கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இனி எவரையும் கண்ணில் இரத்தம் இல்லாதவர் என்று அழைக்காதீர்கள்! அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த உயிரினங்களுக்கு கண்ணில் இரத்தம் உண்டு என்பது மட்டுமல்ல வேண்டுமென்றால் அவை இரத்தத்தை கண்ணின் வழியே பீய்ச்சியடிக்கவும் செய்யும்! ப்ரைனொசோமா (Phrynosoma) என்ற இனத்தைச் சேர்ந்த இவை கொம்புள்ள பல்லிகள் (Horned lizards) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தலையில் ஏராளமான கொம்புகள் உள்ளன.
இவற்றைத் தவிர உடல் முழுவதும் முட்களும் உள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் தேரைகளுடன் (toads) ஒப்பிடக்கூடிய உடலமைப்பு உள்ளவை. அதனால் இவற்றுக்கு ப்ரைனொசோமா என்ற அறிவியல் பெயர் ஏற்பட்டது. தேரை போன்ற உடலமைப்பு உள்ளவை என்பதே ப்ரைனொசோமா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள். இவற்றின் வால் மிகச் சிறியது. மெக்சிகோ, அமெரிக்கா, கனடாவில் இவற்றின் இனத்தைச் சேர்ந்த 21 வகை உயிரினங்கள் இது வரை கண்டறியப்பட்டுள்ளன.இவற்றின் நீளம் 6-20 செண்டி மீட்டர். எல்லா இனங்களும் வறண்ட அல்லது பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. சில இனங்கள் முட்டையிடுகின்றன. வேறு சில குட்டி போடுகின்றன. எறும்புகளே இவற்றின் முக்கிய உணவு. சில வகை பச்சோந்திகள் போல இவை சுற்றுப்புறத்தில் உள்ள நிறத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவை. இவற்றில் எட்டு இனங்கள் கண்ணின் வழியே இரத்தத்தைப் பீய்ச்சியடிக்கின்றன.
இரத்தக் கண்ணீர் வடிக்கும் இந்த உயிரினத்தைப் (sacred-toad) பற்றி மெக்சிகோதான் உலகிற்கு முதல் முதலில் தெரிவித்தது. அது நம் கதாநாயகனான கொம்புள்ள பல்லிதான். ஆனால் கேட்டவர் எவரும் இந்தக் கதையை நம்பவில்லை. 1892ல் வாஷிங்டன் தேசிய அருங்காட்சியகத்தில் ஓ பி ஹே (OP. Hay) இந்த உயிரினம் பற்றி கூறியபோதுதான் இது உண்மை என்று உலகிற்குத் தெரிந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள். ஒரு கொம்புப் பல்லி தன் தோலை உரிப்பதற்கு (moulting) தயாராகிக் கொண்டிருந்தது. அது அசாதாரணமாக காய்ந்து போயிருந்ததால் அது தன் தோலை உரிக்க கஷ்டப்படுவதாக அவருக்குத் தோன்றியது. அதன் உடலை லேசாக ஈரப்படுத்தினால் உதவியாக இருக்கும் என்று கருதி அவர் அதைப் பிடித்து தண்ணீரில் போட்டார். “முதலில் அதிர்ச்சியுற்றது பல்லியாக இருக்கலாம். ஆனால் அடுத்த அதிர்ச்சி எனக்குதான்” என்று அப்போது கண்ட காட்சியைப் பற்றி அவர் விவரித்துள்ளார். நீரூற்றப்பட்ட பாத்திரத்தில் எங்கேயிருந்து என்று கண்டுபிடிக்க முடியாத அளவு இரத்தம் போன்ற ஒரு திரவத்தின் துளிகள் தோன்ற ஆரம்பித்தன. மொத்தம் 90 துளிகள் உண்டாயின. நுண்ணோக்கியின் மூலம் பரிசோதித்தபோது அது இரத்தம்தான் என்பது உறுதியானது.
“அடுத்த நாள் அதைப் பிடித்து பெருவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சுண்டுவிரலால் அதன் தலையை வருடும்போது ஒரு துளி இரத்தம் தெறித்தது. அதன் கண்ணில் இருந்துதான் அந்த இரத்தம் வந்தது” என்று ஓ பி ஹே தன் ஆய்வைப் பற்றி எழுதியுள்ளார். பல ஆய்வாளர்களும் பிறகு அவர் கூறியதை உறுதி செய்தனர்.
இரத்தக் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் இரகசியம்
ஓ பி ஹே தவிர 1892ல் அண்டர்வுட் (Underwood) என்ற அறிவியல் அறிஞரும் 1907ல் டிட்மார்ஸ் (Ditmars) என்ற அறிஞரும் இது பற்றி விரிவாக ஆராய்ந்தனர். இரத்தத்தை பீய்ச்சியடிப்பதற்கு சற்று முன்புள்ள சூழ்நிலை, அதன் அளவு, பீய்ச்சியடிக்கப்படும் வேகம், பீய்ச்சியடிக்கப்படும் வழி, தொடர்ச்சியாக இரத்தத்தை அவற்றை எத்தனை முறை பீய்ச்சியடிக்கச் செய்யலாம் போன்ற அம்சங்களில் மூன்று விஞ்ஞானிகளுக்கும் ஒத்த கருத்து நிலவியது.
பொதுவான இத்தகைய உற்றுநோக்கல்கள் தவிர ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஓ பி ஹே ஆராய்ந்தபோது பல்லி அதன் தோலை உரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அண்டர்வுட் ஆராய்ந்தபோது இரத்தத்தை வெளியேற்றிய பிறகு பல்லி களைப்புடன் சோர்வுற்று ஏழு நிமிடங்கள் அளவுக்கு செத்தது போல ஆடாமல் அசையாமல் கிடந்தது. டிட்மார்ஸின் உற்றுநோக்கல் வேறொன்றாக இருந்தது.
