தமிழ் இலக்கிய வெளியில், பெண்ணியம் சார்ந்த நிகழ்வு, உரை, எழுத்து, கவிதை எனத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் முனைவர் அரங்க மல்லிகா.
சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை சோர்வில்லா வாசிப்பும், இலக்கிய சமுத்திரத்துள் மூழ்கி முத்தெடுக்கும் முயற்சியும் தமிழுக்கு மிகச் சிறப்பாக ஆய்வுக் கட்டுரை நூலை அரங்க மல்லிகா வழியாக வழங்கியிருக்கிறது.
‘பெண்மைய வாசிப்பும் அரசியலும்’- என்கிற கட்டுரை நூலில் 18 காத்திரமானக் கட்டுரைகள், அத்துணையும் வீரியமான விவாதத்தைக் கோருபவை.
வெறுமனே வாசித்து விட்டு, நூல் மூடி, நகர்ந்து விட இயலாத விமர்சனங்கள் என்பது மிகையில்லாதது.
இதுகாறும் பெண்ணின் வலி நிறைந்த வாழ்வியல் பெரும்பாலும் ஆண்களாலேயே எழுதப்பட்டன. பெண்ணியம் எனும் பெருவெடிப்பு சிதை உடைத்தது; பல புதிய அனுபவங்கள் இலக்கியங்களாய் வெளி வந்தன.
“பெண்கள் தங்கள் சுய அனுபவங்களை எழுதும்போது காதல், காமம், இயல்பாக வெளிப்படுகின்றது. எனினும் பெண்ணிய உளவியலோடு அவை வெளிப்படவில்லை” - எனக் குறிப்பிடும் முனைவர் அரங்க மல்லிகா,
‘பெண் கவிஞர்களின் கவிதையில் தன் அனுபவம்’ என்கிற கட்டுரையில் மூன்று கேள்விகளை ஆய்வுக்காக வாசக, விமர்சக சமூகம் முன் வைக்கிறார்.
1. பெண்களின் பாலியல் அடையாளத்தை எவ்வாறு கவிதைகளாகப் பதிவு செய்கின்றனர்.
2. பெண் கவிஞர்கள் (மரபுகளோடு வாழ்ந்து கொண்டே) மரபுகளைப் புதுப்பிக்கிறார்கள்.
3. அவர்கள் மரபுகளை மாற்றியுள்ளனரா? அல்லது மரபுகள் அப்படியே தொடர்கின்றனவா...?
இந்த வினாக்களின் நதிமூலத்தைத் தேடிச் செல்கையில் புதிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
“சங்க இலக்கியம் திணை சார்ந்த பதிவைத் தருகிறது. அதில் ஐவகை ஒழுக்கங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஆண் தனது காதலை இயல்பாக வெளிப்படுத்துவது பெரும்பாலான பாடல்கள் வழிப் புலப்படுகிறது. பெண் அவ்வாறு வெளிப்படுத்துவதை அனுமதிக்காத ஆண்வழிச் சமூகக் கட்டுப்பாடுகள் சங்க இலக்கியக் கோட்பாடாக உணரமுடிகின்றது. பெண் மீதான சமூகக் கட்டுப்பாடுகள் சங்க இலக்கியத்தில் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற் கவிஞர்களின் கவிதைகளில் கட்டவிழ்க்கப்பட்டு உள்ளன என்றாலும் கூட, சங்க இலக்கியம் ஆண்களின் மனம், சமூகப் பின்னணி ஆகியவற்றோடு தொடர்புடையதாகவும், பெண்ணின் மனம் தனிமைப்பட்டதாகவும் இருப்பதை அறியமுடிகின்றது. மேலும் அவர்கள் ஆண்களின் பரத்தையர் ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருப்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. (ப.38)
என ‘சங்க இலக்கியத்தில் பெண் கட்டமைப்பு’ என்கிற கட்டுரையில் பதிவு செய்யும் அரங்க மல்லிகா “இலக்கியக் கொள்கைகள் யாவும் ஆண் பார்வையில் ஆண் அதிகார மையம் சார்ந்தவை என்பதைப் பின் நவீனத்துவம் உணர்த்துகிறது” என்கிற உண்மையையும் உரக்கச் சொல்கிறார்.
