மின்சாரம் தடைப்படுகிற இரவு நேரம்; மொட்டை மாடியில் நின்று கவனித்தால் நமக்குமுன் எல்லையற்ற விரிந்து பரந்துள்ள பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள் அற்புதமானது. சப்தரிசி மண்டலம், ஓரியன் மண்டலம், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், வெண்பனி போன்ற "ஆகாயகங்கை" என்று அழைக்கப்படுகிற மில்கிவே என கண்கொள்ளா காட்சி. நமக்கு முன் உள்ள இந்த வெளியில் உயிர்களைத் தேடுவோம்.

நீண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு `பிரபஞ்சத் தனிமையில்' இந்த உலகம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும்  நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்கு துணையாக வேறு கிரகவாசிகள் இல்லையா என்ற ஆதங்கம் இருக்கிறது.

பிரபஞ்சத் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், உயிர் தேடலில் மற்றொரு விசயமும் அடங்கியுள்ளது. கொஞ்சம்,கொஞ்சமாக பூமிக்கு வயது ஆகிக்கொண்டே போகிறது. அதோடு நாமும் பூமியை ஒரு கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றிவிட்டோம். இதனால் பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மனித இனம் தளைக்க வேறு ஒரு இடம்(கிரகம்) வேண்டுமே.

இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய  விஞ்ஞானிகள் செயற்கைகோள்களையும், `கலீலியோ' போன்ற வானில் மிதந்த கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள், பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித்துருவி ஆராந்து கொண்டிருக்கிறார்கள்.

உயிர்களைத் தேடுவதற்கு முன்னால் உயிர் என்பது என்ன என தெரிந்துகொள்வோம். 'புரதப்பொருட்களின் புதிர் வடிவமே உயிர்' என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவை போக இன்னும் சில நிபந்தனைகளும் உண்டு.

 1. டி.என்.ஏ (டி ஆக்ஸிரிபே நியூக்ளீக் அமிலம்), ஆர்.என்.ஏ (ரீபோ நியூக்ளீக் அமிலம் கொண்டதாக இருக்க வேண்டும்

2. இனப்பெருக்கம், உறுப்பசைவு, நகர்தல் இருக்கவேண்டும்.

3.ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுதல் அடையவேண்டும்(பரிணாமம்)

4.வளர்ச்சிதைமாற்றம்.

5.வேதிமாற்றம் போன்ற செயல்பாடுகள் இருக்கவேண்டும்.

உயிர் என்றால் என்ன எனப் பார்த்தாயிற்று.

 உயிர் உருவாக என்ன மாதிரியான சூழ்நிலைகள் வேண்டும். ஒரு கிரகத்தின் சூழ்நிலையை மாற்ற இயலாதவை, மாற்றக்கூடியவை   என இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு கிரகம் சூரியனில் இருந்து உள்ள தொலைவு, சுழற்சி வேகம்,நாள் சலனம், ஆண்டு சலனம், சுழற்ச்சி ஆச்சின் சரிவு, நிறை, ஆரம், சுற்றும் பாதை இவை மாற்ற இயலாதவை. மாற்றகூடிய சூழ்நிலைகள் என சில உண்டு. மனிதனின் விஞ்ஞான முயற்சியால் ஒரு கிரகத்தின் வளிமண்டலம், வளிமகலவை, அழுத்தம், தட்பவெப்பம், ஈரப்பதம் இவற்றை மாற்றலாம்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நமது சூரியமண்டலத்தில் உயிர் வாழத் தகுதியான, அல்லது ஏதேனும் புதிய உயிர்கள் வாழ்கின்றதா எனத் தேடுவோம்.

வேற்று கிரகங்களில் உயிர்தேடல் என பேச ஆரம்பித்தாலே நமக்கு முதலில் தோன்றுவது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும். நமது சூரியமண்டலத்தில் பூமியை அடுத்த நான்காவது கிரகமாகும். கிட்டதட்ட பூமியின் பரப்பளவு கொண்டது. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 1/2 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்ற இரண்டு வருடங்கள் (பூமி வருடங்களில்). தைமாஸ், போபாஸ் என இரண்டு சந்திரன்கள். தைமாஸ் 16 கிமீ சுற்றளவு, போபாஸ் 28 கிமீ. சுற்றளவு கொண்டது. தைமாஸ் செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகவும், போபாஸ் மேற்கிலிருந்து கிழக்காகவும் சுற்றுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பு இயக்கமற்று காணப்பட்டாலும் எரிமலை வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்கின்றன. செவ்வாயின் அதிகாலைப் பொழுது பூமியின் காலை பொழுதைப்போலவே மெல்லிய பனிப்படலத்துடனேயே துவங்கிறது. மிக மெல்லிய காற்றுமண்டலம் அதில் குறைந்த அளவில் ஆக்ஸிஸன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் உள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள் ஒடி வற்றிப்போன கிரகமாக செவ்வாய்  காட்சியளிக்கிறது. பாத்பைன்டர் ஆய்வுகள் செவ்வாயின் மையப்பகுதியல் செய்யப்பட்டது. துருவப்பகுதியில் நீர் பனிகட்டியாக இருக்கிறது. பாக்டிரீயாக்கள் போன்ற சிறு உயிரினங்கள் இருக்கலாம். தற்பொழுது உயிர் இருக்கிறதோ இல்லையோ எதிர்காலத்தில் நமது சந்ததியினர் வாழ ஏற்ற கிரகம்.