இரத்தம் பீய்ச்சியடிக்கும்போது பல்லி அதன் தலையை லேசாகத் தூக்கி கழுத்தை வில் போல ஆக்கி கண்களை வெளியில் தள்ளியது. ஒரு வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தியது. இந்த உயிரினங்கள் எவ்வாறு இரத்தத்தை கண்ணின் வழியாகப் பீய்ச்சியடிக்கின்றன என்பது பற்றி மூன்று விஞ்ஞானிகளுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. பல்லியின் தலையின் இரண்டு பக்கங்களிலும் இரத்தம் நிறைந்த ஓ அறை இருக்கலாம். இதன் சுவரின் ஒரு பகுதி கண்ணிமையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கலாம்.
அறையைச் சுற்றி தசைகள் காணப்படலாம். இவை சுருங்கும்போது இமையின் மெல்லிய சுவரில் விரிசல் ஏற்பட்டு இரத்தம் தூரத்தில் தெறித்து விழலாம். விரிசலடைந்த சுவர் வெகுவிரைவிலேயே பழைய நிலைக்கு திரும்பக்கூடும். உயிருடன் உள்ள பல்லியின் மேல் பகுதியில் உள்ள இமையை லேசாகத் தூக்கிப் பார்த்தால் அதன் அடிப்பகுதியில் இரத்தம் நிறைந்த மெல்லிய சுவருடன் ஒரு குழல் உள்ளது போல தோன்றுகிறது. இதனால் இந்த அறை தலையின் உட்பாகத்தில் ஆழத்தில் பரவி அமைந்திருக்கலாம்.
பல்லியின் பாதுகாப்பு தந்திரம்
1907ல் புரூனர் (Bruner) என்ற விஞ்ஞானி இது பற்றி ஆராய்ந்து ஹே கூறியது சரி என்று உறுதிப்படுத்தினார். ஹே சுட்டிக்காட்டிய கண் அறைகளையும் ((circumocular sinuses) தசைத்திசுக்களையும் அவர் கண்டுபிடித்தார். அறைகள், அவற்றிற்கு அருகில் உள்ள இரத்தக் குழாய்களையும் (eins) அமுக்கி அழுத்தத்தை அதிகரிப்பது இந்த தசைகளே என்று அவர் கண்டறிந்தார்.
அழுத்தம் அதிகரிப்பதற்கேற்ப கண்கள் வெளியில் தள்ளப்படுகின்றன. இதன் பிறகே சுவர் உடைந்து இரத்தம் வெளியில் பீய்ச்சியடிக்கப்படுகிறது. 1942ல் பேர்லசன் (Burleson) புரூனரின் இந்த கருத்தை எதிர்த்தார். அறைகளில் இருந்து சுவர் உடையாமல்தான் இரத்தத்துளிகள் இமைகளுக்குச் செல்கின்றன என்று அவர் கூறினார். பயம், பல தரப்பட்ட பாதிப்புகளை சமாளிக்கவே இவ்வுயிரினங்கள் இவ்வாறு செய்கின்றன என்று ஆரம்ப கால ஆய்வாளர்கள் கருதினர்.
விரல்களால் குத்தும்போது, பிடிக்கும்போது, தலையை வருடும்போது மட்டுமே இவை இரத்தத்தை வெளித்தள்ளுகின்றன. இந்த கருத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. எதிரிகளை அச்சுறுத்தவே இந்த செயல் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எதிரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இரத்தத்தில் உள்ளனவா, அது துர்நாற்றம் அடிக்கிறதா அல்லது எதிரிகளை திசை திருப்ப மட்டும் அவை பயன்படுகின்றனவா?
இதில் ஆய்வாளர்களிடையில் இன்னும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஓ பி ஹே இரத்தத்தை சுவைத்து ஆராய்ந்தபோது அது வித்தியாசமான, ஒருவித லேசான இனிப்பு சுவையுடன் இருந்ததை அறிந்தார். அது மஸ்க்கி சுவை (musky taste) என்று அறியப்படுகிறது. இரத்தத்தை சுவைத்ததால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கண்ணில் விழுந்தால் அது அரிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். ஆனால் எதிரிகளைப் பாதிக்கும் அம்சம் இரத்தத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
பீய்ச்சியடிப்பதற்கு முன்பு கண்களுக்கு அருகில் இருக்கும் சில சுரப்பிகள் உற்பத்தி செய்யும் வேறு சில திரவங்களும் இரத்தத்துடன் கலக்கப்படலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இதில் உண்மை இல்லை என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. எறும்புகளை உணவாக உண்பதால் இவற்றின் இரத்தம் மற்ற ஊர்வனவற்றில் இருந்து வேறுபட்டு உள்ளது என்று கருதப்படுகிறது.
நாய்களை அச்சுறுத்த
எதிரிகளிடம் இருந்து தப்பவே இரத்தத்தை வெளியேற்றுகின்றன என்றால் எல்லா விலங்குகளுக்கும் எதிராக அவை அவ்வாறு செய்ய வேண்டும். ஆனால் இதில் உண்மையில்லை என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. 1992ல் மிடண்டோர்ஃப் (Middendorf) மற்றும் ஷெர்ப்ருக் (Sherbrooke) ஆகிய விஞ்ஞானிகள் மனிதர்களை விட இவை நாய்களை சந்திக்கும்போதே அதிக அளவு இரத்தத்தை வெளிவிடுகின்றன என்று கண்டறிந்தனர்.
