கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக்கொண்டு ஆவியாவதால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளுக்கு வியர்ப்பதில்லை. சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உடல்வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவதாக ஆஸ்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை ஆகஸ்டு மாத American Naturalist இதழில் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப்பட்டன.
வெப்பச்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டையாகவும் காணப்படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவையெல்லாம் உணவைப்பெறுவதற்காகவும், எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப்பட்டுள்ளது. பறவைகளுக்கு ஒரு ‘ரேடியேட்டரா’க அவற்றின் அலகுகள் செயல்படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது.
toucans, African barbets and tinkerbirds, Australian parrots, grass finches, Canadian gamebirds, penguins, gulls and terns உட்பட்ட 214 பறவையினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டன. அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந்திருந்தது. குளிர்ச்சியான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பறவைகளின் அலகுகள் ஒரு ரேடியேட்டரைப் போன்று செயல்படுவதும், ரேடியேட்டர் தேவையில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. 133 ஆண்டு பழமையான ஆலன் விதியின்படி, உலகின் குளிர்பகுதிகளில் வாழும் விலங்குகளின் கைகள், கால்கள், வால், காதுகள் அனைத்தும் அளவில் சிறியனவாக இருக்கும். ஒரு பெரிய பறவைதொகுதியுடன் ஆலன் விதி முதன்முதலாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100623104428.htm
- விவரங்கள்
- வரிதையா கான்ஸ்தந்தின்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூக்களின் உலகம் அழகானது. பட்டாம் பூச்சிகளின் அழகு விந்தையானது. பறவைகளும் கவர்ச்சியானவை. இந்த வரிசையில் மீன்களின் உலகமும் அலாதியானது. பவளப்புற்றுப் பகுதிகளில் கடற்பாசிகள் அழகு கூட்டுகின்றன. பலவண்ண மீன்கள் அணியணியாய் பவளப்புற்றுகளினூடே துடுப்பசைத்து நீந்திச் செல்கையில் உலகின் வனப்புமிகுந்த ரோஜாத் தோட்டம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கடல் சூழல் அற்புதமானது. மீன்களின் உலகத்தில் சிறுபயணம் போகலாம் வாருங்கள்.
பரிணாமத்தின்போது இயற்கை மும்முறையாவது இறக்கைகளை பிறப்பித்திருக்கிறது. பூச்சிகள் (தாம்) முதன்முதலில் இறக்கையுடன் பறக்கத் துவங்கின. பல இலட்சம் வருடங்களுக்குப் பிறகுதான் பறவைகள் தோன்றின. இறகுகள் பறவைகளுக்கே உரியவை. மூன்றாவது முறையாக பாலூட்டிகள் (வெளவால்கள்) பறக்கத் துவங்கின. அனால் இறக்கைகளில்லாமல். புஜம், முழங்கை, கை இவற்றுக்கிடையில் அமைந்த ஜவ்வுதான் பறப்பதன் உபகரணம். ஆகாயத்தில் காற்றைப் பின் தள்ளிப் பறக்கலாம். கடலிலும் நன்னீர்ப் பறவைகளிலும் நீரைப் பின்தள்ளி முன்னேறலாம். இதன் பெயர் நீச்சல். தவளைகள் தாவும், பல்லிகள் ஊர்ந்து போகும். பூனையும் மனிதனும் நடப்பவை. பறவைகள் நடக்கும், நீந்தும், பறக்கும். மீன்கள் நீந்தும். இவை எல்லாமே முதுகெலும்பிகள், நாற்காலிகள். நகர்தலுக்காக, சூழலுக்கேற்ப, வாழிடத்துக்கேற்ப நான்கு கால்களும் தகவமைத்துள்ளன.
மீன்களின் துடுப்பும் பறவைகளின் இறக்கையும் மனிதனின் கைகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. இயற்கைச் சிற்பி வடிவமைத்த அற்புத உறுப்புகள்! மீன்களின் உடலை மூடிப் பொதித்து பாதுகாக்கச் செதில்கள் உள்ளன. பறவைகளுக்கு இறகுகள், மனிதனுக்கு உரோமம். ஆதி மனிதனின் உடல் முழுவதும் உரோமமிருந்தது. நாகரிக மனிதன் உடைகளுக்குப் பழகிய பிறகு உரோமம் அழகு சார்ந்த விஷயமாகவும் கருதப்பட்டது. இமைகளிலும், நாசித்துளைகளிலும் மயிநீட்சியின் தேவை இன்னும் உணரப்படுகிறது. பாலின வேறுபாட்டைக் காட்டி இருதரப்புக் கவர்ச்சியை ஏற்படுத்துவதிலும் மயிர் வளர்ச்சிக்கு முக்கிய பங்குண்டு.