சங்காலப் பெண் கவிஞர்கள் அக்காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பதிவு செய்துள்ளதை உணரமுடிகின்றது. ஆனாலும் பெண்கள் படைப்புக்களத்தில் தங்களது இயங்குவெளியை விசாலப் படுத்தவில்லை. எனினும் இவர்களினுடைய படைப்புகளை மீளாய்வுக்கு உட்படுத்தும் போது நவீனத்துவப் பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் நீட்சியாகப் பெண்ணியம் புரிந்து கொள்ளப்படுகிறது. பெண்ணியத்திற்குள் ஒரு கூறான பெண்மொழி சமீபகால ஆய்வுக்களமாகி இருக்கிறது. இந்த அடிப்படையில் அணுகும்போது ஆண்வழிச் சமூகப் பண்பாடுகள், முறைமைகள், கருத்தாக்கங்கள், ஆண்களின் மனோநிலை சார்ந்த பொதுப்புத்தியில் இருந்து எழுதப்பட்டவை என உணர்ந்து கொள்ளலாம். சங்க இலக்கியப் பாடல்களின் கட்டமைப்பு ஆண் மொழிக் கட்டமைப்பு. எனவே, இந்தக் கட்டமைப்பு ஆணின் குரலையே பெண்ணின் குரலாக முன்னிலைப்படுத்துகின்றது. பெண் பதிவுகள் ஆணின் மனப் பதிவுகளாக ஒருபுறமும், பெண் நோக்கிலான மனப் பதிவுகள் மறுபுறமும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை சங்க இலக்கியம் நல்குகிறது. பெண்ணிய ஆய்வு ஆண்வழிச் சமூக அமைப்பை அரசியலாக்கக் கூடியது. பெண்மையை மையப்படுத்திய கவிதைகள் சங்க இலக்கியத்தின் மையச் சரடாகும். பெண் வெளியும் இயங்குதளமும் கொண்ட பாடல்கள் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற ஒரு சிலரின் பாடல்களில் மட்டுமே பதிவாகி உள்ளன. (ப.41)
பெண்ணிய ஆய்வுகளைப் பெண் எழுதினாலும் ஆண் எழுதினாலும் பெண் நிலை நோக்கோடு அணுகவேண்டும். அவ்வாறு அணுகினால் சங்க இலக்கியப் பாடல்களில் பெண்களின் உணர்வு மீதான கட்டமைப்பு மறுவாசிப்புக்கு உட்படும். (ப.43)
பெண் கவிதை அரசியல்
பெண் மொழியில் பெண்ணின் அனுபவங்கள் நேரிடையாக வெளிப்படுத்தப்படுகின்றன. பெண்ணின் உடல் அலாதியானது என உணர்ந்து எழுதுகின்றனர். பெண் உடலைப் பெண்ணிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சியை எதிர்த்துத் தன் உடலை மீட்பது பெண் மொழியில்தான் சாத்தியமாகிறது. குறிப்பாக ஆணாதிக்கத்தினை எதிர் அரசியலாக்கப் பெண்மொழி உதவுகிறது. (ப.45)
பொதுவாகப் பெண்ணின் எழுத்துக்களில் ஆண் கவர்ச்சிக்கு உரிய பெண் உறுப்புகள் அழகியல் சார்ந்ததாக, காமம் சார்ந்ததாகப் பார்க்க முடியவில்லை. அது அரசியலாகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலம் பெண்ணின் வயல் சார்ந்த உழைப்பு வெளியை அடைத்துவிட்டது. சிறப்புப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நிறுவனங்களில் பகல் x இரவு பணிகளில் பணி ஏற்கும் பெண்களை நுகர்வு கலாச்சாரத்திற்குப் பழக்கப்படுத்தி வருகிறது. பெண் உடல் பெண்ணின் கூடுதல் கவனத்தில் நுகர்வாவதைப் பெண் உணர்ந்து தனது வெளியைத் தானே தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பதிவு செய்யும் கவிதைகளைப் பெண்கள் படைத்து வருகின்றனர்.