நாய்களுக்கு எதிராக இரத்தக் கண்னீர் வடித்தபோது அவை பயந்து பின்வாங்கின. நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு (Canids) எதிராக இவ்வுயிரினங்கள் இரத்தத்தைப் பீய்ச்சியடிக்கின்றன என்று பல ஆய்வுகள் கண்டறிந்தன. 2024ல் ஷெர்ப்ரூக் மற்றும் கிம்பால் (Kimball) ஆகியோர் நடத்திய ஆய்வில் இருந்து இவற்றின் இரத்தத்தில் போகானோமியமிர்மெக்ஸ் (Pogonomyrmex) என்ற வேதிப்பொருள் இருப்பது தெரிய வந்தது.
என்றாலும் எதிரிகளை நேரிடும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவை இரத்தக் கண்ணீர் வடிப்பதில்லை. சில விலங்குகளை நேரிடும்போது மற்றும் சில சந்தர்ப்பங்களில் மட்டும் இவை வெவ்வேறான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனவா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அழியும் ஆபத்தில்...
துரதிர்ஷ்டவசமாக விலங்குகளின் உலகில் இந்த அதிசய உயிரினங்கள் கடும் அச்சுறுத்தலை நேரிடுகின்றன. வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கட்டுமானங்களால் இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. தரிசு நிலங்கள் வேளாண் பகுதிகளாக மாற்றப்படுதல், பூச்சிக்கொல்லி பயன்பாடு, வளர்ப்பு நாய்கள் போன்றவை இவற்றைப் பாதிக்கிறது.
இது தவிர தென்னமெரிக்காவில் இருந்து வட அமெரிக்காவிற்கு வந்து குடியேறிய சோல்நாப்சிஸ் இன்விக்டர் (Solenopsis invicta) என்ற நெருப்பு எறும்புகளை இவை உணவாக உண்பதில்லை. ஆனால் இந்த எறும்புகளின் ஆக்ரமிப்பால் மற்ற எறும்புகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நெருப்பு எறும்புகளை கொல்லப் பயன்படும் பூச்சிக்கொல்லிகள் மற்ற எறும்புகளையும் அழிக்கின்றன.
இதனால் எறும்புகளை மட்டும் உண்டு வாழும் இவற்றிற்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இவை உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காமல் போகிறது. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படாவிட்டால் இந்த அதிசய உயிரினங்கள் அழிவதை நாம் காண வேண்டியிருக்கும் என்று விலங்கு நல விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கனடா நாட்டின் தலைநகர் டொராண்ட்டோவில், ஒரு தன்னாவ்வலர் குழு கட்டிடங்களில் மோதும், பயணத்தைத் தொடர முடியாமல் பாதி வழியிலேயே தவிக்கும் வலசைப் பறவைகளைக் காப்பாற்ற கிளம்புகின்றனர். ஒவ்வொரு நாள் விடிகாலைப் பொழுதிலும் ஒரு டஜன் தன்னார்வலர்கள் டொராண்ட்டோ வீதிகளில் சிறிய பறவைகளை சேகரிக்கின்றனர்.
சில நாட்கள் அவர்கள் நூற்றுக் கணக்கான பறவைகளை பொறுக்கி எடுக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இறந்தவை அல்லது இறந்து கொண்டிருப்பவை. ஒரு சிலவற்றை அவர்களால் காப்பாற்ற முடிகிறது. அவை பழுப்பு நிறக் காகித உறைகளில் சேகரிக்கப்பட்டு வன உயிரி மீட்பு மையங்களுக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. உயிரற்றவை பெரிய பனிக்கட்டிப் பெட்டியில் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை யாரும் எடுக்கவில்லை என்றால் இறந்த பறவைகளின் உடற்கழிவுகள் தூய்மைப் பணியாளர்களால் பெருக்கி சுத்தம் செய்யப்படுகிறது.
கனடாவில் இந்த அமைப்பின் டொராண்ட்டோ பிரிவைச் சேர்ந்த 135 தன்னார்வலர்கள் வீதிகளில் தினமும் விடிகாலையில் ரோந்து சுற்றி பறவைகளை மீட்கின்றனர். ஒரு நாள் விடிகாலையில் தேசாய், தங்க கிரீட கிங் லெட்(golden-crowned kinglet) பறவைகள் கூட்டம் ஒன்று பறந்து வந்து ஒரு பதினைந்து மாடி கண்ணாடிக் கட்டிடத்தின் மீது மோதுவதைப் பார்த்தார். மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கீழே விழுந்த அவற்றின் உடல்கள் திரும்பிப் பார்த்த இடங்களில் எல்லாம் இருந்தன.
"அது அதிர்ச்சியளித்தது. அவற்றைத் தரையில் பார்ப்பது மட்டுமில்லை, அவை மோதுவதைப் பார்ப்பதும் வேதனையானது. இதில் அவற்றின் வலுவற்ற தன்மை வெளிப்படுகிறது” என்று கூறும் தேசாய் அன்று மட்டும் 80 பறவைகளை மீட்பு மையத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கிறார். அவை அனைத்திற்கும் காரில் இடம் இல்லை. பல முறை பயணம் செய்து மீட்புப் பணியைத் தொடர்ந்தார். இன்னொரு 80 பறவைகள் இறந்தவை. அவை பனிப்பெட்டிக்கு அனுப்பப்பட்டன.
அவற்றில் சில தேசாயின் கைகளில் உயிரிழந்தன. பெரும்பாலான நாடுகளில் கட்டிடக் கண்ணாடிகளில் மோதி உயிரிழக்கும் பறவைகளின் எண்ணிக்கை பற்றி சரியான தரவுகள் இல்லை. பறவைகளின் வலசைப் பாதையில் உள்ள எந்த ஒரு நகரத்திலும் கண்ணாடி சாளரங்கள் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்களில் அவை மோதுவது தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் இவ்வாறு ஆண்டுதோறும் ஒரு பில்லியன் பறவைகள் உயிரிழக்கின்றன என்று கருதப்படுகிறது.