பூமிப்பரப்பில் எல்லாவுயிர்களுமே உறவுக்காரர்கள். மனிதனும் பாக்டீரியாவும் தூரத்துச் சொந்தம். தூரம் கொஞ்சம் அதிகம். மனிதனும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்; ரத்த சம்மந்தம். குரங்குகள் மனிதனின் முன்னோர் அல்ல. குரங்கும் மனிதனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்! இரத்த வெதுவெதுப்பு என்றால் உங்களுக்குப் புரியும். உங்களுக்கும் எனக்கும் பறவைக்கும் காயம்பட்டால் சிந்தும் குருதியில் வெதுவெதுப்பு இருக்கும். பாம்பு, பல்லி, தவளை, மீன் இவற்றின் இரத்தத்தில் இந்த வெதுவெதுப்பு கிடையாது. மேனாட்டினர் குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள். அன்பைப் பரிமாறிக்கொள் வெதுவெதுப்பைப் பகிர்வதாய்ச் சொல்வார்கள். நீதான் என் வாழ்க்கையில் எல்லாமே என்பதற்குப் பதிலாக என் வாழ்க்கையின் சூரிய வெளிச்சம் நீதான்’ என்பார்கள்.
உடல் வெதுவெதுப்பை இழந்துவிட்டால் சடலம். ‘கொடூரமான கொலை’என்பதை ஆங்கிலம் பேசுபவர்கள் ‘குளிர்க் குருதிக் கொலை என்பார்கள். உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை; நிறைய சக்தி செலவாகும். உடல் வெப்பநிலையைச் சூழலே கட்டுப்படுத்த அனுமதித்துவிட்டால் சிரமமில்லை. சக்தி மிச்சமாகும். மேனாட்டினரின் உணவில் பெரும்பகுதி உடல் வளர்ச்சிக்குப் போகிறது. வெப்பப் பிரதேசத்தில் வாழும் நமக்கு உடல் வெப்பத்தை சீர்படுத்துவதிலேயே அதிக சக்தி (சத்து) கரைந்துவிடுகிறது. பிரதமான வெப்பநிலையில் உழைப்பும் உற்பத்தியும் அதிகமாகவே இருக்கும். கதை எழுதுபவர்களும் கலைஞர்களும் கோடை ஓய்விடங்களைத் தேடிச் செல்வதன் இரகசியம் வேறொன்றுமில்லை. வெப்ப இரத்த விலங்குகளினுடையதைவிட குளிர் இரத்த விலங்குகளின் இறைச்சி ஆரோக்கியமானது. பாதுகாப்பானது. தொகுப்பு குறைந்தது. நீர்வாழ் உயிரினங்களை கடலிலும் நன்னீரிலும் கிடைக்கும் மீன் முதலிய விலங்குகளை நாம் விரும்பி உண்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மீன் என்றால் என்ன? அடிப்படையில் மீன் நீர்வாழ் உயிரினம். உயிரியல் அடிப்படையில் வரையறுத்துச் சொல்வதானால் செதில்களால் மூடப்பெற்று செவுள்களால் மூச்சுவிடுகிற, துடுப்புக்கொண்ட, நீர்வாழ் குளிர் இரத்த முதுகெலும்பி வணிக நோக்கில் நீர்நிலைகளிலிருந்து கிடைக்கப்பெறும் எல்லா விலங்கு உயிரினங்களையும் மீன் என்கிறார்கள். இரால், நண்டு போன்றவை கணுக்காலிகள்; கணவாய் மெல்லுடலி; கடல் அட்டை முட்தோலி; ஆமைகள் ஊர்வன; டால்பின், திமிங்கிலம் போன்றவை பாலூட்டிகள் (குட்டிகளை ஈன்று தரும்) நுரையீரலால் காற்றைச் சுவாசிப்பவை. எத்தனை ஆழத்தில் நீந்தினாலும் உயிர்க்காற்றைப் பெற நீர்ப்பரப்புக்கு மேல் அவ்வப்போது தலைகாட்டியாக வேண்டும்!
