‘தீராக்களம்’ பாட்டாளியின் நாவல். கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, இயக்கச் செயல்பாடு எனப் பன்முகத் தளத்தில் இயங்குபவர் தோழர் பாட்டாளி. பின்னை வெண்மணி நாவலான ‘கீழைத்தீ’ அரசியலும் அழகியலும் இயைந்த அற்புதப் படைப்பாக மிளிர்ந்தது. அந்த வரிசையில் நிலவுடைமைச் சிதைவும், முதலாளிய வரவும், பண்பாட்டு அடையாளப் போராட்டமும் ‘தீராக்கள’மாக விரிகிறது.
1800 தொடங்கி 1965 வரையான சுமார் இருநூறாண்டு காலப்பகுதியில் மதுரையை மையமிட்டு நாவல் இயங்குகிறது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகால தமிழ் நாட்டின் சமூக அசைவியக்கங்கள் நாவலின் நுவல் பொருளாகின்றன. நிலக்குவியலை வைத்துக் கொண்டு ‘மஞ்சள் குளித்த’ பெரு நிலவுடைமையாளர்களான ஜமீன்களின் சரிவை, விழித்தெழும் உழுகுடிகளின் போராட்டத்தைக் குறியீடாக்கி நாவல் வெளிப்படுத்துகிறது. அதே வேளை பழைய மரபு ஆதிக்கத்தை எதிர்க்கும் போது ‘வெள்ளைச்சனி’யாய் வந்துவிட்ட புதிய காலனித்துவ வரவும் காட்சிப்படுத்தப்படுகிறது.
இடைக்காலத் தமிழகத்தில் நிகழ்ந்தப் பண்பாட்டு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கூத்துக்கலை மரபும், தமிழிசையும் அவைதீக ஒருங்கிணைவும் ஏற்படுத்திய தாக்கங்கள் நாவலில் முன்வைக்கப்படுகின்றன.
நிலவுடைமை உறவுகளின் சிதைவினையொட்டி ஏற்பட்ட முதலாளிய முறைமையின் தொடக்கப் புள்ளியாக அமைபவை பஞ்சாலைகள். உழைப்பை நம்பிய உழுகுடிகள், இயந்திரங்களை இயக்கும் தொழிலாளிகளாக மாறுகின்றனர். நிலவுடைமையாளன் - ஜமீன் – பண்ணையார் – முதலாளி ஆகிறான். இந்த உற்பத்தி உறவு மாற்றங்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்ட வாழ்வாக விரிகிறது.
நாடு காலனியத்துவத்திலிருந்து விடுதலை அடையப் போராடிக் கொண்டிருக்கும் போதே, உள் காலனிகளின் ஆதிக்க எதிர்ப்பும் உருவாகிறது. சாதி சமத்துவம், மொழிவழி மாநிலம், மாநில உரிமைகள், இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்புப் போன்றவை கூர்மைப்படுகின்றன. மையத்துக்கு எதிரான மாநில மொழி, உரிமைப் போர் வலுப் பெறுகிறது. இதில் இளைஞர்களும் மாணவர்களும் முன்னிலைப் பெறுகிறார்கள்.
நாவல் களம் – 1, களம் – 2 என இருபகுதிகளாக அமைந்துள்ளது. முப்பாட்டன் தலைமுறை பாட்டன் தலைமுறை, முப்பாட்டன் காலம், பாட்டன் காலம் என்று பகுக்கப்பட்டுள்ளது. நாவலின் இயல் பகுப்புகள், தலைப்புகள், வரிசை எண்கள் ஆகியவை நாவலின் போக்கில் முக்கியத்துவம் தரும் நுட்பங்களாக அமைகின்றன. சம காலம் 1, 2, 3,……. என்ற இயல் எண் வரிசையிலும், முப்பாட்டன் காலம் க,உ,ங… என்ற தமிழ் எண் வரிசையிலும், பாட்டன் காலம் அ, ஆ, இ….. என்ற அகர வரிசையிலும் சுட்டப்படுகின்றன.
நாவலின் கடைசிப்பக்கம் (492),
“ஒங்காப்பா பேரு?”
“முனியாண்டி”
“ஒங்க தாத்தா பேரு?”
“தில்லை வாசகம்”
“ஒங்க பாட்டனாரு பேரு?”
“கஞ்சமலெய்…ய்…ய்…ய்….ய்”
என சிங்காரவேலனுக்குத் தன் பரம்பரை நினைவுத் ததும்புகிறது. இங்கிருந்து நாவலைப் புரிந்து கொள்ளலாம். நாவலின் ‘சாவி’ இது தான். நிற்க.
குறுநில மன்னர்கள் போல ஜமீன்கள் விளங்கினர். நிலக்குவிப்பு மட்டுமின்றி நிர்வாகத் தரப்பாகவும் இவர்கள் விளங்கினர். அரசியல், பொருளாதார, சமூக அதிகார மையமாகவும் திகழ்ந்தனர். விவசாயிகளுக்கு அதிக வரிகளை விதிப்பது, உழைப்பாளர்களுக்குக் குறைந்த கூலியைத் தருவது. பெண்களை தம் இச்சைக்குப் பயன்கொள்வது, கொடிய தண்டனைகள் தருவது, விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் செல்வத்தை ஊதாரித்தனம் செய்வது… என ஜமீன்களின் ‘ராஜ்ஜியம்’ நடந்தது.