வலசைப் பருவ விபத்து
சாளரங்களில் மோதும் பறவைகளில் 60% கொல்லப்படுகின்றன. சில சமயங்களில் ஓர் ஒற்றைக் கட்டிடமே பல பறவைகளின் உயிரைப் பறிக்கிறது. 2023 அக்டோபரில் ஒரு நாளில் மட்டும் சிகாகோ மெக்காமிக் ப்ளேஸ் (McCormick Place) என்ற இடத்தில் உள்ள வானளாவிய உயர் அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மீது மோதியதால் ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்தன.
இறந்த பறவைகள் பனிப்பெட்டியில் (freezer) சேகரிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒரு முறை அகற்றப்படுகின்றன. அதற்கு முன் அவற்றின் வெளிப்புற வடிவமைப்பை வரைந்து பதிவு செய்து காட்சிப்படுத்த அவை பயன்படுத்தப்படுகின்றன. அந்த நேரம் தன்னார்வலர்களின் அஞ்சலி செலுத்தும் சோகமான நேரம். வட அமெரிக்காவில் வசந்த கால வலசைப்பருவம் மார்ச் பிற்பகுதியில் தொடங்கி ஜூன் கடைசி வரை நீடிக்கிறது.
ஆகஸ்ட் கடைசி முதல் அக்டோபர் கடைசி வரை தன்னார்வலர்களின் ரோந்துப் பணி வாரத்தில் ஏழு நாட்களும் சூரிய உதயம் தொடங்கி நான்கு மணி நேரம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பறவைகளின் உயிரைக் காத்த தேசாய் தன் மார்புப் பகுதியில் பொருத்தியுள்ள பனிப்பெட்டியில் ஆண்டிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளின் இறந்த உடல்களையும் சேகரிக்கிறார்.
“வழக்கமாக செல்லும் பகுதிக்கு நான் செல்லவில்லை என்றால் வேறு எவரும் அங்கு செல்வதில்லை. அந்த இடத்தில் காயமடைந்து அனாதையாக பறவைகள் கிடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மனிதரின் உதவியில்லாமல் அவை உயிர் பிழைக்காது."
நெரிசல் மிகுந்த ஒரு நாளில் தேசாய் 25 பறவைகளைக் காப்பாற்றுகிறார்.
“மீட்பு மையத்திற்கு எடுத்துச் செல்லும் காயமடைந்த பறவைகளின் நிலை பற்றி அறிவதில்லை. அது மன நலத்தைப் பாதிக்கும். உதவிக்காக காத்திருக்கும் அடுத்த பறவைகளின் மீது கவனம் செலுத்துகிறேன். கட்டிடத்தின் மீது மோதாத ஒரு பறவையைக் கண்டால் மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்று கூறும் தேசாய் தான் இப்போது ஒரு பறவை ஆர்வலராக மாறி விட்டதாகவும், பறவைகளை புகைப்படம் எடுக்க வெளியில் செல்வதாகவும் கூறுகிறார்.
தன்னார்வலர்கள் தாங்கள் மீட்கும் பறவைகள் பற்றிய விவரங்களை உலகளாவிய மின்னனு பறவை மோதல் வரைபடம் (Global Bird Collision Mapper) என்ற செயலியில் பதிவேற்றுகின்றனர். இது வரை நூறாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கட்டிடங்கள் மீது மோதின. இவற்றில் 73,000 பறவைகள் உயிரிழந்தன.
அடுக்கு மாடிக் கட்டிடங்கள் மட்டும் பறவைகளின் உயிரைப் பறிப்பதில்லை. சாதாரண வீடுகளும் இதையே செய்கின்றன. ப்ளாப் அமைப்பு கட்டிட நிர்மாணத்தின்போது சாளரக் கன்ணாடிகளில் பறவைகளால் பார்க்கக்கூடிய சிறிய புள்ளிகள், சதுரங்கள், கோடுகள் போன்ற பாணியில் அமைந்த பறவை நட்புடைய சாளரங்களை கட்ட வலியுறுத்துகிறது. கறுப்பு நிறத் திரைச்சீலைகள், இரவில் விளக்குகளை அணைத்தல் போன்றவை பறவைகளைக் காக்க உதவும்.
“பறவை மீட்புப் பணியில் நான் தொடர்ந்தும் இருக்கக் காரணம் இந்த பணியின்போது பல சுவாரசியமான மனிதர்களை என்னால் சந்திக்க முடிகிறது. காலை ரோந்துப் பணியின்போது கையில் பை மற்றும் வலையுடன் செல்வதைப் பார்த்து பலர் என்னை என்ன செய்கிரீர்கள் என்று கேட்பார்கள். அத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி பறவை மீட்பு பற்றி விவரிப்பேன்” என்று பறவை ஆர்வலர் மிக்கி கூறுகிறார்.
சூழல் காக்கப் போராடும் போராளிகள் போல பறவைகள் என்ற இந்த அற்புத உயிரினங்களை தன்னார்வத்துடன் காக்கும் இது போன்ற எண்ணற்ற மனிதர்களால்தான் இயற்கை இன்னும் அழியாமல் உள்ளது!