மீன்கள் பல நூறுவகைப்பட்டவை. வடிவிலும் அளவிலும் உணவு முறையிலும் மாறுபட்டவை. லாம்ப்ரே போன்ற மீன்கள் தாடையில்லாதவை. உணவைக் கவ்விக் கடித்து மென்று அரைத்து உண்ணத் தாடையும் பற்களும் தேவை. வேட்டையாடும் விலங்குகளைப் பொறுத்தவரை தாடைகள் என்பவை Ôஅசையும் சொத்து’ சுறா, திருக்கை இனங்கள் குருத்தெலும்பிகள். சில மீன்கள் செதிலற்றவை. உலகில் 29,400 மீனினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏராளம் மீன்களை இனிதான் அடையாளப்படுத்த வேண்டும். உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 0.01 விழுக்காடுதான் (ஆயிரத்தில் ஒருபகுதி) நன்னீர். ஆனால் மீனினங்களில் 40 விழுக்காடு இங்குதான் வாழ்கின்றன. இந்தியாவில் வாழும் 2500 மீனினங்களில் 930 இனங்கள் நதிகள், ஏரி, குளங்களில் வாழ்பவை இவற்றில் 350 இனங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
மீன் ஒரு குளிர் இரத்தப் பிராணி. சில விதிவிலக்குகளும் உண்டு. சில சூரை இனங்கள், சில சுறா இனங்கள், பட்டாம்பூச்சி அயிலை போன்றவை மீன்கள் நீர்வாழ்வன. நீண்ட நேரம் நீருக்கு வெளியே உயிரிடனிருக்கும் சில மீன்களும் உண்டு. மரமேறும் பெர்ச் மீன் ஒரு உதாரணம். இவை தரைக்கு வருகையில் தவளையைப் போன்று தோலால் மூச்சுவிடும், உணவுப் பாதையுடன் இணைந்திருக்கும் சவ்வுப் பைகளில் காற்றை இழுத்தும் மூச்சுவிடும்.
சாதாரண மீன்கள் ஒலி எழுப்புவதில்லை. சையானிடே குடும்பத்தைச் சார்ந்த மத்தள மீன் ஒலி எழுப்பும். மீன்களின் கேள்வித் திறன் இனத்திற்கு இனம் மாறுபடுகிறது. நீச்சல் பைகள் (காற்றுப் பைகள்) சில இனங்களில் கேள்விப் புலனுக்கு உதவுகின்றன. கடலின் ஆழத்தில் 700 மீட்டருக்கு கீழே வெளிச்சம் துப்புரவாக இராது. இங்கு வாகும் பெருமளவு மீன்களும் ஒலி உமிழ்பவை. ஒளி உமிழும் செல்களினால் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இரைகளை கவர்ந்திழுக்க, இணைகளை அழைக்க... இப்படி நிறைய நோக்கங்களை இந்த ஒளிரும் செல்கள் நிறைவேற்றுகின்றன. மீன்களால் ஒலி, ஒளி மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதல்ல. தென் அமெரிக்காவில் கத்தி மீன்களும் ஆப்பிரிக்காவில் யானை மீன்களும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. 20 முதல் 600 வோல்ட் மின்னழுத்தம் வரை Ôநான் அடிச்சா தாங்கமாட்ட, வீடு போயி சேரமாட்ட’ என்று எதிரிகளை எச்சரிப்பதற்கும் இரைகளை இமைப்பொழுதில் லபக்கென்று விழுங்குவதற்கும்தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்!
இனப்பெருக்கம் செய்வதில் கில்லாடி மீன் ஹில்ஷா. இருபது சென்டிமீட்டர் நீளம் கொண்ட ஹில்ஷா மீன் பதினாறு இலட்சம் முட்டைகளை ஏக காலத்தில் இட்டுத்தள்ளும். குஞ்சுகளை பேணுவதில் 25 விழுக்காடு மீன் இனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. குஞ்சு மீன்களைப் பேணுவதில் தந்தை மீன்கள்தாம் பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன.
பூக்களும் பட்டாம்பூச்சிகளும் நிலத்தில் அழகு சேர்ப்பதுபோல் கடலில் மீன்கள் அழகு கூட்டுகின்றன. பவளப்புற்றுகள் இயல்பான நிறம் சூசாந்தெல்லே என்றும் பாசிகளால் உருவாகின்றன. இங்குள் கர்தினால் மீன், தூண்டில் மீன், பட்டாம்பூச்சி மீன், கிளிமீன், டாம்செல், ராஸ் மீன்கள் எல்லாமே பிரகாசமான நிறங்கள் கொண்டவை. பாதுகாப்பு மற்றும் இரைதேடும் காரணங்களுக்காக மீன்களின் முதுகுப் பகுதியில் பிரகாசமான நிறமும் அடிப்பகுதியில் வெளிறிய நிறமும் கொண்டிருக்கும். மீனை மேலிருந்து பார்த்தால் ஆழக்கடலின் இருண்ட நிறத்தோடு பொருந்தும், கீழிருந்து பார்த்தால் மேற்கடலின் வெளிறிய நிறத்தோடு பொருந்தும்.