இச்சூழலில் ஆங்கிலேயர்களின் நுழைவு நிகழ்ந்தது. 1801இல் மதுரை, கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் ஆங்கில அரசு நில நிர்வாகச் சீர்த்திருத்தங்கள்(?) செய்யத் தொடங்கியது. ஊர்ப்புறங்களில் விவசாய நிலங்களை மேலாண்மை செய்யவும் வரி வசூல் செய்யவும் ‘கர்ணம்’ எனும் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்கிறது. பின்னர் கர்ணம் – மணியம் ஆனது. இது அதுநாள் வரை விவசாயிகளிடமும், குடியானவர்களிடமும் வரி வசூல் செய்து ‘கெட்டதுக்குப் பாதியாக’ ஆங்கில அரசுக்குத் தந்துவிட்டு, தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்ட ஜமீன்களுக்குப் பேரிடியாக அமைகிறது.
நாவல் இதை முப்பாட்டன் காலம் எனச் சித்தரிக்கிறது. மதுரை கலெக்டரும், ஆங்கில அதிகாரியும் வந்து மக்கள் மத்தியில் கூட்டம் நடத்தி இதனை அறிவிக்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்ற ஜமீன்களுக்கு இது அதிர்ச்சியாக அமைகிறது.
‘கர்ணம்’ வேலைக்கு படித்த, விவரம் அறிந்த, நில அளவை, கணக்கில் தேர்ந்தவர்களை அமர்த்த முடிவாகிறது. ஆனால், வழக்கம் போல் அதிகாரிகளிடம் ‘லாபி’ செய்து ஜமீன் தன் ‘துணைவி’ வழி உறவுக்கு இப்பதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறான். கீழத்தஞ்சைப் பகுதியில் இக்கால கட்டத்தில் இம்மாதிரி கர்ணம், மணியம் பணிகளில் பெரும்பகுதி பிராமணர்களும் அடுத்த நிலையில் முதலியார், வேளாளர் ஆகிய உயர் வகுப்பினருமே பதவி பெற்றனர். இப்பகுதி நில உடைமையாளர்களின் ‘கவசமாக’ விளங்கினர் என்பதையும் இவ்விடத்தில் எண்ணத் தோன்றுகிறது.
தங்களில் ஒருவருக்கு, தாங்கள் முன் நிறுத்தும் ஒருவருக்கு ‘கர்ணம்’ வேலை கிடைக்கும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போகிறார்கள். ஜமீன்களின் தொடர் தொல்லைகள், வரம்பு மீறல்கள், ஆதிக்கத்தனம் கோபங் கொள்ளச் செய்கிறது.
முதலில் தச்சம் பத்து பகுதியில் ‘கஞ்சமலை’ எனும் பெரியவர் – விவசாயி – அம்மையநாயக்கனூர் ஜமீனுக்கு எதிராக ஜனங்களைத் திரட்டத் தொடங்குகிறார். அவர் தன் நண்பனான பேய்க்காமன் (ஜமீனில் சேவகம் செய்பவர்), படைத்தேவன், பொன்னருவிச் செட்டியார், பிற ஜமீன்களில் அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள், பிற பிரிவினர் எனப் பலருடனும் பலமுறை சந்தித்து ஆலோசனை செய்கிறார். நம்பிக்கைப் பிறக்கிறது. அழகர் மலை ஆடித்திருவிழாவிற்கு எல்லா ஜமீன்களும் செல்வது வழக்கம். அத்தருணத்தைப் பயன்படுத்தி அம்மைய நாயக்கனூர் ஜமீனின் தலைமையிடமான ராஜதானிக் கோட்டையைக் கலகம் செய்து கைப்பற்றுகிறார்கள். தகவல் அறிந்து அம்மைய நாயக்கனூர் ஜமீன், சத்திரப்பட்டி ஜமீனின் பல்லக்குப் பரிவாரங்களுடனும், சிறுவாலை ஜமீனின் படையணிகளுடனும் வருகிறார். இங்கு மக்கள், காவல்படை, உழவர்கள், அதிகாரிகள் என எல்லாரும் ஜமீனுக்கு எதிராய் உக்கிரமாய் இருப்பதை அறிந்து ‘பேச்சு வார்த்தைக்கு’ இணங்குகிறார். மக்களின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்று கையொப்பமும் இடுகிறார்.
இதையறிந்து பிற எல்லா ஜமீன்களும் கொந்தளிக்கிறார்கள். கூட்டம் கூடுகிறார்கள். சத்திரப்பட்டி, வெள்ளியக் குன்றம், சிறுவாலைச் ஜமீன்களின் கேள்விகளுக்கு அம்மையநாயக்கனூர் பதில் தர இயலாமல் தவிக்கிறார். இறுதியில் மக்களை ஒடுக்கிட ஆங்கில அரசின் துணையை நாட முடிவு செய்கிறார்கள். ஆங்கிலப் படை நவீனப் படைக்கருவிகளுடன் விவசாயிகள், பொதுமக்களுடன் மோதுகிறது. கஞ்சமலையும் நண்பர்களும் செய்த முன் நடவடிக்கைகள், திட்டங்கள் தவிடு பொடியாகின்றன. கஞ்சமலை உள்ளிட்ட யாவரும் அழித்தொழிக்கப்படுகின்றனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பின்னர் எழுந்த விவசாயிகள் கலகத்துக்கு முன்னோடியாக இது அமைகிறது.
