கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாம் எல்லோருக்கும் பாம்பு என்றால் பயம்தான். பார்த்தால் அடித்துக் கொல்லாமல் விடமாட்டோம். ஆனால் பாம்பு மனிதனுக்கு எந்தத் தீங்கும் செய்வதில்லை. நன்மைதான் செய்கிறது. உணவுப்பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் எலிகளை தீர்த்துக் கட்டுகிறது. பொதுவாக பாம்பை கொல்லாமல் விடுவதுதான் இயற்கைக்கு செய்யும் நன்மை. பல்லுரியத்துக்கு பாதுகாப்பு.! இந்த ஆண்டு உலகப் பல்லுரிய ஆண்டு.
நல்ல பாம்பு வந்தால் என்ன செய்வது என்கிறீர்களா? கொல்லாமல் விட்டுவிடுங்கள். அவ்வளவுதான். நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே அல்லது நாம் மிதித்தால் தான் அது நம்மைக் கடிக்கும். நம்மைத் தேடி வந்து வீட்டுக்குள் வந்து கடிப்பது கிடையாது. நாம் அவைகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால்தான் அவை நம் இடத்திற்கு வருகின்றன. அவைகளின் இடத்தை நாம் பிடித்தால்/ஆக்கிரமிப்பு செய்தால், அவை எந்த கோர்ட்டில் போய் வழக்கு தொடுக்கும்?
நாம் கதைப்பது போல், எந்த கட்டுவிரியனும் கொம்பேறி மூக்கனும். மனிதன் செத்துவிட்டானா என்று இடுகாடு வரை போய் இருந்து மரத்தில் ஏறிப் பார்ப்பதில்லை. எல்லாம் நம் கட்டுக்கதைதான். அதுபோல எந்த பாம்பு நண்பா டபராவில் உள்ள பாலை உறிஞ்சி குடிக்கிறது.. சினிமாவில் தவிர.!. யாராவது அதை நேரில் பார்த்ததுண்டா? அப்புறம் ஏன் நம் மக்கள் பாம்புப் புற்றில் பால் ஊற்றுகிறார்கள்?.. உண்மையிலேயே அந்த புற்று பாம்பின் புற்று தானா, பாம்பு கட்டியதா என்று யாராவது இதுவரை வினா எழுப்பி இருக்கிறீர்களா? அது கரையான் புற்று தான், நண்பா!
பாம்பைப் பற்றி ஏராளமான சுவையான தகவல்கள் உண்டு.. ஒன்றை எடுத்து விடலாமா? நம்ம ஊரில் தண்ணீர் பாம்பு உண்டே அதே போல, ஐரோப்பாவில் உள்ள ஒரு பாம்பு ஐரோப்பிய புல்பாம்பு. இந்த பாம்பு விடத்தன்மை இல்லாதது. இது தண்ணீரில் அனாயசமாக நீந்தும். வருடத்தில் நிறைய நாட்கள், குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளுகிறது. அதாவது,, அசைவின்றி அப்படியே கிடக்கும், உணவு உண்ணாது, எதுவும் செய்யாது, மூச்சு விடுவதைத்தவிர..! ஆனால் எதிராளியிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல அற்புதமான நடவடிக்கைகளைக் கையாளுகிறது. சிந்தனைத் திறன் உள்ள மனிதன் போல, தேர்ந்த நடிகன் போல என்று கூட சொல்லலாம். நீண்ட நேரம் நீருக்குள்ளேயே இருந்து எதிரியிடமிருந்து தப்பிக்கப் பார்க்கும். சில சந்தர்ப்பங்களில், தன் உடலை முடிந்தவரை உப்பி, பயமுறுத்தப் பார்க்கும்; சிலசமயம் வேகமாய் சீறும். வேறு பல சமயங்களில், பூண்டு அல்லது பெருங்காய மணமுடைய மலத்தை வெளியேற்றி எதிராளியை விரட்ட முயற்சிக்கும். அதுவும் பலிக்கவில்லை என்றால், கடைசியாக ஒரு போர்க்கால தந்திரத்தை.. அஸ்திரத்தை எடுத்து வீசும்..!
என்ன என்று யூகித்து உண்மையாகவே பதில்/தகவல் சொல்லும் நண்பருக்கு நான் ஒரு பரிசு தருகிறேன்.. என்ன யுக்தியாக இருக்கும் சொல்லுங்களேன்..!
மூளையை கசக்கி யோசித்து விட்டீர்களா நண்பா? அந்த புல்வெளி பாம்பு செத்தது போல நடிக்குமாம்..! என்ன நம்புகிறீர்களா? உண்மைதாம்பா.. அப்படியே உடம்பைத் திருப்பி போட்டு, வாயைப் பிளந்து, நாக்கை வெளியில் நீட்டி, உண்மையாவே செத்துவிட்டது போல, நம்மையும் மிஞ்சி நடிக்கும் நண்பா? என்ன நம்ப முடிகிறதா? ஆச்சரியத்தில் மயக்கம் போடவில்லையே.. அது மட்டுமில்லை சுமார்15 நிமிடங்கள் அப்படியே கிடைக்குமாம். எதிராளி பாம்பு செத்துவிட்டது என நம்பி கம்பி நீட்டிவிடும். எப்படி இருக்கிறது. கதையல்ல உண்மை!!
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- பனித்துளி சங்கர்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன.
10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.
திமிங்கிலம் என்று சொன்னவுடன் நாம் எல்லோரும் உணரக்கூடிய ஒன்று மிகப் பெரிய மீனாகத்தான் இருக்கும் என்பதாகும். இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைச் சாராத பாலூட்டி ஆகும். பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.
பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.
உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். "சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும்,'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.
நாம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று தெரியும். அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும். ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன என்றால் நம்புவீர்களா?
உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.
இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.
இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 8 0நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.
இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.
பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.
மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்' இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.
1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்று சொன்னால் மூளையின் முன்புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல - ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமாக சிந்தித்து சாமர்த்தியமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
பாகிஸீட்டஸ் ஆய்வுத்தாள் கூறுவதாவது: "படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில் பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும் நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன." அடுத்த முக்கியமான தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும். நடமாடும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். 'பரிணாமவாதிகளின் பாதிப்பான பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை' (Darwinism Refuted' பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு வினோத சான்றிதழ் ஆகும்.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஹவாய் தீவில் வசிக்கும் சிரித்த முகம் சிலந்திகளுக்கு உடம்பில் ஏகப்பட்ட நிறங்களும் வடிவங்களும் காணப்படுகின்றன. பூச்சியின் முதுகில் சிரிக்கும் முகத்தை வரைந்தது போன்ற படம் இருப்பதால் இதற்கு அப்பெயர். இருந்தாலும் இந்த இனத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான வடிவங்கள் இருப்பதில்லை.
எதற்காக இத்தனை வேஷம் போடுகின்றன என்று பார்த்தபோது அது வேட்டையாடித் திண்ணும் பூச்சிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க என்பது தெரிந்தது. சிலந்திகளைப் பிடித்துத் தின்னும் குளவிகள் திடீரென்று வித்தியாசமாக ஒரு சிலந்தி இருந்தால் பிடித்து சாப்பிடத் தயங்குகின்றன. இது வழக்கமான சிற்றுண்டி இல்லையே என்று யோசிக்கும் நேரத்தில் சிலந்தி தப்பித்துக் கொள்கிறது. அதனால்தான் அந்த இனத்தில் அத்தனை உருவ பேதங்கள் காணப்படுகின்றன.
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மிருகங்கள் நாலு பக்கம் ஓடியாடி பெட்டையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் கொள்ள பூக்கள் நிறைய தந்திரங்களைக் கையாளுகின்றன.
ஆண் பூக்கள் மகரந்தங்களை காற்றில் கலந்து விடுகின்றன. காற்றில் கலந்து மிதக்கும் மகரந்தம் பெண் பூவை அடைந்து அதைக் கருத்தரிக்க வைக்கும். இந்த முறையில் மகரந்தங்களின் சேதாரம் அதிகமாக இருக்கும். சில பூக்கள் பூச்சிகளை தபால்காரர்களைப் போல பயன்படுத்துகின்றன. பூச்சிகளுக்குப் பிடித்தமான தேனை வழங்கிக் கவருகின்றன. தேன் பருகும் வண்டுகள் கூடவே மகரந்தங்களையும் சுமந்து கொண்டு பெண் பூவை தேன் குடிக்கச் செல்லும்போது அதனிடம் வழங்கி விடுகின்றன.
ஆர்க்கிட் வகையைச் சேர்ந்த செடிகளின் பூக்கள் வினோதமான உத்தியைக் கையாளுகின்றன. ஒரு பூ குறிப்பிட்ட பூச்சி இனத்தின் பெண் பூச்சியைப் போல வாசனையை வெளியிடுகிறது. மோப்பம் பிடித்துக்கொண்டு வரும் ஆண்பூச்சி, பூவை பூச்சி என நினைத்து செயல்படும்போது உடலெங்கும் மகரந்தத்தைப் பூசிச்கொண்டதுதான் மிச்சமாகிறது. அதே தவறை திரும்ப இன்னொரு பூவில் செய்யும்போது அந்தப் பூவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது
இந்த தந்திரம் ஆபத்தானதாயிற்றே என்று பயிரியல் அறிஞர்கள் கருதுவதுண்டு. காரணம், குறிப்பிட்ட பூச்சியின் உறவை நம்பி வாழ்வதைக் காட்டிலும் பலவகை பூச்சிகளின் நட்பு பலமடங்கு இலாபமாக இருக்குமே என்பது அவர்கள் நினைப்பு. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பூக்கள் தமக்கென்று பிரத்யேகமான தபால்காரப் பூச்சியை மகரந்தத்தை பார்சல் செய்து டெலிவரி செய்வதன் மூலம் மகரந்த சேதாரத்தைத் தவிர்க்கின்றன. அதே சமயம் நிச்சயமான பலனை அடைகின்றன என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
படத்தில் காண்பது ஓப்ஃபிரிஸ் ஆக்சிரிங்க்கஸ் என்ற ஆர்க்கிட் மலர், இத்தாலியில் பூப்பது.
- முனைவர் க.மணி (
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?
- தப்பிப்பிழைக்குமா தவளையினம்?
- பூக்களின் வில்லன் யார்?
- மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- நோய்பரப்பும் வன உயிரிகள்
- கொலை செய்யப்பட்டோர் கணக்கு
- பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு
- விலங்குகளின் ரியல் எஸ்டேட்
- நஞ்சு துப்பும் பாம்புகள்
- கார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்
- காதல் கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்
- வீட்டை மாற்றிய வண்ணத்துப்பூச்சி!
- நன்னீரைத் தேடும் கடல் பாம்புகள்
- சுறாவுக்கு எத்தனைப் பற்கள்?
- அணில் ஏன் விழுவதில்லை
- நச்சுத் தாவரம் நம்பர் ஒன்