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ரேங்காடன் டைப்பஸ் (Rhincodon typus) எனப்படும் திமிங்கல சுறாக்களை (Whale shark) எல்லோரும் சுலபமாக அடையாளம் காண முடியும். ஏராளமான புள்ளிகள், வரிகள் உள்ள வேறு ஒரு சுறா இனம் உலகில் இல்லை என்றே கூறலாம். இவை மீனவத் தொழிலாளர்கள் கூறும் வார்த்தைகள். 36 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ண்ட மெகலோடன் (Megalodon) சுறாக்களின் இன அழிவிற்குப் பிறகு உலகில் மிகப் பெரிய மீன் என்ற பதவியை அலங்கரிப்பது சாதுவான இந்த ராட்சத உயிரினங்களே.இதைக் கூறும்போது சிலரின் மனதில் இயல்பாக அப்படியென்றால் நீலத் திமிங்கலங்கள்தானே உலகின் மிகப் பெரிய மீனினம் என்று ஒரு சந்தேகம் ஏற்படும். ஆனால் திமிங்கல சுறாக்களுக்கும் நீலத் திமிங்கலங்களுக்கும் பல வெளிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நீலத் திமிங்கலங்களே உலகின் மிகப் பெரிய உயிரினங்கள். என்றாலும் இவற்றை மீன் இனத்தில் உட்படுத்துவதில்லை. பொதுவாக முட்டை போட்டு வாரிசுகளை உற்பத்தி செய்யும் உயிரினங்களே மீனினத்தில் உள்ளன.
மனிதர்கள் போல நீலத் திமிங்கலங்களும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை கால்சியத்தால் ஆக்கப்பட்ட எலும்புகள் (Calcified bones) கொண்ட, பிரசவிக்கும், பாலூட்டும், வாயு மண்டலத்தில் இருந்து காற்றை உறிஞ்சி சுவாசிக்க உதவும் நுரையீரல் (Lungs) கொண்டவை. முழு வளர்ச்சியடைந்த ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை ஏறக்குறைய 136 டன். இவற்றின் நீளம் 80 முதல் 90 அடி.
திமிங்கல சுறாக்கள் முட்டையிட்டு குழந்தைகளைப் பெறுகின்றன. மற்ற மீனினங்களில் உள்ளது போல நீரில் கரைந்திருக்கும் காற்றை சுவாசிக்கும் திறன் பெற்ற செதில்கள் உள்ளன. முழு வளர்ச்சியடைந்த ஒரு திமிங்கல சுறாவின் உடல் எடை சுமார் 20 டன். நீளம் 40 முதல் 45 அடி.
பலரும் பழங்கால பாட்டி கதைகள், துப்பறியும் நாவல்களில் எப்போதும் பழி வாங்கும் குணத்துடன் மனித இரத்தம் குடிக்கும் உயிரினமாக இவற்றைக் காண்பதுண்டு. இரத்தத்தின் வாசனையை உணர்ந்து, பாய்ந்து வரும், பிரம்மாண்டமான கப்பல்களையும் படகுகளையும் தகர்த்து தவிடுபொடியாக்கும் உயிரினமாகவே இவை பலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.
உலக மக்கள் மனதில் சுறாக்களை ஒரு குரூர விலங்காக சித்தரித்ததில் ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (Steven Spielberg) மற்றும் ரென்னி ஹார்லிங் (Renny Harlin) ஆகியோரின் பங்கு மிகப்பெரியது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் (Jaws) திரைப்படம் பீட்டர் பெஞ்ச்லியின் (Peter Benchley) 1974 நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
சுறாக்களை கொலையாளிகளாக சித்தரித்த ஜாஸ் படத்தின் வெளியீட்டுக்குப் பின் பல பகுதிகளில் மனிதர்களால் இவை பெருவாரியாகக் கொல்லப்பட்டன. இதை அறிந்து ஸ்பீல்பெர்க் மனம் வருந்தி செய்தி வெளியிட்டார்.
அறிவியல் புனைக்கதை என்ற பெயரில் நீருக்கடியில் ஒரு காட்சிக்கூடத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சுறாக்களை கொலையாளிகளாக 1999ல் வெளிவந்த ஆழ்கடல் நீலம் (Deep Blue Sea) என்ற படம் சித்தரித்தது. ஆனால் உண்மையில் நாம் வெள்ளித் திரையில் பார்க்கும் திகிலூட்டும் காட்சிகளுக்கு எதிரானதே இவ்விலங்குகளின் சுபாவம்.
இவை மிக சாதுவானவை. பார்வைக்கு ராட்சத தோற்றத்துடன் இருந்தாலும் இவை பெரிய மீன்களைப் பிடித்து உண்னக்கூடிய திறன் பெற்றவை இல்லை. இவை வடிகட்டி உணவை உண்ணும் (filter feeder) வகையைச் சேர்ந்த விலங்குகள். கடலில் வாழும் சிறிய மீன்கள், செம்மீன்களே இவற்றிற்குப் பிடித்த உணவு. வாயைத் திறந்து இரையை உண்டு அதில் இருந்து உணவை வடிகட்டி நீரைப் பிரித்தெடுத்து வெளியில் விடுகின்றன.
வடிகட்டி உணவு உண்ணும் முறையைப் பின்பற்றுவதால் இவற்றிற்குப் பற்கள் இல்லை. மனிதர்கள் அருகில் இருப்பதை இவை பொருட்படுத்துவதில்லை. மனிதர்களைத் தாக்கியதாக இது வரை எந்த செய்தியும் இல்லை. இவற்றை நல்ல சுபாவத்துடன் சித்தரித்துள்ள ஹாலிவுட் படங்களும் உண்டு. சாகசத்திற்காக புறப்பட்டுச் செல்லும் மனிதர்களுக்கும் இந்த விலங்குகளுக்கும் இடையில் நிகழும் கதையை எஸ்பென்சாண்ட்பெர்க்கின் திரைப்படம் அழகாக எடுத்துக் கூறுகிறது. ஜோக்கிங் ரோனிங் எடுத்த படத்தில் இந்த உயிரினத்தின் சாந்தமான குணத்தை வெளிப்படுத்தும் அழகிய காட்சிகள் உள்ளன.