காலங்காலமாக கட்டமைக்கப்பட்டிருந்த புனிதங்களைச் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்கள் தகர்ந்திருக்கின்றன. (ப.46)
ஆணின் பார்வையில் முலை, யோனி பற்றிய கருத்தியல் பெண் பார்வையில் பெண் அடையாளத்தை, அந்தரங்க அரசியலைப் பிரதானப்படுத்துகின்றது. போர்க்களங்களில் சிக்குண்டு நசுங்குதல், வீரர்களிடம் சிக்கிக்கொள்ளுதல், உறவுகளை இழத்தல், வீடற்றவர்களாக வாழ்தல் எல்லாம் இலங்கைப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில் வீரியம் பெறுகின்றன.
தொண்ணூறுகளில் குறிப்பாக அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு எழுந்த எழுச்சியில் தலித் படைப்புகள் இந்துத்துவத்தை வேர் அறுப்பனவாய் வெளிவந்தன. ஆனால் சிறுகதை, நாவல், கவிதை வரிசையில் தலித் ஆண் படைப்பாளர்கள் சமூக அவலத்தைப் பதிவு செய்திருப்பதைப் போலத் தலித் பெண் படைப்பாளர்கள் செய்யவில்லை. தலித் பெண் கவிஞர்களாக சிவகாமி, பாமா? (ப.47)
தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைக் கருவின் கனத்தைக் காட்டிலும் ஈழப் பெண் கவிதைகளில் இனப் பிரச்சனையும், ஆண் ஆதிக்கமும் குண்டுகளாய்ப் புறப்பட்டன. (ப.48)
பெண் மொழி, பெண்ணின் அந்தரங்கத்தை அரசியல் ஆக்குகிறது. பெண் தன் காம உணர்வை, பாலியல் வேட்கையைத் தானே வெளிப்படுத்தக்கூடாது என்ற ஆண் மைய மொழியை விவாதம் ஆக்குகின்றன. (ப.49)
கவிஞர்களின் பெண்-மைய-நவீன மொழி/ புதுமொழி/ பெண்ணிய அறிவார்ந்த / தத்துவார்த்த/ உணர்ச்சி சார்ந்த புரிதல்களின் அடிப்படை சார்ந்ததாகவும் இருக்கின்றன. இவை பெண்களிடையே ஒரு புதுமொழியை உருவாக்குகின்றன. ஒரு பெண்ணாக இருந்து பெண் கவிதையை உணரும்போது, அவர்களின் ஆளுமையை, பன்முகத் தன்மையை, சுயத் தணிக்கையற்ற தன்மையை மரபார்ந்த மதிப்பு அனுபவங்களை எண்ணிப்பார்க்க ஒரு புதுமொழியைப் பேசவேண்டி யிருக்கிறது. அது பெண்மொழி ஆண் சுயகற்றிய பெண் உணர்வுகளின் வெளிப்பாடு. ப.20
‘மொழியானது, ஓர் உற்பத்தி கருவி எனும் வகையில் அதிகாரப்பிரிவினர் பயன்படுத்துகின்றனர். மொழியின் அச் செயல்பாடுகளால் உடைமை வர்க்க மொழி/ உயர்சாதி மொழி/ ஆண் மொழி என்ற அடையாளச் சார்பை மொழி பெறுகின்றது. இது தன்னைப் புதுப்பித்துக் கொள்வது’ என மகராசன் கூறுகிறார். காலந்தோறும் வளர்ந்து வரும் சமூக மாற்றம் மொழியின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ப.22
தலித் பெண்ணியம் விவாதமா! கலக அரசியலா?
