தமிழிலக்கியப் பரப்பில் பெண் படைப்பாளிகளின் எழுத்துகள் குறித்த சிரத்தையான தொகுப்பு நூல்களோ, திறனாய்வு நூல்களோ எழுதப்படுவது மிகவும் அரிதாகவே நடந்தேறுகிறது. பெண் படைப்புலகத்தினை வளப்படுத்தவும், சமகால சமூகத்தின் உண்மையான முகத்தினை அறிந்து கொள்ளவும் பெண்களின் மன உணர்வினை நுட்பமாக உணரவும் பெண் படைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

nooru pengal nooru sirukathaikalஅந்தவகையில் “நூறு பெண்கள்- நூறு சிறுகதைகள்” என்ற தலைப்பில் பெண் படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இந்நூலினை மிகக் கடினமான உழைப்பின் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளார் முனைவர் இரா. பிரேமா அவர்கள். இத்தொகுப்பாசிரியர் ஏற்கெனவே பெண்ணியக் கதைகள், பெண் மையக் கதைகள், உடைபடும் மௌனங்கள் என்று மூன்று சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளார். மேலும் “நூற்றாண்டு கண்ட பெண் இலக்கிய ஆளுமைகள்” என்று மூத்த பெண் படைப்பாளிகளின் படைப்புகளை அரிதின் முயன்று தொகுத்து வெளியிட்டுள்ளார். கல்விப்புலம் சார்ந்து பணியாற்றி மாணவிகளை உருவாக்கியதோடு பெண் படைப்புலகம் சார்ந்த இவரின் தொகுப்புப் பணிகள், பெண் படைப்புகள் மீது பெரும் வெளிச்சத்தினைப் பாய்ச்சியுள்ளது.இந்நூலினை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

சமூகத்தில் சரிபாதியாக விளங்கும் பெண் இனம் இரண்டாம் பாலினமாகவே பார்க்கப்படுகிறது. பெண்களின் அலைவுறல்களையும், வலிகளையும், மன நெருக்கடிகளையும் பெண் படைப்பாளிகள் துல்லியமாக தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். ஆண் படைப்பாளிகள் அறியாத மனவலிகளையும், அவர்கள் எழுத முன்வராத பெண் உலகின் பல மூடிய பக்கங்களையும் துணிச்சலாக இவர்கள் படைப்பாக்கியுள்ளனர்.

இப்படைப்புகள் குறித்து இலக்கியத் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களோ, செறிவான திறனாய்வுகளோ நடைபெறவில்லை என்பதை இங்குப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. தமிழிலக்கிய வரலாற்று நூல்களும் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த பதிவுகளை ஒன்றிரண்டினைச் சுட்டிக்காட்டிவிட்டு கடந்து செல்கின்றன.

ஆண்களின் படைப்புகளுக்கும், ஆண் படைப்பாளிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் பெண் படைப்பாளிகள் ஓரிருவருக்குக் கிடைப்பதும் அரிதாகவே உள்ளது. தமிழில் 200க்கும் மேற்பட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருப்பினும் பெண் படைப்புகள் குறித்த பாராமுகத்தினையே இவற்றினுள் காணமுடிகிறது.

அங்கீகாரம் மறுக்கப்படும் எழுத்துகளாகவே பெண்களின் எழுத்தினை இன்றும் கடந்து போவது சமூக முன்னெடுப்பிற்கு எந்த வகையிலும் பயன்தராது என்பதை நினைவில் கொள்ள இப்படைப்புகள் சான்றாக உள்ளன.

நூற்றுபத்து பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர் சாவித்திரி அம்மாளின் ‘மறுமணம்’ என்ற சிறுகதையில் தொடங்கி எழுத்தாளர் சரசா சூரியின் ‘தேய்பிறை உறவுகள்’ என்ற சிறுகதையுடன் இத்தொகுப்பு நிறைவடைகிறது.

படைப்பாளிகளின் பெயர் மற்றும் அவர்கள் எழுதிய சிறுகதைகள் மட்டுமல்லாமல் அப்படைப்பாளிகளின் தன் விவரங்களும் இடம்பெற்றிருப்பது இப்படைப்பாளிகளின் ஆளுமையை புலப்படுத்துவதோடு இத்தொகுப்பாளரின் பேருழைப்பையும் பறைசாற்றுகிறது.

குடும்பம் சார்ந்த கண்ணீர் இழுப்புக் கதைகளையும், காதல் கதைகளையும் மட்டுமே பெண் எழுத்தாளர்கள் எழுதுவார்கள் என்ற பொதுப்புத்தியை உடைத்து நொறுக்கியுள்ளது இச்சிறுகதைத் தொகுப்பு.