கிரேட் பாரியர் ரீஃப் பகுதியில் வாழும் குண்டுப் பாப்பா மீன்தான் (ஷிண்ட்லேரியா ப்ரெவிபிங்குயிஸ்) உலகிலேயே மிகச்சிறிய மீன்வகை. பருவ வயதில் இதன் அதிகபட்ச நீளம் ஏழே மில்லி மீட்டர். மிகக் குறைந்த ஆயுசுள்ள மீன் பவளப்புற்றுகளில் வாழும் மிக்மி கோபி. வெறும் 59 நாள் ஆயுள். இந்தோனேசிய பசிபிக் பாய்மீன் (இஸ்டியோஃபோரஸ் ப்ளாடிடீரஸ்) நீச்சலில் அதிவேகம் காட்டுகிறத. மணிக்கு 110 கிலோ மீட்டர்! ரிங்க்கோடோன் டைபஸ் என்னும் திமிங்கல சுறாக்கள் குருத்தெலும்பி வகையில் நீளமானவை. 18 மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. முதுகுநாண் உள்ளவற்றில் நீளமான இனம் துடுப்பு மீன் (ரெகாவிகஸ் க்ளெனே) 17 மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. எடை அடிப்படையில் சூரிய மீனுக்கு தான் (மோலா மோலா) முதலிடம். 2300 கிலோ!
இராட்சத ஆக்டோபஸ்கள் 5 மீட்டர் வரை வளர்கின்றன. அதிகபட்ச எடை 34 கிலோ. பழங்கதைகளில் வருவதுபோல் இவை இராட்சதத் தன்மை கொண்டவையல்ல. மென்மையானவை. வெட்கி, அஞ்சி ஒதுங்குபவை. சில இராட்சதக் கணவாய் மீன்கள் சுமார் 20 மீட்டர் நீளமும் (ஆறு வழிச்சாலையின் அகலம்) 1000 கிலோ எடையும் கொண்டவை. முதுகு நாணற்ற கடல் இனங்களில் பெரிது இதுதான். ஆம் கடலின் பாதாளங்களிலும் சில மீன்கள் வாழ்கின்றன. கஸ்க் ஈல் எனப்படும் மீனை 8,370 மீட்டர் ஆழமுள்ள போர்டோ ரிகோ கடற் பாதாளத்தில் பிடித்துள்ளனர். பாதாளக் கடலின் விசேஷம் என்ன? காரிருள், பிராணவாயு பற்றாக்குறை,
உணவு பஞ்சம், உயர் அழுத்தம் கடுங்குளிர் இவைதான் அங்குள்ள தனித்துவமான சூழல். கடலில் ஆழத்துக்குப் போகப் போக அழுத்தம் அதிகரிக்கும் காற்று மண்டலத்தின் அழுத்தம் கடல்மட்டத்தில் ஒரு அலகு என்று எடுத்துக் கொண்டால் பத்து மீட்டர் ஆழத்துக்கு ஒரு அலகு அழுத்தம் அதிகரிக்கும். எட்டாயிரம் மீட்டர் ஆழம் என்றால் எண்ணூறு மடங்கு அழுத்தம்! மீன்கள் பொதுவாக புரதம் மிகுந்தவை கொழுப்பு குறைந்தவை. ஆனால் மேற்கடலில் (கரைகடலில்) வாழும் சார்டின் (சாளை) எரிங் போன்ற இனங்களில் கொழுப்பு அதிகம். மீன் கொழுப்புகள் அபாயம் குறைந்தவை மட்டுமல்ல, பிற கொழுப்புகள் ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கவல்லவை. ஒமேகா- 3- கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது.
உலக அளவில் மீன் சாப்பிடுபவர்களில் இதய நோய் பாதிப்பு குறைவுதான். ஸ்டர்ஜன் மதிப்பு கூட்டிய மீன் பண்டத்துக்கு கவியார் (caviar) என்று பெயர் உலக அளவில் விலையுயர்ந்த உணவு இததான். ஒரு கிலோ கவியாரின் மதிப்பு 700 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 35,000-. ஈரான்தான் கவியாரை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. இதற்கு அடுத்தபடியாக வரும் மீன் பதார்த்தம் சுறா துடுப்பின் நார்ப் பொருளிலிருந்து தயாராகும் சூப். பாடம் செய்த சுறாத் துடுப்பின் நார்கள் (இழைகள்) ஒரு கிலோ முப்பதாயிரம் ரூபாய் வரை பெறும். சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளில் இதற்கு ஏக கிராக்கி, இரால், நண்டு தோடுகளிலிருந்து பெறப்படும் கைடின், கைடோசான், க்ளுகோஸமைன் ஆகிய மூன்று பொருட்களுக்கும் ஏராளம் ஆனவப் பயன்பாடும் மருத்துவப் பயன்பாடும் உண்டு.
