தேயிலைத் தோட்டங்களில் வாழும் மக்களின் பேச்சுவழக்கு, தொழில்சார் கலைச் சொற்கள் பற்றிய ஆய்வு கவனம் பெறத்தக்கது. தேயிலைத் தோட்டக் கூலிகளாக இடுக்கி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று, இன்றும் தலைமுறைகள் தாண்டி தேயிலைத் தோட்டத்தில் தமிழர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பணிபுரிபவர்களின் முன்னோர், ஆங்கிலேயர் காலத்தில் கூலி அடிமைகளாக வந்தவர்கள். காலனியக் காலத்தில் இடுக்கி மாவட்டத்தில், தேயிலைத்தோட்டம் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் மேலதிகாரிகளும், பின்லே முயர் என்ற இலங்கை நில உரிமையாளரும் இடுக்கி தேயிலைத் தோட்டத்தை மேற்பார்வை செய்தனர். சிங்களக் கலப்புச் சொற்கள் தேயிலைத் தோட்டங்களில் பயன்பட்டது. ஆங்கிலேயர்கள் கூலிகளிடம் சம்பாஷணை மூலம் வேலை வாங்கினர். கேரளாவில் இருப்பதால் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டவர்களும் கூலிகளாகப் பணியாற்றி வந்தனர். இதனால் தற்காலத்தில் மலையாளம் கலந்த ஒருசில கலைச்சொற்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இடுக்கி மாவட்டம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் களஆய்வு மூலம் சேகரித்த கலைச் சொற்களை ஆவணப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
இடுக்கி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டம்
சங்க இலக்கியங்கள் காட்டும் சேர நாடு இன்றைய கேரளம் ஆகும். கேரளாவில் காணப்படும் பதினான்கு மாவட்டங்களுள் இடுக்கி மாவட்டமும் ஒன்றாகும். பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். தொடக்க காலகட்டங்களில் பூர்வகுடிகளான பழங்குடி மக்களே வாழ்ந்துவந்தனர். பொ.ஆ. ஆயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டில் பூஞ்சார் பாண்டியர்களின் வசம் வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான பிரிட்டிஷ் ரெஸிடன்சியாக இருந்த ஜான் டேனியல் மன்றோ மூணாறுக்கு வந்தார். தேயிலை வேளாண்மைக்கு ஏற்ற பகுதியாக இடுக்கி மாவட்டத்தின் கண்ணன் தேவன் மலைப் பகுதி டேனியலை மிகவும் ஈர்த்தது. ரோகிணி திருநாள் கேரளவர்மா வலிய ராஜாவிடம் மன்றோ பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி பெற்று கண்ணன் தேவன்மலைப் பகுதியில் 1,36,600 ஏக்கர் பரப்பை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். வைப்புத் தொகை ரூ.5000 ஆண்டொன்றுக்கு குத்தகைப் பணம் ரூ.3000 என்று ஒப்பந்தமிட்டுத் தேயிலைத் தோட்ட விவசாயத்தைத் தொடங்கினர்.எனவே தான் ஜான் டேனியல் மன்றோவை மூணார் சிற்பி என அழைக்கப்படுகின்றனர். பொ.ஆ.1880 ல் எ.ஹெச்.சார்ப் என்பவர் தேயிலைச் செடிகளை பார்வதி எஸ்டேட்டில் நட்டார்.
தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய மக்கள் தமிழகத்திலிருந்து கங்காணிகள் மூலம் அடிமைகளாக அழைத்துவரப்பட்டனர். ஆரம்ப காலங்களில் ’கூலி’ எனும் சொல் தேயிலைத் தோட்ட அடிமைகளை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. மூணாறைச் சுற்றி 16 தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். 1902 ஆம் ஆண்டு மாட்டுப்பட்டி, குண்டளை வழியாக டாப் ஸ்டேஷனுக்கு இரயில்கள் ஓடத் தொடங்கின. பொ.ஆ.1924 ஜூலை மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட மழையில் இரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த ஆண்டுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்ப காலக்கட்டத்தில் தமிழர்கள் மட்டுமே தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தனர். பொ.ஆ 1964 இலங்கையில் நடைபெற்ற சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் வெளியேற்றப்பட்ட தமிழர்களும் இடுக்கி மாவட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக பணியில் குடியமர்த்தப்பட்டனர். பின்னர் கேரளாவைச் சார்ந்தவர்களும் பணிபுரிய வந்தனர். தேயிலைத் தோட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் தலைமுறைகள் தாண்டியும் கேரளாவிலேயே தங்கிவிட்டனர்.