செவ்வாய்க்கு அடுத்தாக சனிகிரகத்தின் சந்திரனான டைட்டன். கி.பி.1655ல் கிருஸ்டியன் ஹூயுஜென்னால் கண்டுபிடிக்கபட்ட்து. 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்ததோ அதே போன்ற தன்மையில் இருக்கிறது. சனிகிரகத்திலிருந்து 12,22,000 கி.மீ. துரத்தில் உள்ளது. 180 டிகிரியில் தண்ணீர் உறைந்திருக்கிறது. அந்த கிரகம் முழுவதும் மீத்தேனும், ஈத்தேனும் நிறைந்தருக்கிறது. இக்கிரகம் உயிர்வாழ தகுதியானதாக மாற 400 கோடி ஆண்டுகளாகலாம். காத்திருப்போம்!!

சூரிய மண்டலத்தில் மற்றொரு நம்பிக்கை தரும் கிரகமாக வியாழன் கிரகத்தின் யூரோப்பா. வியாழன் கிரகம் மற்றொரு சூரியமண்டலத்தை போலவே 20க்கும் மேற்பட்ட சந்திரன்களுடன் திகழ்கிறது. வியாழனின் காந்தப்புலனும், ஈர்ப்புவிசையும் சூரியனின் ஆற்றலில் பாதியைப் பெற்றுள்ளது. யுரோப்பாவின் மேற்பரப்பில் 10 கி.மீ. அழத்தில் தண்ணீர் உள்ளது என்றும், அதன் வளிமண்டல அழுத்தம், வாயுகள், தட்பவெப்பநிலை, சுழற்சிவேகம் போன்றவை டைட்டனைப் போலவே எதிர்கால நம்பிக்கையளிக்கக் கூடியது.

எதிர்காலத் தேவை விண்வெளி ஆய்வின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற அடிப்படையில் சூரியமண்டலத்தில் உயிர் தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூரியமண்டலத்திற்கு வெளியேயான உயிர்த் தேடல் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உறுதிசெய்துள்ளது. ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் "மூன்றடி வெள்ளி மனிதர்கள்" என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய "உலகங்களுக்கிடையே போர்" போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.

நாம் வாழும் பிரபஞ்சம் மிகப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது அசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைகோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரகவாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒருசமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

N=n.p1,p2,p3,p4ti/t

N-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்ச்சத்திரங்களின் எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களை சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நூண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நூண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T- பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.

இந்த சமன்பாட்டை வைத்து கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில் தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.

இதுபோன்ற விண்வெளி மனிதர்களைத் தேடுவதற்கு 'சேதி'(SETI) என்று பெயர்.(SETI- search for terrestial intelligen). 1974 நவம்பர் 16ல்  நமது சூரியனுக்கு ஓர் ஓளியாண்டு தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சத்திரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரத்திற்கு போய்ச் சேருமா? சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஓர் ஒளியாண்டு தூரத்தில் (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டர்) இருப்பதாக வைத்துக் கொண்டால் நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஓர் ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும்.வேறு என்ன தான் வழி?. விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப்போன்று ஒளி சமிக்ஞை மூலம் செய்தி அனுப்பினால் ஒரு நொடியில் நூற்றில் ஒருபங்கு  நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும்படியாக எந்த செய்தியும் வரவில்லை.

மற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களைக் கண்டுபிடித்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி ஆண்டுகளில் 150 கோடி ஆண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனிதப் பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகங்களில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள்? சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிறகிரகவாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.

யாதார்த்தமாகப் பார்த்தால் இது வரை பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்களோ, வேற்றுகிரகவாசிகளோ இல்லை. அரிதிலும் அரிதாக பூமியில் உயிர்கள் அதிலும் தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய மனிதர்கள். பிறகு ஏன் நம்மை நாம் அழித்துக்கொள்ள அணு ஆயுதங்கள் எதற்கு? மனிதன் மனிதன் சுரண்டுவது எதற்கு? நாடு, இனம், மதம் என்ற பாகுபாடு எதற்கு? பூமியைப் பாதுகாப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்.