தமிழ்ப் பெண் நவீன எழுத்திற்கு ஒரு நூற்றாண்டு கால வரலாறு உண்டு என்பதை இத்தொகுப்பு தெளிவாகப் புலப்படுத்துகிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் வை.மு.கோதைநாயகியின் ‘ஆயிரம் ரூபாயும், மூக்குக் கண்ணாடியும்’ சிறுகதை காலம் கடந்தும் பேசப்படக்கூடிய அரிதான கதை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் படைப்புலகம், இதழுலகம் என்று பல தளங்களில் முத்திரைப் பதித்தவர் இப்படைப்பாளி.

இவர் இச்சிறுகதையை இப்படித் தொடங்குகிறார், “என்ன மீனாக்ஷி? இந்த ஆபரணம் எப்போது பூட்டிக் கொண்டாய்? ஷோக்குக் கண்ணாடியா? சீக்குக் கண்ணாடியா? என்று காமு புன்னகையுடன் கேட்டாள்.” இரு பெண்களுக்கிடையிலான கிண்டலையும், கேலியையும் மையமிட்ட இவ்வுரையாடல் தமிழ்த் திரைப்படங்களின் அவல நிலை குறித்த அழுத்தமான உரையாடலை நோக்கி நகர்வதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இப்படைப்பாளி. சிரத்தையான உரையாடல்களை பெண்கள் மேற்கொள்வார்கள் என்பதை அடுத்தடுத்த உரையாடல்களில் நேர்த்தியாகப் படைத்துள்ளார். இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பான இவ்வுரையாடலை எளிதில் கடந்து விட முடியாது.

இங்கிலீஷ் படங்களும் சில ஹிந்திப் படங்களும் பார்க்கும் போது ஐயோ? இந்த மாதிரி எல்லா விதத்திலும் முதல்தரமாய் நம்படங்கள் என்று வெளிவரும்? தமிழ்ப்படம் விமோசனம் அடையும் காலமே வரவில்லையே? நாளுக்கு நாள் ஈனதசையை அல்லவா காட்டுகிறது, என்ற வருத்தம் உண்டாகிறது. சில பட முதலாளிகள் ஒரு படத்தைப் பற்றி வருடக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யும் பகட்டைப் பார்த்து இப்படமாவது நன்றாயிருக்குமா பார்க்கலாம் என்று ஆவலுடன் போனால் மனம் வெறுத்துத்தான் திரும்ப நேரிடுகிறது.’ என்று உள்ளீடற்ற தமிழ்த்திரைப் படங்களின் நிலையையும் விரிவாக உரையாடலிற்கு உட்படுத்தியுள்ளனர். இத்தகைய படங்களைப் பார்க்க வேண்டிய தங்களின் அவல நிலையைக் கூறுவதோடு, பிற மொழித் திரைப்படங்களோடு ஒப்பிட்டு பேசக்கூடிய அவர்களின் முதிர்ச்சியான உரையாடலும் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளதை மறுக்க முடியாது.

பொதுவாக பெண் எழுத்துகள் அழுகையை மையமாகக் கொண்டியங்கும் என்பதைக் கடந்த பெண், ஆண் என்று இருபாலினரின் உளவியல் சிக்கல்களை போகிற போக்கில் இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கினை இச்சிறுகதைத் தொகுப்பெங்கும் காண முடிகிறது.

1930களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர் கமலா பத்மநாபனின் ‘சியாமளா’ என்ற சிறுகதை முற்போக்குச் சிந்தனை கொண்ட படைப்பு.

பனிரெண்டு வயதில் பால்ய திருமணம் செய்யப்பட்ட சிறும் சியாமளா, அவளின் கணவன் விபத்தில் மரணமடைய அதற்குப் பின் அவள் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை நேர்த்தியாகத் தீட்டிச் சென்றுள்ளார் இவ்வெழுத்தாளர். இந்தச் சிந்தனை என்பது அன்றைய காலச் சூழலோடு ஒப்பிடுகையில் மிகப்பெரிய புரட்சிச் சிந்தனையாக பார்க்க வேண்டியுள்ளது.

கணவன் இறந்துவிட்டான் என்பதை புரிந்துகொண்ட அச்சிறுமி தன் பெரியப்பாவிடம் நான் விடோவாப்பா? இனி நான் பொட்டிட்டுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்பது அன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை எவ்வளவு வலியுடன் இப்பெண்கள் கடந்தார்கள் என்பதை செறிவாக வாசகர்களுக்குக் கடத்துகிறது.