இந்த வரலாற்று பின்புலத்தில் ஆங்கிலேயர்கள் கூலிகளிடம் பயன்படுத்திய சொற்கள், பணிபுரியும் பணியாட்கள் உள்வாங்கிய சொற்கள், சிங்கள மொழியை பின்புலமாகக் கொண்டு இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்கள்., மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட கேரளாவை சார்ந்தவர்கள். மேலும் இடுக்கி மாவட்டம் கேரளாவில் இருப்பதால் மலையாளம் கலந்த சொற்கள் ஆகியவற்றை தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்துகின்றனர்.
தொழில்சார் கலைச் சொற்கள்
தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தும் சொற்களை கூறலாம். இந்த கலைச் சொற்கள் வேறு துறைகளில் காண இயலாது. சான்றாக மட்டக்காடு, நிரப்பு ஒடித்தல், மட்டக்கத்தி போன்றவை இங்கு மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.
தொழில்சார் கலைச்சொற்கள் ஒவ்வொரு தொழிலிலும் பயன்படுத்துகின்ற சிறப்புச் சொல். தச்சுத்தொழில், மண்பானைத் தொழில், விவசாயம், பொற்கொல்லர்கள், மருத்துவம், கணிப்பொறி, போன்ற ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான கலைச் சொற்களை பயன்படுத்துகின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கென தனி கலைச் சொற்கள் உள்ளன. அவற்றை தேயிலைத் தோட்ட வேளாண் கலைச் சொற்கள், பணியாளர்கள் தொடர்பான கலைச் சொற்கள், பயன்படுத்தப்படும் புழங்கு பொருட்கள் இதர கலைச் சொற்கள் ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தலாம்.
தேயிலைத் தோட்ட வேளாண் கலைச் சொற்கள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டம் உருவாக்கப் பெற்ற நாள் முதல் இன்று வரை மரபார்ந்த சொற்களை பயன்படுத்தி வருகின்றனர். காடுகளை அழித்து தேயிலை எஸ்டேட் உருவாக்கினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இன்று வரை தேயிலை காடு, மட்டக் காடு பச்சக் காடு என்ற சொல்லையே பயன்படுத்திவருகின்றனர். காடு என்ற மரபார்ந்த சொல்லையே இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் தேயிலைத் தோட்ட வேளாண்மையிலும் மரபார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
காடு – தேயிலைத் தோட்டம்
கையெடுப்பு – கைகளால் தேயிலைக் கொழுந்தினை எடுப்பது.
ஆரம்ப காலங்களில் இந்த முறையிலேயே கொழுந்தெடுத்தனர்.
மட்டம் ஒடிக்கும் காடு – கவாத்து வெட்டி முதன்முதலில் கொழுந்து எடுக்கும் போது தேயிலைக் கொழுந்து சரிவர மட்டமாக இருக்காது. அந்த தேயிலைத் தோட்டத்தினைக் குறிக்க பயன்படுத்தும் சொல்.
