man Alone IN Love Failureஉன்னைத் தேடி தேடியே
திளைத்த நாளில்
உயிரின் ஒட்டு மொத்தத்தையும்
உன் ஓர விழியில்
கசியத் தந்த அவ்விழிகளை

இங்கிருக்கும் என் பரப்பில்
விரவிக் கிடக்கும்
உன் தூரக் கண்களை

எப்படி மூடுவேன்...

மாலை நாமறியாமல் மங்கி
பின் இருள் சூழ வந்தாலும்
ஒளிப் பொருத்தி தந்ததும்

என் தாகத்தில்
அந்நியப்பட்டும்
உயிர்கொடுக்க வருவதுமான...
உன் இன்சொற்களுக்கான
உயிர் அசைவினை

எப்படி திரும்பக் கூடு சேர்ப்பேன்...

தொலைவுகளின் எல்லை
என் விரல் இடையிலென எழுதிய
உன் முதலாமாண்டு புத்தகத்தின் அப்பக்கம் தான்
நம் காதலின் மொத்த வேதமும்

இருந்தும்

இதுதான் இதுதான்
இப்படித்தானெனச் சொன்னாலும்
இயல்பில் வராத நான்

முன்பு வெடுக்கன
நம் நொடியை சொல்லால்
கொட்டிய விச வண்டாகவே
இன்னும் பார்த்துக் கொண்டு
இருக்கிறேன் என் சாயலை !

உன் மென்னிதயத்தை
துளைக்க விட்ட என் மன்னிப்பை
எப்படி நீ ஏற்றுக் கொண்டாயோ

அப்படியே என் விழிகளும்
விழிகளின் துயரையும்
நான் ஏந்துகிறேன் !

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It