பெண் குறித்த சமூகப் பார்வையினை காலந்தோறும் இக்கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. அதே நேரத்தில் இக்கதைகளில் காணும் பெண்கள் வெவ்வேறு சூழல்களில் தங்களின் தனித்தன்மைகளைப் புலப்படுத்தப் போராடும் வாழ்வியலைக் கொண்டிருந்தனர் என்பதை உணர்வுப் பூர்வமாக இக்கதைகள் புலப்படுத்துகின்றன.

மேலும், பெண்களின் உணர்வினை மதிக்கும் ஆண்களையும் இவ்வெழுத்தாளர்கள் படைப்பாக்கத் தவறவில்லை. கணவனை இழந்த மகளுக்குப் பிற்போக்குத்தனமான சடங்குகள் கூடாது என்று மறுத்து தொடர்ந்து அப்பெண்ணைக் கற்க அனுமதிக்கும் பெரியப்பாவை இக்கதைகளில் காணமுடிகிறது. தான் துன்பப்பட்டாலும் தன் வறுமையை மீறி தன் மகளை ஆசிரியராக ஆக்கவேண்டும் என்று துடிக்கும் தந்தைகளும் இந்தக் கதைகளில் உலவுகின்றனர். இருப்பினும் இந்த ஆண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதையும் இப்படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தியா முழுமையும் இருந்து தமிழில் எழுதும் பெண் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் வாழும் தமிழ்ப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பது இந்நூலின் ஆகச் சிறந்த தனித்தன்மை.

உலகம் எங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை, நடைமுறை முரண்களை, விதம்விதமான கண்ணோட்டத்தில் இப்படைப்பாளிகள் எழுதிச் சென்றுள்ளனர்.

ஆரம்பகால பெண் படைப்பாளிகள் குடும்பம் சார்ந்த கதைகளோடு, பெண்களுக்கிடையிலான நுண் அரசியலையும், ஆணாதிக்கச் சமூக அடக்கு முறைகளின் அளவுகோல்களையும் சமூகக் கருத்தாக்கங்களின் மீதான தங்களின் உரையாடலையும், மேலோங்கிய தங்கள் அறிவுத் தளத்தினையும் அதன்வழி சமூக அவலங்களையும் படைப்பாக்கியுள்ளனர்.

1970-80களில் வாசகர்களிடம் பெருமளவு சென்று சேர்ந்த பெண் படைப்பாளர்களின் சிறுகதைகளின் கதைக்கரு குடும்ப அமைப்பின் இறுக்கத்தினையும், அடையாளமற்ற பெண்ணின் வாழ்வியலையும், பாசாங்கு மிகுந்த உறவுகளின் உண்மை முகங்களையும், அலுவலகம், குடும்பம் இரண்டிற்குள்ளும் பெண்படும் பாடுகளையும், பணித்தளத்தில் நேரும் பாலியல் சீண்டல்களையும் தம் படைப்பாக்கியுள்ளனர்.

நவீன படைப்புகள் சமனற்ற சமூக அவலங்களையும், தனித்து வாழும் பெண்ணின் சவாலான வாழ்வியலையும், உறவுகளுக்கிடையிலான மன விகாரங்களையும், பெண், ஆண் நட்பினையும், வயது வேறுபாடின்றி பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளையும் அழுத்தமாக மட்டுமன்றி மிக வெளிப்படையாக பொட்டில் அறைந்தாற்போல் பேசுகின்றன.

உலகம் முழுவதிலும் இருந்து எழுதும் பெண்கள் போர் பற்றியும், போரின் மூலம் ஏற்பட்ட இழப்புகள் பற்றியும் பிழைப்பிற்காகவும், அன்பிற்காகவும் அலைந்து திரியும் ஆணின் வலி பற்றியும், புரிதலோடு கூடிய குடும்ப உறவுகள் பற்றியும் பேசும் அதேநேரத்தில் உலகெங்கிலும் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளையும் இக்கதைகள் பதிவு செய்துள்ளன.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானதாக அமைந்துள்ளது. பெண்களின் உலகை மட்டுமல்ல, இச்சமூகத்தின் – இவ்வுலகின் உண்மை முகத்தினை எவ்வித பாசாங்குமின்றி ரத்தமும் சதையுமாக அறிந்து கொள்ள “நூறு பெண்கள் – நூறு சிறுகதைகள்” என்ற இப்பெருந்தொகுப்பு பேருதவி புரிகிறது என்றால் அது மிகையில்லை.

- முனைவர் ஏ. இராஜலட்சுமி, உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.