கன்னி இலை – முதலில் வெளிவரும் கொழுந்து
ஒரிலைத்திரி – ஒரு இலையும் அதோடு சேர்ந்து நிற்கும் இளம்திரியும்
இரண்டிலைத்திரி – இரண்டு இலையும் அதன் நடுவில் நிற்கும் இளம் திரியும்
மூன்றிலைத்திரி – மூன்று பெரிய இலைகளும் ஒரு இளம் திரியும்
காப்பு வரக் கூடாது – முற்றிய இலைகளோடு தளிர் வருதல்
பக்கம் தாளக்கூடாது – தாள என்பது மலையாளத்தில் கீழே என்று பொருள்
தேயிலைச் செடியின் மேல் ஒரே நிரப்பாக இருக்க, வேண்டும். மட்ட குச்சியில் கீழே போகக் கூடாது
முரட்டு இலை – முற்றிய இலை
காம்பு வரக்கூடாது – முற்றிய இலைகளுடன் தளிர் வருதல்
கவ்வாத்து – (Prunning) இடுக்கியில் வாழும் மக்கள் கவ்வாத்து என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். சிங்களர்கள் கப்பாத்து என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அங்கிருந்து கவ்வாத்து என திரிபு பெற்று வந்திருக்கலாம். நடப்பட்டத் தேயிலைக் கன்றுகள் அதிகப்படியான உயரத்தில் வளராமல் இருப்பதற்கும் அதிகப்படியான கொழுந்துகள் எடுப்பதற்கும் நடுத்தண்டு பகுதிகளை சிதறாமல் வெடிக்காமல் வெட்டுதல்
அடிவெட்டுக் காடு – கவ்வாத்து வெட்டும் காடு
அடிக் கவ்வாத்து – மண்ணிலிருந்து 18 இஞ்சு உயரத்தில் வெட்டுதல்
மேசைக் கவ்வாத்து – 24 அல்லது 26, 28இஞ்சு அடி உயரத்தில் வெட்டி மாற்றுதல்
பாசி எடுத்தல் – தேயிலைச் செடியை சுற்றிலும் சுத்தம் செய்யும் பணி
நிரப்பு ஒடித்தல் – மட்டம் ஒடித்தல் முடிந்த பிறகுள்ள காட்டில் கொழுந்தெடுப்பதை நிரப்பு ஒடித்தல் என்று கூறுவர்.
பேர் போடுதல் – கொழுந்து அளவினை வைத்து ஊதியத்தினை உறுதி செய்தல், அளவு குறைவாக இருப்பின் முழு ஊதியம் கிடைக்காது.
கள்ளப் பேர் போடுதல் – எடை குறைவாக இருக்கும் நிலையில் அதிகம் இருப்பதாக பொய்க் கணக்கு எழுதுவதைக் கூறுவது.
செக்ரோல் (Check roll) – தொழிலாளிகளுக்குக் கொடுக்கப்படும் நிரந்தரப் பதிவு எண் கொழுந்தெடுக்கும் தொழிலாளி இந்த எண் அடிப்படையிலேயே கொழுந்துகள் எடை போடப்படும். ஊதியம் வழங்கப்படும்.இலங்கையிலும் இவ்வாறே கூறுகின்றனர்.
பிரதி - Salary slip சம்பள விவரம்
தொழில்சார் புழங்கு பொருட்கள் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளிகள் கொழுந்தெடுக்கவும் தோட்டங்களில் பணி செய்யும் பணிகளுக்கும் ஏற்ப கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் பயன்படுத்திய கருவிகளை இப்போது பயன்படுத்துவதில்லை. சில பணிகளுக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் முந்தைய காலங்களில் பயன்படுத்திய கருவிகளின் விவரங்களை களஆய்வின் போது கூறுகின்றனர்
மட்டக் கம்பு (ஈத்தல்) – கொழுந்தினை ஒரே சமமாக எடுக்க தேயிலைச் செடியின் மேல் இரண்டு செடிகளுக்கு நடுவில் குச்சியை மட்டமாகப் போட்டு கொழுந்தெடுக்க பயன்படுத்துவது
மட்டக் கத்தி – கொழுந்தெடுக்க பயன்படுத்தும் கத்தி கையடக்கமாக சிறிய அரிவாள் போன்றத் தோற்றத்துடன் இருக்கும்.
பட்டம் – தேயிலைத் தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் காட்டில், அடுத்த நாள் கொழுந்தெடுக்க ஏற்ற வகையில் தேயிலைத் தோட்ட சால்களுக்கு இடையில் மாறுகளை வெட்டி மாற்றும் கத்தி. பட்டம் போன்று மெல்லிய வளையும் தன்மை கொண்டது. அதனால் பட்டம் என அழைத்து வருகின்றனர். இதில் இரு வகைகள் உள்ளது.
கவாத்துக் கத்தி – தேயிலைச் செடியினை வெட்டும் கத்தி, தற்போது Pruning machine எனும் இயந்திரத்தினைக் கொண்டு வெட்டுகின்றனர்.