நீரை வடிகட்டி உணவு உண்ணும் இவை மற்ற உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கடற்பாசிகள், சயனோ பாக்டீரியாக்கள், டை ஆட்டம் (Diatom) போன்ற தீங்கு செய்யும் சிறு உயிரினங்களை உட்கொள்கின்றன. இதனால் கடலில் தீங்குயிரிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கடல் சூழல் மண்டலம் பாதுகாக்கப்படுகிறது. மீன் வளம் பெருகுகிறது. கடலில் இவற்றைப் பார்த்தால் வலை நிறைய மீன் கிடைக்கும் என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சொல்வதுண்டு.
ஏன் திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க வேண்டும்?
இன அழிவு ஏற்பட்டு பூமியில் இருந்து மறைந்த பல உயிரினங்களின் கதைகளுக்குப் பின்னால் மனிதனே காரணமாக இருக்கிறான். 1972ல் இந்தியாவில் வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லையென்றால் நாம் இன்று காணும் காடும், பல தாவர, விலங்குகளும் இல்லாமல் போயிருக்கும்.
1900 முதல் 1999 வரை மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட van ingen and van ingen என்ற டாக்சிடெர்மி (taxidermy) விஞ்ஞானிகளின் ஆய்வகத்திற்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இந்த நிறுவனம் 1890களில் யூஜின் வானின் ஜெண்ட் (Eugene Van Ingen) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இது அவருடைய மகன்கள் ஜான் டெ வெட் (John de Wet), ஹென்றி போத்தா(Henry Botha) மற்றும் எட்வின் ஜௌபர்ட் (Edwin Joubert) ஆகியோரால் நடத்தப்பட்டது.
டாக்சிடெர்மி என்பது மகத்தானவற்றின் பதப்படுத்தப்பட்ட வடிவங்கள் (Stuff of legends) என்று வர்ணிக்கப்படும் மிகப் பெரிய உயிரினங்களின் உடலை பாதுகாத்து வைப்பது. இறந்த விலங்குகளின் தோலையும் உடலையும் பதனிட்டு, அவற்றை இயல்பான தோற்றத்தில் காட்சிக்கு வைக்கும் ஒரு கலை இது. தமிழில் இதை "தோல் பதனிடுதல்" அல்லது "பதனிடுதல்" என்று அழைக்கப்படுகிறது.
இந்நிறுவனம் மைசூரில் செயல்பட்ட மொத்தம் 99 ஆண்டுகளில் ஆய்வாளர்கள் 43,000 சிறுத்தைப் புலிகள், புலிகள், யானைகள், மான்கள் போன்றவற்றை பதப்படுத்தி காட்சிப்படுத்தி வைத்தனர். இந்த வழக்கம் தொடர்ந்திருந்தால் இன்று இந்தியாவில் வன உயிரினங்கள் இல்லாமல் அழிந்து போயிருக்கும்.
சுவிட்சர்லாந்து க்ளாண்ட் என்ற இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமே (IUCN) ஆண்டுதோறும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பெயர்களை சிவப்பு பட்டியலில் (Red list) வெளியிடுகிறது. இதில் இருந்து உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் சூழல் பாதுகாப்பு நிலையைத் தெரிந்து கொள்ளலாம். 2006 முதல் இந்த விலங்குகள் இந்தப் பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
வலசை செல்வதில் ஆர்வம் காட்டும் உயிரினங்கள்
கடந்த 75 ஆண்டுகளில் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைவு ஏற்பட்டது. மிதமிஞ்சிய வளர்ச்சிப் பணிகள், கண்டுபிடிப்புகள் நடந்த ஒரு காலகட்டம் இது. இரண்டாம் உலகப்போர், அணு ஆயுதப் பரிசோதனைகளுக்கு கடல் சூழல் மண்டலங்களே பயன்படுத்தப்பட்டன. இது கடலில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தது.
காலநிலை மாற்றம், விவேகமற்ற மீன் பிடித்தல், பெருகி வரும் சரக்குக் கப்பல் போக்குவரத்து, அறிவியல்பூர்வமற்ற கட்டுமானப் பணிகள், ஊக்குவிக்கப்படும் சுற்றுலாத் திட்டங்கள் போன்றவை திமிங்கல சுறாக்களின் எண்ணிக்கை குறையக் காரணமானது. பொதுவாக கடலின் மேற்பரப்பில் காணப்படும் இவை மெதுவாக பயணிப்பவை. இவற்றின் பிரம்மாண்டமான உடல் அளவும் இதற்கு ஒரு காரணம். சிறிய மீன்களைக் கூட நீரில் அதிவேகத்துடன் பாய்ந்து வந்து பிடித்துண்ணும் திறன் இந்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு இல்லை.
இதனால் பெரிய கப்பல்கள், மீன்பிடிப் படகுகள் இந்த உயிரினங்களின் மீது சுலபமாக மோதுகின்றன, கொல்கின்றன. இவை வடிகட்டி உணவு உண்ணும் உயிரினம் என்பதால் கடல் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக், எண்ணெய் போன்ற நச்சு வேதிப்பொருட்கள் இவற்றின் வயிற்றிற்குள் சென்று மரணம் சம்பவிக்கிறது. இவையே இந்திய வன உயிரினச் சட்டப் பாதுகாப்பிற்குக் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் மீனினம். குஜராத் கடலோரப் பகுதிகளில் இவை அதி குரூரமாக வேட்டையாடப்பட்ட ஒரு காலம் இருந்தது.
இது பற்றி உலகிற்குத் தெரிவிக்க பிரபல சூழல் செயல்பாட்டாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் 300க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும் சூழல் மற்றும் வன உயிரினங்கள் பற்றி ஆவணப் படங்களை எடுப்பதில் நிபுணருமான மைக் ஹெச் பாண்டெ (Mike H Pandey) அமைதியின் கடற்கரைகள் (Shores of the Sea) என்ற ஆவணப் படத்தை எடுத்தார்.