மீன்களில் காற்றுப் பைகளும் உண்டு. நன்னீர் மீன்களின் உடலளவில் ஏழு விழுக்காடு அளவும், கடல் மீன்களுக்கு ஐந்து விழுக்காடு அளவும் காற்றுப் பைகள். இஸின் கிளாஸ் என்னும் பொருள் இதிலிருந்து கிடைக்கிறது. பீர் மதுபானத்தைத் தூய்மைப்படுத்த இஸின் கிளாஸ் பயன்படுகிறது. பாகவத புராணம் திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றாக மச்சாவதாரத்தைக் குறிப்பிடுகிறது. (மச்சம்=மீன்) மனுவையும் ஏழு முனிவர்களையும் காக்க திருமால் மீனாக அவதரித்ததாக பாகவதம் சொல்கிறது. இராட்சத பல்லி இனங்களான டைனோசர்களின் தோற்றத்துக்கு ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே மீன்கள் தோன்றியிருக்க வேண்டும்.
லாடிமேரியா சலும்னி என்கிற வாழும் தொல்லியிரினத்தை முதன்முதலாக 1938இல்தான் கண்டுபிடித்தனர். தென் ஆப்பிரிக்காவின் சலும்னா ஆற்றின் முகத்துவாரத்தில் கிடைத்த இந்த மீனுக்கு ஏராளம் சிறப்புகள் உண்டு. தோடு போன்ற செதில்களுக்குப் பதிலாக கவசம், தரையில் ஊர்ந்து செல்ல உதவும் துடுப்புகள், காற்றைச் சுவாசிப்பதற்கான பைகள்... தரைவாழ், முதுகு நாண் விலங்குகளின் முன்னோர்கள் மீன்கள்தாம் என்பதற்கான ஆதாரங்களில் இவை முக்கியமானவை.
நானூற்று அறுபது கோடி ஆண்டுகளில் (பூமிப்பந்தின் வயது) பல்வேறு தருணங்களில் கட்டுப்பாடற்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொன்மையான உயிரினங்கள் பூண்டோடு அழிந்திருக்கின்றன. இராட்சதப் பல்லிகளின் அழிவு ஒரு உதாரணம். இயற்கைப் பேரிடரின் விளைவாக டைனோசார், டீரோசார், இக்தியோசார் முதலிய பல்லியினங்கள் அழிந்திருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர் மீனின் பல்லுயிர்வளம் அழிய வாய்ப்பிருக்கிறதா? இருக்கவே இருக்கிறது!
புவி வெப்பமாதல், துருவப் பனிப்பாறைகள் உருகிவழிதல், கடல் மாசுபடுதல், மிகை மீன்பிடித்தல், கட்டுப்பாடின்றி கடல்வளத்தை கொள்ளையிடுதல் என்பதாக நீண்ட வரிசையில் பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. நிலம் சார்ந்த உயிரினங்களைப் போலவே மீனினங்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. நாம் இல்லாமல் மீன்கள் வாழ்ந்துகொள்ளும்; மீனில்லாமல் மனிதனால் வாழ முடியாது. சூழலியலையும் பல்லுயிர் வளங்களையும் காப்பதில்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- சண்முகானந்தம், ஒளிப்படக் கலைஞர்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அமாவாசை, தீபாவளியும் சேர்ந்து வரும் இரவில் ஆந்தையை பலி கொடுத்தால் வாழ்வில் வளம் வந்து சேரும் என்ற செய்தியால், ஒரு ஆந்தையை ரூ. 10,000 வரை விலை கொடுத்து வாங்கி, 200க்கும் மேற்பட்ட ஆந்தைகள் பலியிடப்பட்டுள்ளன - மாலை மலர்
தொழில் நட்டத்தில் இருந்து மீள்வதற்காக ரூ. ஒன்றரை லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி ஆந்தைகள் பலியிடப்படுகின்றன. இதற்காக ஆந்தைகள் கடத்தல். - தினகரன்
இவற்றுடன் "ஆஸ்திரேலியப் பறவை, மனித முகம் கொண்ட அபூர்வப் பறவை" என்ற தலைப்புடன் வெண்ணிற ஆந்தையின் இறக்கையை விரித்துப் பிடித்தபடி ஒருவர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை நாளிதழ்களில் பார்த்திருக்கலாம். இதைப் படிக்கும்போது ஆந்தையை பலி கொடுத்தால் வளம் வந்து சேருமா? ஆந்தைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகின்றனவா? மனித முகம் கொண்டவையா என்பது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.