தில்லைவாசகம் பிள்ளை மதுரை வட்டாரத்தில் முன்னணி கலை ஆளுமை சங்கரதாஸ் சுவாமிகளின் சமகால நண்பர். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகரிடம் தமிழ்க் கற்றவர். வடமொழி, தமிழ், இசை, நாடகம், சிற்பம்…. எனப் பல்கலை வித்தகர். இவரின் இசைப்பாடல் சிறப்பும், நாடகப் பாங்கும், அறிவாற்றலும் விதந்து நாவலில் சுட்டப்படுகின்றன. வடமொழி, சமஸ்கிருத, வைதீகப் பண்பாட்டுக் கூறுகளுக்கு மாற்றாக அவைதீக உரையாடலை இவர் நிகழ்த்துகிறார்.
மெய்யியல், இறையியல், கலைத்துவம் எனச் சராசரியைக் கடந்து வாழுகிறார் தில்லைவாசகம். தன் சொத்துக்களை அறக்கொடை செய்கிறார். இதனால் பாதிப்புக்குள்ளான மனைவி சிலம்பாயி(சிவப்பி) கணவனைக் கடுமையாக விமர்சித்து, ஏசிவிடுகிறார். தில்லைவாசகம் வீட்டிலிருந்து வெளியேறிசென்றுவிடுகிறார். சிலம்பாயி மூத்தமகன் முனியாண்டி, இளையமகன் ராஜமாணிக்கம், மகள் காத்தாயி ஆகியோருடன் கிராமத்தில் இருந்த சொற்ப சொத்தையும் விற்றுவிட்டு மதுரையை நோக்கி இடம் பெயர்கிறார். குடும்பத்தைக் காப்பாற்றிட மூத்த மகன் முனியாண்டி மதுரை ஆண்டாள்புரம் மீனாட்சி மில்லில் வேலைக்குச் சேர்கிறார்.
முனியாண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஏ.ஐ.யு.டி.சி. தொழிற்சங்கத் தலைவராகிறார். தொழிலாளர்களில் விசயம் தெரிந்தவராகவும், உரிமைக்குக் குரல் கொடுப்பவராகவும் விளங்குகிறார். பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. தொழிலாளர் நலம் காக்கும் செங்கொடிச் சங்கத்துக்கு தன் வாழ்வின், பொருளாதாரத்தின் பெரும் பகுதியை செலவிடுகிறார். போனஸ் கேட்டு, பேச்சுவார்த்தை தோல்வியாகி தொடர்போராட்டம் வெடிக்கிறது. முதலாளி, மேலாளர், நிர்வாகத் தரப்பினர் போராட்டத்தை உடைக்கிறார்கள். கருங்காலிகளைப் பயன்படுத்துகிறார்கள். முனியாண்டியை ஒரு முறை மிகக் கடுமையாகத் தாக்கி விடுகின்றனர். மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சைப் பெறுகிறார். மீண்டும் முனியாண்டி செயல்படத் தொடங்குகிறார். பேரம் பேசுகிறார்கள். முனியாண்டி தீரத்துடன் மறுத்து தொழிலாளர் நலனை வலியுறுத்துகிறார். எரிச்சல் அடைந்த நிர்வாக தரப்புக் கூலி ஆள்வைத்து முனியாண்டியைக் கொலை செய்து விடுகிறார்கள். போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் மதுரை தியாகராசர் கல்லூரிக்கு முனியாண்டியின் மகன் சிங்காரவேலன் படிக்கச் செல்கிறார். அப்பா போலவே பொது சேவையில் ஆர்வமும், கலை இலக்கிய ஈடுபாடும் கொண்டு சிங்கரவேலன் விளங்குகிறான். அப்பொழுது தமிழறிஞர் சி. இலக்குவனார் அங்கு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரோடு நெருக்கம் ஏற்படுகிறது. அக்காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெறுகிறது. மாநாடுகள், ஊர்வலங்களில் சிங்கரவேலன் பங்கேற்கிறான். கா.காளிமுத்து, நா.காமராசன், பா. செயப்பிரகாசம், ஷாகுல் அமீது(இன்குலாப்) போன்ற மாணவத் தலைவர்களுடன் அணுக்கம் ஏற்படுகிறது.
தன் தந்தை கொலையுண்டு இறுதிக்காரியங்கள் முடிவுற்று (பதினாறாம் நாள்) இந்தி எதிர்ப்பு போராட்டப் பாதிப்புகளைக் கேள்வியுற்று மதுரை மாநகர் செல்கிறான். அங்கு நடைபெறும் எதிர்ப்பு ஊர்வலம் கலவரத்தில் முடிகிறது. கண்மூடித்தனமாகக் காவல்துறைத் தாக்குதல் நடத்துகிறது. துப்பாக்கிச் சூடு நிகழ்த்துகிறது. தன் பகுதியிலிருந்து கூட்டத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டச் சிங்காரவேலன் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகிறான்.
நான்கு தலைமுறையின் கதை இது. தமிழ் நிலத்தில் நிலத்துக்காக, சமத்துவத்துக்காக, பண்பாட்டுக்காக நிகழ்ந்த தொடர் போராட்டக் கண்ணிகளைக் கோர்த்து நாவலாக்கி உள்ளார். சீனப் போர், ஜீவா மறைவு, முத்துராமலிங்கத் தேவர் மறைவு, நேரு மறைவு ஆகியன காலவெளியைச் சுட்டப் பயன்படுகின்றன.