இந்த ஆவணப் படம் பன்னாட்டு அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் 2001ல் மத்திய அரசை திமிங்கல சுறாக்களை பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கத் தூண்டியது.
இந்த உயிரினங்கள் வலசை செல்வதில் ஆர்வம் மிகுந்தவை. நாடுகளின் கடல் எல்லைகளை இவை பொருட்படுத்துவதில்லை.
திமிங்கல சுறா பாதுகாப்புத் திட்டம்
அருகாமை நாடுகளின் கடல்கள் இவற்றிற்குப் பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று தோன்றினால் இவை இந்திய கடற்பகுதிகளுக்குள் வலசை வருகின்றன. சுமார் 8,000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் இவற்றைக் காணலாம். குஜராத் சௌராஷ்டிரா கடலோரப்பகுதிகளில் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை உள்ள காலத்தில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
டிசம்பர் முதல் மே வரையுள்ள காலத்தில் கேரளா, லஷத் தீவு பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க குஜராத் வன உயிரினங்கள் அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) நடத்திய செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து இவை இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் இருந்து பயணம் தொடங்கி ஆப்பிரிக்கக் கிழக்குப் பகுதி வரை வலசை சென்றது கண்டறியப்பட்டது.
நாட்டில் திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க இந்த அறக்கட்டளை பெரும் பங்கு ஆற்றி வருகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கப்பட்டது என்றாலும், ஒரு கடல் வாழ் உயிரினத்தைப் பாதுகாப்பது மிகக் கடினம். மீன் பிடி தொழிலாளர் சமூகம் மட்டுமே இவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
2004ல் இந்த அறக்கட்டளையும் குஜராத் வனத் துறையும் சேர்ந்து குஜராத் வெராவல் (veraval) கடற்பகுதியில் திமிங்கல சுறா பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடந்தன. இதன் பலனாக கார்வா (Kharva) மீன் பிடி சமூகம் உட்பட பல மீனவ சமூகங்களும் இந்த விலங்குகளைப் பாதுகாக்க உறுதி மொழி எடுத்து செயல்படுகின்றனர். இருபது ஆண்டுகளில் மீனவர்கள் வலையில் சிக்கிய 958 திமிங்கல சுறாக்களைப் பாதுகாத்துள்ளனர். இதே போன்ற திட்டம் கேரளாவில் 2017ல் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் இது வரை கேரளாவில் எண்ணற்ற திமிங்கல சுறாக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் வனத் துறையின் மூலம் இந்த உயிரினங்களை மீட்கும்போது மீனவர்களின் வலைக்கு ஏற்படும் சேதங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ 25,000 வழங்கப்படுகிறது. கேரளாவில் இந்திய வன உயிரின அறக்கட்டளை இதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. இவை வில்லன்கள் இல்லை என்பதை உணர்ந்து மகத்தான திமிங்கல சுறாக்களை அழியாமல் பாதுகாப்போம்.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/international-whale-shark-day-feature-1.9857274
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இது ஒரு துப்பறியும் கதை போல. இழக்கப்பட்ட 126 பறவை இனங்களை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று பறவையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்பறவைகள் குறைந்த பட்சம் ஒரு பத்தாண்டு காலம் காணப்படாத இனங்கள். இவற்றில் ஒரு சில இனங்கள் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக காணப்படவில்லை.
இவை உயிருடன் உள்ளனவா என்பது உறுதியாகத் தெரியாத நிலையிலேயே இந்த முயற்சி. இன்னும் அழியவில்லை என்ற உறுதியுடன் இந்த பறவையினங்களின் பட்டியலை ஆய்வாளர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் அண்மையில் வெளியிட்டுள்ளனர். மக்கள், பறவையியலாளர்களின் உதவியுடன் புதிய தேடல் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன பறவையினங்களைத் தேடி
Coppery Thorntail மற்றும் நியூ கலிடோர்னியாவைச் சேர்ந்த லாரிகீட் (lorikeet) போன்றவை அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தொலைந்து போனவற்றில் அடங்கும். இது வரை தொகுக்கப்பட்டதில் இதுவே மிக விரிவான பட்டியல் என்று கருதப்படுகிறது. ஆர்வமுள்ள பறவையியலாளர்கள் மற்றும் அமெச்சூர் ஆய்வாளர்கள் பூமியின் தொலைதூரப் பகுதிகளில் வாழ்வதாக நம்பப்படும் இவை பற்றிய விவரங்களை ஆவணப்படுத்தப்பட்ட மில்லியன் கணக்கான பதிவுகளில் இருந்து தொகுத்தனர்.
கடந்த பத்தாண்டுகளாக காணப்படாத பறவையினங்கள் பற்றிய பதிவுகள் புதிய தரவுகளாக ஆராயப்படுகின்றன. இவை பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) அழிந்த மற்றும் வனப்பகுதிகளில் அழிந்த உயிரினங்களாக கணிக்கப்பட்டவற்றின் சிவப்பு பட்டியலில் இடம் பெறாதவை.
“காணாமல் போகக் காரணம் என்ன என்பதை அறிந்து மீண்டும் இவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு துப்பறியும் கதையைப் போன்றது” என்று அமெரிக்க பறவைப் பாதுகாப்பு (American Bird Conservancy) சங்கத்தின் இழந்த பறவைகளைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் (Search for Lost Birds) இயக்குனர் ஜான் சி மிட்டமயர் (John C Mittermeier) கூறுகிறார்.