Pin It

முதன் முறையாக ஒரு கருந்துளையின் இருப்பிடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கருந்துளை கற்பனைப் பொருளாகவும் கருத்தளவில் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாவும் இருந்தது. பூமிக்கு மிக அருகில் (பயப்பட வேண்டாம்) 7800 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

black_holeபக்கத்திலிருக்கும் ஒரு அப்பாவி நட்சத்திரத்தின் புற அடுக்கு வாயுவை அந்த கருந்துளையானது உறிஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. நேரடியாக அந்த நட்சத்திர வாயு அதனுள் நுழையாமல் சற்று சுற்றி வளைத்தபடி செல்வதால் அதிலிருந்து அபரிமிதமாக எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகிறது. இந்த எக்ஸ் கதிர் வெளிப்பாடுதான் கருந்துளையைக் காட்டிக் கொடுத்திருக்கிறது.

கருந்துளைகள் என்பவை தமது சொந்த நிறையீர்ப்பு அழுத்தத்தால் சுருங்கி நசுக்கப்பட்டு ஒற்றைப் புள்ளியாக மாறிவிட்ட நட்சத்திரம். சுருங்கிவிட்டபோதிலும், அளப்பரிய தனது நிறையீர்ப்பு விசையால் ஒளிகூட அதைவிட்டு வெளியேற முடிவதில்லை. அதனால் கருந்துளை நமது பார்வையில் படுவதில்லை. அதன் இருப்பை மறைமுகமான அனுமானத்தின் பேரில்தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருந்தது.

இப்போது நேரடியான சாட்சியம் கிடைத்ததால் கருந்துளையின் இருப்பு நிச்சயமாகி உள்ளது என சர்வதேச விண்வெளிக்குழு அறிவித்துள்ளது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

epson_340எப்சிலான் ஆரிகே என்பது வட வானில் மின்னும் பிரகாசமான நட்சத்திரம். இது 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெள்ள பார்த்துக் கொண்டிருக்கும் போதே பார்வையிலிருந்து மறைந்து போகும் அதிசய நட்சத்திரம். மறுபடியும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புலப்படும். சூரியக் கிரகண‌த்தைப் போல இது தோன்றினாலும் ஏன் 2 ஆண்டுகள் அது நீடிக்கிறது? ஏன் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறைந்துவிடுகிறது என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்காமல் சென்ற 100 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருந்தனர்.

சென்ற வருடம் ஆகஸ்ட் அன்று எப்சிலான் ஆரிகே மீண்டும் மறைய ஆரம்பித்ததும் நாசாவின் ஸ்பிட்செர் ஆகாயத் தொலைநோக்கி அதை தனது புற ஊதாக்கதிர் கேமரா மூலம் படம்பிடித்தது. எப்சிலான் நட்சத்திர கிரகண‌த்திற்கு விளக்கம் உருவாகியிருக்கிறது. அது: எப்சிலான் ஆரிகே ஒரு பிர‌ம்மாண்டமான நட்சத்திரம். அதைச் சுற்றியபடி இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன. அவை பிரும்மாண்டமான தூசிப்படலத்தில் மூழ்கியுள்ளதால் ஒவ்வொரு முறையும் அந்தத் துணை நட்சத்திரங்கள் நமக்கும் எப்சிலானுக்கும் இடையில் வரும்போது குறிப்பிட்ட கிரகண‌ம் நிகழ்கிறது; எப்சிலான் மறைந்துவிடுகிறது.

படத்தில் புகை மண்டலம் நட்சத்திரத்தை மறைப்பது காட்டப்பட்டுள்ளது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It

இந்த ஜூன் மாதம் நாம் ஒரு வால்மீனை விடிகாலை வேளையில் பார்க்க முடியும். வால்மீன், அதாங்க வால் நட்சத்திரம்னு சொல்றோமே அதுதான். ஆனால் அது விண்மீன்/நட்சத்திரம் இல்லை. அதுவும் நம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்தான். கடைசி உறுப்பினர். ஆனா சொன்ன பேச்சு கேக்காத தறுதலைப் பிள்ளை. இதுபோல ஏராளமான தறுதலைப் பிள்ளைகள் சூரியனுக்கு உண்டு. நினைத்த நேரத்தில் வந்து, நினைத்த நேரத்தில் தன் சொந்த வீட்டை, தந்தையை, தான் நினைக்கும் காலம் வரை சுற்றி விட்டு ஓடிப் போய்விடும். சில சில சமயம் நினைத்தபோது மீண்டும் வரும் பிள்ளை. இப்போது வந்துள்ள இந்த பிள்ளையைப்போல் இன்னும் 54 தறுதலைப் பிள்ளைகள் இந்த வகையில் உண்டு. இந்த வகை வால்மீனுக்கு மெக் நாட் வால் மீன்கள் என்று பெயர். மெக் நாட் என்ற ஆஸ்திரேலியர் தான் இந்த வகையிலான வால் மீன்களைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரையே இவைகளுக்கு வைத்து விட்டோம்.