18, 19 ஆம் நூற்றாண்டின் கல்வி முறை, கலை வெளிப்பாடுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. வேளாண் மக்களின் வாழ்வியல் பதிவுகளும் இடம் பெறுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை, குழுப்போக்கு, அரசியல் சில்லறைத்தனம், போலித்தனம் ஆகியனவும் சித்தரிக்கப்படுகின்றன.
கூத்தும், நாடகங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. திரைப்படங்கள் குறிப்பாக திரையிசைப் பாடல்கள் வெகுமக்கள் கலையாக மாறுவது சுட்டப்படுகிறது.
போதைப் பழக்கம், சூது, பாலியல் தொழில், அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கூலிக் கொலை, வன்முறை, வெற்று அரசியல் போன்ற இன்றைய சமூக நிலைகளின் தோற்றக்கூறுகளை நாவல் அடையாளப்படுத்துகிறது.
நாவல் போக்கில் ஒவ்வொரு காலகட்ட நிகழ்வுகளும் அழகிய முறையில் பதிவாகின்றன. நாவலாசிரியரின் பார்வைக்கோணத்தையும் இவை வெளிப்படுத்துகின்றன.
முப்பாட்டன் காலத்தில் நிலமே மையமாக இருப்பதும், நிலவுடைமைக் கொடுமைகள் உச்சத்தில் இருப்பதும் சித்திரிக்கப்படுகின்றன.
“நெலத்துவரி, நெலத்துல பாயுற தண்ணிக்கு வரி, வெளஞ்சா வெள்ளாமெ வரி, கடமெவரி, அந்த்ராயம் வரி, பஞ்சுப்பிளி வரி, அந்த வரி இந்தவரின்னுட்டு ஏகத்துக்கும் வரிக்கு மேல வரியாப் போட்டு, காலம் பூரா நாம நல்லா ஒளச்சுக்குடுத்த தெரவியத்தெ, அவெங்யட்டப் பறிகுடுத்துட்டு, அடிமெய் பொளப்பு நடத்துறோங். இவெங்யளுக்குப் பின்னாடி, இந்தச் சமீனுக்காரங்ய, குடி, கூத்து, கூத்திய, கும்மாளமுன்னு நம்ம ஒளப்பதானக் கொள்ளையடிச்சாய்ங்ய. இப்ப என்னாடான்னா? இந்த வெள்ளக்காரங்ய வேற புதுசா வந்து சேந்துருக்காங்ய” (ப.45).
ஜமீன்கள் ஆங்கிலேயர் வரவை, ‘நமக்கு கிடைத்து வந்த மரியாதைகள் எல்லாம் இந்த வெள்ளெலிப் பயல்களுக்குக் கிடைக்கிறதே’ என்று இரு ஜமீன்களும், பொறாமையால் உள்ளுக்குள் அவிய, குதிரையேறிப் புறப்பட்டார்கள் கலெக்டரும், ஹா ட்சன் துரையும்” (ப 50) எனப் பதிவு செய்கிறார்.
அக்கால நில அளவை முறைகள், நாணய முறைகள் சார்ந்த பொருளாதாரக் குறிப்புகள் நாவலில் இடம் பெறுகின்றன.
“நெல அளவுக் கணக்கெல்லாஞ் சுத்தமாத் தெரியணுங். ‘மா’ ன்னா என்னா? ‘வேலி’ன்னா என்னா?, ‘காணி’ ன்னா என்னா?, ‘குழி’ன்னா என்னா?, ‘மாகாணின்னா என்னன்னு… நெலத்துத் கணக்கு வளக்குகெ எல்லாத்தெயுஞ் தெரிஞ்சு வச்சுருக்கணுங்…
நமக்கு இந்தச் ‘சக்கரங்’ங், ‘வராகந்’ தாண்டி ஒன்னுந் தெரியாது. ‘ரெட்டை வராகங்’, ‘நட்சத்திரப் பகோடா’, ‘புலிவராகங்’, ‘வெள்ளிப் புலி வராகங்’, ‘கழஞ்சு’, ‘திரமங்’, ‘பொன்’னுன்னு… இப்படி ஏகப்பட்ட காசுங்க இருக்கு.” (ப.124)
ஜமீன்கள் குடிமைச் சமூகத்தில் எவ்வாறு கோலோச்சினார், பல்வேறு சமூகத்தினரையும் தமக்குக் கீழ்ப் பயன்படுத்தினர் என்பதை ஆங்காங்கு நாவல் சுட்டிக்காட்டுகிறது.
“பேய்க் காமன் மறவர் குலத்தில் பிறந்த சுத்த வீரன். ஆனால், இப்போது ஜமீந்தாரிடம் தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறான். ஜமீந்தாரின் பரிவாரங்களில், ‘சின்ன ஊழியம்’ செய்பவன் பேய்க்காமன். ‘பெரிய ஊழியம்’ என்றால் பாதுகாப்பு வீரர்கள். ‘சின்ன ஊழியம்’ என்றால் பல்லக்குத் தூக்குபவர்கள் என்று வகை பிரித்திருந்தார்கள் ஜமீந்தார்கள்.” (ப.132)
“பல்லக்குத் தடி, தோலில் அழுத்தாமலிருக்க, தோலில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சும்மாட்டுச் சுருளை எடுத்து உதறினார் பேய்க்காமன். பெருகி வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
கஞ்சமலைக்கு பேய்க்காமனின் நிலையைக் கண்டு பரிதாபம் மேலிட்டது. ‘எப்பேர்ப்பெத்த வீரன்ங். அவ்ரெப் போயி சின்ன ஊளியக்காரனா வச்சிருக்கானே இந்த நாய்க்யெப் பயெ’ என ஜமீனின் மேல் கோபம் மேலிட்டது.”(ப.133)
ஜமீன்கள் தண்டிப்பதையும், வெட்டி வேலை வாங்குவதையும் இப்படிப் பதிவு செய்கிறது நாவல்: ‘அஞ்சு பட்ட வாரு’, ‘அஞ்சு பட்ட வாரு’ன்னு ஒன்னப் புதுசாக் கண்டுபிடிச்சுருக்கானுங்கப்பா. அதுல அஞ்சு தோல் வாருங்க இருக்குங். அதால… வெத்து ஒடம்புல அடிச்சம் முன்னு வச்சுக்க, அடிச்ச தடங் சாவுற வரெக்கிங் மறெயாது. இப்பிடித் தடத்தோட எங்கூருச் ஜனங்க நெறெயெ அலெயிதுப்போவ்.”