இந்த அமைப்பு பன்னாட்டு பறவை சங்கம் (BirdLife International), ரிவைல்டு (Re:wild) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
இந்த பட்டியல் வெளியிடப்படுவதால் இழந்த இந்த உயிரினங்களை மீண்டும் பார்க்க நேரும்போது மக்கள் அது குறித்த தகவல்களைத் தர முடியும். இந்தப் பட்டியலில் இருக்கும் சில உயிரினங்களைக் கண்டுபிடிப்பது சவால்கள் நிறைந்தது. கண்டறியப்பட முடியாதவையாகவும் இவை இருக்கலாம். என்றாலும் சரியான இடத்தில் தேடினால் பல பறவையினங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இவற்றில் பெரும்பாலானவை வெப்ப மண்டலப் பகுதிகளில் குறிப்பாக சிறிய தீவுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றன. ஓசியானா பகுதியில் 56, ஆப்பிரிக்காவில் 31 மற்றும் ஆசியாவில் இருந்து 27 பறவையினங்கள் தேடலுக்கான இந்த பட்டியலில் உள்ளன. வெள்ளை வாலுள்ள டிட்டைரா (white-tailed tityra) என்ற பறவையினம் 195 ஆண்டுகளாகக் காணப்படவில்லை. இது மிக நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் பறவையினம்.
எங்கோ வாழும் பறவைகள்
1829ல் இதன் ஒரே ஒரு மாதிரி பிரேசில் போர்ட்டோ வெல்ஹோ (Porto Velho) பகுதியில் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் 2006ல் இப்பறவை ஒரே ஒரு முறை நேரில் பார்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பட்டியலில் இருக்கும் மற்ற பறவைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத இனங்கள். இதில் Coppery Thorntail பறவை புதிரான ஹம்மிங் பறவை இனத்தைச் சேர்ந்தது. இதன் இரண்டு மாதிரிகள் 1852ம் ஆண்டுக்கு முன் கிடைத்தன.
இப்போது வாழும் இடம் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் இந்த பறவையினம் பொலிவியாவில் எங்கோ ஒரு இடத்தில் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. நியூ கலிடோர்னியா லாரிகீட் பறவையினம் கிளிகள் குடும்பத்தைச் சேர்ந்தவை. 1859ல் நன்கு பாதுகாக்கப்பட்ட இப்பறவையினத்தின் இரண்டு மாதிரிகள் கிடைத்தன. 65% பறவையினங்கள் ஆய்வாளர்களால் ஏற்கனவே அழியும் ஆபத்தில் உள்ளவையாக இருக்கக்கூடும் என்று பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் கருதுகிறது.
பறவையியலாளர்கள், மற்றும் குடிமக்கள் அறிவியலுக்கான (citizen science) இணைய தளத்தில் இருந்து பெறப்பட்ட 42 மில்லியன் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் தரவுகளில் இருந்து கிடைத்த ஒலிப்பதிவு விவரங்களை ஆராய்ந்தனர். eBird இணையதளத்தில் கடந்த பத்தாண்டில் ஆவணப்படுத்தப்படாத பறவையினங்கள், அருங்காட்சியக சேகரங்கள், ஆய்வுக்கட்டுரைகளின் வாசிப்பில் இருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடந்தன. இதில் சில இனங்கள் தொலைதூரப் பகுதிகளில் வாழ்பவை.
இதனால் இவை பற்றிய விவரங்கள் உள்ளூர் சமூகத்தினருக்கு நன்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டு பெரிய கறுப்பு நேப்டு பெதஸ்ன்ட் புறா (black-naped pheasant-pigeon). நூறாண்டுகளுக்கும் மேலாக காணப்படாத இந்த இனம் பாப்புவா நியூ கினியாவில் ஒரே ஒரு தீவில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படுகிறது.
2022ல் இப்பறவையினத்தைப் பார்த்ததாக, இதன் அழைப்பைக் கேட்டதாக உள்ளூர் வேட்டைக்காரர்கள் கூறியபோது இது ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூரில் இது ஆர்வோ (“Auwo”) என்று அழைக்கப்படுகிறது. 2021 முதல் நடந்த ஆரம்பப் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு 144 பறவையினங்கள் இழக்கப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இழந்த மனித குலத்தின் பெரும் செல்வம்
14 இனங்கள் சூழல் பாதுகாப்பாளர்கள் மற்றும் மக்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இது வரை 126 இனங்கள் பற்றி உயிருடன் வாழ்வது மீண்டும் அறியப்பட்டுள்ளன. வேறு பல இனங்கள் சிறைபட்ட நிலையில் உள்ளன. சில இனங்கள் வகைப்பாட்டியல் ரீதியில் ஆராயப்படுகின்றன.
மக்கள் மற்றும் பறவையியலாளர்கள் இழந்த பறவைகளைக் கண்டுபிடிக்கும்போது அவற்றின் தேடலுக்கான அமைப்பில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை அனுப்ப கோரப்பட்டுள்ளது.
“இந்த பறவையினங்கள் பூமியில் இன்னமும் உயிருடன் வாழ்கின்றன என்றே நம்பப்படுகிறது. அனைத்து வகையான தகவல்களைப் பயன்படுத்தி இதை நாம் நிரூபிக்க வேண்டும். பல அரிய பறவையினங்கள் அசாதாரணமான இடங்களில் வாழ்கின்றன. இவை பற்றி நாம் முன்பே பெற்ற அறிவைக் கொண்டு இவற்றை மீண்டும் கண்டறிந்து பாதுகாப்போம்” என்று சர்வதேச பறவையியல் அமைப்பின் ஆய்வாளர் ராஜர் சாஃப்ஃபர்டு (Roger Safford) கூறுகிறார்.
காணாமல் போன இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது மனித குலம் இழந்த பெரும் செல்வம் மீண்டும் கிடைத்தது போல ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/jun/17/birders-126-lost-bird-species-aoe?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