முற்றிலும் இல்லை என்பதுதான் பதில். சுற்றுசூழல் அறியாமை நிலவும் நம் நாட்டில், பணம் சேர்க்க எதை வேண்டுமானாலும் பலி கொடுக்க மனிதர்கள் தயாராகி விட்டார்கள். அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகளைப் பார்க்கலாம். 1. புள்ளி ஆந்தை (Spotted Owlet), 2. கூகை (அ) வெண்ணாந்தை (Barn Owl), 3. கொம்பன் ஆந்தை ((Great Horned Owl)
புள்ளி ஆந்தை சாலையோர மரங்கள், மாந்தோப்புகள், பாழடைந்த கட்டடங்களில் வாழும் இயல்புடையது. நகர்ப்புறம் சார்ந்தும் வாழும். தனக்கென வாழ்விட எல்லையை ஏற்படுத்திக் கொள்ளும். சாம்பல் பழுப்பு நிற உடலில் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டது. உருண்டையான தலையில் காதுத் தூவிகள் எழுந்து நிற்கும். கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் முக்கிய உணவு சுண்டெலி, புழு பூச்சிகள், தத்துக்கிளி, ஒணான், சிறு பறவைகள். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் மார்ச் வரை. மரப்பொந்துகளில் 3-4 முட்டை இடும். வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
கூகை அல்லது வெண்ணாந்தைதான் அடிக்கடி நாளிதழ்களில் இடம்பிடிக்கும் "ஆஸ்திரேலியப் பறவை"! கூகைகள் மட்டுமல்ல, எந்த வகை ஆந்தையும் வலசை (Migaration)) செல்வதில்லை. இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. கூகைகள் ஆஸ்திரேலியப் பறவையோ, மனித முகம் கொண்டவையோ அல்ல. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்திக் கருக்கலில் கூட்டை விட்டு புறப்படும் முன் எழுப்பப்படும் ஒலி காரணமாக Screetch Owl என்ற பெயரும் உண்டு. இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்பட்டது.
ஆந்தைகள் இரவில் நடமாடும் இரவாடிப் பறவைகள் (Nocturnal). இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். ஒரு எலி ஓர் இரவில் இரண்டு லிட்டர் நெல்லை வீணாக்கும் தன்மை கொண்டது. இதனால் நாட்டின் 20 சதவீத உணவு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆந்தைகள் நான்கு விரல் கூர் உகிர்களால் எலி, சுண்டெலிகளைப் பிடித்து அலகால் தூக்கிச் செல்லும். ஆனால் ஆந்தைகள் ஒரே இரவில் 3-4 எலிகளை அப்படியே விழுங்கிவிடும். சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும். கூகைகள் ஆண்டு முழுவதும் மரப் பொந்துகளிலும் பாழடைந்த கட்டடங்களிலும் 4-7 முட்டைகள் இடும். மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன. கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.
ஆந்தை இனங்களில் உலகிலேயே பெரிதானது கொம்பன் ஆந்தை. பருத்த தோற்றத்துடன் பழுப்பு நிற உடலில் வெளிர் மஞ்சள், ஆழ்ந்த பழுப்புக் கோடுகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவ கண்களையும் தலையின் இருபுறமும் நீண்டு நிற்கும் இறகுக் கொம்புகளும் இதன் தெளிவான அடையாளங்கள். பெரிய சண்டை சேவல் அளவில் இருக்கும்.
தமிழகம் எங்கும் ஊருக்கு வெளியே உள்ள குன்றுகள், சிறு காடு மேடுகள், ஆற்றங்கரையோர மரங்களில் கொம்பன் ஆந்தை வசிப்பதைப் பார்க்கலாம். மற்ற ஆந்தைகளுக்கு மாறாக பகல் நேரத்தில் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது. அதேவேளையில் மர நிழல், பாறை இடுக்குகளில் அமர்ந்திருக்கும். எலி, சுண்டெலி, தவளையை உணவாகக் கொள்ளும். சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு எலிகள் வரை உட்கொண்டு உழவர்களுக்கு நன்மை புரிகிறது. மண்மேடுகளிலும், புதர் ஓரக் குழிகளிலும், பாறை மீதும் 4 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் மே வரை.
ஆந்தை சிறப்புகள்
கூருணர்வு (Sensitive): ஆந்தை போன்ற இரவாடிப் பறவைகளின் பார்வைத் திறன் மிகுந்த கூருணர்வு மிக்கது. நமது கண்களோடு ஒப்பிட்டால் ஆந்தைகளின் கண்கள் 5 மடங்கு பெரியவை. எனவே, இவற்றின் பெரிய கண் பாவை மிகச் சிறிய வெளிச்சத்தையும்கூட உள்வாங்கி உணரும் ஆற்றல் கொண்டது. இதனால் இரவில் நடமாடும் ஆந்தைகளால் எதையும் கூர்ந்து அறிய முடிகிறது.
கழுத்து: ஆந்தைகளின் கழுத்து மிகவும் துவளக் கூடியது. மனிதர்கள், மற்ற பாலூட்டிகளின் தலைகள் இரண்டு மூட்டுகளால் கழுத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்தைகளின் தலையோ ஒரே மூட்டால் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இதன் ஒவ்வொரு கழுத்து முள்ளெலும்பும் கணிசமாக இடம்பெயரக் கூடியது. இதனால் தலையை முழுமையாக 360 டிகிரி திருப்பும் திறன் இதற்கு உண்டு.