“நாய்க்யெப் பயலுக நெலத்துல வெட்டியா ஒளக்குறேஞ் சரி. அதெக் கூடப் பொறுத்துக்கலாங். ஆனா... இந்த அம்மெயநாய்க்யெனூறு ஜமீனுப் பயே, அவனோட வப்பாட்டிக்கு… அதாம்ப்பா... ஒனக்குத் தெரிஞ்சுருக்குமே... சீலக்கம்மா...அவளுக்கு எங்கூருல நெலத்தெ தானமா எளுதி வச்சுருக்காங். அந்த நெலத்துக்குங் வெட்டி ஒளப்பெச் செய்யணும்முன்னு கட்டாயப்படுத்தி, காசு பணமில்லாத, கூலியில்லாத வேலெயெப் பாருங்கடான்னு சொல்லிக் கொடுமெப் படுத்துறானப்பாவ்.” (ப.134)
பாட்டன் காலத்தில் மதுரை வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த கூத்து, நாடகங்கள் பற்றியும் தில்லை வாசகத்தின் கலைத் திறமை குறித்தும் பல பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
“எவ்வளவு கடினமான சந்தங்களென்றாலும், கடினமான வரிகள் என்றாலும், லட்டு லட்டாக, துண்டு துண்டாக, தனித்தனியாக வந்து காதில் விழும். அது தில்லை வாசகத்தின் தனித்திறன். அதற்காக அவர் ரொம்ப மெனக்கெட்டுப் பயிற்சி செய்திருக்கிறார்.
‘கடமுடா’ என்றிருக்கும் சந்தங்களை, முதலில் அவர் தனித் தனியாக ‘கடா’ என்பார். பிறகு, ‘முடா’ என்பார். பிறகு ‘கடமுட’ ‘கடமுட’ என்று மெலிதாக வேகமெடுப்பார். வேகம் உச்சத்துக்குப் போகும் போது, சுருதி பிசகாமல், தாளம் தட்டாமல், சட்டென்று கீழிறக்கி, தனித் தனியாக்குவார். ஒரு தேர்ந்த பருந்து ஒன்று, வானத்தில் இருந்து தன் கூரிய பார்வையால், தனக்கான இரையைக் கண்டு சட்டென்று கண் இமைக்கும் நேரத்தில் கீழிறங்கி இரையைக் கவ்வி, கண நேரத்தில் மேலேழுமே. அந்தக் கச்சிதம் இருக்கும் அவர் சாதகத்தில்.” (ப.26)
தில்லைவாசகத்தின் வழி வைதீகம் குறித்த விமரிசனம், வடமொழி – தமிழ் மொழி முரண் போன்றவை முன் வைக்கப்படுகின்றன.
“ஞானசம்பந்தரின் ஏடு கரையேறி வந்ததல்லவா? அந்த ஏட்டிலிருந்த தமிழ்ப் பதிகத்தைச் செவி சாய்த்துக் கேட்கையில்… நன்றாகத் துல்லியமாகக் கேட்கும் வண்ணம், தன் நிலையிலிருந்து சற்றுச் சாய்ந்து கேட்க நேர்ந்ததால் அப்படி ஆனது. ஆக... தமிழுக்காக... தமிழ்ப் பதிகத்துக்காக... தன் நிலையிலிருந்து சற்றுச் சாய்ந்து நின்று கேட்டவன் ஏடகநாதன். அவனன்றோ தமிழ்க் கடவுள்!” என்று தில்லைவாசகம் விதந்தோற்றிக் கூறிக் கொண்டிருந்த போது, வேதபாட சாலை குருவானவர் சற்று எரிச்சலடைந்தார்.
‘எங்கள் வேதத்தை விட, உங்கள் தமிழ் பெரியதோ? என்னடா இது சோதனை? இந்தத் தில்லைவாசகம் வேதத்தை விட, தமிழை உயர்த்திக் கொண்டிருக்கிறானே இவனை அழைத்தது நமது பிசகோ?” என வேதபாடசாலை குரு சங்கடப்படுகிறார் (ப.90).
கூத்தின் சிறப்பை இந்த உரையாடல் உணர்த்தும்:
“ஏங்ராசா… ரொம்பத்தாஞ் சடச்சுக்காதெ. இங்ஙன வீட்டுல நொடக்கிக் கெடக்குறதுக்குப் பதிலா, கூத்து நடக்குற எடத்துல போயிப்படுத்தா போற காலத்துக்குப் புண்ணியங் கெடக்கிங். நானே எண்ணெ முந்துதோ திரி முந்துதோன்னு சாக மாட்டாமெக் கெடக்குறேங். இன்னிக்கு தில்லெ வாசகம் பிள்ளையோட கூத்து. அங்ஙென போயி செத்த நொடக்குனா நேரா சொர்க்கந்தாங்”
“அதெப்பிடித்தா?”