தாட்டு மறைப்பு – தேயிலை எடுக்கும் பெண்கள் பக்கவாட்டில் வளர்ந்து வரும் குச்சிகள் கிழிக்காமல் பாதுகாப்பிற்காக இடுவது
முக்காலி – எடை போடும் கருவியை சுமக்கும் கம்பு.
நிறை – எடை
ரோதை – ரோதை என்பதற்கு சக்கரம் எனப் பொருள்.
வாகனங்கள் அதிகம் இல்லாத காலங்களில் தேயிலைக் கொழுந்துகளைக் கம்பெனிக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டவை.
முள்ளுக் குத்தி – தேயிலைச் செடிகளுக்கு உரம் வைக்க, தோண்டப் பயன்படுத்தும் கருவி ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்டது.
அலுவலகம் சார்ந்த கலைச் சொற்கள்
ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களாக இருக்கும் காலங்களில் தொழிலாளர்களிடமும், அலுவலக ஊழியர்களிடமும் பயன்படுத்திய சொற்கள் இன்று வரை பயன்பாட்டில் உள்ளன. பொருள் மாறுபடாமல் ஆங்கிலமும், தமிழும் கலந்த சொற்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
டீ ஆபிசு – Tea Factory தேயிலைத் தொழிற்சாலை
ஆயுதப்புரை – கிடங்கு, வேலைக்குத் தேவையான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம்
பிரட்டுக் களம் – ஆங்கிலேயர் காலத்தில் காலை சங்கு ஊதியதும் அனைவரும் பிரட்டுக்களத்தில் (Parade Ground) ஒன்றுகூட வேண்டும், ஆங்கிலேயர் பயன்படுத்திய சொல் மருவி இன்று வரை பிரட்டுக் களம் என்று அழைக்கின்றனர்.
மஸ்டர் – அலுவலகம்
குசுனி – சமையலறை குசினா (Cozinha) என்ற போர்த்துக்கீசிய சொல்லிலிருந்து இலங்கை சிங்கள மொழிக்கு வந்தது. இலங்கையிலிருந்து இடுக்கி தேயிலைத் தோட்டத்திற்கு பணிபுரிய வந்த ஆங்கிலேயர் பங்களாவில் உள்ள சமையலறையையும் அழைக்க பயன்படுத்தினர். தோட்டத் தொழிலாளிகள் தனது வீட்டு சமையலறையும் குசுனி என்றே இன்று வரை அழைத்துவருகின்றனர்.
நிலுவைக் களம் – கொழுந்துகளை எடைப் பார்க்கும் இடம்..
இறாத்தல் – (Mass) ஆங்கிலேயர் காலத்தில் எடை அளவினை குறிக்கும் பிரிட்டிஷ் சொல் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
தேயிலைப் புரை – தேயிலைத் தொழிற்சாலை
(Tea Factory)
தவறணை – எஸ்டேட்டுக்கு தேவையான தேயிலைச் செடிகளை முளைக்க வைக்கும் இடம். இலங்கையில் ரவுண்டு என அழைப்பர்
புள்ளப்புரை – தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் குழந்தைகளை பாதுகாப்பிற்காக விட்டுச் செல்லும் இடம்
உடம்படி – ஒப்பந்தம்
பிராமிசேரி நோட் – தொழிலாளிகளின் எடை கணக்குகளை எழுதும் புத்தகம்.
தொழிலாளர் சார்ந்த கலைச் சொற்கள்
கங்காணி – supervisors கண்காணி என்ற சொல்லே பேச்சு வழக்கில் கங்காணி என மாற்றம் பெற்றது. தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் கூலிகளைக் கண்காணிப்பவர்
சப்பை கங்காணி – Asst. supervisors கங்காணியின் உதவியாள்
குசுனிக்காரர் – குசினா (Cozinha) என்ற போர்த்துக்கீசிய சொல்லிலிருந்து இலங்கைக்கு வந்தது. இலங்கையிலிருந்து இடுக்கி தேயிலைத் தோட்ட ஆங்கிலேய பங்களாவிற்கு பரவியது. குசினி எனும் சொல்லின் பொருள் சமையல். எனவே, குசுனி பணி குசுனிக்காரர் என்றானது சமையலர் என்று பொருள்.
பட்லர் (Butler) – ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.
