரு. தமிழ்ஸ்டுடியோ அருண்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், விவசாயிகளைக் கொன்றுவருகின்ற இந்த செயற்கை வழி உரங்களை யும், இராசயனப் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நம்மாழ்வார் எழுப்பிய குரலின் அதிர்வுகள் இன்ன மும் ஓய்ந்துவிடவில்லை, ஓயாது என்பதே.

Pin It