“ஏலேய்… கூத்துப் பாக்கணுங்… கேக்கணுங்குறது இல்ல. அந்தப் பூமியில போயிப் படுத்தாலே புண்ணியந்தாங். இன்னிக்கி எலெ அறுத்தவெங் நாளெக்கி கொலை அறுப்பாங்குற கதெயா, இன்னிக்கு கூத்து நடக்குற இடத்துல படுத்தா நாளக்கி இந்தக் கட்டெக்கி நேராச் சொர்க்கந்தாங். அதுலயுங் நம்மூரு ராசபார்ட்டு, தில்லெ வாசகங் கூத்துன்னா சும்மாவா?” (ப.163).
இது எளிய மக்கள் கூத்துக்கலை மீதும், கலைஞர்கள் மீதும் வைத்திருந்த நம்பிக்கைச் சார்ந்த உறவினை வெளிப்படுத்துகிறது.
“அன்று தில்லை வாசகம் மிகவும் சிறபாக நடித்தார். தில்லை வாசகம் என்கிற மனித உருவிலிருந்து அரிச்சந்திர என்கிற பாத்திரத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது போல் அரிச்சந்திரனாகவே மாறிவிட்டார்” (ப.166).
“மணிமுடி சூடி கம்பீரமாய்த் தில்லை வாசகம் அரியணையில் அமர்ந்திருக்க, தேவர்களும், முனிவர்களும் காசுகளை அள்ளி மணிமுடியோடு தில்லை வாசகத்துக்கு கனகாபிஷேகம் செய்தார்கள். மக்கள் ஆரவாரம், மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்த சூரியனையே சொக்கவைத்தது”(ப.167).
இப்படி வெளி உலகில் கலை ஆளுமையாக மிளிர்ந்த தில்லை வாசகத்தின் வீட்டு நிலை:
“சிவகாமி(சிலம்பாயி) தில்லைவாசகத்தை சற்றும் மதிக்காது. ஊர் உலகமே தில்லைவாசகத்தைக் கொண்டாடினாலும், கலைத்தாயின் அருந்தவப் புதல்வன் என்று போற்றினாலும், சிவகாமி தில்லைவாசகத்தை சற்றும் மதிக்காது. கைக்காசுக்கு உதவாத கூத்தாடி என்றும், ஊதாரி என்றும், தான தர்மம் என்று எல்லாச் சொத்துக்களையும் வாரி இறைக்கிற பைத்தியக்காரன் என்றும்” (ப.171).
“அட முனிசுவரா… ஏந்தாங் இந்தாளுக்கு இப்பிடிப் புத்தி போகுதோ தெரியலியே? அரெண்மனெயாட்டங் இருந்த வீட்டெத் தொலைச்சாச்சு. நெலபொலங், நீச்சு, வயல், வரப்புன்னு எல்லாத்தையுங் தொலச்சாச்சு. இப்பக் கடைசியா, பேரு சொல்றதுக்குன்னு ஒரே ஒரு கடைசிச் சொத்துத்தாங் இருந்துச்சு. அதெயுந் தான தர்மஞ் செஞ்சாச்சா? மொத்த மொத்தமா அள்ளி எறக்கிற தர்ம மகாராசா வரட்டுங் இன்னிக்கு ஆடுற அந்தக் குடுமிய அறுத்துட்டுத்தாங் மறுவேலெ. மானங்கெட்ட மனுசங்” (ப.173).
இறுதியில் தில்லை வாசகம் வீட்டைவிட்டே வெளியேறுகிறார். குடும்பம் ஊரை விட்டுப் பிழைப்புத் தேடி மதுரைக்கு இடம் பெயர்கிறது. “தலையில் ஒரு பெரிய துணி மூட்டையும், கையில் ஒரு பித்தளை அண்டாவில் போட்டிருந்த ஒரு சில பண்ட பாத்திரங்களையும், தூக்கிச் சுமந்துகொண்டு நடந்து கொண்டிருந்தாள் சிலம்பாயி. அவளுக்கு முன்னே, முனியாண்டியும் ஒரு துணி மூட்டையுடன் நடந்து கொண்டிருந்தான். அவளுக்குப் பின்னே, காத்தாயியும், ராஜமாணிக்கமும் பின் தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தார்கள்….
நடந்தார்கள். நடந்தார்கள். வயிற்றில் பசியோடும் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ என்ற கலக்கத்தோடும் நடந்து கொண்டிருந்தார்கள்.”(ப.267).
தொழிற்சங்க அனுபவங்களும், நிறை குறைகளும் நாவலில் இடம் பெறுகின்றன. தகுதியும் திறமையும் மிக்க முனியாண்டி தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறார். அவர் சுயநலம் ஒதுக்கி நேர்மையுடன் செயல்படுகிறார். தொழிலாளர்களுக்காகப் பல நாட்கள் வேலை, கூலியை இழந்து வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார். இது அன்றைய, இன்றைய உண்மையானத் தொழிற்சங்கத் தலைவர்களின் யதார்த்தப் பதிவு. வகை மாதிரிப் படைப்பு.