 mcnaughtஇப்போது, மெக் நாட் வால் மீன்களில் ஒருவர், ஜூன் மாதம் வருகிறார் நம் குடும்பத்தைச் சுற்றிப் பார்க்க. அவர் பெயர் வால்மீன், c/2009 R1, (மெக் நாட் - McNaught). இந்த மாதம்தான் இதனை நாம் நன்றாகப் பார்க்க முடியும். இது விடிகாலையில் வடகிழக்கே, பெர்சியஸ் (persius) என்னும் விண்மீன் படலத்தைக் கடந்து போகிறது. மேலும் இந்த மாதம்தான் இது மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த வால்மீன் 5வது பிரகாச நிலையில் உள்ளது. ஒரு சின்ன இருகண் நோக்கி மூலம் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்க முடியும். இப்போது வால்மீன் வரும் நேரம், நிலா காயும் நேரமாக இல்லாததால், நிலஉலக மக்கள் நிறைய பேர் இதன் பிரகாசத்தைப் பார்த்து மகிழ்ந்து உள்ளனர். இதன் மெலிதான நீளமான வாலையும் கூட பார்த்து பரவசப் பட்டனராம்.

 ஜூன் 9ம் தேதியிலிருந்து மெக் நாட், விடிகாலை 3 .30௦ மணியிலிருந்து நன்றாகத் தெரிகிறதாம். அடிவானிலிருந்து நன்றாகப் பார்க்கும்படியான உயரத்தில், பெர்சியஸ் விண்மீன் படலத்திலுள்ள மூன்று விண்மீன்கள், முக்கோணமாக அமைந்துள்ள இடத்தில், வெறும் கண்ணாலேயே பார்க்குபடி உள்ளது. பொதுவாக வால்மீனுக்கு தலையும் வாலும் இருக்கும். வால் பல வடிவத்தில் இருக்கலாம். இங்கே மெக் நாட் வால் மீனுக்கு, சிறிய தலையும் , மெலிதான வாலும் உள்ளது. நிலநடுக்கோட்டின் வட பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும், விடிகாலையில் வடகிழக்கில் இந்த மெக் நாட் வால்மீனைப் பார்க்கலாம்.

 மெக் நாட்டின் விஜயம் மே மாதமே துவங்கிவிட்டது. அப்போது இது நமது பால்வழிஅண்டத்தின் அடுத்த வீடான ஆண்ட்ரோமிடாவில் (Andromedae) காணப்பட்டது. ஜூன் 5 ம் நாளிலிருந்து இன்னும் கொஞ்சம் வடக்கு நோக்கி நகர்ந்து,

பெர்சியசின் எல்லைக்குள் வந்து விட்டது. இப்போதுதான் வால்மீனின் பிரகாசம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதுதான் நாம் பார்க்க மிகவும் சாதகமான காலம். இது ஜூன் 23 -24 தேதிகளில், ஔரிகா(Auriga ) விண்மீன் படலத்தின் அருகில் இருக்கும். அப்போது மெக் நாட் இப்போதைவிட இன்னும் பிரகாசமாக இருக்கும். ஆனால், நமக்கு ஒரே ஒரு கஷ்டம்தான். அதான் நிலா வலம் வந்து, மெக் நாட் அருகே நிற்பார். அப்புறம் எப்படி அவரது ஆட்சியில், இந்தத் துளியுண்டு ஒளி வெளியிடும் மெக் நாட்டைப் பார்க்க? 

 மெக் நாட் ஒவ்வொரு நாளும், 1 டிகிரி கிழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் மெக் நாட் நம் பார்வையைவிட்டே ஓடி விடும்; ஓடியே ஓடிப் போய்விடும். இது ஹைப்பர்போலிக் வளையத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இதன் தாயகமான ஊர்ட் மேகத்தை விட்டு புறப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக பயணத்தை துவங்கி இருக்கிறது. இதன் பயணம் அடுத்த ஆண்டும் தொடரும். ஆனால் நமது கண் பார்வைக்குத்தான் தெரியாது.

இதுவரை வந்த மெக் நாட் குழும உறுப்பினரில், 2007ம் ஆண்டு, ஜனவரியில் பொங்கலுக்குப் பின் வந்த வால் மீன்தான் மிகவும் பிரகாசமானது. அதனை வெறும் கண்ணால், சூரியன் மறைந்த உடனேயே, மேற்கு வானில் 40 ௦டிகிரி உயரத்தில் பார்த்து மகிழ்ந்தோம் 

-       பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It