சூழலை சமநிலையுடன் பாதுகாப்பதில் ஆந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலை நாடுகளில் ஆந்தைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. நாமும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் உள்ளோம். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பழைமை கருத்துகள், பக்தியின் பேரால் நிலவும் மூடநம்பிக்கைகளை ஆகியவற்றை அகற்றிவிட்டு, அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மட்டுமே ஆந்தைகளின் வாழ்க்கையும், நமது வாழ்க்கையும் சிறக்கும். இல்லை என்றால், எதிர்காலச் சந்ததிகள் பாடம் செய்யப்பட்ட அவற்றின் உடலை மட்டுமே பார்க்கக் கூடிய நிலை உருவாகலாம்.
பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம். சுயநலத்துக்காக மனிதன் அவற்றை சுரண்டிக் கொண்டே இருக்கும் பட்சத்தில், ஒரு நாள் மற்ற உயிரினங்களுக்கு முன்னதாகவே நமது அழிவு தொடங்கி விடலாம்.
(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே சென்று கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து பார்த்தபொழுது கேளை ஆடு போன்ற தோற்றத்துடன் ஒரு மான் நின்றது. முதலில் அதை கேளையாடு (Barking deer) என்று நினைத்தாலும் கூர்ந்து பார்த்ததில் அதன் கொம்பின் வடிவம், சற்று அகன்ற மார்பு, சற்று நீண்ட கழுத்தை ஆகியவற்றை வைத்து அது நான்கு கொம்பு மான் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த மான் இனம் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் தன்மை கொண்டது. அது நான்கு கொம்பு மான்தான் என்று தெரிந்தவுடன் என்னை விரைவாகத் தயார்படுத்திக் கொண்டு, படம் எடுக்கத் தொடங்கினேன்.
முப்பாதாண்டுகளுக்கு முன்னால் சத்தி வனக்கோட்டத்தில் உள்ள பீர்கடவு, கொத்தமங்கலத்திலிருந்து ராஜன் நகர் செல்லும் சாலையின் மேற்கே தென்படும் சிறிய குன்றில் எண்ணிக்கையில் குறைந்த நான்கு கொம்பு மான் கூட்டமொன்று தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. விலங்குகளின் மீது ஆர்வம் கொண்டவரும் அவற்றை கூர்ந்து கவனித்து வந்தவருமான முன்னாள் வேட்டைக்காரர் சின்னச்சாமி என்பவர், ஒரு முறை ஜெர்சி மாடு கன்று ஈன்றதைப் பார்த்துவிட்டு, "அதன் கண்ணைப் பாருங்கள், குள்ளமான் கண்ணைப் போலுள்ளது" என்று என்னிடம் கூறினார். குள்ளமான் என்று அவர் குறிப்பிட்டது இந்த நான்கு கொம்பு மானைத்தான்.
கன்றின் கண்ணுக்கு ஒப்புமையாக கூறும் அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மான் அதிகமாக இருந்தது மட்டுமின்றி, மக்கள் பார்வையிலும் பட்டுள்ளது இதிலிருந்து தெரிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த மானின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்துவிட்டாலும், தற்போது வனத்துறையின் வேட்டைத் தடுப்பு செயல்பாடுகளால் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இந்த மான் இனம் தற்போது கண்ணில் பட ஆரம்பித்திருப்பதை வைத்து இதை உறுதிப்படுத்தலாம்.
சத்தியமங்கலம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள தலைமலைப் பகுதியில் இந்த மான் தற்போது அருகிவிட்டது. மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம், உலக இயற்கை நிதியத்தின் பூமிநாதன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிலர் இந்த மானைப் பார்த்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் நானும் அந்த மானைப் பார்த்தேன். தமிழகத்தில் முதுமலை பகுதியில் உள்ள சர்க்கிள் சாலை, மசினகுடி, காங்கரசு மட்டம், சிரியூர் பகுதிகளில் இந்த மான் அரிதாகக் காணப்படுகிறது. ஆராய்ச்சியாளர் ஆறுமுகமும் டாக்டர் கலைவாணனும் இந்த மானை இப்பகுதியில் பார்த்துள்ளனர்.
வழக்கமாக மான்களுக்கு இரண்டு கொம்புகளே இருக்கும். இந்த மானுக்கு இரண்டு ஜோடிகளாக நான்கு கொம்புகள் உண்டு. காட்டில் இதைப் பார்ப்பது கடினம். ஆசியாவிலியே சிறிய இரலை மான் இனம் இது. எண்ணிக்கை மிகக் குறைவு, அதிக மிரட்சியும், நழுவும் தன்மையும் கொண்டது. சாதாரணமாக இணையாகவோ, குட்டிகளுடனோ காணப்படும். தமிழகம், தமிழகத்தை ஒட்டிய கர்நாடக காட்டுப் பகுதிகள், குஜராத் கிர் காடு, ஒரிசாவில் இந்த மான் வாழ்கிறது. திறந்தவெளிகளிலும், மலைச்சரிவுள்ள காட்டுப் பகுதிகளிலும், ஓடை, ஆற்றோரப் பகுதிகளிலும் இதைக் காணலாம்.