“இன்று முனியாண்டி வழக்கம் போல வேலைக்குப் போகவில்லை. வழக்கு விஷயமாக லேபர் கோர்ட் வரைக்கும் சென்றிருந்தார். லேபர் கோர்ட்டில் நாள் முழுவதும் இழுத்தடித்து விட்டார்கள். பொதுவாக இப்படியான யூனியன் வேலைகளுக்குப் போகும் போது முனியாண்டிக்குச் சம்பள இழப்புடன் கூடிய விடுப்புதான் வாய்க்கும். மில்லில் சட்டப்படியாகக் கொடுக்கும் விடுப்புகள் எல்லாம் முனியாண்டிக்குப் போதாது. வேலைக்குப் போவதை விட, யூனியன், கட்சி சம்பந்தமான வேலைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். யூனியன், கட்சி நடவடிக்கை, லேபர் கோர்ட், ஏசிஎல் ஆபீஸ், டிசிஎல் ஆபீஸ் என அங்கும் இங்கும் அலைந்து அலைந்து மாதத்தில் ஒருவாரம் வேலைக்குப் போனாலே அதிகம்.”(ப. 55)
முனியாண்டி தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குடும்ப வறுமை நிலையை நாவலில்,
“பாக்கியம், பாவம். ‘பிள்ளைகளுக்கு ஒரு நல்ல சோறு... கொளம்பு வச்சுப் போட வக்கில்லையே...’ என்று கண்ணீர் மல்கும். கையில் இருக்கும் காசைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொஞ்சமாக அரிசி வாங்கும். அதைப் பொங்கி வடித்து, வடி தண்ணீரில் உப்புப் போட்டுக் குடித்துக் கொள்ளும். பிறகு, பொங்கிய சோற்றில் தண்ணீரை ஊற்றி மூடி வைத்துவிடும். தொட்டுக் கொள்ள ஊறுகாய் எப்போதும் இருக்கும். எப்போதாவது அபூர்வமாக பொரிகடலை, தேங்காய்ச் சில்லு வாங்கித் துவையல் அரைக்கும். மற்றபடி வீட்டில் ஒரு வேளை சுடுகஞ்சியும், மீதமுள்ள இரு வேளையும் பழைய சோறும் தான் எல்லோருக்கும் வாய்க்கும்.
கஷ்டமென்றால் அப்படி ஒரு கஷ்டம். ஏற்கெனவே வட்டிக்குக் கொடுத்தவர்கள் அவ்வப்போது வீட்டு வாசல் வந்து நிற்பதும், சத்தம் போடுவதும் பிள்ளைகளுக்கு இயல்பானதொன்றாய் ஆகிவிட்டது.” (ப. 138)
காலம் தோறும் ‘சாதி’ எப்படி ஒரு சமூகச் சதியாகத் தொடர்கிறது என்பதை நாவல் சுட்டுகிறது.
“நாமெதான்ங் இந்தெப் பள்ளெக்குடி பறெக்குடி சக்கிலியெக் குடி இதுகெ எல்லாத்தெயும்ந் தொட்டாத் தீட்டு பாத்தாப் பாவமுன்னுட்டு ஊரெ விட்டே ஒதுக்கித் தூர வச்சுருக்கமுல்ல. பொறவு எப்பிடிப்பா? திருவிளாக் காலெத்துலெ மட்டும்ங் மேடெயிலெ தீவெட்டி பிடிக்க வுடுறோம்ங்? அட…. அந்தச் சனெங்களெத் தீட்டுன்னு சொல்லி நம்ம ஊருக்குள்ளாறயும்ங் வுடுறதில்லெ. நம்ம கோயிலுக்குள்ளாறயும்ங் வுடுறதில்லெ. அட… இம்புட்டு ஏன்ங்? ஊருக்குள்ளாற நடக்குற கூத்துமேடெப் பக்கமே அவெங்ய்யெளெ வுடுறதில்லை.” (ப.24) இது பாட்டன் தலைமுறையில்.
மில்லில் குடியிருப்புக் காலனியில் தெருக்களைச் சாதி அடிப்படையிலேயே மில் நிர்வாகம் அமைத்திருக்கிறது.
“காலனியில் நுழைந்ததும் முதல் தெரு அய்யர்களுக்கு இரண்டாவது தெரு வெள்ளாளர்களுக்கு. மூன்றவது தெரு செட்டியார்களுக்கும் நாயக்கமார்களுக்கும் என ஒவ்வொரு சாதி வாரியாகக் கணக்கிட்டுக் கொடுத்தது. கடைசியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கொடுத்திருந்தது.” (20)
நிர்வாகம் இப்படி என்றால், தொழிலாளிகள் எஸ்.சி, பி.சி. எனப் பேதம் பார்க்கிறார்கள். அதிலும் கீழ்வீட்டில் பி.சி. யும், மேல் வீட்டில் எஸ்.சி. யும் இருப்பது சிக்கலாக வெடிக்கிறது. இது நவீனத் தீண்டாமைக்குச் சான்று.
“வக்காலி…. தேவென்ந் தலெ மேல நட்டமா நின்னுக்கிட்டு எஸ்சிப்பயெ நட்டுன பண்ணுவாங். நாமெ வாயையும் சூத்தையும்ங் பொத்திக்கிட்டுக் கீளெ கெடக்கணுமா? வேண்டான்டா சாமி இந்த வூடு. நாளைக்கே வீடு வேண்டான்னு எழுதிக் குடுத்துர்றேன்ங்” (ப.10).