பொட்லர் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். உணவு சமைக்கும் பணி செய்பவர் அல்லது உணவு சமைப்பவரை மேற்பார்வை செய்பவர். சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பவர். குசுனிக்காரருக்கு வேண்டியவற்றை செய்துகொடுக்கும் உதவியாள்.
சொக்ரா – (Chokra) உதவியாள் ஆங்கிலச் சொல்.ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.
கிச்சன் மெட் – பாத்திரங்களைக் கழுவுபவர்.
பொடியன் – காட்டில் வேலை செய்ய தெம்பில்லாதவர்களுக்கு கொடுக்கும் பணி
பெரட்டு பொடியன் – Helper தேயிலைக் கொழுந்தெடுக்கும் காட்டில் முதல் நாள் கொழுந்தெடுக்க ஏதுவாக சால் (தேயிலைகளுக்கு உண்டான இடைவெளி) பணியைச் செய்பவர். கொழுந்தாள் என்றும் அழைப்பர்.
தாட்டுப் பொடியன் – தேயிலை மூட்டைகளை சுமக்கும் பணி செய்பவர்.
மஸ்டர் பொடியன் – அலுவலகத்தில் உதவியாள் பணி செய்பவர்.
எடுப்புக் காரி – தேயிலைக் கொழுந்தெடுப்பதில் அதிக எடை எடுப்பவர்களைக் கூறுவது.
டீ மேக்கர் – தேயிலைத் தொழிற்சாலையில் முழு பொறுப்பு வகிப்பவர்.
லைட் ஒர்க் – மாடு மேய்த்தல் போன்ற பணியை செய்பவர் பீல்டு ஆபிசர் – சின்ன ஐயா, பெரிய ஐயா.
வீடு தொடர்பான கலைச்சொற்கள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் வெளியுலக தொடர்பில்லாமல் இருந்தனர். காலங்கள் மாறி சமவெளி மக்களுடன் தொடர்புகள் ஏற்பட்டன. இருப்பினும் அவர்கள் பயன்படுத்தும் பெரும்பான்மை சொற்கள் மாற்றம் பெறவில்லை. தோட்டங்கள் மட்டுமல்லாது வீட்டிலும் கூட ஒரு சில ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய சொற்கள் சிறு மாற்றத்துடன் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
லைன்ஸ் - குடியிருப்புப் பகுதி (வீடு) ஆங்கிலேயர் காலத்தில் குதிரை தொழுவம் போன்ற அமைப்புடைய கொட்டகையில் அடைத்து வைத்திருந்தனர். ஒரே அறையில் இரண்டிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்பட்டன. அதனை “லாயம்” என அழைத்தனர். காலரா மலேரியா போன்ற நோயினால் அதிகம் பேர் இறந்தனர். தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. அடுத்த புதிய தலைமுறை தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். லாயம் லயம் என மாற்றம் பெற்றது. மலையாளிகள் குடியேறியதும் லைன்ஸ் என அழைக்கத் தொடங்கினர்.
காமிரா – அறை
குசுனி – சமையலறை
போகணி – பாத்திரம்
லோட்டா – சிறு குவளை
கூதல் – குளிர்
கடிச்சாந்தண்ணி – தேயிலைத் தண்ணீர் ,தேயிலைத் தண்ணீருடன் கருப்பட்டியை தனியாகக் கடித்துத் தின்பது.
துணைநூற் பட்டியல்
- நீ.ராஜசேகரன் நாயர், ச.ராஜா, சா.சுந்தரபாலு –
- தமிழ் வேளாண் கலைச் சொற்களின் வட்டார - வேறுபாட்டு அகராதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
- சா.சுந்தரபாலு – தொழிற்கருவிகள் ஒரு மொழியியல் நோக்கு, சீதைப் பதிப்பகம், சென்னை-600005.
- சிவசுப்பிரமணியன்.ஆ – கூலித் தமிழ் காட்டும் சமுதாயம், என்.சி.பி.ஹெச், சென்னை 600098.
- சிவசுப்பிரமணியன்.ஆ – பஞ்சமனா பஞ்சயனா, பரிசல் பதிப்பகம், சென்னை-15.
- கோவிந்தராஜன்.ந – வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும், க்ரியா பதிப்பகம், சென்னை.
- ந.வடிவேலன், முனைவர்பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்