இதன் மயிர்ப்போர்வை மஞ்சள் கலந்த மர நிறத்திலும், அடிப்பகுதி வெளிறியும் இருக்கும். மழைக்காலத்தில் நிறம் சற்று அடர்த்தியாகவும், குளிர்காலத்தில் நிறம் சற்று மங்கலாகவும் காணப்படும். நின்ற நிலையில் இதன் உயரம் தோள்பட்டை வரை 60 செ.மீ, 20-25 கிலோ எடையுடன் இருக்கும்.
பெண்ணுக்கு கொம்பு கிடையாது. ஆண்களுக்கு பொதுவாக நான்கு கொம்புகள் உண்டு. சிலவற்றுக்கு ஊட்டச்சத்து குறைவு, வாழுமிடத்தைப் பொருத்து இரண்டு கொம்புகள் மட்டும் இருக்கலாம். இரண்டு பெரிய கொம்புகள் இரண்டு காதுகளுக்கு இடையிலும் 8 - 10 செ.மீ நீளத்திலும், அடுத்து இரண்டு சிறிய கொம்புகள் பெரிய கொம்புகளுக்கு முன்னதாக முன்னந் தலையில் 1 முதல் 2 செ.மீ அளவுக்கு வளர்ந்திருக்கும். ஆண் குட்டிகளுக்கு பிறந்த சில மாதங்கள் கழித்து பெரிய கொம்புகள் வளரும். அடுத்து சில மாதங்கள் கழித்து அது உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்குத் தகுந்தவாறு 14, 15 மாதங்களில் இரண்டு சிறு கொம்புகள் வளரத் தொடங்கும். அரிதாக சிலவறறுக்கு இந்த சிறிய கொம்புகள் வளராமல் போவதுண்டு.
வெளிமான் அல்லது பிள்ளாய் (Blackbuck – antelope) போன்றவற்றின் கொம்புகளைப் போல் அல்லாமல், இவற்றுக்கு கொம்பின் நுனி நேராகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் கொம்புகள் உதிர்ந்து முளைப்பதில்லை. ஆனால் இனச்சேர்க்கை காலத்திலும், இடம் கைப்பற்றுவதற்காகவும் ஆண் மான்களிடையே ஏற்படும் சண்டையின்போது கொம்புகள் ஒடிவது உண்டு. அந்த நேரங்களில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடும். நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர் அருந்த வரும் தன்மை கொண்டது. எனவே, நீரற்ற பகுதிகளில் இதை அதிகமாகப் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் வாழும் தன்மை கொண்டது. திறந்த வெளிக் காடுகளில் நன்கு வளர்ந்த புற்களுக்கு இடையில் தங்கும் இயல்புடையது. வெளிமான் போல கூட்டமாக இருக்காது. இலைகள், புற்கள், வேர்முடிச்சுகள், பழங்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.
சூலை - செப்டம்பர் மாதங்களில் இணைசேரும். சினைக்காலம் 7 - 8 மாதங்கள். ஜனவரி - பிப்ரவரி குட்டிகள் ஈனும் காலம். ஒன்று முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும். இதன் ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள். புலி, சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு ஆகியவை இவற்றின் முக்கிய எதிரிகள். ஆனால் அவற்றைவிட பெரிய எதிரிகள் காடழிப்பும், மனிதத் தொந்தரவுகளும்தான். அரிய இனமான நான்கு கொம்பு மான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறையின் முழுமையான பாதுகாப்பு, வெளி மனிதர்களின் இடையூறு இல்லாதிருப்பது அவசியம்.
(இக்கட்டுரையை எழுதிய ஒளிப்படக் கலைஞர் டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன் பிரபல காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர். காடுகளில் அதிகம் சுற்றியவர். அவரது அரிய நேரடி அனுபவம் இங்கு கட்டுரையாகி இருக்கிறது.)
(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை
- புலிகளும் புரிதலும்
- சப்தங்கள் பொதுவானதா?
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?
- தப்பிப்பிழைக்குமா தவளையினம்?
- பூக்களின் வில்லன் யார்?
- மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- நோய்பரப்பும் வன உயிரிகள்
- கொலை செய்யப்பட்டோர் கணக்கு
- பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு
- விலங்குகளின் ரியல் எஸ்டேட்