இதன் தத்துவார்த்த உளவியல்தான் ‘அந்தரங்கமே அரசியலாகும்’ இதன் பரிணாமத்தில் பல வேறுபாடுகள் தோன்றுகின்றன. அதாவது பொருளாதார, கலாச்சார, மொழி, அரசியல், இனம், நிறம் ரீதியாக இந்தியச் சமுதாயத்திற்குரிய குறிப்பிடத்தக்க சமூகச் சூழலின் நிதர்சனமான சாதியை உள்ளடக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்தப் பன்முகப் பார்வை குறைவாக இருக்கிறது. (ப.54)
எல்லாச் சமூகக் கட்டமைப்பாலும் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் சுமைதாங்கிகள், சாதி ஆதிக்கம் என்பது பெண் மூலமாகத்தான் பாதுகாக்கப்படுகிறது. அகமணம் / கட்டமைப்பு இதை உறுதி செய்யும் அதனால்தான் இந்தக் கட்டமைப்பு சமூகத்தை வளர்க்காது என உணர்ந்து, ஜோதிராவ்புலே, அம்பேத்கர், தமிழகத்தில் பெரியார், கேரளாவில் நாராயணகுரு, ஆந்திராவில் வீரேசலிங்க பந்துலு ஆகியோர் சாதியற்ற சமூகத்தை விரும்பினர். கலப்பு மணத்தை ஆதரித்தனர். (ப.55)
தலித் பெண்ணிப் பார்வை திசைமாறி தலித் இலக்கிய விமர்சனமாக குறுகுகிறது. இஃதொரு தோல்வியடைந்த (அ) இன்னமும் விசாரணைகளை, விளக்கல்களைக் கோருகிற கட்டுரை எனலாம். இப்போது... குதிரை.. தலித் பெண்ணியம்.
“தற்காலத் தமிழ் இலக்கியத் திறனாய்வும் பெண்ணியப் போக்கும்’ கட்டுரையில் “இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதி வரும் பெண் கவிஞர்கள் உடலரசியல், பெண்மொழி தாண்டி கவிஞர்களின் தடத்தைப் புதுத்திரைக்கு மாற்றவில்லை. பெண் உடலை எழுதுதல் என்ற அளவில் பெண் கவிதை அரசியல் சுருங்கி இருக்கின்றது. நவீனப் பெண்மொழிக் கவிதைகள் தமிழ்ச் சமூக மரபுக்கு எதிராகத் தாய்மைச் சமூக விழுமியர்களைப் பாலின மொழியாக உருமாற்றுகின்றன” (ப.79).
மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு ஆய்வாளர்களின் விரிவான விளக்கம், சமகாலத்துக்கு இன்றியமையாததாகிறது. மேலும் முனைவர் அரங்க மல்லிகாவே, தக்க படைப்பாதாரங்களுடன் சமகாலம் பெண்மொழி படைப்புடன் குறித்து விரிவாக எழுதலாம்.
தமிழின் நவீனக் கவிதைகள்- மொழியும் வாசிப்பும் :
நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மரபாக இருந்தவைகளை அடையாளப்படுத்தி அதிலிருந்து மாற்றுச் சிந்தனையை முன்மொழிவது. 99 இதன் அடிப்படையில் சமகால படைப்புகளான சுகிர்தராணி, முபீன் சாதிகா இருவரின் சில படைப்புகள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதே போன்ற ஆய்வுகள் சமகாலப் பெண் படைப்பாளிகளின் கவிதை, கதை, புதினம் போன்ற புனைவுகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இன்று இருப்பதை பிற ஆய்வாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
‘பெண்மையை வாசிப்பும் அரசியலும்’ - என்கிற இந்த ஆய்வு நூல், ஆய்வு மற்றும் விமர்சன தளத்தில், முக்கியமான ஒரு கல் எறிந்துள்ளதை மறுக்கவியலாது. பல நீரலவைகளை எழுப்பி இருக்கும் இந்நூலின் கட்டுரைகள், கருத்துக்கள், விமர்சனங்கள் யாவும் காத்திரமான விவாதத்துக்கான களமாடக் காத்திருக்கின்றன.
- அன்பாதவன்