நாவலில் இரண்டு காதல் இணைகள் இடம் பெறுகிறார்கள். ஒரு வகையில் வாழ்வின் எதிரும் புதிருமான அனுபவங்களின் சாயலை இவர்களில் காணலாம். குளோரியா, மைக்கேல் மில் காலனியில் வசிப்பவர்கள். குளோரியா வீரார்ந்த நேர்மைமிகு பாத்திரவார்ப்பு. மைக்கேல் இளமை வாழ்வில் சிக்கலுக்குள்ளாகி குடி, போதை, அடி, தடி, திருட்டு என இருக்கிறான். குளோரியா அவனை விரும்பி ஏற்கிறாள். ஒரே மதம் என்றாலும் வேறு வேறு சாதிகள். பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெறுகிறார்கள். மைக்கேல் மாறவில்லை. குளோரியா உறுதியுடன் காதலைக் காப்பாற்றுகிறாள். எதிர்பாராத விதமாக இந்தி எதிர்ப்புப் போராட்டக் கலவரத்தில் மைக்கேலும், குழந்தையும் பலியாகிறார்கள்.
“இவுக என்னையா நம்மளெத் தள்ளி வைக்கிறது? எந்திரிய்யா. நாம இவுகளெத் தள்ளி வப்பங். இனி இவங்க சங்காத்தமே நமக்கு வேணாங். எந்திரிச்சு வாய்யா. ஊத்துக் கெணத்துத் தெருல வீடு பாப்பங். இவங்க கண்ணு முன்னாடியே நல்லா வாள்ந்து காட்டுவங். வாய்யா எந்திருச்சி நாங் இருக்கேய்யா ஒனக்கு வாய்யா.” (ப.188) என உறுதியுடன் வாழ்வைத் தொடங்கினாலும் மைக்கேலுக்கு குடிக்கு, பீடிக்கு, கஞ்சாவுக்கு பணம் கொடுத்தும் சித்ரவதைப்படுகிறாள். என்றாலும் அவள் கொண்ட அன்பு மாறவில்லை. உழைப்பும் உறுதியும் அவளை மேலும் அவனோடு நெருக்கப்படுத்துகின்றன.
“நீ ஏய்யா வேலைக்கிப் போனுங்? நீ என் ராசா… நீ வூட்லெ சும்மா இரு நான்ங் போறேங். எப்பாடு பட்டாலுங் ஒன்னெய ராசா மாதிரி வச்சுக் காப்பாத்துவேங்” (ப.256) என நெகிழ்த்துகிறாள்.
அடுத்து உதய சூரியன் – உமா இணை. ‘சூரி’ என அறியப்படும் உதய சூரியன் உள்ளூர் தாதா. குடி, போதை, அடி, தடி எனக் காலம் தள்ளுகிறான். உமா அய்யரின் மகள். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார் அவர். உமாவின் தாய் நோயாளி. வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள் உமா. சூரி சந்திக்கிறான். ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் உமாவின் நிலை தெரிகிறது. தீராக்காதல் கொள்கிறான் உமா அவனுக்காகவே தன்னை ஒப்புவிக்கிறாள். அவன் காவியத் தன்மையுடன் அவளைக் காக்கிறான். ஊரே ‘அலர்’ ஆகிறது.
உமாவின் தாயாருக்கு அறுவைச்சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. அத்தருணத்தில் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சங்கத் தலைவர் முனியாண்டியின் பகையை முடிக்கத் திட்டமிடுகிறது. கூலிக் கொலை நடந்துவிடுகிறது. உமா – சூரி சந்திக்கிறார்கள். உமா பதற்றமடைகிறாள். ‘பாவப் பணம்’ என வாங்க மறுக்கிறாள். பேரன்புக் காதலை இருவருமே உணர்கிறார்கள். மனச்சான்றின்படி ஒன்றி இரயிலில் பாய்ந்து இருவரும் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். சூழலும், வாய்ப்பும், தேவைகளுமே மனிதர்களின் செயல்களைத் தீர்மானிக்கின்றன. கல்லுக்குள்ளும் ஈரம் கசியும் என்பது இவர்களின் செய்தியாகிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி எழுத்தாளர் ப.க. பொன்னுசாமி, தன் ‘நெடுஞ்சாலை விளக்குகள்’ நாவலில் பதிவு செய்துள்ளார். மற்றபடி இலக்கியப் பதிவுகள் குறைவு. இந்நாவலின் ஒருபகுதி மதுரைப் போராட்டத்தின் களப் பதிவாக அமைகிறது. இன்னமும் விரிவாக, நுட்பமாக, கலைத்துவமாக மொழிப்போர்க்களம் பதிவாக வேண்டிய தேவையை இந்நாவல் சுட்டிக் காட்டுகிறது.
பாட்டாளி யதார்த்தவாதச் செல்நெறியை தன் படைப்புகளில் கைக்கொள்பவர். அரசியலும் அழகியலும் கலந்து படைப்பியலைக் கருத்தியல் செறிவோடு முன் வைப்பவர். நிலம், சாதி, வர்க்கம், மொழி, பால் சார்ந்த விழுமியக் கண்ணோட்டத்தை ‘தீராக்களமாக்கி’ உள்ளார். விவாதங்களை உள்ளடக்கியப் படைப்பு வாசிப்போம், விவாதிப்போம்.
- பேராசிரியர் இரா.காமராசு, தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.